27 Dec 2017

ஜ(ப)ன(ண)நாயக அலசல்!

(ப)(ண)நாயக  அலசல்!
            ஆர்.கே.நகர் தேர்தலில் பத்தாயிரத்தை இருபது ரூபாயாகச் சுருக்கி டோக்கன் போல் வழங்கப்பட்ட செய்தியைப் பற்றிக் கொண்டு நண்பர் ஒருவர் கேட்டார், "இதை டீமானிடேஷசன் என்று சொல்லலாமா?"
            பத்தாயிரத்தை இருபது ரூபாயாகச் சுருக்கும் நடவடிக்கை இது. பின்பு இருபது ரூபாய் பத்தாயிரமாக விரிந்து கொள்ளும். ஹவாலா ஐடியா பெற்றெடுத்தக் குழந்தை என்கிறார்கள் இதை.
            மற்றபடி இருபது ரூபாய் நோட்டுக்கும் இரண்டாயிரம் நோட்டுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இது இலேசான சிவப்பு என்றால், அது இலேசான ரோஸ். இது 20. அது எக்ஸ்ட்ரா ரெண்டு பூஜ்யங்கள் சேர்ந்து 2000. ஆக இரண்டாயிரம் நோட்டின் அச்சாரம் 20. ஜோடிப் பொருத்தம் பார்த்தால் பத்துக்கும் மேல் பொருத்தங்கள் இருக்கக் கூடும்.
            நிலைமை இப்படியிருக்க, இனி ஐந்தாயிரம், பத்தாயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டால் இடைத்தேர்தல்கள் தூள் பறக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
            இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் மட்டுமாவது டீமானிடேஷசன் செய்யலாம் என்று முன்பு ஒரு பதிவில் எழுதியிருந்ததை நண்பரிடம் குறிப்பிட்டேன். அது எப்படி முடியும் என்றார் அவர் அவசரமாக. அதனால்தான் குறிப்பிட்டேன் என்றேன்.
            ஓர் ஓட்டுக்கு பத்தாயிரம் என்பதெல்லாம் அநியாயமோ அநியாயம். பத்தாயிரம் கொடுத்தால் முதலிடம், ஆறாயிரம் கொடுத்தால் இரண்டாமிடம், இரண்டாயிரம் கொடுத்தால் மூன்றாமிடம் என்று அதற்கு ஒரு தராதரத்தை நிர்ணயித்தார்களே ஆர்.கே. தொகுதி மக்கள். அதுதான் அடிச்சான் பாரு ஹைலைட்.
            அதிலும் நோட்டாவுக்கு இரண்டாயிரம் ஓட்டுகளுக்கு மேல் விழுந்தது பாருங்கள். நோட்டா சார்பாக யார் நோட்டு விநியோகித்திருப்பார்கள்? என்ற கேள்வி காதைக் குடைந்து மூளையைக் கிறுகிறுக்க வைத்து விட்டது.
            இப்படியெல்லாம் ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது என்பீர்கள். ஆனால் பாருங்கள், ஆளுங்கட்சியையும், எதிர்க் கட்சியையும் மீறி ஒரு சுயேட்சை வெல்ல முடியும் என்றால் ஜனநாயகம் செல்லும் பாதை சரியாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. உண்மையில் நம் ஜனநாயகம் சரியானப் பாதையில் சென்றால் எல்லாருக்குமே மகிழ்ச்சிதானே. நம் ஜனநாயகம் சரியானப் பாதையில்தானே செல்கிறது?!

*****

2 comments:

  1. "நோட்டா சார்பாக யார் நோட்டு விநியோகித்திருப்பார்கள்? என்ற கேள்வி காதைக் குடைந்து மூளையைக் கிறுகிறுக்க வைத்து விட்டது."

    வாக்கிற்கு நோட்டா என ஆவேசமடைந்தவர்கள் NOTA விற்கு வாக்களித்திருப்பார்களோ?

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் ஐயா செய்திருக்க வேண்டும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை காத்த அந்த நல்ல மனிதர்கள்!

      Delete

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...