22 Feb 2025

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு

– ஓர் எளிய அறிமுகம்!

அருகன்’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு என்று கருத இயலாத அளவுக்கு நேர்த்தியான தொகுப்பாக வெளிவந்திருப்பது இத்தொகுப்பின் சிறப்பு எனலாம். ஒரு தேர்ந்த சிறுகதையாளர் என்பதற்கான அம்சங்கள் இத்தொகுப்பில் உள்ள அவரது சிறுகதைகளில் காணக் கிடைக்கின்றன.

பெண்ணியப் பார்வையோடு விரியும் கிராமியச் சூழல் கவிந்த இத்தொகுப்பு பல வகை மாந்தர்களை வாசிப்போருக்கு அடையாளம் காட்டுகிறது. அன்றாடம் நாம் கண்டும் காணாமல் விட்ட பல மாந்தர்கள் இத்தொகுப்பின் மூலமாகப் புதிய வெளிச்சத்திற்கு வருகிறார்கள். நம் வெளிச்சத்திற்கு வராத மாந்தர்கள் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்பதுதான் இத்தொகுப்பு காட்டும் சிறுகதைகள் தரும் அனுபவம்.

தன்னுணர்வின்றித் திரியும் மாந்தர்கள் சில கிராமங்களுக்குள் ஒருவரேனும் இருப்பர். நகரங்களில் ஒரு சிலரேனும் இருப்பர். ‘அருகன்’ என்ற தலைப்பிலான சிறுகதையை வாசிக்கும் போது அப்படிப்பட்டவர்களின் பின்னுள்ள கதையை யோசிக்கத் தூண்டுகிறது.

காலப் பிரக்ஞையின்றி முன் பின்னாகச் சம்பவங்கள் ஊடாடும் அக்கதையில் வரும் நேமிநாதனும், நேமிநாதனின் மர்மத்தை அறியத் துடிக்கும் மாதவனும் கண் முன்னே நிழலாடிக் காட்சிகளைக் கலைத்து போட்டபடி மாய எதார்த்த்த்திற்குள் சென்று மனக் கண்ணுக்குள் மறைகிறார்கள்.

‘ஓங்குபனை’ சில தசாப்தங்களுக்கு முன்பு வரை நிலவிய ஆண் குழந்தை மோகத்தின் பின்னணியில் இருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தை அப்பாவி பெண்ணிய மொழியில் பேசுகிறது. தாய் கருவுற்றிருக்க, மகளும் தலைபிரசவத்துக்காகப் பிறந்தகம் வர, தாயின் குழந்தைகளும், மகளின் குழந்தைகளும்  ஒன்றாக விளையாடிய காலமது. அந்தக் காலகட்டத்தில் ஆண் குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் ஏக்கத்தையும், அப்பெண்ணின் ஏக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆணின் சபலத்தையும் வெளிப்படுத்தும் நுட்பமான சொல்லாடல் நிறைந்த கதையாக உள்ளது ‘ஓங்குபனை’.

வாழ்க்கை முழுவதும் துணையாக வர வேண்டிய கணவனை இழந்து விட்ட பெண்ணுக்குப் பற்றுக்கோடாக இருக்கும் மகனும் நோயில் விழுந்து விட்டால் எப்படி இருக்கும்? ‘உடற்றும் பிணி’இல் போராடும் பெண்ணின் கதை பெண்ணின் உளவியலையும் இன்றைய எதார்த்த மருத்துவ நிலையையும் பேசுகிறது.

‘ஊமச்சி’யின் கதையின் பின்னால் இருக்கும் மறைக்கப்பட்டிருக்கும் பாலியல் ரகசியங்களும் ஆன்மிக ரகசியங்களும் கிராமியங்களில் ஆழமாகப் புதையுண்டு கிடப்பவை. பருவமடைதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் நகரும் இக்கதையை ஒத்த வகையில் நகரும் மற்றொரு கதை ‘மடக்கொடி’. உட்கிடைக்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பாலியலுக்கும் இடையேயுள்ள முப்பிணைப்பைப் பேசும் இச்சிறுகதை ஒரு சிறுமியின் பால்யத்தில் தொடங்கி அவள் பருவமடைந்த பெண்ணாகச் சமூகச் சிடுக்குகளைப் புரிந்து கொள்வதில் முடிகிறது.

