18 Jun 2026

பாட்ஷாலஜி – ஒரு மாஸ் மசாலா சதி!

சீரழித்த சினிமா – 16

பாட்ஷா

ஆட்டோ மீட்டரும் அடியாட்கள் தியரியும்!

பாட்ஷாலஜி – ஒரு மாஸ் மசாலா சதி!

தொண்ணூறுகளின் மத்தியில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுப்புத்தியும், பகுத்தறிவும் ஒரே ஒரு ஆட்டோவின் மீட்டருக்குப் பின்னால் கட்டப்பட்டு, படுபாதாளத்தில் வீசப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சீரழிவை அரங்கேற்றிய உன்னதத் திரைப்படம் 1995 இல் வெளியான பாட்ஷா.

அதிரடி இயக்கமும், உச்ச நட்சத்திர நாயகனின் அமானுஷ்ய மாஸ் பிம்பமும், நாயகனுக்கான பிஜிஎம்மும் சேர்ந்து, தமிழர்களின் மூளையில் நிழல் உலக தாதாதான் உண்மையான கடவுள், என்ற ஆபத்தான நச்சை எப்படி நளினமாக ஏற்றியது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இன்றுவரை தமிழ்நாட்டின் முச்சந்திகளிலும், பள்ளிக்கூடப் பெஞ்சுகளிலும், அரசியல் மேடைகளிலும் தட்டப்படும் ஆகச்சிறந்த தத்துவ வசனம் என்னவென்றால், ஒரு தடவை சொன்னா அது நூறு தடவை சொன்ன மாதிரி. என்னவோ இம்போஷிஷன் எழுதவன் பயந்தது போல உரைக்கப்பட்ட இந்த வசனம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த ஜனநாயக் கல்வி என்ன தெரியுமா? தலைவன் என்பவன் விவாதங்களுக்கு அப்பாற்பட்டவன். அவன் ஒரு முறை உளறினாலும், அதை நீங்கள் நூறு முறை ஆராயாமல் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

சுயசிந்தனையோ, கேள்விகள் கேட்கும் முதிர்ச்சியோ இல்லாத ஓர் ஆட்டுக்குட்டி சமூகத்தை உருவாக்க இந்த ஒரே ஒரு வசனம் போதுமானதாக இருந்தது. ஒரு மனிதன் தன் வாதத்திற்கு நியாயமான காரணங்களைச் சொல்வதை விடுத்து, நான் சொல்லிட்டேன், அவ்வளவுதான் என்ற சர்வாதிகாரப் புத்தியை நிஜ வாழ்க்கையில் கையாள்வதற்கு இந்த பாட்ஷா தியரிதான் ஊக்கமருந்து.

படத்தில் வரும் நாயகன் வெறும் ஆட்டோக்காரர் அல்ல; அவர் பம்பாயை ஆட்டிப்படைத்த தாதா. ஆனால், சினிமா அவரை எப்படிச் சித்தரிக்கும்? ஏழைகளுக்குப் பணம் கொடுப்பவர், நண்பனுக்காகக் கொலை செய்பவர், தங்கைகளின் திருமணத்திற்காகத் தன் கடந்த காலத்தை மறைத்து வாழும் ஒரு தியாகச் செம்மல்.

ஒரு குற்றவாளியை அவனது ரத்தக் கறை படிந்த குற்றப் பின்னணியில் இருந்து பிரித்து, அவனுக்குப் பின்னால் இருக்கும் குடும்பப் பாசம் என்ற சென்டிமென்ட் போர்வையைப் போர்த்தி, உருக வைத்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகப்பெரும் கமரஷியல் தந்திரம்.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழன், தன் ஏரியாவில் கஞ்சா விற்கும் ரவுடியையும், மாமூல் வாங்கும் தாதாவையும் அண்ணன். வெளியில அப்படி இருந்தாலும், தங்கச்சின்னா அவனுக்கு உசிருப்பா, கஷ்ட நஷ்டம்ன்னு தெரிஞ்சா ஓடி வந்து உதவுவாருப்பா, என்று நியாயப்படுத்தத் தொடங்கினான்.

படத்தில் பாட்ஷாவின் தங்கைக்கு ஒரு பிரச்சினை என்றாலோ, அல்லது வில்லனின் ஆட்கள் வருகிறார்கள் என்று தெரிந்தாலோ, பாட்ஷா போடும் முதல் உத்தரவு, உள்ளே போ என்பதுதான். பெண்கள் வீட்டின் நான்கு சுவருக்குள்ளே பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்கள், அவர்களுக்குப் பிரச்சினை வந்தால் வெளியில் இருக்கும் ஆண் தான் அதைத் தன் தசைகளைக் கொண்டு தீர்க்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ சிந்தனையை இந்தப் படம் மிக கம்பீரமாக விற்றது.

