30 Jun 2024

இனிய வாழ்வுக்கு இரு வேளை உணவு போதும்!

உலகம் எவ்வளவு மாறி விட்டது.

ஒவ்வொரு நாளும் இந்த உலகில் ஏதேதோ புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

புதிய புதிய கருவிகள், தொழில்நுட்பங்கள் மட்டுமா? நோய்களும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

இந்த நோய்களுக்கெல்லாம் எவை காரணங்கள்?

ஒவ்வொரு நோய்க்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது அனைத்து நோய்களுக்குமான காரணங்களை ஒற்றைப் புள்ளியில் கொண்டு வருவது என்பது எவ்வளவு சிரமமானது.

ஆனால், பொதுவாக ஒரு சில காரணங்களுக்குள் அடக்கி எல்லா நோய்களுக்கும் தீர்வு சொன்னால் எப்படி இருக்கும்? அதுவும் ஒரே ஒரு காரணத்திற்குள் அடக்கி அதுதான் அனைத்து நோய்களுக்கான சர்வரோக நிவாரணி என்று சொன்னால் எவ்வளவு இனிதாக இருக்கும்?

அப்படி ஒற்றைத் தீர்வு இருக்கிறதா என்ன?

நோய்கள் வந்தால்தானே மருந்து? நோய்களே வராவிட்டால் மருந்துகள் எதற்கு?

திருவள்ளுவர் அப்படித்தான் சிந்திக்கிறார்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.”             (குறள், 942)

என்கிறார் வள்ளுவர். மருந்து என்ற தலைப்பிலான அதிகாரத்தில் இடம் பெற்ற மருந்தே வேண்டாம் என்று சொல்லும் குறள் இது. அட! இது என்ன ஒரு முரண்?

மருந்தே வேண்டாம் என்றால் மருந்து என்ற அதிகாரம் எதற்கு? அதானே! மருந்தே வேண்டாம் என்றால் அங்கு மருந்துக்கு என்ன அதிகாரம் (Order or Power)? அதுதான் வள்ளுவர் இதன் மூலம் சொல்ல வருகின்ற கருத்து.

வள்ளுவர் அருந்தியது என்கிறார். உண்டது என்று சொல்லவில்லை. எதை அருந்த முடியும்? இதுதான் நுட்பமான இடம். திரவ உணவுகளைத்தான் அருந்த முடியும். திட உணவை உண்ணத்தானே முடியும்? இது ஒரு நுட்பமான கருத்து. திரவ உணவுகள் எப்போதும் சிறந்தது. நோயுற்றவருக்குத் திட உணவையா கொடுக்கிறோம்? கஞ்சி, பழச்சாறு போன்ற திரவ உணவுகளைத்தானே கொடுக்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போருக்கு உணவானது திரவ வடிவில்தானே வழங்கப்படுகிறது.

உணவானது அருந்தும் பதத்தில் திரவ நிலையில் இருப்பது செரிமானத்திற்கு உகந்தது. சோற்றோடு குழம்பு, சாறு (ரசம்), மோர் என்று திரவ நிலை உணவுகளைச்  சேர்ப்பது இதற்காகத்தான். அதிலும் பாருங்கள், நிறைய சாற்றோடு (ரசத்தோடு) சோற்றைப் பிசைந்து சாப்பிடுவது எப்போதும் செரிமானத்திற்கு எவ்வளவு உகந்ததாக இருக்கிறது. நம் முன்னோர்களும் சாறோ (ரசமோ), மோரோ இல்லாமல் உணவை நிறைவு செய்ய மாட்டார்கள்.

கிராமத்து வாழ்க்கையில் காலை உணவே நீராகாரம்தானே?

அப்படி அருந்தும் உணவும் செரித்திருந்தால் மறுவேளை உணவை உண்ணலாம் என்பது வள்ளுவர் சொல்லும் கருத்து. அப்படி உண்டால் அதாவது அருந்தினால் அவருக்கு மருந்துதான் தேவைப்படுமோ என்கிறார்.

நாம் தற்போது உண்ணும் உணவுகளும், நமக்கான உணவு முறைகளும்தான் எவ்வளவு மாறி விட்டன. பலவித வண்ணங்களில், பலவித சுவைகளில் எத்தனை எத்தனை உணவுகள்? இவற்றை உண்ணாமல், ரசிக்காமல், ருசிக்காமல், அனுபவிக்காமல் அதென்ன வாழ்வு? இதுவும் நியாயமான கேள்விதானே?

நம்மிடம் எவ்வளவு உணவு இருந்தால் என்ன? ஒவ்வொருவரும் அவரவருடைய ஒரு வயிற்றுக்குத்தானே உண்ண முடியும்? வயிறு எவ்வளவுதான் விரிந்து கொடுக்கும் தன்மை உடையது என்றாலும் எவ்வளவு உண்ண முடியும் சொல்லுங்கள்?

வழக்கமான கணக்கு என்பது ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்பது.

அந்தக் கணக்கைக் கொஞ்சம் குறைத்தால், விருப்பப்பட்ட உணவை உண்டு கொண்டு இன்பமாக இருக்கலாம்.

எவ்வளவு குறைப்பது? மூவேளை உணவை இரு வேளையாக ஆக்கிக் கொள்ளலாம். அதாவது ஒரு வேளை உணவைக் குறைத்துக் கொள்ளலாம்.