சிலப்பதிகாரம் மணிமேகலையும் மாதவியின் வாழ்க்கைக்கு ஒரு புனிதம் தந்தாலும் எதார்த்த்தம் வேறாகத்தான் இருக்கிறது என்பதைச் சொல்லும் கதையே ‘மைம்மா’. பாலியல் தொழிலாளியாக நோக்கப்படும் ஒரு பெண்ணுக்கு இருக்கும் பரிவும், நாசுக்கும் அவளைத் தீட்டாகக் கருதுவோருக்கு எப்படி இல்லாமல் போகிறது என்பதைக் இக்கதையாடலில் வாசிப்போரின் மனதில் ஊடாட விடுகிறார் அருணா சிற்றரசு.

‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்று பாரதி கூறுவதற்குச் சான்று பகர்வது போல தன்பால் ஈர்ப்பை ‘தேமாக்காதல் என்ற சிறுகதையில் பேசத் துணிந்திருக்கிறார் அருணா சிற்றரசு. பொதுவாகத் தன்பால் ஈர்ப்பு என்பது நகரங்களில், மாநகரங்களில் காணப்படும் எனும் கற்பிதத்தை உடைக்கும் வகையில் கிராமியப் பின்னணியில் அமையும் இக்கதை பேசும் பெண்ணின் மன உணர்வுகள் கவனிக்க வைக்கின்றன.

ஒரு பெண்ணின் மேல் நேசம் கொள்ள ஆணுக்குப் பல காரணங்கள் இருக்கும் என்றால், ஓர் ஆணின் மேல் நேசம் கொள்ள ஒரு பெண்ணுக்கும் பல காரணங்கள் இருக்கும். பரமசிவனின் நேசம் முழுவதும் நாவின் சுவையை மையமாகக் கொண்டே பெண்ணின் மேல் கொள்ளும் நேசமாக அமைகிறது. அந்நேசம் இன்னொருவரின் மனைவியாக இருந்தாலும் நாவின் சுவைக்காகவே அமைந்து, அப்பெண் கட்டியவனையும் மறந்து, கொண்டாடியவனையும் துறந்து இன்னோர் ஆணை நாடிச் செல்வதாக மனதின் விசித்திரங்களை அத்தனை மர்மங்களோடு எதார்த்தமாகப் பதிவு செய்கிறது ‘தீஞ்சுவை’ எனும் சிறுகதை.

பெண்ணின் உணர்வுகளைப் பெண்ணே புரிந்து கொள்ளும் கதையாகவும், குடும்பத்தைக் கட்டிக் காக்கும் பெண்ணின் சாதுர்யம் மிகுந்த கதையாகவும் விரிகிறது ‘மரிக்கொழுந்தன்’. கதையின் போக்கைக் கொண்டு அடுத்து நிகழக் கூடியது இதுதான் என அனுமானிக்கக் கூடிய கதையாக இருந்தாலும், பெண்ணின் ஆளுமையையும் தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மையையும் பேசும் கதையாக அச்சிறுகதை அமைகிறது.

நாய்களைப் போல நன்றியுள்ள ஜீவன் இந்த உலகில் இல்லையென்றாலும், நாயைப் பிடிக்காத ஒரு பெண்ணுக்கு நன்றியுள்ள நாய் கிடைத்தால், எப்படி இருக்கும் என்பதைப் பேசுகிறது ‘விளியறிஞமலி’. கதை முடிவில் நாயின் மேல் கருணை கொள்வதற்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தும், எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளாமல் மனித மனதை உள்ளது உள்ளபடி பதிவு செய்வதில் தனித்து நிற்கிறது இக்கதை.

இப்படி இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் தனித்த கவனத்தைக் கோரக்கூடியதாகவும், நுட்பமான அவதானிப்பைத் தரக் கூடியதாகவும் அமைகின்றன.

இக்கதைகளைத் தொகுத்துக் கூறுமிடத்து, அருகன், ஓங்குபனை, ஊமச்சி, மைம்மா, மரிக்கொழுந்தன், மடக்கொடி, தேமாக்காதல் ஆகிய ஏழு கதைகளும் மறைக்கப்பட்ட பாலியலையும், மேற்பூச்சாகத் தெரியும் சமூக எதார்த்தத்தை மீறிய பாலியல் பூடகங்களையும் பேசுவதாக உள்ளன.

‘தீஞ்சுவை’ பாலியல் தேவையைத் தாண்டிய ஐம்புலனின் தேவையை முன்னிறுத்தி, முடிவில் பூடகமாய் உழன்று கொண்டிருந்த பெண்ணின் பாலியலைப் போட்டு உடைக்கிறது.

