26 Sept 2021

காணாமல் போன கதைகள்

காணாமல் போன கதைகள்

கதை சொன்ன பாட்டி

கனைத்துக் கொள்கிறாள்

திருடன் போலீஸ் கதை சொன்ன போது

வெற்றிலையையும் சுண்ணாம்பையும்

களவாடிச் சென்று விட்டார்கள் என்கிறாள்

பையில் இருக்கும் குட்கா பாக்கெட்டை எடுத்து

வேண்டுமா என்கிறான் பதின்ம வயது பேரன்

நள்ளிரவில் நசுவினிக் குரலில்

பேய்களும் பிசாசுகளும்

கொரோனா வந்து செத்து விட்டதெனப் புலம்புகிறாள்

அன்றோடு பேய்க்கதைகளும் பிசாசுக் கதைகளும்

முடிவுக்கு வந்த போது

சாமிக் கதைகளைச் சொல்லும் போதெல்லாம்

வாயிழுத்துக் கோணிப் போனாள்

கடவுளும் கைவிட்டுப் போயிட்டானடி

என்று அடிக்கடி அரற்றினாள்

கதையொழிந்த ஒரு நாளில்

ராஜாவையும் ராணியையும்

கடத்திச் சென்றுவிட்டார்கள்

என்று புலம்பும் பாட்டியை

என்ன சொல்லி ஆற்றுவது

ஒரு நாளில் அவளும் காணாமல் போனாள்

தில்லையம்பல கோயிலின் முன்

பிச்சையெடுத்துக் கொண்டிருப்பதாகப்

பார்த்தவர்கள் சொல்லிப் போனார்கள்

வீட்டில் இருப்பவர்களுக்கு

அழைத்து வர வேண்டுமோ என்ற

குழப்பத்தில் அப்படியே இருந்து விட்டார்கள்

அவர்களுக்கென்ன அவர்களுக்கான கதை

சின்னத்திரையில் தொடர்ந்து ஓடியபடி இருக்கிறது

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...