30 Jul 2019

கல்யாணக் கூத்து



செய்யு - 161
            மாப்பிள்ளை வீட்டைக் கூட போயி பார்க்காம ஒரு கல்யாணம் நடந்திச்சின்னா அது தேசிகாவோட கல்யாணத்துலதான் நடந்திச்சி. கேட்குற ஒங்களுக்கு இது ரொம்ப தெகைப்பதாம் இருக்கும். முருகு மாமாவுக்கும், லாலு மாமாவுக்கும் மாப்பிள்ளை வூட்டு மேல அவ்வளவு நம்பிக்கை. அவங்களும் திருவாரூர்ல நாகப்பட்டிணம் ரோட்டுக்குப் பக்கத்துல ஏதோ ஒரு விலாசத்தைக் கொடுத்து இங்கதாம் இருக்கோம்னு கொடுத்துதான் பார்த்தாங்க. இவங்கப் போயி பார்க்கணுமே! அந்த ஏரியான்னதுமே ரெண்டு பேரும் வாயப் பொளந்துட்டாங்க!
            அத்தோட மனுஷனுக்கு நம்பிக்கைதாம் முக்கியம்னு அதெ பத்தி கவனத்துல வைக்காமலே இருந்துட்டாங்க. இவ்வளவு பெரிய சம்பந்தம் கிடைக்குமான்னு அதுக்கு மேல ஒரு ஆச்சரியம் அவங்களுக்கு. எல்லாம் சேர்ந்து அவங்கள திக்கு முக்காட வெச்சிடுச்சி.
            அதுக்கு மேல மாப்பிள்ளை வூட்டுக்காரங்க வாரத்துக்கு ஒரு தடவெ கார வெச்சிகிட்டு வடவாதிக்கு வந்து தேசிகாவ பாக்கிறது என்ன! கல்யாணத்துக்குப் பண்ற ஏற்பாடுகள ஆகா ஓகோன்னு சொல்றது என்ன! பத்திரிகையைக் கூட பொண்ணு வூட்டுல அச்சடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு ரெண்டு வீட்டுக்கும் சேர்த்து அவங்கள அச்சடிச்சிக் கொண்டாந்து கொடுக்குறது என்ன! இப்படிப்பட்டவங்கள சந்தேகப்பட்டு எப்படிப் போயி பார்க்க முடியும் சொல்லுங்க!
            மாப்பிள்ளை அழைப்பு, பொண்ணு அழைப்புன்னு வந்தப்பதான் மாப்பிள்ளை வீட்டைப் போயி பார்க்குற மாதிரி ஒரு நிலைமை பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு வருது. போயிப் பார்த்தா வீடு ரொம்ப பிரமாதமா பிரமாண்டமா இருக்கு. அடேங்கப்பா இந்த வீட்டை முன்னாடியே வந்து பார்க்காம போயிட்டேமேன்னு பார்த்தவங்களுக்கு ஒரே அங்கலாய்ப்புதாம் போங்க! வீட்டுக்கு முன்னாடி காம்பெளண்ட் சுவரு இருக்கு. முன்னாடி இருக்கற இடத்துல குரோட்டன்ஸ் செடிகளும், பூச்செடிகளுமா இருக்குது. வீடு எப்படியும் ரெண்டாயிரம் சதுர அடிக்கு மேல இருக்கும். நல்ல அம்சமான வீடு. தரையெல்லாம் புள்ளி புள்ளியா மொசைக்கு போட்டிருக்கு. நடுக்கூடத்துல பெரும் டி.வி. இருக்கு. அதுக்கு முன்னாடி அந்த டி.வி.ய பெரிசா காட்டுற மாதிரி ஒரு கிளாஸூ இருக்குப் பாருங்க. அது அப்போதாம் வந்ததுன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க.