பெண்ணின் சுயசார்பு, அவளது தைரியம் அனைத்தையும் மழுங்கடித்து, அவள் எப்போதும் ஆணின் நிழலில் வாழும் ஒரு பலவீனமானப் பொருள் என்ற பொதுப்புத்தியை இன்றும் பல குடும்பங்களில் இந்த பாட்ஷா பாணி வளர்ப்பு முறைதான் தக்கவைத்திருக்கிறது.

படத்தில் வரும் வில்லன் செய்யும் அநியாயங்களை ஒடுக்க, இந்திய அரசாங்கமோ அல்லது காவல்துறையோ வராது. பாட்ஷா தன் சொந்தக் கூலிப்படையை வைத்துக் கொண்டுதான் அவரோடு சண்டை போடுவார். சட்டம் என்பது ஏழைகளைக் காப்பாற்றாத ஒரு வெற்றுப் காகிதம்; நிழல் உலக தாதாக்கள்தான் உங்களுக்கான ஒரே ரட்சகர், என்ற ஆபத்தான சிந்தனையைத் தமிழர்களின் மூளையில் ஆழமாக நட்டது இந்தப் பாட்ஷா.

விளைவு?

ஒரு சாதாரண மனிதன், தன் கடந்த காலக் கிரிமினல் வரலாற்றை மறைத்துக்கொண்டு, ஆட்டோ ஓட்டுநராக வாழ்வதுதான் இத்திரைப்படத்தின் கதை. கேட்பதற்கு ஒரு சராசரி மசாலா தோசை அதாவது கதை போலத் தோன்றும் இந்தத் திரைப்படம், தமிழ் சமூகத்தின் பொதுப் புத்தியை வேறு விதமாக ரிவீட் அடித்தது.

நிஜ வாழ்க்கையில் நமக்கொரு அநீதி நடந்தால், நீதிமன்றத்தையோ காவல்துறையையோ நம்புவதை விடுத்து, பெரிய இடத்து செல்வாக்குடைய அடியாட்களிடம் தஞ்சமடைவதே கௌரவம் என்ற காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரம் இதனால் சமூகத்தில் வேரூன்றியது.

பாட்ஷாவுக்கு முன்பு வரை, ஆட்டோக்கள் என்பவை வெறும் போக்குவரத்து வாகனங்கள். பாட்ஷாவுக்குப் பின்பு, அவை நடமாடும் தத்துவப் பள்ளிகளாக மாறின. நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி என்ற இந்த ஒரே ஒரு வசனம், தமிழ்நாட்டின் கணிதவியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஒரு முறை சொல்வதற்கும் நூறு முறை சொல்வதற்கும் இடையே உள்ள பிரம்மாண்டமான நேர மற்றும் ஆற்றல் வித்தியாசத்தை இந்தச் சமூகம் தட்டையாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியது.

பாட்ஷா தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த வணிக மைல்கல், பாக்ஸ் ஆபீஸின் இமயமலை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், தமிழர்களை அது எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒருவன் பம்பாயில் இருக்கும்போது நூறு பேரைக் கொலை செய்யலாம்; கடத்தல் தொழில் புரியலாம்; தாதாவாக வாழலாம். ஆனால், சென்னைக்கு வந்து அமைதியாக ஆட்டோ ஓட்டி, தங்கைக்கோ தம்பிக்கோ பீஸ் கட்டினால் அவன் புனிதன். இந்த ப்ளாஷ்பேக் தியரி, சமூகத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியது. தற்போதைய குற்றவாளிகள் பலரும், நாளை நாம் ஒரு நல்ல காரியம் செய்து இதைக் கழுவிக்கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிச்சலைப் பெற்றனர். தர்மம் என்பது வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றல்ல, அது ஒரு பார்ட் டைம் ஜாப் என்ற எண்ணத்தை இந்தத் திரைப்படம் விதைத்தது.

அறிவையும் விவேகத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு சட்டபூர்வ ஜனநாயகச் சமூகத்தை, ஒரு முன்னாள் ரவுடியின் பம்பாய் பிளாஷ்பேக்கைக் கண்டு விசில் அடிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற கூட்டமாக மாற்றியதில், நாயகனின் அந்த ஆட்டோவிற்கும், பாட்ஷாவின் அந்தப் கோட்டுச் சட்டைக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத கசப்பான உண்மை!

