27 Feb 2018

நிகழ்கால முயற்சிகள் எப்படி இருக்க வேண்டும்?

நிகழ்கால முயற்சிகள் எப்படி இருக்க வேண்டும்?
            இருக்கின்றவைகள் போதாதா? அதைத் தொடர்ந்து செய்தால் போதாதா? மனதை அலைபாய விட்டு ஆசைகளைப் பெருக்கி வாழ்வைச் சிக்கலாக்கிக் கொள்வதா? தேவையில்லாத பாரங்களுக்கும் சிக்கல்களுக்கும் சிரத்தை எடுத்துக் கொள்வதா? எப்போதும் எண்ணங்களை அதிகரித்துக் கொள்வது குழப்பத்தைத்தான் தரும்.
            எதையும் எவரிடமும் அவசரப்பட்டுக் கூறி விடாதீர்கள். ஆர்வக் கோளாறின் அடிப்படையில் செயல்படுபவர்கள் நாட்டில் அதிகரித்து விட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் எதையாவது ஒன்றைச் செய்து விட்டு அதன் பலனை கடைசியில் தலையில் கட்டி விடுகிறார்கள். அப்படியே அனுபவிக்கும்படி விட்டு விட்டுப் போயும் விடுகிறார்கள்.
            கொடுக்கல் வாங்கல் என்று வரும் போது ஒரு கொழுத்த வியாபாரத்தை நிகழ்த்தி விடுபவர்கள் இங்கு அநேகம்.
            எதையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இயற்கையை நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பது விளங்க வரும். ஆழ்ந்து சிந்திக்காமைதான் பிரச்சனை. எல்லாம் சரியாகத்தான் இருக்கும், இல்லாமலும் இருக்கும். தனிப்பட்ட முறையில் செயல்பட்டு மாற்றும் அளவுக்கு இங்கு எதுவும் இல்லை என்பது மாபெரும் உண்மை. ஒன்று, உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இரண்டு, கூட்டாகச் சேர்ந்து செயல்பட்டு மாற்ற வேண்டும்.
            இங்கு தேவைப்படுவதெல்லாம் குறைந்தபட்ச கடமைகளை நிறைவேற்றினாலே போதும் என்பதாக இருக்கிறது. எல்லாருடைய முயற்சியும் இயற்கையோடு இயைந்ததாக இருப்பது நல்லதாகத் தோன்றுகிறது. அதைத் தாண்டி ஆர்வக் கோளாறாக எதையும் செய்ய வேண்டியதில்லை என்பதுதான் சங்கதி. அது தேவையும் இல்லை என்பதுதான் அனுபவம்.
            சில நேரங்களில் எப்படிச் செயல்படுவது என்ற கேள்வி குழப்பத்தில் ஆழ்த்தி விடும். அது போன்ற நேரங்களில் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டியதில்லை. இயல்பாக எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட்டாலே போதுமானது.
            இப்படி ஒரு கேள்வி மனதுக்குள் எப்போது வருகிறதோ, அப்போதே அதற்கான பதிலையும் மனம் கண்டுபிடித்து விடும். அதற்காக ஒரு புதிய மனதை உருவாக்கிக் கொண்டு விடை தேட வேண்டியதில்லை. சில நேரங்களில் செய்ய வேண்டியது என்னவோ, மேலும் மேலும் சிந்தித்து குழப்பாமல் இருப்பதுதான்.
            எண்ணங்கள் விட்டு விட்டு தொடர்ச்சி இல்லாமல் வரலாம். செயல்களைக் கொஞ்சம் கொஞ்சம் செய்து விட்டு அப்படியேப் போய்க் கொண்டும் இருக்கலாம்.
            மனதுக்குப் பிடித்தம் இல்லாத வேலைகளைச் செய்யும் போது இது போன்ற குழப்பம் ஏற்படுவது இயல்பானதுதான். காரிய விருப்பம் முக்கியம்.
            ஓய்வு ஒழிச்சலற்ற வேலைகளும் காரிய விருப்பத்தைக் காலி செய்து விடும்.
            எது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லையோ, பெரும் உழைப்பை உங்களிடம் வாங்கிக் கொண்டு, வெகு சிறியப் பலனைத் தருகிறதோ அது உங்களை இல்லாமல் அடித்து விடும். இதற்குக் காரணம் கோழிகள். எதைப் போட்டாலும் அதைச் சீய்த்து எடுத்து விடும். காரியவாதக் கோழிகள் எப்போதும் நம்மைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.
            நிழல் மிகுந்த இடத்தில் எதுவும் சரியாக வளர்வதில்லை. மற்றவர்களின் பாதுகாப்பில் நின்று கொண்டே காரியம் ஆற்றிக் கொண்டு இருக்கக் கூடாது. வெயிலைத் தேடி சில சமயம் கிளைகளை வெட்டி விடத்தான் வேண்டியிருக்கிறது. வெட்டி விடாமல் சில நேரங்களில் வளர்ச்சி இருப்பதில்லை. முதற்கட்டமாக சோம்பல், சலிப்பு, இயலாமையான எண்ணக் கட்டுமானங்களை வெட்டிக் காலி செய்து விடலாம்.
            மனதுக்குள் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதற்கானச் சூழல்களும் இருக்க வேண்டும். தொடர்ந்து எதிர்நீச்சல் போட முடியாது. அப்படிப் போடுவது என்றால் அவ்வபோது இளைப்பாறிக் கொள்ளவும் வேண்டும்.
            முயற்சிகள் செயல்பாட்டு வடிவத்துக்கு வரும் போது சிறிய அளவில் இருந்தால் போதும், சிறியதே அழகானது என்பது போல. மிக பிரமாண்டமான முயற்சிகளை விட எளிமையான முயற்சிகளே போதுமானது. அது எப்போதும் சாத்தியமாகக் கூடியது. யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காதது. தொடர்ந்து செய்யக் கூடியதும் கூட.
            மாற்றத்திற்காக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் மனதும் மாறினால்தான் அந்த மாற்றம் நிலையானதாக இருக்கும்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...