‘உடற்றும் பிணி’ வெளிப்படுத்தும் பெண்ணின் உளவியல் இத்தொகுப்பில் தனித்த அனுபவத்தைத் தரும் சிறுகதையாக அமைகிறது.

‘விளியறி ஞமலி அத்தனை கிராமிய எதார்த்தங்களுடன் கூடிய மன எதார்த்தத்தைப் பேசும் கதையாக அமைகிறது.

எழுத்தில் ஆண் எழுத்து, பெண் எழுத்து என்றெல்லாம் வேறுபாடில்லை என்றாலும், அருணா சிற்றரசுவின் இத்தொகுப்பில் வெளிப்படும் பெண் எழுத்து தனித்துவமானது. அதுவே இத்தொகுப்பைப் பிற பெண் எழுத்தாளர்களின் தொகுப்புகளிலிருந்து வேறுபடுத்தவும் செய்கிறது.

நூல் குறித்த விவரங்கள் :

நூல் தலைப்பு : அருகன்

நூல் வகை    : சிறுகதைகள்

நூலாசிரியர் : அருணா சிற்றரசு

வெளியீடு : எதிர் வெளியீடு, 96 நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, 642 002.

பதிப்பக தொடர்பு எண் : 99425 11302

நூல் விலை : ரூ. 200/-

*****

21 Feb 2025

வெள்ளி, செவ்வாயில் அரிசி உளுந்து கொடுக்கக் கூடாதா?

வெள்ளி, செவ்வாயில் அரிசி உளுந்து கொடுக்கக் கூடாதா?

கிராமங்களில் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் அரிசி, உளுந்து போன்ற தானியங்களைக் கொடுக்க மாட்டார்கள்.

இது ஏன்?

இது இனிய நண்பர் காளிதாஸின் கேள்வி.

வெள்ளியும் செவ்வாயும் பொருட்கள் கொடுப்பதற்கான விடுமுறை நாட்களா என்ன?

பொதுவாகக் கிராமத்தினருக்குச் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகள் மங்கலமான நாட்கள். அவர்கள் பிரதானமாக ஆன்மீக தளங்களுக்குச் செல்வது அந்த நாட்களாக இருக்கும். மங்கலகரமான நாட்களில் ஒன்றைக் கொடுப்பதை, மங்கலத்தையே கொடுப்பதைப் போல அவர்கள் கருதுவார்கள்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி சிலம்பைக் கொடுத்துக் கணவனை இழந்தது வெள்ளிக் கிழமை. இதன் உளவியல் தாக்கம் இன்றும் தொடர்வதால் செவ்வாய்க் கிழமையில் பொருளைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள், வெள்ளிக் கிழமை என்றால் நிரம்பவே யோசிப்பார்கள்.

இதன் பின்னால் உள்ள பொருளாதாரக் காரணங்களையும் யோசிக்க வேண்டும். கிராமங்கள் பெரும்பாலும் பொருளாதாரச் சுழற்சி இல்லாதவை. அக்கம் பக்கத்தில் பொருட்களை கைமாற்றாக வாங்கி, கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டுபவர்கள் கிராமங்களில் நிறைய பேர். தினம்தோறும் அப்படிக் கேட்பவர்களுக்கு ஒரு தடை போட்டது போல இருக்கட்டும் என்று, செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களாவது எதுவும் கொடுக்காமல் இருப்பதற்காகவும் இந்த வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

கேட்பவர்களைத் தட்டிக் கழிப்பதற்காகவும் செவ்வாய், வெள்ளிக் கிழமையைக் காரணம் காட்டுபவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு நிமிடம் கடந்தாலும் கொடுக்கின்ற எண்ணம் மாறி விடும் என்பார்கள். இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியக் கூடாது என்ற சொலவமே அப்படி ஏற்பட்டதுதான். செவ்வாய், வெள்ளி என்று ஒரு நாள் அளவு என்றால் எப்படி கொடுக்காமல் இருக்கலாம் என்பதற்கு ஓராயிரம் காரணங்களைத் தயார் செய்து விடலாம் பாருங்கள்.

செவ்வாய், வெள்ளியில் தானியங்களைக் கொடுக்கக் கூடாது என்றால் அரிசிக் கடைகள், தானியக் கடைகள் நிலைமை என்னாவது? அவரசத்திற்குப் பணம் தேவைப்படுபவர்கள் வீட்டில் இருக்கும் உளுந்தையோ, பயிறையோ விற்றுப் பணம் புரட்ட வேண்டிய நிலையில் இருந்தால், அவர்கள் நிலைமை என்னாவது?

