28 Feb 2018

உத்திகளும் ரகசியங்களும் உங்களுக்காக...

உத்திகளும் ரகசியங்களும் உங்களுக்காக...
            எஸ்.கே.வால் அவரவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லி விட முடிவதில்லை. வாயைப் பிடுங்கி விவகாரத்தில் மாட்ட வைப்பதற்கானக் கேள்விகள் அநேகம்.
            அநேகக் கேள்விகளுக்கு அதனால் பதில் அளிப்பதை விட புன்னகையே மிகச் சிறந்த பதில்.
            எஸ்.கே.விடம் பேசுபவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசி, அவர்களின் துயரங்களைக் கொட்டி எஸ்.கே.வைச் சுமக்க வைத்து விடுகிறார்கள். அவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள். அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு எஸ்.கே. அது சாத்தியமானதில்லை அவனுக்கு
            மற்றவர்கள் விவகாரத்தில் மிக அதிகமாக மூக்கை நுழைக்கக் கூடாது என்பதும், யாரும் தங்கள் சுபாவத்தில் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள் என்பதும், அது தானே தன்னை மற்றவர்களுக்கு எதிரியாக்கிக் கொடுப்பதற்கு வழிவகுக்கும் என்பதும் எஸ்.கே. அறியாததல்ல.
            இதற்காக எஸ்.கே. பார்ப்பவர்களையெல்லாம் புகழ்ந்து பேசுகிறான். தினம் இருபது பேரையாவது புகழ்ந்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். புகழ்ச்சி என்ற மொழி ஒருவனது பல்வேறு உள்நோக்கங்களை மறைத்து விடும். காரியங்களை உள்ளேப் புகுத்தி வெற்றி பெறச் செய்யும். மேலும் புகழ்ந்து பேசினால்தான் அநாவசியமாக யாரும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள்.
            பல நாள் மனச்சோர்வுக்கு மருந்தாவதும் புகழ்ச்சிதான். எவ்வளவு எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்றாலும் புகழ்ச்சி எல்லாவற்றையும் மாற்றி விடும். எவ்வளவு எதிர்பார்ப்புகள் நிகழ்ந்தாலும் புகழ்ச்சி இல்லையென்றால் ஏமாற்றம் எதிர்கொள்ள முடியாததாகி விடும்.
            இதற்கெல்லாம் மற்றவர்களை எதிர்பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதிலும் தவறு இருக்க முடியாது. யாருக்கும் தெரியாமல் தனக்கு மட்டும் தெரியும் வகையில் அதைச் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை.
            இதில் மற்றுமொரு நிபந்தனை எப்படிப் புகழ்ந்தாலும் சிறியதாக புகழ்ந்து கொள்ள வேண்டும். மன்னரைப் போல பெரிதாக என்றால், படைப் பரிவாரங்கள் இல்லையே என்ற கவலை உண்டாகி விடும். சிறியதன் அழகும் சிறப்பும் அதுதான்.
            இதுபோன்று செய்து கொள்ளும் ரகசியங்களையெல்லாம் இலைமறை காயாக வைத்துக் கொள்ள வேண்டும். முற்றிலும் சிதறு தேங்காய் போல போட்டு உடைத்து விடக் கூடாது. தனது வாழ்க்கை தனக்கே கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் இவைகளெல்லாம் அவசியம்தான்.
            பாதி விசயம் தெரிந்த பிறகு, பாதி விசயம் தெரியவில்லை எனும் போதுதான் உலகம் உங்களைக் கவனிக்கிறது.
            இதையெல்லாம் முன்கூட்டியே அனுமானிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் சொல்லிக் கொடுத்த  பிறகும் நிகழ்த்த முடியவில்லை என்றால் சோகம்தான்.
            உத்திகள் மாபெரும் சக்தி.
            ரகசியங்கள் என்பதும் இன்னும் பெரிய மாபெரும் சக்தி.
            இந்த இரண்டும் இணைந்தால் இந்த உலகில் ஆகாது எதுவுமில்லை என்பதோடு நிறைய சாதிக்கலாம்.
            அப்புறம் இந்த உலகமே நிறைய கட்டுபாடுகளால் ஆனது. அந்தக் கட்டுபாடுகளை யார் நமக்கு விலக்கித் தருகிறார்களோ அவர்கள் என்றும் பாசத்துக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். இது இன்னொரு ரகசியம் மற்றும் உத்தி. உங்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படுகிறது.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...