            கல்யாணத்துக்குப் போற சனத்துக்காவே முருகு மாமா ஏற்பாடு பண்ணியிருந்த பஸ்ஸூல கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். முழி பிதுங்கி வெளியில வ்நது விழுந்துடும் போலருக்கு. காலை டிரிப்புக்கு எட்டாம் நம்பர் பஸ்ஸூம், ரெண்டாம் நம்பர் பஸ்ஸூம் அப்படியே பிதுங்கிகிட்டு டவுனுக்குப் போகும் பாருங்க! அதுங்க தோத்துடும் போங்க! முருகு மாமா ரெண்டு மூணு டிரிப்பு அடிக்க வெச்சிச்சி. அதுவும் இல்லாமல காலையில வேற ஒரு ரெண்டு டிரிப்பு. அடேங்கப்பா ஒரு கிராமத்தையே ஒவ்வொரு டிரிப்புக்கும் வெச்சி அடிக்கிற மாதிரிதாம் பஸ்ஸூ போனிச்சி.
            இப்படி சொந்தக்கார சனம், வடவாதி சனம்னு எல்லாம் போயி கல்யாணத்துக்கு மொத நாளு சாயுங்காலமா நாகப்பட்டிணம் ரோட்டுல இருக்குற அந்த மண்டபத்துல எறங்குனா அது சாதாரண சத்திரம் மாதிரி இருக்கு. நாட்டு ஓடு போட்ட சத்திரம். கிராமத்துல இருக்கும்ல பெரிய சுத்துக்கட்டோட நாட்டு வீடு போட்ட வீடா அந்த மாதிரிதாம் இருக்கு. அட என்னடா இது! அம்மாம் பெரிய பணக்காரங்கன்னு சொல்றாங்க! இப்படி ஒரு மண்டபத்தயா ஏற்பாடு பண்ணுவாங்கன்னு எல்லாருக்கும் ஒரு யோசனையா போயிடுச்சி. பொண்ணு வீட்டுக்காரங்க மனநிலையைப் கப்புன்னு பிடிச்சிகிட்டு புரிஞ்சுகிட்ட மாதிரி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அப்போ ஒரு பதிலைச் சொன்னாங்க பாருங்க! "கல்யாணத் தேதி நல்ல முகூர்த்த நாளா போயிடுச்சி. நாங்களும் திருவாரூ முழுக்க மண்டபத்த சல்லடை போட்டு தேடாத கொறைதாம். எல்லா மண்டபமும் புக் ஆயிடிச்சி. பெறவு யோசனைப் பண்ணி தஞ்சாரூ, திருச்சின்னு வைக்கலாம்னு பார்த்தா சனங்க வந்துட்டுப் போறதுக்குச் செரமமா போயிடும்னே யோசிச்சி, அந்தச் செரமத்துக்கு இந்தச் செரமமே பரவாயில்லன்னு கெடைச்ச இந்த மண்டபத்துலயே வெச்சாச்சி!" அப்படிங்றாங்க.
            இந்தப் பதிலைக் கேட்டதும் முருகு மாமாவுக்கும், லாலு மாமாவுக்கும் டான்ஸ் ஆடாத கொறையா சந்தோஷம் பொத்துகிட்டு வருது. "அட மண்டபத்துல என்னங்க இருக்கு? ஒங்களப் பத்தித் தெரியாதா?  ஒரு நாளு கூத்துக்கு ஏம் அவ்வளவு செலவு பண்ணிட்டுங்றேம்? அந்தக் காசை பொண்ணு மாப்பிள்ளைங்கிட்ட கொடுத்தா நல்ல விதமா குடித்தனம் பண்ணிட்டுப் போறாங்க!" என்று மாப்பிள்ளை வீட்டை விட்டுக் கொடுக்காமல் தாங்குகிறார்கள்.
            இந்தக் கல்யாணத்துக்கு லைட்ட கையில பிடிச்சிகிட்டு வீடியோல்லாம் வேற எடுக்குறாங்க. வழக்கமா கல்யாணத்துக்கு அப்போ போட்டோ மட்டுந்தாம் எடுக்குறது வழக்கம். ரொம்ப வசதிப்பட்டவங்கதாம் வீடியோல்லாம் எடுப்பாங்க. அந்த வீடியோல நான் தெரியணும்னு, நீ தெரியணும்னு அதுக்கு வேற கூட்டம் அலை மோதிக்குது பாருங்க. இந்தக் கூட்டத்தைச் சரி பண்ணி வீடியோ எடுக்குறது வீடியோகாரங்களுக்குக் கஷ்டமா போவுது.
