31 Jul 2019

உலகின் குப்பைத் தொட்டி!



            நிறைய தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து விட்டு எஸ்.கே. சொன்னார், "மதுரை என்றால் தூங்கா நகரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மதுரை என்றால் குண்டர்களின் நகரம்!" என்று.
*****
உலகின் குப்பைத்தொட்டி என்ற தலைப்பில் வைக்கப்பட்ட கட்டுரைப் போட்டிக்காக எஸ்.கே. முதல் பரிசு பெறும் நோக்கோடு எழுத ஆரம்பித்தார் -
            நம் நாட்டில் எதையெல்லாம் இறக்குமதி செய்கிறார்கள் என்று நீங்கள் ஒரு பட்டியல் எழுதினால் அந்தப் பட்டியலில் குப்பைக் கழிவுகள் என்ற ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்குக் குப்பைக் கழிவுகள் கன்டெய்னர் கன்டெய்னர்களாக வெளிநாட்டிலிருந்து கப்பல்கள் மூலமாக இந்தியாவுக்கு வந்து இறங்குகின்றன. உலகின் அத்தனை எலெக்ட்ரானிக் வேஸ்டுகள், மருத்துவக் கழிவுகள், நாப்கின் கழிவுகள் அனைத்தும் ராணுவத்தாலேயே தடுக்க முடியாத அளவுக்கு இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.
            இங்கே நம் நாட்டிலேயே தரங்கெட்ட அளவிற்கு தரம் பிரிக்க முடியாத அளவுக்குக் குப்பைகள் குவிந்து கிடக்க, வெளிநாட்டுக் குப்பைகளை வேறு வாங்கி தரம் பிரிக்கும் தரம் கெட்ட வேலையில் இறங்கினால் இந்தியா வெகு விரைவில் குப்பைகளின் நாடாகவோ அல்லது உலகின் குப்பைத் தொட்டியாகவோ மாறி விடும்.
            வெளிநாட்டுக் குப்பைகளைக் காசு கொடுத்து வாங்கி இங்கே தரம் பிரிப்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதை விட மோசமானது.
            உலக நாடுகள் எல்லாம் சுத்தமாக இந்தியா மட்டும் அசுத்தமாக வேண்டும் என்பது என்ன விதத்தில் நியாயம்? ஒவ்வொரு நாடும் தங்களுடைய நாட்டிலேயே தங்கள் குப்பைகளைக் கழிவுகளை தரம் பிரித்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொள்வதுதானே நியாயமாக இருக்கும்!
            தூய்மை பாரதம் என்பது நம் நாட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்வதோடு வெளிநாட்டுக் குப்பைகளை இங்கே கொண்டு வந்து நம் நாட்டைத் தூய்மையில்லாமல் செய்யாமல் இருப்பதிலும்தானே இருக்கிறது!
            என்ன உலக நாடுகளோ?
            இந்த நாட்டிலிருந்து கறுப்பு பணத்தை மட்டும் கொண்டு போகிறார்கள்!
            அதற்கு கைம்மாறாக குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டி விட்டுப் போகிறார்கள்!
            என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று பாடியதை மாற்றி என்ன குப்பை இல்லை இந்த திருநாட்டில் என்று பாடும் நிலைமைக்கு ஆளாகி விடுவோம் போலிருக்கிறது!
            - எழுதியது பிடிக்கவில்லையோ என்னவோ ஒரு முறை வாசித்துப் பார்த்தார் எஸ்.கே. அப்படியே சுருட்டி குப்பைத் தொட்டியில் வீசி விட்டார். குப்பைத் தொட்டி எஸ்.கே.வைப் பார்த்து அர்த்தமுடன் சிரித்தது. எஸ்.கே.வும் அதைப் பார்த்து அர்த்தமுடன் சிரித்துக் கொண்டார்.
*****
            எஸ்.கே. குழப்பத்தில் உட்கார்ந்திருந்தார். இந்தத் தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து விட்டு எந்தக் கடையில் நகை வாங்குவது? எந்தக் கடையில் துணி எடுப்பது? என்ற குழப்பம் அவரை ஆட்டிப் படைத்து விட்டது. எந்தக் கடையில் சேதாரம் ரொம்ப கம்மி என்று யோசித்து யோசித்து அவரது மூளையே சேதாரமாகி விட்டது. எந்தக் கடையில் டிஸ்கவுண்ட் ரொம்ப கம்மி என்று அலசி அலசி அவரது மனநிலையே மிஸ்கவுண்ட் ஆகி விட்டது.
            ஒரு மனநல மருத்துவரைப் பார்த்து மனநிலை சரியானவுடன் நகை வாங்குவதையும், துணி எடுப்பதையும் செய்வதென்று முடிவில் நட்ட நடு சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் எஸ்.கே.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...