இதற்கும் ஒரு காரணம் சொல்வார்கள். பொருளைக் கொடுத்து, பணத்தை வாங்கிக் கொண்டால் சரி என்பார்கள். அதாவது, கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்பது போல.

‘அறம் செய விரும்பு’ என்று சொன்ன ஔவை அதற்கு நாள், கிழமை பார்க்கச் சொல்லவில்லை. ‘தர்மம் தலை காக்கும்’ என்று சொன்ன முன்னோர்கள் எந்தெந்தக் கிழமைகளில் அது காக்கும் என்று குறிப்பிட்டு எல்லாம் சொல்லவில்லை. தர்மம் எல்லா நாட்களிலுமே காக்கும். அதற்கான அறத்தை நாம் அனைத்து நாட்களிலும் செய்யலாம்.

நல்ல மனதோடு கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த நாளிலும் கொடுக்கலாம். அதற்கு செவ்வாயும், வெள்ளியும் கூட உகந்த நாட்களே!

*****

20 Feb 2025

நம் தேர்தல் பிரச்சாரங்கள் சரியாக இருக்கிறதா?

நம் தேர்தல் பிரச்சாரங்கள் சரியாக இருக்கிறதா?

தேர்தல் பிரச்சாரங்களில் உள்ளூர் பிரச்சனைகள் பேசப்படுவதில்லை. அதிலும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி வாய் திறப்பதே இல்லை.

உதாரணமாக டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை எடுத்துக் கொண்டால் காற்றுமாசு பற்றி அங்கு தேர்தல் பிரச்சாரமே நடைபெறவில்லை.

டில்லியின் முக்கியமான பிரச்சனையே அதுதான்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், டாஸ்மாக் பிரச்சனைகளைப் பற்றி எந்தத் தேர்தல் அறிக்கையும் நுட்பமாகப் பேசுவதில்லை. வெறுமனே மதுவிலக்கு என்ற அளவில்தான் பேசுகின்றன. அது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பது அத்தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பவர்களுக்கே தெரியும்.

டாஸ்மாக்கினால் எத்தனைக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன? குடிநோயால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்துகள் எத்தனை? டாஸ்மாக் குடியர்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் அங்குள்ளனவா? அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் உண்டா? இதைப் பற்றியெல்லாம் எந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் எதுவும் ஒலிப்பதில்லை.

குவார்ட்டர் என்பது ஓட்டைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பதால் அது பற்றிய அனைத்தும் பூசி மெழுகப்படுகின்றன.

டெல்டா மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் இங்கு நெல் கொள்முதலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. காவிரியில் முறை வைத்துப் பாசனம் வழங்கப்படுவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. இவை எதுவும் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதிபலிக்கப்படுவதே இல்லை.

விவசாயத்தை எடுத்துக் கொண்டால் ரசாயன விவசாயம் அதன் உச்சபட்ச நச்சை விதைத்துக் கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் களைக்கொல்லிகளால் வயல், வரப்பு மற்றும் வாய்க்கால்களில் இருந்த பல மூலிகைச் செடிகள் இனம் தெரியாமல் அழிந்துவிட்டன.

கிராமங்களில் மாடுகளே கிடையாது. இருப்பினும் பாக்கெட் பால் வராத வீடுகளே கிடையாது. எப்படி இந்தப் பால் உற்பத்தியாகிறது என்பதற்குக் கேள்வியும் கிடையாது.

ஊரெங்கும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் மற்றும் நெகிழிப் பொருட்களுக்கு அளவே இல்லை. இவையெல்லாம் எந்த அளவுக்கு மண்ணையும் அதன் வளத்தையும் பாதிக்கும் என்பதை நுட்பமாகப் பேசும் தேர்தல் அறிக்கைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நீர் நிலைகள் பற்றியும் எந்தத் தேர்தல் அறிக்கையும் பேசுவது இல்லை. எத்தனையோ ஏரிகள், குளங்கள், மழைநீர் வடிகால்களை இழந்தாயிற்று அல்லது தூர்த்தாயிற்று.

இவையெல்லாம் பேசப்பட வேண்டும். ஆனால் பிரச்சாரங்களில் பேசப்படுவதில்லை. அரசியல் கட்சியின் பிரதிநிதிகளை, வேட்பாளர்களை ஆரோக்கியமான முறையில் கேள்வி கேட்கும் மரபே இங்கில்லை. ஆரோக்கியமான விவாதங்கள் நேரடியாக பொதுமக்களுக்கும் அரசியல் பொறுப்பாளர்களுக்கும் நடைபெறுவதே இல்லை. நடைபெறுவதெல்லாம் வம்படிச் சண்டைகளாகவே இருக்கின்றன.

