27 Sept 2021

பிரச்சனைகள் குறித்த ஒரு தீர்க்கமான பார்வை

பிரச்சனைகள் குறித்த ஒரு தீர்க்கமான பார்வை

வாழ்க்கையில் தீர்வு என்று எதுவும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பிரச்சனைகள் அதுவாக மறைந்து விடுகின்றன அல்லது மறந்து விடுகின்றன.

***

            காசிருந்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்கிறார்கள். காசே ஒரு பிரச்சனைதான். எல்லா பிரச்சனைகளும் அதனால்தான் வருகின்றன. காசில்லை என்றால் காசில்லையே என்ற அந்த ஒரு பிரச்சனைதான். அது இருக்கும் போதுதான் மற்ற அனைத்துப் பிரச்சனைகளும். காசிருந்தால் பிரச்சனை கிடையாது என்றால் காசிருப்பவருக்குப் பிரச்சனையே இருக்கக் கூடாது அல்லவா! உலகில் அப்படியா இருக்கிறது? காசிருப்பவருக்கு இருக்கும் மன உளைச்சலைப் போல வேறு யாருக்கும் இருக்காது தெரியுமா? அதைக் காசிருப்பவர் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார். மன உளைச்சலை விட காசு அவருக்கு முக்கியம். மன அமைதியை விட்டாலும் விடுவாரே தவிர காசை விட்டு விட மாட்டார். காசுக்கு அப்படி சக்தியும் மயக்கு வசியமும் இருக்கிறது. மனதைக் கட்டிப் போடும் வித்தை காசுக்குள் சூக்குமமாய் ஒளிந்திருக்கிறது. இதைப் புரிந்து கொள்பவர்கள் காசோடு அளவான சிநேகம்தான் வைத்துக் கொள்வார்கள். புரியாதவர்கள் காசே கதியெனக் கிடப்பார்கள். இது போன்ற விசயங்களில் விதி இருந்தால் ஒழிய ஒருவரை மீட்டிட முடியாது.

***

            வருங்காலத்தை யார்தான் கணிக்க முடியும்? ஆனால் இந்த ஏஜெண்டுகள் கணித்து விடுகிறார்கள். இந்தப் பாலிசியை எடுங்கள், அந்தப் பாலிசியை எடுங்கள் என்கிறார்கள். அது சரி நீங்கள் எத்தனை பாலிசிகளை எடுத்திருக்கிறீர்கள் என்றால் அதுக்கு வருமானம் இருந்தால் நாங்கள் ஏன் பாலிசிகளை விற்றுக் கொண்டு இருக்கப் போகிறோம் என்கிறார்கள். ஆக வருமானம் இருப்பவர்களுக்குத்தான் வருங்காலம். வருங்காலம் என்ற பேச்சு அவர்களிடம்தான் எடுபடும். அன்றாடம் சம்பாதித்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள் அதைத் தாண்டியெல்லாம் யோசிக்க முடியாது. அன்றில் வாழ்ந்து அன்றை மட்டும் எதிர்கொள்ள மட்டுமே அவர்களால் முடியும். அவர்கள் பாலிசியைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை என்பதைத்தான் பாலிசியாக வைத்திருக்கிறார்கள்.

            பாலிசியைப் பற்றி யோசித்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் செத்தால் எவ்வளவு கிடைக்கும், நீங்கள் உயிரோடு இருந்தால் மாதா மாதம் அல்லது ஆண்டாண்டுக்கு எவ்வளவு கட்ட வேண்டும் என்பதுதான் பாலிசியின் சாராம்சம். இந்தச் சாராம்சத்தைப் புரிந்து கொண்டால் உங்களால் அமைதியாக இருக்க முடியுமா?

எப்போதும் பாலிசி எடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். பாலிசி கொடுக்கும் நிறுவனம் திவாலாகாது என்பதெல்லாம் நிச்சயமில்லை. இந்த உலகில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அளவோடு நிறுத்திக் கொள்ள பழகுங்கள். அதாவது காசையும் வருங்காலப் பாதுகாப்பு குறித்த எண்ணங்களையும். என்னைக் கேட்டால் இந்த உலகில் பாதுகாப்பே இல்லாமல் வாழும் மனிதர்கள் அதிகம். அவர்களோடு ஒப்பிட்டால் எந்தப் பாலிசி எடுக்கலாம் என்று என்னைக் கேட்பவர்கள் எல்லாம் உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன்.

***

            உயிர் போவதைப் பற்றிக் கூட மனிதர்கள் பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள் போல. சார்ஜ் போய் விட்டால் ரொம்பவே கவலைப்படுகிறார்கள் உயிரே போய் விட்டது போல. மனிதர்களிடம் இப்போது இப்படி ஒரு பிரச்சனை தலை தூக்கிக் கொண்டு இருக்கிறது. இந்நேரம் எத்தனை கால்கள் வந்திருக்குமோ தெரியவில்லை என்ற அலமலந்துப் போகிறார்கள். எத்தனைக் கால்கள் வந்திருந்தால்தான் என்ன? ஒன்றும் உருப்படியானதாக இருக்காது என்பதின் பின் உண்மை இருக்கிறது. கால்கள் இல்லாமல் கூட ஒரு மனிதர் வாழ்ந்து விடுவார் போலிருக்கிறது. போன் கால்கள் இல்லாமல் இந்த மனிதர்களால் வாழ முடியாது.

            இந்த ஒட்டுமொத்த பிரச்சனைகளின் பின்னால் இருப்பது என்னவென்று நினைக்கிறீர்கள்? எல்லாம் அடிமையாதல் எனும் பின்னணிதான். தன்னுணர்வு இல்லாமல் எதற்கு அடிமையாகிறோம் என்று தெரியாமல் அடிமையாகி விடுகிறார்கள். இந்த அடிமைகளின் வருங்காலம் எப்படி இருக்கும் என்கிறீர்கள்? சைக்கோதனமாக இருக்கப் போவது குறித்து வியப்பைத் தெரிவிக்க ஒன்றுமில்லை.

*** ***

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...