30 Mar 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 4


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 4
            செங்காந்தள் அறிவுத் திருவிழா மாணவர்களுக்கானப் புத்தக இயக்கம் ஆகும். ஒரு லட்சம் புத்தகங்களை மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்ப்பது அறிவுத் திருவிழாவின் முக்கிய இலக்கு ஆகும்.
            ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற இலக்கை நோக்கி இதுவரை மூன்று அறிவுத் திருவிழாக்கள் நடைபெற்றுள்ளன.
            நான்காவது அறிவுத் திருவிழா 28.03.2018 (புதன்) அன்று மன்னார்குடி நூலகத்தில் நடைபெற்றது. பள்ளி அளவில் நடைபெற்ற அறிவுத் திருவிழாவிலிருந்து மாறுபட்டு நூலகத்தில் நடைபெற்ற முதல் அறிவுத் திருவிழா இதுவாகும்.
            அறிவுத் திருவிழாவோடு மாணவர்கள் புத்தகங்களை நேசிக்கும் வகையில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளும் இவ்வறிவுத் திருவிழாவில் நடைபெற்றன. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் வகையில் புத்தகங்களே நினைவுப் பரிசுகளாய் வழங்கப்பட்டன.
            நூலகத்தில் அறிவுத் திருவிழா நடைபெற்ற அதே நேரத்தில், மன்னார்குடி வட்டார வள மையத்தில் தமிழாசிரியர்களுக்கு நடைபெற்ற 'கேள்வி எனும் கலை' பயிற்சி வகுப்புக்கும் சில மணித் துளிகள் பறந்து வந்து காட்சியளித்தது இவ்வறிவுத் திருவிழா.
            'கேள்வி எனும் கலை' என்ற பயிற்சி வகுப்பில் "தமிழாசிரியர் ஒருவரிடம் இருக்க வேண்டிய புத்தகங்கள் என்னென்ன?" என்ற கேள்வி எழுப்பப்பட, "புத்தகங்களைப் பார்த்தால்தானே சொல்ல முடியும்" என்று தமிழாசிரியர்களிடமிருந்து விடை பெறப்பட, திடீர் ஏற்படாக சில மணித் துளிகள் அறிவுத் திருவிழா அங்கும் இடம் பெயர்ந்தது. தமிழாசிரியர்கள் அறிவுத் திருவிழாவின் புத்தகங்களைப் பார்த்த மாத்திரத்தில் கொண்டாடித் தீர்த்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
            இப்படியாக நூலகத்துக்கும், வட்டார வள மையத்துக்குமாக அறிவுத் திருவிழா ஒருங்கே நடைபெற்றதும் அறிவுத் திருவிழா நிகழ்வுகளில் இதுவே முதன் முறையாகும்.
            மன்னார்குடி நூலகத்திலும் அறிவுத் திருவிழாவைப் பார்த்தவர்கள் கொண்டாடித் தீர்க்க 105 புத்தகங்கள் வாசிப்பை நேசிக்கும் கரங்களில் சென்று சேர்ந்தன.
            அறிவுத் திருவிழாவின் நமது இலக்கான ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற இலக்கில் இன்னும் அடையப் பட வேண்டிய இலக்கு 98,573 ஆகும். நான்காவது அறிவுத் திருவிழாவில் அடையப்பட்ட இலக்கு 105. ஆக 98,573 - 105 = 98,468. இன்னும் 98,468 புத்தகங்களைப் பிஞ்சுக் கரங்களில் கொண்டு சேர்க்க கரம் கோர்ப்போம்! அறிவுத் தாகம் தீர்ப்போம்!
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...