26 Feb 2018

எஸ்.கே.வின் பிரத்யேகச் சிந்திக்கும் செயல்முறைகள்

எஸ்.கே.வின் பிரத்யேகச் சிந்திக்கும் செயல்முறைகள்
            சிந்தித்தோம் என்றால் நிறைய வழிகள் புலப்படும். ஊக்கம் குறையாமல், நம்பிக்கை இழக்காமல் சிந்திக்க வேண்டும். சிந்தித்ததைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.
            சிந்தனை என்பது சிந்திக்க சிந்திக்கத்தான் வருகிறது. அப்படியே அமர்ந்திருந்தால் அதுவும் அப்படியே இருக்கிறது.
            சிந்திப்பதில் சோர்வு என்பது இல்லை. இது உயர்வானச் சிந்தனை, இது தரம் குறைந்தச் சிந்தனை என்று தடைகளை அள்ளி ஆரம்பத்திலே போட்டுக் கொள்ள வேண்டியதில்லை. சிந்தித்தப் பிறகு தரம் பிரித்துக் கொள்ளலாம், வெளிப்படுத்தும் முன் சென்சார் செய்யும் வேலையைச் செய்து கொள்ளலாம். சிந்திக்கத் தொடங்குகிறோம் என்ற உணர்வில் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் சிந்திப்பதற்கு தடையேதும் இல்லை.
            சிந்திக்கும் போது கோபம் மட்டும் வேண்டாம். அது சிந்தனையின் நேர்மறைச் சக்தியை அழித்து விடுகிறது. தோன்ற இருக்கின்ற மாற்று வழியையும் தடுத்து விடுகிறது. எல்லையற்ற பொக்கிஷமான பொறுமையை அது ஒரு நொடியில் தூள் தூளாக்கி விடுகிறது.
            பொறுமை ஆயிரம் நல்ல வழிகளைத் திறந்து விடும்.
            கோபத்தால் முடிந்தது எல்லாம் ஒரு கெட்ட வழியை அதுவும் மாபெரும் மோசமான மட்டரகமான ஒரு கெட்ட வழியைத் திறந்து விடுவது மட்டுமே.
            கோபமாக இருக்கும் போது என்ன செய்வது? சிந்திக்காமல் இருப்பது சாலச் சிறந்தது. உறங்கி விடுவது ரொம்ப உத்தமம். தூக்கத்தைக் கடந்து எந்தக் கோபமும் நிலைப்பதில்லை.
            இந்த உலகோடு எப்படி இயைந்து போவது என்பது குறித்தும் ஒரு லெளகிக மனிதன் அதிகம் சிந்திக்க வேண்டும்.
            யாரையும் புகழ்ந்தால் இயைந்துப் போய் விடலாம். காசா? பணமா? புகழ..? அவருக்கும் மனக்குறை இருக்காது. நாமும் அவரன் மனபேதத்துக்கு ஆளாக வேண்டியதில்லை.
            இந்த உலகில் பல விசயங்களைப் பயந்தது போலக் காட்டிக் கொண்டுதான் காரியம் ஆற்ற வேண்டியிருக்கிறது. துணிந்தவன் போல் காட்டிக் கொண்டு செயலாற்றினால் செயல்படாமல் விடுவதற்கான அத்தனைக் காரியங்களையும் பார்க்கிறார்கள்.
            துணிச்சல் மற்றவர்களிடம் இருப்பது மற்றவர்களுக்கு அறவே பிடிக்காது.
            மீண்டும் சிந்திப்பது குறித்தும் நிறைய சிந்திக்க வேண்டும்.
            குறிப்பாக,
            சிந்திக்க சிந்திக்க அது வந்து கொண்டே இருக்கும். என்ன வரப் போகிறது என்பது பிரபஞ்ச ஆச்சர்யம். படைப்பின் ரகசியம்.
            யாரும் அங்கீகரிக்கவில்லை என்பதற்காக சிந்திக்காமல் இருந்து விடக் கூடாது. சிந்திப்பது என்பது சிந்திப்பதில் கிடைக்கும் மன (அப்படியென்றால்...?) திருப்திக்கும், அது தரும் நன்மைக்காகவும்தான். சிந்தித்துச் சிந்தித்துதான் நீங்கள் உங்கள் மனத்துன்பத்திலிருந்து விடுபட முடியும். கடைசியில் எதையும் சிந்திக்காமல் இருந்தால்தான் எதிலிருந்தும் விடுபட முடியும் என்பதாக அது முடியும் என்றாலும் ஆரம்பத்தில் அது அடைதலுக்குச் சாத்தியம் இல்லாதது. ஆகவே சிந்திக்கத் தொடங்குவதை ஆரம்பத்திலேயே நிறுத்தி விட முடியாது. கடைசியில் அடையப்பட வேண்டியதை துவக்கத்தில் அடைந்து விட முடியாது.
            சின்னச் சின்ன விசயங்கள் குறித்து நாம் என்னச் சிந்திக்கிறோம் என்பது கூட மனதில் மிகப்பெரிய மாற்றத்தை விளைவிக்கக் கூடியது.
            சிந்திக்கச் சிந்திக்கத்தான் அது வருகிறது. அதை முன்னால் தீர்மானிக்க முடியாது.
            நம்மிடமிருந்து நன்மை பிறக்கிறது என்றால் அதை செய்துதான் ஆக வேண்டும். சிந்திக்கச் சிந்திக்க அதிலிருந்து ஒன்று புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கிறது.
            முடிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளலாம், எளிமையாக விளக்குவதில்தான் எல்லாம் அடங்கி இருக்கிறது.
            இச்சமூகத்தைப் புதிய கோணத்தில் அணுகலாம். அப்படியேச் சிந்திக்கலாம்.
            எது சிறந்தது என்று தீர்மானிப்பது அவ்வளவு எளிதில் முடியாது. சிறந்தது, செய்தவற்கு இடையே வருகிறது.
            இதை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்?
            சிறந்தது,
            செய்வதற்கு இடையே வருகிறது - இப்படி இரண்டு வரிகளாக்கினால் புரிந்து கொள்ள முடிகிறதா எனப் பாருங்கள். இதுதான் விசயம்.
            மற்றபடி என் போக்குக்கு எனக்குத் தெரிந்ததையெல்லாம் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். ஏன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உட்பட எல்லாவற்றையும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். இது அதைச் செய்வதால் கிடைக்கும் பலனுக்காக அல்ல. ஏதோ ஒரு மனத்திருப்திக்காக அப்படி ஒரு திருப்தி இல்லையென்றாலும்.
            குறைவாகச் சிந்தித்தாலும் அதைத் தொடர்ந்து செய்து கொண்டு இருப்பேன் என்பதுதான் சிந்திப்பதில் ஒரு நேர்த்தியை உருவாக்குகிறது.
            புதிதாக ஒன்றைத் தெரிந்து கொள்கிறேன் என்ற திருப்திதான் தொடர்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது.
            இச்சிந்தனைக்கானச் செயல்முறைகளை நீங்களும் ஒருமுறை பரிசீலித்துப் பாருங்கள். அது குறித்து எதுவும் தோன்றினால் எழுதுங்கள். நாம் ஒரே மாதிரியாகவா அல்லது வேறு மாதிரியாகவா எப்படிச் சிந்திக்கிறோம் என்பதை ஒரு கை பார்த்து விடலாம்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...