அப்படியென்றால், இரு வேளை உணவு உங்கள் வாழ்க்கையை இனிய வாழ்வாக ஆக்கி விடும். உண்மையில் இப்போதைய கால கட்டத்தில் இரு வேளை என்பது போதுமானது. உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்து விட்ட கால கட்டத்தில் மூவேளை உணவு என்பது அளவுக்கு மிஞ்சுகின்ற நஞ்சாகும் அமுதுதான். அப்படியென்றால் இடையே உண்ணுகின்ற சிற்றுண்டிகள், அவை அறவே வேண்டாம்.

இருவேளை உணவே அதிகம் என்றால் இடையில் உண்ணுகின்ற சிற்றுண்டிகளைச் சேர்த்தால் இன்றைய மனிதர்களின் உணவு என்பது ஐந்து வேளை அல்லது ஆறு வேளை உணவாகக் கூட இருக்கும்.

இவ்வளவு உணவும் உள்ளே சென்றால் என்னவாகும்? அவ்வளவும் சேர்ந்து நோய்களுக்கு நன்றாகத் தீனி போடும். தீனி போட போட, நோய்கள் பெருகிக் கொண்டே இருக்கும். நோய்களைத் தீனி போட்டு பெருக்கிக் கொண்டு, அதைக் குறைக்க வேண்டும் என்று மருந்துகளை நாடுவது என்பது ஒழுகும் பானையில் ஓட்டையை அடைக்காமல் மேலும் மேலும் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருப்பதைப் போன்றது.

இப்போது என்ன செய்யலாம்? எந்த வேளை உணவைக் குறைக்கலாம்?

சிற்றுண்டிகளை அறவே தவிர்த்து விட்டு இரவு உணவை இல்லாமல் செய்து கொள்ளலாம்.

அப்படிச் செய்தால்…

செய்து பாருங்கள்.

எந்த சிகிச்சையும் தேவைப்படாமல் உடல் இளைப்பீர்கள்.

சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு என்ற அனைத்தும் கட்டுக்குள் வருவதைக் காண்பீர்கள்.

உடல் கரவு செரவாக மாறுவதைக் காண்பீர்கள்.

உடற்பயிற்சி செய்யாமல், யோகா செய்யாமல் உடல் இப்படி வடிவாக மாறுமா என்று ஆச்சரியப்படுவீர்கள்.

பல நாட்கள் உண்ட மருந்துகளுக்கு வேலை இல்லாமல் போவதைக் கண் முன்னே காண்பீர்கள்.

இதெல்லாம் இரு வேளை உணவை எடுத்த உடனே நிகழ்ந்து விடுமா?

நிச்சயம் நீங்கள் இதற்காக 15 நாட்களிலிருந்து மூன்று மாதங்கள் வரை உங்கள் உடல் நிலையைப் பொருத்துக் காத்திருக்க வேண்டும். அதற்குள் நீங்கள் இந்த மாற்றங்களைக் காண்பீர்கள்.

இரவு உணவை விட்ட பிறகு,

நீங்கள் அதிகாலையில் எழுவீர்கள்.

வேலைகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதை அவதானிப்பீர்கள்.

உங்களிடம் இருந்த மருந்துகள் காணாமல் போவதைக் காண்பீர்கள்.

நூறு கிலோ எடையில் இருந்த நீங்கள் ஐம்பதிலோ அறுபதிலோ வந்து நிற்பதை அதிசயமாக உணர்வீர்கள்.

ஏதோ உங்களுக்கு மாயா ஜாலம் நடந்தது போல இருக்கும்.

ஒரு கட்டத்தில் நீங்கள் காற்றில் பறப்பது போல உடல் இலகுவாகி இருப்பதையும் உணர்வீர்கள்.

உங்கள் மூவேளை உணவை இருவேளை உணவாக மாற்றி விட்டு பாருங்கள். அதற்குப் பின்பு நிகழும் மாற்றங்களை நீங்களே அனுபவித்து இங்கே பதிவிடுவீர்கள்.

ஆக எல்லா நோய்களுக்குமான ஒற்றைத் தீர்வு என்றால் அது இரு வேளை உணவுதான். இருவேளை உணவே உடலுக்கு போதும் எனும் போது மூவேளை உணவு என்பது நிச்சயம் நோய்களுக்கான சாளரம்தான். நோய்க்கான சாளரத்தைத் திறப்பதும், திறக்காமல் இருப்பதும் இப்போது உங்கள் கையில்தான் இருக்கிறது.

வள்ளுவர் சொல்கிறார்,

“இழிவறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும்” (குறள், 946)

என்று.

இன்பம் என்றும் உங்களிடம் நிற்க இருவேளை உணவு போதும்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் உடல் நலத்தை மட்டுமா? கூடுதலாக மூன்றாவது வேளை உணவு தயாரிக்க ஆகும் எரிபொருள், நேரம், பாத்திரத் தூய்மை செய்வதற்கான பணி என்ற எவ்வளவோ கூறுகளை மிச்சம் செய்ய முடியும். உங்கள் உடல் நலத்தையும் பத்திரமாகப் பாதுகாப்பு செய்ய முடியும்.

இருவேளை உணவை இன்றே முயன்று பார்க்கலாமா?

இது கொஞ்சம் கொடுமையாக, ஏன் கடுமையாகக் கூடத் தெரியலாம். அதற்குப் பின்பு நிகழப் போகும் இனிமையைக் காண இந்தக் கடுமையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கிறதா என்ன?

ஓர் இன்பத்தை எதிர்கொள்ள சில நேரங்களில் சில துன்பங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது யார் சொன்னது என்கிறீர்களா? இதுவும் வள்ளுவர் சொன்னதுதான்,

“துன்பம் உளவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.”            (குறள், 669)

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...