பொது மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி ஆரோக்கியமாக விவாதிக்கும், வாக்குறுதிகள் வழங்கும் தேர்தல் அறிக்கைகள் உருவாக வேண்டும். முதலில் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும், வருங்கால அக்கறையும் வேண்டும். அதை ஏற்படுத்தும் பொறுப்பும் கடமையும் கூட தேர்தல் கட்சிகளுக்கு இருக்கிறது.

அதற்கு முதற்படி ஒன்று இருக்கிறது. அதுதான் கேள்வி. அங்கிருந்துதான் துவங்க வேண்டும்.

பொதுமக்களே! கொஞ்சம் ஆரோக்கியமாகக் கேள்வி கேளுங்கள்.

அரசியல்வாதிகளே! கொஞ்சம் ஆரோக்கியமாகப் பதில் சொல்லுங்கள்.

கேட்கத்தான் கேள்விகள்!

கேள்விகள் கேட்பதுதான் புரட்சிக்கான வேள்விகள்!

*****

19 Feb 2025

பிரச்சனை இல்லாத ஒருவர்

பிரச்சனை இல்லாத ஒருவர்

கடன் என்றால் பயந்தார் அப்பா

கடன் வாங்க போட்டி போடுகிறான் மகன்

வங்கிகள் கடன் தருகின்றன

வட்டிக் கடைகள் கடன் தருகின்றன

ஏதேதோ பெயரில் உருவாகி வரும்

நிதி நிறுவனங்கள் கடன் தருகின்றன

மொபைல்களும் கடன் தருகின்றன

கடன் வாங்காமல் இருக்க முடியாது

கடனுக்குப் பயந்து ஒளிய முடியாது

எந்நேரமும் ஒலிக்கின்ற

அலைபேசியில் கடன் தந்தவர்களின் அழைப்புகள்

அலைபேசியை அணைத்துப் போட்டால்

அன்பிற்குரியவர்களின் எண்களுக்கு

ஆபாசச் செய்திகள் அனுப்பப்படுகின்றன

வேலை தேடுபவராக இருக்கலாம்

பண முடையில் இருப்பவராக இருக்கலாம்

சம்பாதிக்க ஆசைப்படுபவராக இருக்கலாம்

பணம் இல்லாமல் இருப்பது பிரச்சனையா

கடன் இல்லாமல் இருப்பது பிரச்சனையா

அலைபேசியில் சூனியக்காரர்கள் உலவும் உலகில்

கையில் அலைபேசி இல்லாத

பைத்தியக்காரர்கள் மட்டுமே பிரச்சனை இல்லாதவர்கள்

*****

18 Feb 2025

ஏன் நெரிசல்களில் பொதுமக்களே பலியாகிறார்கள்?

ஏன் நெரிசல்களில் பொதுமக்களே பலியாகிறார்கள்?

இந்தியாவில் ஏற்படும் நெரிசல்களையும் அவற்றில் ஏற்படும் உயிரிழப்புகளையும் கவனத்தில் கொண்டு வந்து பாருங்கள். நெரிசல்களில் பொதுமக்களே பலியாகியிருப்பார்கள். அரசியலிலோ, பொருளாதாரத்திலோ செல்வாக்கான நிலையில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யாரும் பலியாகி இருக்க மாட்டார்கள்.

கும்பமேளாவில் மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு (விஐபிக்கள்) வழங்கப்படும் பாதுகாப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா?

பொதுமக்கள் கும்பமேளாவில் ஏற்படும் நெரிசல்களிலும் பலியாகிறார்கள். கும்பமேளாவுக்குச் செல்ல தொடர்வண்டி நிலையங்களுக்குச் செல்லும் போது ஏற்படும் நெரிசல்களிலும் பலியாகிறார்கள்.

எந்தத் திருவிழாவிலாவது முக்கிய பிரமுகர்கள் சாகிறார்களா? குறைந்தபட்சம் நெரிசலிலாவது சிக்குகிறார்களா? எல்லாம் அப்பாவி பொதுமக்கள்தான் சாகிறார்கள். நெரிசலில் நரகத்தைச் சந்திக்கிறார்கள்.

முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் அக்கறையும் கவனிப்பும் பாதுகாப்பும் இந்திய சமூகத்தில் சாதாரண பொதுமக்களுக்குக் கிடையாது. சாதாரண பொதுமக்கள் இறந்தால் இரண்டு லட்சமோ, மூன்று லட்சமோ அல்லது பத்து லட்சமோ நிவாரணம் கொடுத்து விடலாம் என்ற அலட்சியம் இந்தியச் சமூகத்தில் சர்வ சாதாரணமாக நிலவுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கிய பிரமுகர்கள் சாராயம் அருந்தியதால் சாக மாட்டார்கள். சாதாரண பொதுமக்கள் சாவார்கள். முக்கிய பிரமுகர்கள் மது அருந்தும் விடுதிகளையும், சாதாரண பொதுமக்கள் மது அருந்தும் விடுதிகளையும் உற்று நோக்கினாலே உங்களுக்குப் பல உண்மைகள் புரிய வரும்.

ஏனென்றால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பலவும் பொத்தாம் பொதுவான கந்தக் கோலத்தில், அந்த லட்சணத்தில் இருக்கின்றன. இது இந்த நாட்டைப் பிடித்த சாபக்கேடா? இவ்வளவுதான் இந்த மக்களுக்கு என்ற அலட்சிய அளவீடா?

கும்பகோணம் மகாமகத்திலும் கால் நூற்றாண்டுக்கு முன்பாக அப்படித்தான் நடந்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். போராடுபவர்கள் சாதாரண குடிமக்கள்தானே என்ற அலட்சியம் எப்படி சுட வைக்கிறது?

ஏழைகள்தானே என்கிற அலட்சியம் இந்திய அரசியலில் புரையோடிப் போய் இருக்கிறது. அவர்களுக்கான மனிதாபிமான கவனிப்புகள், மனித உரிமை ரீதியான அடிப்படை வசதிகள் எங்கும் செய்து கொடுக்கப்படுவதே இல்லை.

சென்னையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் நெரிசலால் உயிரிழந்தோர்களை எடுத்துக் கொண்டாலும், அங்கு உயிரிழந்தோர் சாதாரண பொதுமக்களே. அதிகாரத்தின் உயர் மட்டத்தில் இருப்போரோ அல்லது முக்கிய பிரமுகர்களோ அந்தப் பட்டியலில் இருக்கவே மாட்டார்கள்.

பெருவெள்ளத்தில் சென்னை சிக்கும் போதெல்லாம், ஏரிகள் முன்னறிவிப்பில்லாமல் திறக்கப்பட்டு இறப்பவர்களும் அப்பாவி பொதுமக்களாகவே இருக்கிறார்கள்.

கொரோனா பெருந்தோற்றுக் காலத்தில் சிகிச்சைகளின் போது முக்கிய பிரமுகர்களுக்குக் காட்டப்பட்ட கவனம் அப்பாவி பொதுமக்களுக்குக் காட்டப்பட்டதா என்றால் இல்லை.

குற்றம் செய்தவர்களுக்குக் கூட சிறை தண்டனையில் கிடைக்கும் பாரபட்சங்களை நீங்கள் சிந்தித்துப் பார்க்கலாம். சிறை என்பதே தண்டனை எனும் போது, அனைத்து வகை சிறைகளும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும். முக்கிய பிரமுகர்களுக்கான சிறை தண்டனையே வேறு மாதிரியாக இருக்கும்.

ஏனிந்த அலட்சியம்?

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அதிகாரம் இல்லை. மற்றொன்று பொருளாதாரம் இல்லை. இந்த இரண்டும் இருப்பவர்கள் வெகு சிரத்தையோடு கவனிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டும் இல்லாதவர்கள் சிரத்தையின்றிக் கவனிக்கப்படுவதே இல்லை.

அண்மையில் வெளியான நாட்டின் வரவு செலவு திட்டத்தில் பிரதமருக்கான பாதுகாப்புச் செலவுக்காக ஆண்டுக்கு 489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதாவது பிரதமருக்கான ஒரு நாள் பாதுகாப்புச் செலவு 1.34 கோடி, ஒரு மணி நேரத்திற்கு 5.58 லட்சம், ஒரு நிமிடத்துக்கு 9,303 ரூபாய்.

இப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒதுக்க முடியாது என்றாலும், கொஞ்சம் கரிசனமும் அக்கறையும் கொண்டு அடிப்படையான மனிதாபிமான வசதிகளைச் செய்து கொடுப்பதால் என்ன குறை வந்துவிடப் போகிறது?

