31 May 2019

தூக்கி உள்ளே போட்டுருவேம் பாத்துக்க!



செய்யு - 101
            வடவாதி போலீஸ் ஸ்டேசனில் கிடக்கும் சைக்கிளை மீட்பது குறித்தே அப்பாவின் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது. அதற்கு முன்பாகவே சம்பவம் நடந்து ஒரு வாரம் காலம் ஆன நிலையில் அப்பா தெரிந்தவர்களை அழைத்துக் கொண்டு போய் ஸ்டேசனில் விசாரிப்பது என்ற முடிவோடு லாலு மாமா, குமரு மாமா, வீயெம் மாமா மற்றும் தாடி தாத்தாவோடு போய்ப் பார்த்தது.
            ஸ்டேசனில் வெளியே இருந்த வராண்டா போன்ற பகுதியில் ரெண்டு போலீஸ்கள் மட்டும் நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு போலீஸ் ஒல்லியாகவும், மற்றொரு போலீஸ் குண்டாக, தொப்பையுடன் தலை நரைத்தும், கடா மீசையுமாக  இருந்தது. ஐந்து பேராக ஸ்டேசனில் நுழைந்த இவர்களைப் பார்த்ததும், "என்ன வெசயம்? யார்யா நீங்க?" என்றது ஒல்லியாக இருந்த போலீஸ்.
            ஸ்டேசனில் சைக்கிள் குறித்து விசாரித்ததும் குண்டாக இருந்த போலீஸ், "மாணிக்கநாயகம் அடிபட்டதைக் கேள்விப்பட்டு கலவரத்தைத் தூண்டுறத்துக்காக சைக்கிளில வந்த ஆளுதாம்ல நீயீ!" என்று சொன்னதும் போன எல்லாருக்கும் தூக்கி வாரிப் போட்டது.
            "தற்செயலா கடத்தெரு பக்கம் வந்தவருங்கதாம் வாத்தியாரு! அந்த நேரம் பாத்து கலவரமா ஆயிப் போச்சு. அடிதடின்னு ஆகிப் போகவும் சைக்கிளப் போட்டுட்டு தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடியாந்துட்டாப்புல. மத்தபடி வாத்தியாரு சண்டையின்னா நூறு தப்புடி அந்தாண்ட ஓடிருவாப்புல." என்றது தாடி தாத்தா.
            "சைக்கிள்ல வந்தாங்றே! அப்போ சைக்கிள்ல தப்பிச்சுப் போவாம சைக்கிளப் போட்டுட்டா ஓடுவாங்க? யாரு காதுலயா பூவு சுத்துறீங்க?" என்றது அந்தப் போலீஸ்.
            "அப்டிலாம் இல்லீங்கய்யா! இவரு எங்க அக்கா மருமவம்ங்கதாங்க! வாத்தியாரா இருந்தாலும் ரொம்ப கஷ்டங்க. எங்கப் போறது வாரதுன்னாலும் சைக்கிள்தாங்க. ஒரு வாரமா இந்த சைக்கிளு இல்லாமா நடந்தே போயி நடந்தே வந்துட்டு இருக்காருங்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணீங்கன்னா நல்லது நடக்குமுங்க!" என்றது லாலு மாமா.
            குண்டாக இருந்த போலீஸ் வராண்டாவிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தது. "யார்கிட்டே? அதாங், யார்கிட்டே?" என்று மிரட்டும் தொனியில் உருமியது. எல்லாருக்கும் ஒரு மாதிரியாக பயம் வந்து விட்டிருந்தது.
            "இந்தாப் பாருங்கப்பா! வெளியில ரண்டு டிவியெஸ், ஒரு எம்யெய்டி கெடக்குது. அதுல வந்துபுட்டு சைக்கிள்ல வாரவங்க மாரி என்ன கதெ அளக்குறீங்க?" என்றது குண்டு போலீஸ்.
            நின்று கொண்டிருந்த அப்பா, லாலு மாமா, குமரு மாமா, வீயெம் மாமா, தாடி தாத்தாவுக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்ற புரியாமல் எச்சிலை விழுங்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலையாகி விட்டது. அவர்கள் அப்படி நிற்பதைப் பார்த்து குண்டு போலீஸே தொடர்ந்து பேசியது.             "கவவரம் பண்ணிட்டு அதுலேந்து தப்பிச்சுப்புடலாம்னு சைக்கிள கேட்டு வந்து நிக்குறீங்களா? எங்களுக்கு இருக்குற ஒரே எவிடென்ஸ் அதுதாம்யா! புரிஞ்சுதா?"
