28 Feb 2018

தனியுடைமைக்கான வேட்டு!

குறளதிகாரம் - 7.3 - விகடபாரதி
தனியுடைமைக்கான வேட்டு!
            செய்யும் தொழிலே தெய்வம்
            அதில் திறமைதான் நமது செல்வம் என்பது ஒரு திரைப்பாட்டு.
            ஒவ்வொருவருக்கும் செல்வம் அவரவர் செய்யும் தொழிலில் காட்டும் திறமைக்கு ஏற்பவே வருகிறது.
            இந்த உலகின் செல்வம் என்பது மக்கள் உழைப்பால் உருவாக்கிய செல்வம்.    உழைப்புக்கு பின்னே ஒரு பொருளுக்கு மதிப்பு வருகிறது.
            மனிதத் தொழிலாளர்கள் உழைத்துத் தங்கத்தைத் தோண்டி எடுத்து புடம் போடும் வரை அது மதிப்பற்றப் பொருளாகவே பூமியில் கிடக்கிறது. மனிதர்களின் உழைப்பு அதற்கு ஒரு மதிப்பைத் தேடித் தருகிறது.
            மக்கள் இந்த உலகில் தேடிய செல்வம் என்பது அவரவர் உழைப்பால் தேடிய செல்வம். உழைப்பின்றேல் ஊதியமில்லை என்பது நமது பழமொழி.
            ஒவ்வொருவரின் செல்வமும் அவரவர் உழைப்பால், அதாவது அவரவர் செய்யும் தொழிலால், அதாவது அவர் மேற்கொள்ளும் வினையால் வருகிறது.
            சூரியன் கிழக்கே உதிக்கிறது, மேற்கே மறைகிறது என்பது எப்படி ஓர் உலக உண்மையோ அப்படியே உழைப்பே செல்வத்தைத் தருகிறது அதாவது வினையின் மூலமே பொருள் உண்டாகிறது என்பதும் ஆகும்.
            அவரவர் செய்யும் உழைப்புக்கு ஏற்ப, அவரவர் செல்வத்தைப் பெறுவர். அதாவது அவரவர் செய்யும் வினைக்கு ஏற்ப பொருள் உண்டாகும்.
            உழைப்பின் மூலம் பெறும் செல்வம் உன்னதமானதுதான். அதற்கு ஈடான வேறொன்று உண்டா! என்றாலும்,
            என்னதான்,
            ஓடி ஓடி உழைத்தாலும்,
            தேடித் தேடிச் சேர்த்தாலும்,
            கூடிக் கூடிக் குவித்தாலும்,
            நாடி நாடி திரட்டினாலும்,
            கோடி கோடி கொடுத்தாலும்
அவைகள் எல்லாம் குழந்தை செல்வத்துக்கு ஈடாகுமா? குழந்தைச் செல்வம் எனப்படும் மழலைச் செல்வத்துக்கு நிகர் அதுவே.
            இந்த உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் தம் செல்வம் (அதாவது தம் பொருள்) என்று கொள்ளத்தக்கது தம் பிள்ளைகளே. மற்றச் செல்வம் (அதாவது பொருள்) என்பவைகள் அவரவர் உழைப்பின் மூலம் (அதாவது அவரவர் வினையின் மூலம்) வருபவைகளே.
            இந்த உலகில் உரிமையாக நாம் கொள்ளத்தக்கப் பொருள்கள் என்பது நாம் பெற்ற மக்களே. மற்றப் பொருள்கள் எல்லாம் செய்யும் செயலுக்கு ஏற்ப (அதாவது உழைப்புக்கு) ஏற்ப வருபவைகளே என்று மழலைச் செல்வத்தை வள்ளுவர்,
            தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் தம் தம் வினையான் வரும் என்று உயர்வுபடுத்துகிறார்.
            உழைப்புப் பொதுவானது. அதன் மூலம் எவர் வேண்டுமானாலும் உயர்ந்த செல்வத்தை அடைய முடியும். மக்கட் செல்வம் என்பது உரிமையால் அடையத் தக்கது.
            இல்லற வாழ்வில் வாழ்க்கைத் துணை நலம் ஏற்று உரிமையோடு அடையப்படும் செல்வம் மழலைச் செல்வம் எனும் மக்கட் செல்வம்.
            உரிமையான மக்கட்செல்வம் உழைப்பால் வரும் செல்வத்தைத் தாண்டிக் கொண்டாடப் பட வேண்டியது. குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
            இந்த உலகமே, உரிமையெனக் கொண்டாட வேண்டிய தகுதிக்குரியவர்கள் குழந்தைகள். குழந்தைகளுக்குப் பின்னே வைத்துதான் அவர்கள் சேர்த்த செல்வம் கொண்டாடப்பட வேண்டும்.
            நாம் உரிமையோடு பெற்ற குழந்தைகளையே செல்வமாகக் கொண்டாட வேண்டும். செல்வத்துக்காகக் குழந்தைகளைக் கொண்டாடக் கூடாது. இன்றைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள், செல்லம் கொடுத்துச் செய்யப்படும் ஆடம்பரங்கள் இவைகள் குறித்துதான் அன்றே சொல்லியிருக்கிறாரோ வள்ளுவர்!
