30 Mar 2018

யாவரும் செய்யலாம் அறம்!


குறளதிகாரம் - 10.3 - விகடபாரதி
யாவரும் செய்யலாம் அறம்!
            கொடுப்பதற்கு எதுவுமில்லை. எதைக் கொடுப்பது?
            செய்வதற்கு எதுவுமில்லை. எதைச் செய்வது?
            நிகழ்த்துவதற்கு எதுவுமில்லை. எதை நிகழ்த்துவது?
            வழங்குவதற்கு பணமில்லை. எதை வழங்குவது?
            நல்லது செய்ய முடியவில்லை. எப்படி முயல்வது?
            உதவி செய்ய வழியில்லை. எப்படி உதவுவது?
            இல்லாத போது எதையும் கொடுக்க முடியாது. வாய்ப்பில்லாத போது எதையும் செய்ய வழி கிடையாது. சாத்தியமற்றப் பொழுதுகளில் எதுவும் சாத்தியம் ஆகாது. இயலாத போது எதையும் நிகழ்த்த முடியாது.
            அப்புறம் எப்படி அறம் செய்ய முடியும்?
            ஒளவைச் சொன்னது போல அறம் செய விரும்பு என்று விரும்பினாலே போதுமா? அறம் செய்ய வேண்டாமா?
            இல்லாத போதும் அறம் செய்ய முடியும்.
            இயலாத போதும் அறம் செய்ய முடியும்.
            வாய்ப்பில்லாத போதும் அறம் வாய்க்கும்.
            சாத்தியமில்லாத போதும் அறம் சாத்தியம்.
            காரணம், அறம் அவ்வளவு எளிமையானது.
            இல்லாததிலிருந்தும் அறம் புறப்படும். இயலாததிலிருந்தும் அறம் புறப்படும். வாய்ப்பில்லாத போதும் அறம் வாய்ப்புகளை உருவாக்கும். வழியில்லாத போதும் அறம் வழியை உருவாக்கும். சாத்தியமில்லாத போதும் அறம் சாத்தியங்களைக் கண்டறியும்.
            அறம் செய்ய முகம் போதும். முகம் இருக்கின்ற யாரும் அறம் செய்ய முடியும். முகமற்றவர்கள் அறம் செய்ய முடியாது. மனிதம் என்ற முகம் அற்றவர்கள் எப்படி அறம் செய்ய முடியும்?
            முகத்தை வைத்துக் கொண்டு எப்படி அறம் செய்ய முடியும்?
            முகத்தால் இனிமையாக நோக்கினால் போதும். அதுவே அறம்.
            முகத்தால் கடுமையாக நோக்கினால்... செய்யும் அறத்தையும் செய்ய முடியாது. நோக்கக் குழையும் விருந்து போல ஆகி விடும். பெற வந்தவர் பெறாமலே போய் விடுவார்.
            முக இனிமையால்தான் அறம் சாத்தியப்படும். இல்லாதவர், இயலாதவர், முடியாதவர் யாவருக்கும் இது சாத்தியப்படும். முகம் யாவருக்கும் இருக்கும். யாவருக்கும் அறம் சாத்தியமே.
            அப்படி இனிமையாக நோக்கிய முகத்தால், வழங்குவதற்கும் ஏதேனும் வாய்ப்பிருந்தால் அறம் இன்னும் சிறக்கும் இல்லையா?
            பொருளில்லாத நிலையில், வழங்க வாய்ப்பும் வழியில் இல்லாத திக்கற்ற நிலையில், கடனாகக் கூட பெற்று வழங்க வக்கற்ற நிலையில் எதை வழங்குவது?
            அப்படிப்பட்ட நிலையிலும் வழங்க ஒன்று இருக்கவே இருக்கிறது.
            மனதிலிருந்து வெளிப்படும் இன்சொற்கள்தான் அவைகள்.
            காசா? பணமா? இன்சொற்கள் இல்லாமல் போக அல்லது களவு போக.
            வாய்ப்பா? வழியா? இன்சொற்களைத் தேடிப் போக அல்லது ஏமாந்துப் போக.
            இயலாமல் போய் விடுமா? முடியாமல் போய் விடுமா? இன்சொற்களைப் பேசிப் பார்க்க அல்லது முடியாமல் இயலாமல் போக.
            எப்போதும் இன்சொற்கள் சாத்தியம் என்பதே சத்தியம். அதற்காக முயற்சிக்க வேண்டியதில்லை. இயலாமல் போய் விடுவதில்லை.
            முகத்தால் இனிமை வீசுதலும், அகத்தால் இன்சொல் பேசுதலும் யாருக்கும், எவர்க்கும், எவ்வயதினர்க்கும், எந்நாட்டவர்க்கும் சாத்தியம். அதுவே அறம். முதன்மையான அறம். அந்த முதன்மையான அறத்துக்குப் பின்பே கொடுத்தல், வழங்கல், உதவுவதல் போன்றவைகள் கூடுதல் தகுதிகளாகக் கொள்ளப்படும்.
            முதன்மையான அறம் முகத்தால் இனிமையாக நோக்குதலும், அகத்தால் இன்சொல் வார்த்தலுமே.
            குழந்தையும் புன்முறுவல் செய்யும், மழலையால் இனிமையாகப் பேசும்.
            யாவரும், எவரும் செய்யக் கூடியதே அறம்.
            அறம் செய்ய பொன்னோ, மணியோ, பணமோ, சொத்தோ, சுகமோ தேவையில்லை. முகமும் அகமும் இருந்தால் போதும்.
            முகத்தால் இனிமையாக நோக்கி, அகத்தால் இனிமையாகப் பேசினால் அதுவே அறம்.
            முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன்சொலினதே அறம்.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...