            குமரு மாமாவும் தன் பங்குக்கு ஏதாவது பேச வேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும். அது பேசியது, "இந்தாருங்க! மாணிக்கநாயகம் யாருன்னு நெனச்சீங்க! நாங்க ரண்டு பேரும் காலுசட்ட போட்ட காலத்துலேந்து உயிர்ச் சிநேகிதங்க. ஒரே தட்டுல சாப்புட்டு ஒண்ணா வளந்தவங்க தெரிஞ்சுக்குங்க. நீங்க இப்படி பேசுறது அவனுக்குத் தெரிஞ்சிச்சு ஸ்டேசன உண்டு இல்லன்னு பண்ணிடுவாம்!"
            "பாத்தியாய்யா! இப்போ புரிஞ்சுதா? இது கலவரம் பண்ண வந்த குரூப்பு. அப்போ தெரியாமப் போச்சு. அந்த எப்.ஐ.ஆர்ர எடுத்து இதுங்க பேருக எல்லாத்தியும் சேத்து மறுபடியும் புதுசா ஒண்ணு போடு! ன்னம்மோ ஸ்டேசன உண்டு ல்லன்னு பாத்துடுங்களும்லா? அதயும்ந்தாம் பாப்பம்!" என்றது அந்த குண்டு போலீஸ் ஒல்லிப் போலீஸைப் பார்த்து.
            "சார்! சார்! இவரு நம்ம அண்ணம்தாங்க சார்! எப்படியாவது சைக்கிள வாங்கிப்புடணும்ங்றதுல நோக்குத் தெரியாம பேசிட்டாம்ங்க சார்! மன்னிச்சுக்கணும் சார்! ஸ்டேசன்ல எஸ்.ஐ. இல்லீங்களா சார்!" என்றது விவரம் தெரிந்தது போல வீயெம் மாமா.
            "ஓகோ! இவரு எல்லாம் தெரிஞ்ச ராமசாமியாக்கும்! எஸ்.ஐ.கிட்டதாம் பேசுவீயோளோ? நம்மகிட்டதாம் பேச மாட்டீங்களாக்கும்! அடிச்சு உள்ள தூக்கிப் போட்டேனா பாத்துக்கோ? நடக்குறதே வேற?" என்று குண்டு போலீஸ் சொன்னதும், ஒல்லி போலீஸ் குறுக்கிட்டு, "வுடுங்கய்யா! வெவரம் தெரியாம பேசிட்டாங்க! நீங்க சித்த காத்தோட்டமா வெளில வாங்க! நாம்ம டீலு பண்ணிக்கிறேம் இவுங்கள!" என்று  குண்டு போலீஸைப் பிடித்து ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த வேப்பமரத்தடிக்குக் கொண்டு போனது ஒல்லி போலீஸ்.
            வேப்பமரத்தடிக்குப் போனதும் குண்டு போலீஸ், "ஸ்... ஸ்... யப்பா! அதுங்க என்ன சொல்லணும்னு நெனைக்குதோ அத அப்படியே ஸ்டேட்மெண்ட்டா எழுதி வாங்கிக்கிய்யா!" என்று ஒல்லி போலீஸிடம் சொன்னது.
            ஒல்லி போலீஸ் உள்ளே வந்தார்.  ஐந்து பேரையும் ரைட்டர் டேபிளுக்கு அருகே அழைத்துச் சென்றவர், "இத்த இத்தோடு விட்டுட்டுப் போயிடுங்க! அவரு சொன்ன மாதிரி ஸ்டேட்மெண்ட் ஏதாச்சு எழுதிக் கொடுத்தீங்கன்னா வெச்சுக்குங்க, கோர்ட்டுக்கு அலயுற மாரி ஆயிடும். ந்நல்லா தெரிஞ்சுக்குங்க... வெசயம் எப்.ஐ.ஆராகி, கோர்ட்டுல கேஸ் ஓடிட்டு இருக்கு. சம்பந்தம் ல்லாம்ம எதயாவது எழுதிக் கொடுத்துட்டு மாட்டிக்காதீங்க. சித்த நேரம் இப்படி நின்னுட்டு ஒண்ணும் தெரியாத மாரி ஓடிப் போயிடுங்க. அதாங் நல்லது. ஏத்தோ நமக்குத் தெரிஞ்சத சொன்னேம். அதுக்கு மேல ஒங்க விருப்பம்!" என்றது ஒல்லி போலீஸ்.