            அவரவர் உழைப்பால் வரும் செல்வத்தை விட அவரவர் உரிமையால் வரும் குழந்தைச் செல்வமே அவரவர் செல்வம் என்க. மற்றச் செல்வங்களை உலகப் பொது என்க.
            உழைப்பால் வரும் செல்வம் தமக்கெனக் கொண்டது போக எஞ்சியதெல்லாம் உலகுக்கு. உரிமையால் வரும் மக்கட்செல்வம் முழுமையும் அவரவர்க்கு.
            பொன்னே போல் பாராட்டி, சீராட்டி, போற்றிக் காக்க வேண்டியச் செல்வம் பொன் அல்ல, பொன் போன்ற குழந்தைகளே.
            மேற்கூறியதுதான் 'தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் தம் தம் வினையான் வரும்' என்ற குறளுக்கு நுண்மையான விளக்கமா என்றால்... ஒருவாறானப் புரிதலுக்கு நீங்கள் வர வேண்டும் அல்லவா! அதற்கான விளக்கமே மேற்கூறியது. உண்மையான நுண்மையான விளக்கம் என்னவென்றால்,
            தம் பொருள் என்பது தம் மக்கள். அதை விடுத்து தம் உழைப்பால் வரும் செல்வத்தை மிகச் சிறந்த செல்வம் எனக் கருதி அதை பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்கக் கூடாது. ஏனென்றால் அவர் செல்வம் அவரவர் உழைப்பால் அதாவது அவர் வினையால் வர வேண்டும். பெற்றோர் சேர்த்து வைப்பதால் வரக் கூடாது. இப்படி தனியுடைமைப் பொருளாதாரத்துக்கு அன்றே வேட்டு வைத்து இருக்கிறார் வள்ளுவர்.
            உங்கள் குழந்தைகளை உங்கள் செல்வமாகக் கொண்டாடுங்கள். அவர்களுக்கானச் செல்வத்தை அவர்களே உழைத்துச் சேர்க்க விடுங்கள் என்பதைத்தான்,
            தம்பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் தம் தம் வினையான் வரும் என்கிறார் வள்ளுவர்.
            நம் பிள்ளைகள் உழைத்து அவரவர்க்கான செல்வத்தைத் தேடிக் கொள்வார்கள். நீங்கள் சொத்தைக் குவித்து இன்னொருவர் உழைத்துப் பெற வேண்டியச் செல்வத்துக்கு இடையூறாக நிற்காதீர்கள்.
            எல்லா வளமும் இருந்தும் இன்னும் இந்த உலகில் வறுமை நிழலாடுவதற்கு, ஒவ்வொருவரும் அவரவர் சந்ததியினர்க்கெனக் குவித்து வைத்து இருக்கும் செல்வம்தானே காரணம்.
            குழந்தைகளுக்கு உழைக்கக் கற்றுக் கொடுங்கள், உயர்வார்கள்.
            அவர்கள் உழைத்துச் சேர்க்க வேண்டியச் செல்வத்தை நீங்களே சேர்த்து வைப்பதால் அவர்கள் சோம்பேறிகளாகத்தான் ஆவார்கள்.
            மீன்களைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது சிறந்தது என்பதுதானே உலகப் பழமொழி.
            உங்கள் பொருள் உங்கள் பிள்ளைகள் என்பதில் எந்த மாற்றமுமில்லை. அவர்களுக்கானப் பொருள் அவர்களது உழைப்பால் வர வேண்டும் என்பதில் எந்தக் குற்றமுமில்லை. 
            பிள்ளைகளைச் செல்வமெனக் கொண்டாடி அவர்களுக்கானச் செல்வத்தை அவர்களின் உழைப்பினால் தேடிக் கொள்ள வாழ்த்துப் பா பாடி அனுப்பி வையுங்கள். வையகம் தழைக்கும். வையகம் முழுமையும் உழைக்கும்.
            ஒவ்வொரு குழந்தையும் உண்பதற்கான ஒரு வயிற்றோடு மட்டும் பிறக்கவில்லை, உழைப்பதற்கான இரண்டு கைகளோடும்தான் பிறக்கிறது என்ற நேருவின் கூற்றுதான் எவ்வளவு உயர்ந்தது.
            நாமோ குழந்தைகள் உண்பதற்கான வயிற்றோடு மட்டும் பிறந்திருப்பதாக எண்ணிப் பத்து தலைமுறைக்கானச் சொத்தைச் சேர்த்து வைக்க நினைக்கிறோம். அவர்களோ பத்து தலைமுறைக்கும் வேண்டுமானாலும் உழைப்பதற்கான வலுவான இரண்டு கைகளோடு பிறந்திருக்கிறார்கள் என்பதை வசதியாக மறந்து போகிறோம்.
            அவரவர் தலைமுறைக்கு உழைத்து அவரவர் சேர்க்க வேண்டியச் செல்வத்தைச் அவரவர் சேர்த்தால் வருகின்ற தலைமுறைகள் வளமாக இருக்கும், நலமாக இருக்கும்,  பலமாகவும் இருக்கும்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...