            பொண்ணையும், மாப்பிள்ளையையும் சோடிச்சி அலங்கார ஜீப்புல உட்கார வெச்சி திருவாரூ தெரு முழுக்க ஊர்வலம் வந்தாகுது. அதுவும் வசதிப்பட்டவங்க செய்யுற காரியந்தாம். இதுல மாப்பிள்ளை வூட்டுக்காரங்க பண்ணுன ஒரு நல்ல விசயம், கல்யாணச் சத்திரத்துல ராப் பொழுது முழுக்க டி.வி.யைக் கொண்டாந்து வெச்சி படம் படமா போட்டுத் தள்ளுறாங்க. கல்யாணத்துக்கு வந்தக் கூட்டம் எல்லாம் தூங்காம படத்தையே பார்த்துகிட்டு உட்கார்ந்து கெடக்குதுங்க. இந்தக் கொசுகடியில தூங்க முடியாதுன்னு தெரிஞ்சிகிட்டு மாப்பிள்ள வூட்டுல நல்ல ஏற்பாடா பண்ணியிருக்காங்கன்னு அதுக்கும் சனங்க மனசுக்குள்ள மெச்சிக்குதுங்க.
            அந்தக் கல்யாணத்துல போட்ட சாப்பாடப் பத்தி ஒரு வார்த்தைச் சொல்லலண்ணா கதைய கேட்குற நீங்க ரொம்பவே கோச்சுக்குவிங்க. எலையைப் போட்டு பொங்கல்னு ஒண்ண வைக்குறாங்க பாருங்க! எலையில நிக்காம அப்படியே தரதரன்னு ஓடுது வயித்துக்குப் பேதி வந்தவன் கழியுற கணக்கா! இட்டிலி ஒவ்வொண்ணும் கல்லு கணக்கா கல்குவாரியில ஒடைச்சி எடுத்து வந்த மாதிரி இருக்கு. இந்தச் சட்டினி சாம்பாரு! இதாச்சிம் கொஞ்சம் வாயில வைக்கிற மாதிரி இருக்கான்னா? வாயில வெச்சா மொட்டத் தண்ணிய மெளகா தண்ணியா வாயில கரைச்சி வுட்ட மாதிரி ஒரே காருன்னா காரு அப்படி ஒரு காருது. தேங்கா சட்டினிய வெறும் பொட்டுக் கல்லயப் போட்டு அரைச்சிருப்பானுவோ போலருக்கு! பொட்டுக்கல்லய போட்டு கரைச்சி வெச்ச மாதிரி இருக்கு. எலையில ஸ்வீட்டுங்கற பேருக்கு வெச்சத எடுத்து வாயில வெச்சா அப்படியே வாயில கோந்து மாதிரி ஒட்டிக்குது. அது பேரு அசோகாங்றாங்க. இதுல சப்பாத்தி குருமா வேற. சப்பாத்திய பிய்க்க முடியல. குருமாவ வாயில வைக்க முடியல. சரியில்லாத சாப்பாடுன்னாலும் ராத்திரி முழுக்க டி.வி.யில படத்து போட்டு விட்டு சனங்கள நல்லாவே சமாளிச்சிட்டாங்க மாப்பிள்ள வூட்டக்காரங்க.
            "பொண்ணு வூட்டுக்காரனுக்கு பைசா செலவில்லாம கல்யாணத்த நடத்துறவேம் வேற என்னப்பா பண்ணுவாம்? அதாம் சாப்பாட்ட இப்பிடிப் போடுறான்! சத்திரத்த இந்த மாதிரி ஏற்பாடு பண்றாம்!" அப்பிடின்னு டி.வி.யைப் பார்க்கப் பிடிக்காத ஒண்ணு ரெண்டு சனம் மட்டும் சாப்பாட பத்தியும், சத்திரத்த பத்தியும் பேசுது. நல்ல வேளை அன்னிக்குன்னு பார்த்து மழை தண்ணி இல்லாமப் போச்சுது. மழை தண்ணியா ஆயிருந்துச்சுன்னா அவ்ளதாம் கல்யாணத்துக்கு வந்த சனமெல்லாம் மழை மோட்சமாக ஆயிப் போயிருக்கும்.