முக்கியப் பிரமுகர்களை விட ஒவ்வொரு உயிரும் மிக மிக முக்கியம். ஏனென்றால் உயிர் விலை மதிப்பற்றது. விலைமதிப்பற்ற உயிர்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு சனநாயக அரசின் கடமையாகும். அப்படிக் கொடுக்கவில்லையென்றால் அது சடநாயக அரசாகி விடும்.

*****

17 Feb 2025

நெரிசல் பிராணிகள்

தண்ணீரில் வாழும் தாவரம்

நிரம்ப மழை பெய்து

நீர் தேங்கினால் அழுகி விடும் என்று

அழுது கொண்டே சொன்னாய்

நான் நீருக்குள் வாழும்

தாவரங்களை நினைத்துக் கொண்டேன்

*****

கருப்புக் கொடி

சூரியனுக்கு

ஒரு கருப்புக்கொடி

இந்த நிழல்

*****

நெரிசல் பிராணிகள்

கொட்டித் தீர்க்கிறது மழை

சுட்டெரிக்கிறது வெயில்

கூட்டங்களால் நிரம்பி வழிகிறது பயணம்

நெரிசல்களுடன் நிகழ்கின்றன

கடைவீதி அனுபவங்கள்

மனிதர்கள் பெருங்கூட்டத்தில்

நெருக்கி அடித்துக் கொண்டு வாழும் பிராணிகள்

*****

16 Feb 2025

‘விடாமுயற்சி’யைப் பார்க்க விடாமுயற்சி வேண்டும்!

‘விடாமுயற்சி’யைப் பார்க்க விடாமுயற்சி வேண்டும்!

முயன்றால் முடியாதது இல்லை.

முயற்சி திருவினையாக்கும்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.

விடாமுயற்சி பற்றி இருக்கும் அத்தனை வாசகங்களையும் முறியடித்தது 2025 இல் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது அஜித்தின் ‘விடாமுயற்சி’ என்ற தலைப்பிலான திரைப்படம். இதற்கு முன்பு வெளிவந்த அஜித்தின் திரைப்படம் 2023 இல் வெளியான ‘துணிவு’.

விடாமுயற்சி கொண்ட ஒரு மனிதரிடமிருந்து வெளிவரும் திரைப்படத்துக்கு அத்தலைப்பு ரொம்பவே பொருத்தம். இந்த இரண்டு ஆண்டுகளில் அஜித்தின் கவனம் மகிழ்வுந்து பந்தயக் களத்திலும் (கார் ரேஸ்) இருந்தது குறிப்பிடத்தக்கது.

வில்லன்,

வீரம்,

விஸ்வாசம்

என்கிற ‘வி’ பட வரிசையில் வருவதால் விடாமுயற்சி எப்படியும் வெற்றி பெற்று விடும் என்று நம்பும் அஜித்தின் ரசிகர்கள் ஒரு பக்கம்.

‘விடாமுயற்சி’ என்ற தலைப்புக்கு இத்திரைப்படம் நியாயம் செய்ததா என்பதுதான் நாம் யோசிக்க வேண்டிய மறுபக்கம்.

படத்தின் முதல் சண்டை அர்ஜூனிடமிருந்து ஆரம்பிக்கிறது. அதுவும் இடைவேளைக்குப் பிறகு. அதுவரை அஜித் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அடிவாங்கிக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் நாயகன் அஜித்தின் பெயர் அர்ஜூன். வில்லனாக நடிப்பது அசல் அர்ஜூன். இம்மாற்றத்தின் நிமித்தம் கூட சண்டைக்காட்சியும் அர்ஜூனிடமிருந்து ஆரம்பித்திருக்கலாம்.

இப்படத்தின் கதைதான் என்ன?

கடத்திச் சென்ற மனைவியைத் தேடும் ராமாயண கதைதான் ‘விடாமுயற்சி’. இராமாயணத்தில் உள்நாட்டில் சீதையைத் தொலைத்து வெளிநாட்டில் படைதிரட்டிச் சென்று மீட்பார் ராமன். ‘விடாமுயற்சி’யில் வெளிநாட்டில் இருக்கும் அஜித் மனைவியை வெளிநாட்டில் தொலைத்து வெளிநாட்டில் மீட்கிறார். இது ராமாயணக் கதைக்கும் ‘விடாமுயற்சி’ கதைக்கும் உள்ள வேறுபாடு.

வானரப் படையைத் திரட்டி ராமன் படைநடத்திச் சென்று சீதையை மீட்பது ராமாயணம். அஸர்பைஜானைப் பார்ப்பதற்கு பொட்டல் வெளியாக இருக்கிறது. விலங்குகள், பறவைகள் என்று எதையும் படத்தில் பார்க்க முடியவில்லை. அதனால் வானரப்படை அல்லது பறவைப்படை போன்ற ஒன்றைத் திரட்ட வாய்ப்பில்லாமல், அஜித் தனியொரு ஆளாகத் தேடுகிறார்.

