17 Aug 2025

உலகின் சிறு தூசு ஆகிய நீங்கள்!

உலகின் சிறு தூசு ஆகிய நீங்கள்!

போர்கள் இல்லாமல்

நோய்கள் இல்லாமல்

பட்டினிகள் இல்லாமல்

பேரழிவுகள் இல்லாமல்

துரோகங்கள் இல்லாமல்

கண்ணீர் இல்லாமல்

சீர்கேடுகள் இல்லாமல்

மாசுபாடுகள் இல்லாமல்

எப்போது உலகம் நன்றாக இருந்திருக்கிறது

என்றாலும் மலர்கள் பூக்காமல் இல்லை

கனிகள் கனியாமல் இல்லை

விதைகள் முளைவிடாமல் இல்லை

குழந்தைகள் சிரிக்காமல் இல்லை

அழுகைக்கும் மத்தியிலும் மக்கள் ஆனந்திக்காமல் இல்லை

இந்த உலகம் எல்லாமாகவும் இருக்கிறது

நல்லது மட்டுமே நடக்கும் என்று சொல்ல முடியாது

கெட்டது நடக்காமலும் இருந்து விடாது

நல்லதையும் கெட்டதையும்

ஆக்கத்தையும் அழிவையும்

மாறி மாறியோ

கூடுதலாகவோ குறைவாகவோ

எதிர்கொள்வதைத் தவிர

உலகத்து உயிர்களுக்கு வெறென்ன வழியிருக்கிறது

மனிதர்களைக் கொடூரமாகக் கொல்லும் ஒருவர்

நாய்க்குட்டியைப் பிரியமாக வளர்க்கக் கூடும்

நாய்கள் பிடிக்காத மனிதர் ஒருவருக்கு

மரங்கள் மேல் பிரியங்கள் இருக்கக் கூடும்

எல்லாரும் எல்லா நேரத்திலும்

தெய்வமாக இருக்க முடியாது

எல்லாரும் எல்லா நேரத்திலும்

சாத்தானாக இருக்க முடியாது

உலகம் அழிந்தால் அழிந்து தொலையவும்

இருந்தால் வாழ்ந்து தொலையவும் அன்றி

வேறென்ன வழியிருக்கிறது

அழிகின்ற பொழுதில் சிரித்துக் கொண்டே

அழியக் கூடாது என்று தடுக்க முடியாது

சந்தோசப் பொழுதுகளில்

அழிவு வரக் கூடாது என்ற எதிர்பார்க்க முடியாது

எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம்

எப்போது எது நிகழ்ந்தாலும் சந்தோசமாகவும் இருக்கலாம்

ஒரு போதும் வராத அழிவுக்காகக் கவலையோடும் இருக்கலாம்

எல்லாம் அவரவர் மனப்போக்கு

எல்லாம் அவரவர் யோசனை நோக்கு

போக்கும் நோக்கும் பிடிபட்டு விட்டால்

உலகத்தின் சிறு தூசு நீங்கள்

கண்களில் பட்டு கலங்கச் செய்யவும் முடியும்

யார் கண்ணிலும் விழாமல் உறுத்தாமல் இருக்கவும் முடியும்

*****

No comments:

Post a Comment