            லாலு மாமாவுக்குச் சாப்பாடு சரியில்லங்றது மனசுல ஒரு கொறையாத்தான் நிற்குது. இருந்தாலும் இது கல்யாணத்து மொத நாளு ராத்திரிச் சாப்பாடுதானே. அதாங் கொஞ்சம் அலட்சியமா இருக்காங்க போல அப்பிடின்னு நெனச்சிக்கிது. இருந்தாலும் இதெப் பத்தி மாப்பிள வூட்டுல ஒரு வார்த்த பேச்சு வாக்குலயாவது கேட்டுப்புடணும்னு ஒரு யோசனையைப் பண்ணிகிட்டு லாலு மாமா கேட்குது பாருங்க! "கல்யாணத்துல கால சாப்பாடு, மதியானச் சாப்பாடுலாம் ஜமாய்ச்சுடலாம்ல!"
            மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இந்தக் கேள்வியைப் புரிஞ்சிக்காம இருப்பாங்களா! "ராத்திரிச் சாப்பாடு கொஞ்சம் அப்படி இப்பிடி ஆயிப் போச்சிங்க. நம்ம வெச்ச கல்யாண நாளு ஹெவியான முகூர்த்த நாளா போயிடுச்சிப் பாருங்க. நல்ல சமையல்காரனா கெடைக்காமப் போயிடுச்சி. இந்த சமையல்காரந்தாம் கெடைச்சாம். ஒங்ககிட்டயாவது ஒரு வார்த்தைச் சொல்லியிருக்கலாம் பாருங்க. அங்க இங்க கிராமத்துலயாவது ஒரு நல்ல ஆளா பிடிச்சிக் கொண்டாந்திருக்கலாம். பொண்ணு வூட்டுக்காரங்க தலையில வேலைய கட்டுறாப்புல ஆயிடுமேன்னு யோசிச்சிட்டு இருந்துட்டோம்!" அப்படிங்றாங்க. இந்தப் பதிலு போதாதா லாலு மாமாவுக்கு அப்படியே உச்சிக் குளிந்து போவுது.
            "என்னாங்க! ரெண்டு மூணு வேளைச் சாப்பாடு! அவ்வளதானே. பாத்துப்போம் வுடுங்க. நீங்களும் எவ்வளவுதாம் மெனக்கெடுவீங்க. நீங்க சொல்ற மாதிரி இந்த அளவுக்கு முகூர்த்த நாளு அமையாது. நாளுங் கெழமையும் அமைஞ்சிடுச்சி. சாப்பாடு ன்னா சாப்பாடு. ரெண்டு வேள சாப்புடாமலேயே கெடக்கலாம்!" என்கிறது லாலு மாமா.
            லாலு மாமா என்ன நேரத்தில் அப்படிச் சொன்னதோ! அப்படித்தான் கல்யாணத்துக்கு வந்த பெரும்பாலான ஆட்களுக்கு நிலைமை ஆனது. ராத்திரிச் சாப்பாடு சரியில்லை என்றால் காலைச் சாப்பாடும், மதியானச் சாப்பாடும் பல பேருக்கு இல்லாமலே போனது. ஊரடைத்துப் பத்திரிகைக் கொடுத்து எப்படியும் பொண்ணு வீட்டு வகையில் மட்டும் ஐநூறு அறுநூறு பேருக்கு மேல் பத்திரிகை கொடுத்து விட்டு சாப்பாட்டை இருநூறு பேருக்கும் இருநூத்து ஐம்பது பேருக்கும் செய்தால் எப்படிப் பத்தும்?
