31 May 2019

அட்வைஸ் செய விரும்பு!



            "மக்கா! நாட்டுல வியாதி கூட வரலாம்! மத்தவங்க அட்வைஸ் பண்ற மாதிரி மட்டும் வியாதி வந்துடக் கூடாதுங்றான்!" நம்ம சம்மட்டிவாயன்.
            இந்தச் சம்மட்டிவாயன் யாருன்னு கேட்டா, நம்ம சண்முகவேலன்தான். அப்போ சண்முகம்னா என்னா? வேலன்னா என்னா? ரெண்டும் ஒண்ணுதானே! ஆனா அவனுக்குப் பேரு அப்படித்தான். இந்தச் சண்முகவேலன்தான் கொஞ்சம் கொஞ்சமா சண்முகவாயன்னா ஆனான். அப்படி வாயனா ஆகுற அளவுக்கு அந்தப் பேச்சு பேசிட்டு திரிஞ்சான். அத்தோடு அவன் வாயி நின்னுருந்தா சண்முகவாயன்னு அவனும் நின்னு போயிருப்பான். ஆனா கெரகம்? விடுமா என்ன? வாயோட ரெண்டு பக்கமும் கிழியற மாட்டுக்கு காளவாய்க் கணக்கா பேச ஆரம்பிச்சான். அதுக்குப்புறம்தான் சண்முகவாயன் சம்மட்டிவாயனா ஆனான்.
            இப்போ நம்ம சம்மட்டிவாயன்கிட்ட,
            "நாட்டுல அந்த அளவுக்கா அட்வைஸ் பண்றவங்க அலயுறாங்க?" ன்னு கேட்டாலே சம்மட்டிவாயன் அலறி அடிச்சிட்டு ஓடுறான். வாயைத் தொறந்தா மூடாத சம்மட்டிவாயனே அலறி அடிச்சிட்டு ஓடுற அளவுக்கு நாட்டுல அட்வைஸ் பண்றவங்க பெருகுறதுக்கு என்ன காரணமா இருக்க முடியும்?
            தமிழ்நாட்டுலதான் "அறம் செய விரும்பு" ன்னு ஆத்திசூடியில ஆரம்பிச்சு ஆயிரெத்தெட்டு அறிவுரை சொல்ற இலக்கியங்கள் இருக்கு. வேற எந்த மொழியிலும் இந்த அளவுக்கு இருக்காங்றது சந்தேகம்தான். அந்த பாரம்பரியம்தான் தமிழ்நாட்டுல பொறந்த ஒவ்வொருத்தரையும் யார பார்த்தாலும் அறிவுரை சொல்ல வைக்குதோ என்னவோ!
            ஒளவைப் பாட்டியே இன்னிய தேதிக்கு, 'அட்வைஸ் செய விரும்பு'னு நியூ ஆத்திசூடி எழுதிருப்பாங்க மாட்டு.
            அதுவும் இந்த நேரம் படிப்புக்கும், பாலிடிக்ஸூக்கும் ஒரே நேரத்துல ரிசல்ட் வந்து போச்சுதா? திரும்புன பக்கமெல்லாம் யாரு மூஞ்சைப் பார்த்தாலும் அட்வைஸா வந்து விழுது.
            அதுவும் பரீட்சைல பாஸ் பண்ணவன், பாஸ் பண்ணாதவன் ஆரம்பிச்சு எல்லாருக்கும் ரக ரகமா, வித விதமா அட்வைஸ் மழையா கொட்டுது. இந்த அட்வைஸ் மழையா கொட்டுறதாலயோ என்னவோ நாட்டுல வானத்து மழையும் பெய்யாம வெக்கைப் பொசுக்கித் தள்ளுது.
            என்ன படிக்கலாம்? என்ன படிக்கக் கூடாதுன்னு எவ்வளவு அட்வைஸ் தெரியுங்களா? இப்படி அட்வைஸ் பண்றாங்க இல்ல, அவங்க காலத்துல எவனாவது அவங்களுக்கு இப்படி அட்வைஸ் பண்ணியிருந்தா அவங்கலாம் படிச்சிருக்கவே மாட்டாங்க ஆமா!ஆனா இந்த புள்ளைங்க ரொம்ப விவரம். இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு அது பாட்டுக்கு போய்ட்டே இருக்குதுங்க. அட்வைஸ் பண்ற மக்களும் நீ போனா எனக்கென்னன்னு இன்னொருத்தன தேடிப் போய் அட்வைஸ் பண்ணிட்டு இருக்குதுங்க.
