29 Mar 2018

ஈதலை வெல்லும் இன்சொல்!


குறளதிகாரம் - 10.2 - விகடபாரதி
ஈதலை வெல்லும் இன்சொல்!
            உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்பார்கள்.
            அகத்தைக் காட்டுவது முகம். அக மாற்றம் முக மாற்றமாக வெளிப்படும். சில நேரங்களில் அக மாற்றத்தின் மூலம் முக மாற்றத்தை நோக்கிச் செல்ல முடியாத நிலையில், முக மாற்றத்தின் மூலமாகவும் அக மாற்றத்தை நோக்கிச் சொல்ல முடியும்.
            எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் அகத்தை, எதற்கெடுத்தாலும் சிரிக்கச் செய்யும் முகத்தின் மூலம் மாற்ற முடியும்.
            எப்போதும் சோர்வாக இருக்கும் அகத்தை, எப்போதும் புன்னகையோடு இருக்கச் செய்யும் முகத்தின் மூலம் மாற்ற முடியும்.
            கண்டதற்கும் கோபம் கொள்ளும் அகத்தை, கண்டவுடன் கருணையோடு இருக்கச் செய்யும் முகத்தின் மூலம் மாற்ற முடியும்.
            அக மாற்றத்துக்கு ஏற்ப எப்படி முகம் மாற்றம் அடைகிறதோ, அது போல முக மாற்றத்துக்கு ஏற்ப அக மாற்றத்தையும் கொண்டு வர முடியும்.
            எப்போதும், எங்கும், ‍எந்நேரமும் முகம் முக்கியம். மேக்கப் எனும் அழகு சாதன அலங்காரப் பூச்சுகள் கொண்டு அழகு செய்யவா என்றால், மகிழ்ச்சி, நிறைவு, புன்னகை, கருணை எனும் அன்பு சாதன அவசியப் பூச்சுகள் கொண்டு அழகு செய்ய.
            முகம் கோணிப் பொருள் கொடுப்பதைப் பிச்சை எடுப்பவரும் விரும்ப மாட்டார்.
            முகம் திரிந்து செய்யும் விருந்தை ஏழை விருந்தினரும் ஏற்க மாட்டார்.
            முகம் கடுகடுக்க செய்யும் உதவியை ஆபத்தில் இருப்பவரும் ஏற்க மாட்டார்.
            முகத்தில் தெரியும் இணக்கம் முக்கியம். முகத்தில் தெரியும் நிறைவு முக்கியம். முகத்தில் தெரியும் சாந்தம் முக்கியம். முகத்தில் தெரியும் புன்னகை முக்கியம்.
            சாந்தத்தோடு இயைந்த புன்னகை தரும் அழகை எது தரும்? காந்தியின் புன்னகை இப்படித்தான் பேரழகின் புன்னகையை விட அழகாகிறது.
            இப்படி முகம் மலர்ந்த புன்னகையோடு, அம்முகத்தில் இருக்கும் வாய் இன்சொற்கள் மட்டுமே சொல்லுமேயானால் அதற்கு ஈடு ஏது? அதற்கு இணையான பண்பாடு ஏது?
            முகம் மலர்ந்து சொல்லும் இனிய சொற்கள் சொல்வது பண்பின் உச்சம். கலாச்சார விருட்சம். நாகரிக அம்சம்.
            மலர்கள் மட்டும்தான் மலருமா?
            நினைவுகள் மட்டும்தான் மலருமா?
            மாலை மட்டும்தான் மலருமா? என்றால் முகமும் மலரும்.
            மலர்ந்த மலர்கள் மணம் பரப்பினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கும் மலர்ந்த முகம் சொல்லும் இன்சொல்.
            மலர்ந்த மலருக்கு நறுமணம் போல்,
            மலர்ந்த முகத்துக்கு இன்சொல்.
            மலரும் மணமும் போல, மலர்ந்த முகமும் இன்சொல்லும்.
            இரண்டும் ஒன்றை விட்டுப் பிரியாமல் இல்லறம் நடத்தும் போது வாழ்க்கை நல்லறமாய்ச் சிறக்கிறது.
            முகம் மலர்ந்த இன்சொல் ஆற்றல் மிக்கது. சக்தி தருவது மற்றும் அமைதி தருவது.
            அதன் மகத்துவம் அது மட்டுமோ?
            உள்ளம் உவந்து ஒரு பொருளைக் கொடுப்பதினும் உயர்ந்தது.
            மிகவும் உயர்ந்தது மனம் உவந்து ஈதலா? முகம் மலர்ந்து இன்சொல் பேசுதலா? என்றால் இரண்டாவதே முதலவாதாக வரும் அளவுக்கு உயர்ந்தது. ஆம்! முகம் மலர்ந்து பேசும் இன்சொல்லே, மனம் உவந்து கொடுக்கும் கொடையை விஞ்சுகிறது.
            அகம் உவந்த கொடையா? முகம் மலர்ந்த பேச்சு நடையா? என்றால் முகம் மலர்ந்த பேச்சு நடையே உயர்ந்த கொடை.
            அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.
            அகத்தின் உவப்பை முகத்தின் சிறப்பு வெல்லும் இடம் இது. முகத்தால் அகத்தை வெல்ல முடியும். முகத்தால் அகத்தை மாற்ற முடியும்.
            அகம் உவந்த ஈதல் சிறப்பானதுதான். அதை விடச் சிறப்பானது முகம் மலர்ந்த இன்சொல்.
            இச்சகமாய் ஏதேனும் தருமாறு கேட்ட பிச்சைகாரருக்கு அவர் கேட்டதை விடவும் அவருக்கு மேன்மையானதை டால்ஸ்டாய் தந்தது இப்படித்தான்.
            "ஐயா! தங்களுக்குத் தர என்னிடம் எதுவுமில்லையே!" என்கிறார் டால்ஸ்டாய்.
            "ஒரு பிச்சைக்காரரை மரியாதையாக ஐயா என்று அழைத்தீரே இதை விட தாங்கள் எனக்குத் தர என்ன இருக்கிறது?" என்கிறார் பிச்சைக்காரர்.
            அகனமர்ந்து ஈதலை, முகனமர்ந்த இன்சொல் வென்று விட்டதுதானே!
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...