            இந்த விசயம் நல்லா தெரிஞ்சோ என்னவோ மாப்பிள்ளை வூட்டக்காரங்க எல்லாம் பந்திக்கு முந்தி சரியில்லாத சாப்பாடுன்னாலும் அதை வழிச்சி அள்ளி உள்ளே போட்டுகிட்டு அப்படியே தொந்தியைத் தள்ளிட்டு நிக்குறாங்க. வெவரம் பத்தாத பொண்ணு வீட்டுக்காரனுங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தவங்களுக்குதான் வாயிலேய வைக்க முடியாத அந்தக் காலைச் சாப்பாடு கெடைச்சிச்சு. காலைச் சாப்பாடு இப்படி ஆனதுல மதியானச் சாப்பாட்டுக்கு அவனவனும் உஷாராயிட்டாம். இதையும் எப்பிடியோ மாப்பிள்ளை வூட்டுக்காரனுங்க மோப்பம் பிடிச்சிருப்பானுங்க போலருக்கு. மதியானப் பந்தி எப்போ போடணும்ங்றத ரகசிய வெச்சி அவனுங்க சாப்பிட்டு முடிச்சி பிற்பாடு ‍ஒப்புக்கு "பந்திப் போட்டாச்சி வந்து சாப்பாடுங்க!" அப்பிடின்னு சவுண்ட விடறானுங்க. காலயில ஏமாந்த மாரி மதியானமும் ஏமாந்திடக் கூடாதுன்னு பொண்ணு வூட்டுக்காரனுங்க அடிச்சுக்காத கொறையா பந்தியில உட்கார்ந்துப் பார்க்கறானுங்க. கால்வாசி சனங்க சாப்பிட்டு முடிச்சா முக்கால்வாசி சனங்களுக்கு சாப்பாடு யில்ல. போறப் போக்கப் பார்த்தா பொண்ணு வீட்டக்காரனுங்களுக்குள்ள அடிதடி வர்றாத கொறைதான். பந்தியில சாமர்த்தியமாக எடம் பிடிச்சி சாப்பிடத் தெரியலன்னு ஒருத்தன ஒருத்தன் பேசி அலமலந்துக்கிறானுங்க. பொண்ணு வீட்டுக்காரனுங்க நிலைமையே இப்படி இருக்குன்னா பொண்ணு வீட்டுக்காரனுங்க சார்பா கல்யாணம் விசாரிக்க வந்த மத்தவனுங்க நிலைமைய என்ன சொல்றது? அவனுங்களுக்குக் காலைச் சாப்பாடும் கெடைக்காம, மதியானச் சாப்பாடும் கெடைக்காமல கொலைப் பட்டினியா ஆகிப் போச்சி அன்னைக்கு.
            இவ்வளவு கூத்துக்கும் மத்தியில இந்த வீடியோகாரனுங்க வளைச்சி வளைச்சி வெளிச்சத்தை அடிச்சி படத்த மட்டும் பிடிச்சிட்டு இருக்கானுங்க பாருங்க! ராத்திரி வந்ததும் வீடியோ கவரேஜூக்கு அடிச்சிகிட்ட சனங்க எல்லாம் அதெ ஒரு பொருட்டாவே மதிக்காத மாதிரி இப்போ சோத்துக்கு அடிச்சிகிட்டு நிக்குதுங்க. ந்நல்லா சோத்தப் போட்டிருந்தா வீடியோ கவரேஜூக்காக அடிச்சிகிட்டு நின்னுருக்கும்ங்க. வீடியோகாரனுக்கு அந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் வந்திடக் கூடாதுன்னு இப்பிடிச் சோத்துப் பிரச்சனையை உருவாக்கி விட்டுட்டாங்க போலருக்கு மாப்பிள்ளை வூட்டுக்காரங்க.
            என்னடா நெலைமை இப்படி ஆகிப் போச்சின்னு சனங்க ஒவ்வொண்ணும் அதுக பாட்டுக்கப் பிரிஞ்சி ஒட்டல்ல கிடைக்குற டீயையும் பன்னையும், கெடைச்ச தயிரு சாதத்தையும் தின்னுட்டு பொண்ணு வூடுக்காரன் பஸ்ஸூம் வேணாம், அவ்வேம் கல்யாணச் சாப்பாடும் வேணாம்னு எட்டாம் நம்பரூ பஸ்ல ஏறி ஊரு திரும்புதுங்க. கல்யாணத்துக்காக ஏற்பாடு பண்ண பஸ்ஸூ ஊரு திரும்புறப்ப அதுல பாதி சனம் இல்லாமப் போச்சி. அவ்வளவு குதூகலமா கல்யாணத்துக்குக் கிளம்புன பஸ்ஸா இதுங்ற மாதிரி பசியில சோர்ந்த சொங்கிப் போயி இளைச்சிப் போயி வர்றவன் கணக்கா அது வடவாதி திரும்புது.
            என்னதாம் இப்படிக் கஷ்ட காலமா போனாலும், பொண்ணு மாப்பிள்ளையும் நல்ல விதமா இருந்தாச் சரிதாம்னு கல்யாணத்துக்குப் போன சனங்க பெருந்தன்மையா நெனச்சிட்டு வீட்டுக்கு வந்தா அப்படிதாம் நடக்குதா என்னான்னு பாருங்களேன்!
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...