அஜித் இப்படித் தனியொரு ஆளாகத் தேடுவதால் அப்படியொரு தலைப்போ என்னவோ? அப்படி பார்த்தாலும் விடாத தேடல் என்ற தலைப்புதான் பொருத்தமாக இருக்கும்?

படத்தின் காட்சிகளும், வசனங்களும் பல இடங்களில் முன்னுக்கு முரணாக கதைத் தொடர்ச்சியைப் பாதிக்கின்றன. பார்வையாளர்கள் விடாமுயற்சி எடுத்துத் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி? பார்வையாளர்களுக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் தரும் வகையில் திரைப்படம் இருக்க வேண்டும் என்று இயக்குநர் இப்படி செய்திருக்கலாம். கதையோட்டமும் முடிவும் ஊகிக்கக் கூடியதாக இருப்பதால் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் பதில் அயர்ச்சிதான் ஏற்படுகிறது.

‘லியோ’ படத்தில் விஜய் கடைசியாக அர்ஜூனோடு சண்டை போடுவதைப் போல, இத்திரைப்படத்தில் அஜித்தும் கடைசியில் அர்ஜூனோடு சண்டை போடுகிறார். அடிவாங்கி அடிவாங்கி அதனால் துவண்டு போகாமல், விடாமுயற்சியோடு சண்டை போடுகிறார். இது பத்தாயிரம் விடாமுயற்சிகளுக்குப் பிறகு மின்விளக்கைக் (பல்ப்பை) கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கே மின்விளக்கு (பல்ப்பு) கொடுப்பதைப் போல இருக்கிறது.

முழுநீள காதல் கலந்த சண்டைப் படத்தைத் தர முயன்றிருக்கிறார் மகிழ்திருமேனி. அதைக் கோர்த்த விதத்தில் உணர்வோடு ஒன்ற முடியாத காட்சியமைப்புகளும், நம்ப முடியாத கதைமாந்தர்களின் பின்னணிகளும் ‘விடாமுயற்சி’யை விடாமுயற்சியோடு பார்க்க முயற்சித்தாலும் விடாத சோர்வை, அடாத அலுப்பைத் தந்து விடுகின்றன.

படத்தில் நாயகனான அஜித்தின் அழகும் புத்திசாலித்தனமும் நாயகி திரிஷாவைக் கவர்கிறது. அந்தப் புத்திசாலித்தனத்தோடு திரிஷாவை மீட்பார் என்று பார்த்தால், வில்லன்கள் விரிக்கும் வலையில் இவராக விழுந்து, விடாமுயற்சியோடு சண்டையிட்டு, அதுவும் கைகள், கால்கள், தோள்கள் என்று சகல இடங்களிலும் குத்துகள் வாங்கி முடிவில் மீட்கிறார்.

அவ்வளவு அடி வாங்கி, அதுவும் மகிழ்வுந்தைத் தலைகீழாகக் கவிழ்த்து விபத்துக்குள்ளாக்கிச் சண்டையிட்டு, மீண்டும் சண்டையிட வேண்டும் என்றால் அதிலும் ஓர் எதார்த்தம் வேண்டும். அதற்கான எதார்த்தத்தையும், நாயகியை மீட்பதில் நாயகன் எந்த வித புத்திசாலித்தனத்தையும் காட்டாததாலேயே இந்த ‘விடாமுயற்சி’ விழலுக்கு நீர் இறைத்த வீண்முயற்சியாகிறது.

போதைக்கடத்தல், உறுப்புக் கடத்தல், உளவியல் பிறழ்வுகள் என்று எடுத்துக் கொண்டு எதைச் சொன்னாலும் அது பார்வையாளர்களுக்குப் புதிதாகவும் புதிராகவும் தெரியும் என்று விடாமுயற்சியோடு கதை பண்ணுவதைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் இந்த ‘விடாமுயற்சி’ படத்திலிருந்து, விடாமுயற்சி செய்தாவது விட வேண்டும் என்பதுதான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பின்பு எனது வேண்டுகோளாக இருக்கிறது.

அஜித்தின் விடாமுயற்சிகள் பாராட்டத்தக்கன என்றாலும், இது போன்ற ‘விடாமுயற்சி’ அவருக்குத் தேவையற்றது.

*****

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...