பாட்ஷா என்பது ஒரு கமர்ஷியல் சினிமா மட்டும் அல்ல. அது, அமைதியாக இருப்பவனை உசுப்பிவிட்டால் அவன் உங்களை மிருகம் போல அடித்துத் துவம்சம் செய்வான் என்ற வன்முறைத் தத்துவத்தை, ஆட்டோ என்ற ஏழை எளிய வாகனத்தின் எஞ்சினில் ஏற்றி நம் தலைக்குள் புகுத்திய ஒரு மாஸ் மசாலா சதி.

இப்போதும் சாலையில் போகும்போது ஏதாவது ஆட்டோவின் பின்னால் உள்ளே போ என்றோ, பாட்ஷா என்றோ என்று எழுதியிருந்தால், தயவுசெய்து உள்ளே போகாதீர்கள். அங்கே உங்களுக்காக ஒரு பிளாஷ்பேக் காத்துக்கொண்டிருக்கலாம்! அது உங்களை அடித்துத் துவைத்து ரத்தக் களறியாக்கினால், அதற்கு யார் பொறுப்பு என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.  

*****

17 Jun 2026

பின்தொடரும் நிழலின் பொறுக்கித்தனம்!

சீரழித்த சினிமா – 15

7ஜி ரெயின்போ காலனி

பின்தொடரும் நிழலின் பொறுக்கித்தனம்!

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின் அக்டோபர் மாதம், தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருந்த கண்ணியமான காதல் கோட்பாடுகளுக்கும் ஒட்டுமொத்தமாகக் கல்தா கொடுத்து விட்டு ரொமாண்டிசத்தைப் பொறுக்கித்தனமாக்கிய மற்றுமொரு திரைப்படம்தான் 7ஜி ரெயின்போ காலனி.

படிக்காத, வேலைக்குச் போகாத வாலிகள் வீட்டில் திட்டு வாங்கிவிட்டு ஏதாவதொரு வேலையைத் தேடுவார்கள், என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, ஒரு பொறுக்கிப் பையன் நினைத்தால், தன் வீட்டுக்குக் குடிவரும் படித்த, நாகரிகமான பெண்ணை அவளது சம்மதமே இல்லாமல் நடுத்தெருவில் வைத்து அசிங்கப்படுத்தலாம், பின்தொடரலாம், ஆபாசமாகப் பேசலாம்; கடைசியில் அந்தப் பெண்ணே அவனைக் காதலித்து அவனுக்கு வாழ்க்கை நெறி கற்றுத் தரலாம்  என்ற ஒரு புதுவிதமான பொறுக்கித்தன வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, ஏழு ஜி என்ற பெயரில் வந்த இந்த ஏழரைக்கு உண்டு.

நாயகன் என்ற உதவாக்கரை, அதேசமயம் ஆபத்தான ஸ்டாக்கர் பிம்பமும், இளசுகளின் ஹார்மோன்களைச் சுண்டி விடும் பின்னணி இசையும், நாயகி என்கிற பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு டாஸ்மாக் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடிமையியல் கல்வி என்ன தெரியுமா? நீங்கள் உருப்படாமல் ஊர் சுற்றுபவராக இருந்தால் போதும்; உங்கள் ஏரியாவுக்கு வரும் எந்தவொரு பெண்ணையும் அவளது விருப்பமின்றி வழிமறிக்கலாம். அவள் உங்களை மதிக்கவில்லை என்றால், அவளது தகுதியைக் கேலி செய்யலாம், பேருந்தில் வைத்து அவளது அந்தரங்கம் வரை அத்துமீறி டார்ச்சர் செய்யலாம் என்பதுதான்.

பெண்ணின் சம்மதம், தனிமனித உரிமை போன்ற விஷயங்கள் எல்லாம் கமர்ஷியல் தமிழ் சினிமாவுக்குப் பொருந்தாது என்பது வேறு விசயம். ஆனால், ஓர் ஆண் எவ்வளவுதான் கீழ்த்தரமான பொறுக்கியாக இருந்தாலும், அவன் ஒரு பெண்ணை உண்மையாக, அதாவது தீவிரமாகப் பின்தொடர்ந்து காதலித்தால், அந்தப் பெண் தன் சுய விருப்பங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு, அவனைக் காதலிக்க வேண்டும் என்று தமிழ் இளைஞனை நம்ப வைத்தது இந்தக் கூமுட்டைக் காலனி.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் பெண்கள் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால், நான்தான் உன்னை ஸ்டாக்கிங், ரேக்கிங் செய்து காதலிக்க வந்த ரெயின்போ காலனிப் பையன் என்று நினைத்துக்கொண்டு பெண்களை டார்ச்சர் செய்யும் ஓர் ஆபத்தான, முதிர்ச்சியற்ற வாலிகளின் ஆதிப்புள்ளியாக அமைந்தது இத்திரைப்படம்.