            குழுவாய் ஸ்டேசனுக்குள் போன ஐந்து பேருக்கும் கிலி பிடித்துக் கொண்டது. எப்படியாது ஸ்டேசனை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினாலும் பரவாயில்லை என்று தோன்றியது. ஐந்து பேருக்கும் பாதங்கள் ஸ்டேசனில் ஒட்டிக் கொண்டு நடக்க முடியாதது போல ஒரு பிரமை தட்டியது. ஸ்டேசனுக்கு வெளியே போனால் அந்த குண்டு போலீஸ் கடித்துத் தின்று விடுவாரோ என்பது போன்ற பயம் ஐந்து பேருக்கும் தாட்டிக் கொண்டு வந்தது.
            "நாம்ம ஸ்டேசனுக்கு வந்திருக்குற வண்டிய கிண்டிய புடுங்கிடுவாங்களோ என்னாவோ? போறப் போக்கப் பாத்த ஒழுங்கா வூடு போயி சேருவோமான்னு பயமா இருக்கே!" என்று அவர்களுக்குள் மட்டும் கேட்குமாறு லாலு மாமா உளறிக் கொட்டியது.
            "அதாங் மாமா! நமக்கும் பயமா இருக்கு! கொஞ்சம் பொறுத்திருந்து மாணிக்கநாயகம் வந்தப்புறம் இந்தக் காரியத்த கையில எடுத்துருக்கணும் போலருக்கு. ஆழம் புரியாம கால வுட்ட மாரி இருக்கு!" என்றது சன்னமான குரலில் குமரு மாமா.
            "அதுலாம் வெசயம் ஒண்ணுமில்லீங்க! நம்ம ரகுநாதன கூப்டாந்து இருக்குணும்ங்க. சைக்கிள கொண்டாந்து வூட்டுல வுட்டுட்டுப் போயிருப்பாங்க. நம்ம மேல தப்புல்லன்னு நெனச்சிட்டு வந்தா...நம்மளயே தூக்கி உள்ளப் போட்டுருவாங்க போலருக்கு. நைசா வாங்க! அப்படியே நகந்துட்டு போயிடுவம் வாங்க!" என்றது தாடி தாத்தா.
            ஒரு வழியாக எல்லாரும் எப்படியோ அங்கிருந்த நகர்ந்து வண்டியைக் கிளப்பிக் கொண்டு பேக்டரி பாலத்துக்கு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வந்துதான் வண்டியை நிறுத்தி இறங்கினர்.
            "எப்படி நவுந்து வந்து வண்டிய எடுத்து வந்தேம்னே புரியல! எல்லாம் ஏத்தோ கனவு மாரி இருக்குது!" என்ற லாலு மாமா, ஆறுதல் சொல்வது போல, "பழைய கலவையான சைக்கிளுதான. எரநூறு, முந்நூறு கூட போவாது. புதுசா ஒண்ணு கம்பெனி சைக்கிளா பாத்து எறக்கிக்கலாம் வுடுங்க!" என்றது.
            "நம்ம சாம்பாத்தியத்துல வாங்குன மொத சைக்கிளா இருக்கேன்னு பாக்கிறேம்! அதாங் மனசு கேக்க மாட்டேங்குது. எப்படியாச்சிம் கொண்டாந்துட்டா தேவலாம்." என்றது அப்பா.
            "இவ்ளோ நடந்தும் அத்தாம் அடங்குதா பாருங்க!" என்றது குமரு மாமா.
            "அட, என்னம்பி நீங்க? ஒங்க அத்தாம் ன்னா தப்பா பண்ணிட்டு! இன்னொருத்தரு காச கொள்ளயடிச்சிட்டு அத்தே கொடுன்னு கேக்குதா? நீங்க வெளிநாடு போயி சம்பாதிச்சு வூடு வாசல்னு ஆயி சுலுவா இருக்கீங்க. ஒங்க அத்தாம் அங்க ன்னா கஷ்டப்படுதுன்னு நமக்குதாம் தெரியும். அன்னிக்கு டிவியெஸ்ஸூக்கு பெட்ரோலுக்குப் போட காசில்லாம்த்தாம் சைக்கிள தூக்கிட்டு விடிஞ்சதும் விடியாததுமா கெளம்பிருக்கு. ஒங்க குடும்பத்துக்காக அத்து எவ்ளோ ஒழச்சி ஓடா தேஞ்சிருக்கு தெரியுமா? அத்து புள்ளிக்காக வூட்டைப் போட்டுட்டு ஊரு வுட்டு ஊரு போயிக் கெடந்ததே. நீங்க வந்துப் பாத்தீங்களா? ரண்டு வார்த்த ஏதாச்சும் சொன்னீங்களா? ஏத்தோ தொணைக்கு போலீஸ் ஸ்டேசன் வந்திட்டோம்னு வாயில வந்து வாக்குல பேசக் கூடாது பாத்துக்குங்க!" என்றது தாடி தாத்தா.
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...