            இந்த நாட்டுல ஒரு புள்ளை தான் என்ன படிக்கணும்னு தீர்மானிக்க முடியலைன்னா, அந்த புள்ளை இத்தனை வருஷம் படிச்சு என்னத்தான் கத்துகிட்டதோ?
            அந்தப் புள்ளைக்கு தான் என்ன படிக்கணும்னு தீர்மானிக்க சுதந்திரம் கொடுக்குறமோ இல்லியோ, அதே புள்ளைய ஒரு வருஷம் ஆனதும் அதாவது பதினெட்டு வயசு ஆனதும் நீ விரும்புற சின்னத்துல ஓட்டுப் போட்டு உனக்கான தலைவரைத் தேர்ந்தெடுன்னு அந்தச் சுதந்திரத்தைக் கொடுக்கிறோம்!
            அந்தப் புள்ளைங்கள நிப்பாட்டி, "இப்படி அட்வைஸ் பண்ணியே கொல்ற ஒங்க அப்பன், ஆயி, சுத்தி உள்ள பெரிசுகளுக்கு நீங்க என்ன அட்வைஸ் பண்ற விரும்புறீங்க?"ன்னு ஒரு ஹோதாவுல கேட்டுத் தொலைச்சிட்டேன். அதுக்கு அந்தப் புள்ளைங்க சொல்லுது, "இனிமே இது மாதிரி அட்வைஸ் பண்ண வேண்டாங்றதைத்தான்  அட்வைஸா பண்ண விரும்புறோம்! அட்வைஸ் பண்றாங்களே செரி! வாட்ஸ் ஆப்ல ஒரு ‍மெசேஜ் அனுப்பத் தெரியுதா? யாருக்கோ அனுப்ப வேண்டிய மேசேஜைக் குரூப்ல போட்டு மானத்த வாங்குதுங்க!"னு தலையில அடிச்சுக்குதுங்க.
            "அதுவுஞ் செரியாத்தான் இருக்குதுங்க!"னு சொல்லி நாம நைஸா நகரலாம்னு பார்த்தா... அப்படி‍யே நிறுத்தி வெச்சு ஆரம்பிச்சதுங்க பாருங்க... நீங்களே கேட்டுக்குங்க அதை,
            "இப்படி அட்வைஸ் பண்ணுதுகளே... அதுங்களுக்கு,
            1. பெத்த அப்பன், ஆயியை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாம வீட்டுல வெச்சுக்கோணும்னு யாரு அட்வைஸ் பண்றது?
            2. தாத்தா வயசாகி முடி நரைச்சா அப்படியே விடாம, டை அடிச்சுகிட்டு மாப்பிள்ளை கணக்கா ஜொள்ளு விட்டுகிட்டுத் திரியக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            3. வீட்டுல யாரும் இல்லேன்னு தெரிஞ்சா கண்ட கண்ட சேனலையெல்லாம் மாத்தி கண்ட கண்ட படத்தையெல்லாம் பார்க்கக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            4. ஓட்டுக்குப் பணம் கொடுத்தா அதை விசாரிச்சு அடிச்சு பிடிச்சுகிட்டுப் போயி வாங்கிட்டு வரக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            5. நாற்பதாயிரத்துக்கு செல்லை வாங்கி வெச்சுகிட்டு இதுல மெயில் எப்படி அனுப்புறதுன்னு சின்ன புள்ளைங்ககிட்ட கேட்டுகிட்டு நிற்கக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            6. பேட்டா கடையில கேட்ட காசைக் கொடுத்துப்புட்டு கருவாடு விற்குற கெழவிகிட்ட பேரம் பேசக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            7. ஒரு வேளைச் சாப்பாட்டுச் செலவை மிச்சம் பண்றதா நினைச்சு கோயில்ல போடுற அன்னதானத்தைப் பசித்த ஒருத்தருக்குக் கெடைக்க விடாம தின்னுட்டு வரக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            .... ... ..." இப்படி இப்பிடி அட்வைஸ் பறந்து வந்தா நான் என்ன பண்ணுவேன்? ஓடியாந்துட்டேன்.
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...