30 Mar 2018

3 வது திருமணம், 4 வது விவாகரத்து


3 வது திருமணம், 4 வது விவாகரத்து
            ஒரு திருமணம் செய்து கொள்கிறார். பிடிக்கவில்லை என்று விவாகரத்துச் செய்கிறார்.
            திருமணம் பிடிக்கவில்லை என்று விவாகரத்துச் செய்கிறவர், மறுபடியும் எப்படித் திருமணம் செய்து கொள்கிறார்?
            மறுபடியும் திருமணம் செய்து கொள்கிறவர், எதற்காக மறுபடியும் விவாகரத்து செய்கிறார்?
            இப்படி இரண்டு ஆகிறது. மூன்றாவது திருமணத்துக்கு அவர் எப்படி தயார் ஆகிறார்?
            வியாபாரிகளுக்குப் போட்டியாக அரசியல்வாதிகளும் இதையே செய்கிறார்கள். அவர்கள் முதல் திருமணத்திலேயே தெளிவாக இருக்கிறார்கள், நடக்கின்ற இது ஒரு முறையாக இருக்கப் போவதில்லை என்பதில்.
            அவர்களுக்குத் திருமணம் பிடித்திருக்கிறது. திருமணத்திற்குப் பின் திருமணம் செய்து கொண்டவர் பிடிக்காமல் போய் விடுகிறது.
            அப்படிப் பிடிக்காமல்தான் போக வேண்டும் அவர்களுக்கு. ஒருவேளைப் பிடித்திருந்தாலும் திட்டமிட்டு பிடிக்காமல் செய்து கொள்கிறார்கள். அப்போதுதான் விவாகரத்தில் இறங்க முடியும். மறுமணம் செய்து கொள்ள முடியும்.
            பிடித்த ஒன்றை மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவது இல்லையா? அது அஜீரணம் ஆகும். ஆகட்டும். அதற்கான மாத்திரைகள் போட்டுக் கொண்டு சாப்பிடலாம் இல்லையா!
            சுமாராகப் பத்து திருமணங்கள் செய்து கொண்டாலும், பதினொன்றாவதாக ஒன்று செய்து கொள்வதில் ஒரு பிடித்தம் இருக்கிறது. பதினொன்றாவது விவாகரத்தில் முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்போதுதான் பனிரெண்டை நோக்கிப் போக முடியும்.
            சுவைத்துச் சுவைத்துப் பிடிக்காமல் போகிறது. அதற்காகச் சுவைப்பதை விட்டு விட முடியுமா? மீண்டும் பிடிக்காமல் போகும் வரை சுவைத்துப் பார்க்கத் தயாராகிறார்கள்.
            ஒருவர் எத்தனை முறை திருமணங்கள், விவாகரத்துகள் செய்யலாம் என்பதை ஜனநாயக நாட்டில் தீர்மானிப்பது கடினம்தான். ஜனநாயகத்துக்கு ஜனங்கள் பெருகுவதற்கு அதுதான் வழி.
            ஒவ்வொரு விவாகரத்தும் ஒரு பெருத்த ஜீவனாம்சத்துடன்தான் முடிவுக்கு வருகிறது. கடனில் மூழ்கி திவாலில் இருப்பவர் அதை எப்படிச் செய்வார்? விவாகரத்தில் முடியாது என்ற நம்பிக்கையில் திருமணம் நடைபெறலாம். விவாகரத்தில் முடியும் போது இனி திருமணம் கூடாது என்ற நினைக்கலாம். பிரசவ வைராக்கியம் போன்றவைகள் இவைகள்.
            ஒரு திருமணம் நடைபெறும் போது நீதிமன்றத்துக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.
            நீதிமன்றத்துக்கு நிறைய வேலை கொடுத்தவர்கள், நீதிமன்றத்துக்கு மேலும் ஒரு வேலை கூடுதலாகக் கொடுப்பதில் என்னவாகி விடப் போகிறது என்பதற்காகவும் அப்படிச் செய்யலாம்.
            சட்டப்படி திருமணமானவர் சட்டப்படி விவாகரத்துச் செய்யலாம். சட்டப்படி விவாகரத்து ஆனவர் சட்டப்படி திருமணம் செய்யலாம்.
            தாத்தா வயது ஹீரோக்கள், பேத்தி வயது ஹீரோயின்கள். நிஜப்படம் நிழல் படம் போல இருக்கும். நிழல் படம் நிஜப்படம் போலிருக்கும். நம் சமூகம் அப்படி. நமக்குத் திரைப்படங்கள் தேவையாக இருக்கிறது. அவர்கள் நடிக்கிறார்கள். நாம் வாய் பிளந்துப் பார்க்கிறோம். நடிப்பை மதிப்பவர்கள் நாமெல்லாம்.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...