மன்மதன் படத்தில் வன்முறையை நியாயப்படுத்தினார்கள் என்றால், 7ஜி படத்தில் ஹீரோவின் அத்தனை முட்டாள்தனங்களையும் காதல் என்ற ஒற்றை வார்த்தையில் புனிதப்படுத்தினார்கள்.

நாயகன் எதற்கும் லாயக்கில்லாதவனாகப் பொறுக்கிகளின் இன்டர்நேஷனல் பிராண்ட் அம்பாசிடராகத் திரிவான். அவனுக்கு வேலை வாங்கித் தருவது, அவனது குடும்பத்தின் முன்னால் அவனைப் பெருமைப்படுத்துவது என நாயகி உருகி உருகி உழைப்பாள். ஆனால், அவளோடு அவளது திருமணத்துக்கு முன் அவளை அழைத்துப் போகும் நாயகன், அவளைச் சீரழித்து, இறுதியில் விபத்தில் அவளைப் பறிகொடுத்துவிடுவான். இந்த உறைபனியூட்டும் கொடூரத்தை விபத்தாகக் காட்டிவிட்டு, பின்னணியில் சோக இசையை ஒலிக்க விட்டு, அவன் பாவம், இப்பதான் திருந்தினான். அதுக்குள்ள அவ செத்துட்டா, என்று பார்ப்பவனுக்குக் கண்ணீர் வரவழைப்பார் இயக்குனர்.

ஓர் உதவாக்கரையின் பொறுப்பின்மையால் ஒரு பெண்ணின் வாழ்க்கை அழிந்ததை மறைத்து, அவனைக் கல்லறையோடு பேசும் ஒரு தத்துவஞானியாக மாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இதன் காரணமாக நிஜ வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டிய இளைஞர்கள், நாமக்கும் ஒரு நாயகி கிடைத்தால் உருப்பட்டு விடுவோம், என்று பகற்கனவு காணும் ஒரு சோம்பேறித்தனமான பொதுப்புத்தியை வளர்த்துக்கொண்டார்கள்.

படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் பாடல்கள் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், தன் காதலி இறந்துவிட்ட பிறகு, நாயகன் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே, அவளது ஆவியோடு பேசிக்கொண்டு வாழ்வான். இதை ஏதோ கற்பின் உச்சக்கட்டத் தியாகம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது தியாகம் அல்ல; அது ஒரு பலவீனமான ஆணின் குற்ற உணர்ச்சி என்பது புரிய வரும். தன் பிடிவாதத்தால் ஒரு பெண்ணின் உயிரே போய்விட்டது என்ற உண்மையை மறைக்க, நான் அவ நினைப்பிலேயே வாழ்கிறேன் என்று தாடி வளர்த்துத் திரிவதை மாஸாகக் காட்டியது இத்திரைப்படம்.

காதலி செத்த பிறகுதான் நாயகன் ஒழுங்காக வேலைக்கே போகிறான். அப்படியென்றால், காதலை விட காதலியின் மரணம்தான் ஒருவனை உருப்படியாக்கும் என்கிறதா இத்திரைப்படம் என்பது நீங்கள்தான் விடை காண வேண்டிய கேள்வி.

தமிழ் இளைஞர்களுக்குக் காதல் தோல்வி என்றால் உடனடியாகக் குடிக்கப் போக வேண்டும், தாடி வளர்க்க வேண்டும், சோகப் பாட்டு வைக்க வேண்டும் என்ற போலி கலாச்சாரத்தை மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்தது இந்த 7ஜி.

காதல் கொண்டேன் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. அப்படம் மற்றும் இப்படத்தின் நாயகி கதாபாத்திரம், ஏதோ இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை உருப்படாத பொறுக்கிகளையும் திருத்த வந்த ஒரு மறுவாழ்வு மையம் போலக் காட்டப்படுவார். அவளுக்கு என்று தனியாக ஒரு குடும்பம், கனவுகள் இருந்தாலும், ஹீரோவின் அசிங்கமான டார்ச்சருக்குப் பயந்து, பிறகு அவனது அப்பாவித்தனத்தைப் பார்த்து உருகி, தன் வாழ்க்கையையே அவனுக்காகத் தியாகம் செய்வதே அவளது வேலையாக இருக்கும்.

பெண் என்பவள் தன் வாழ்க்கைத் துணையாக ஒரு தகுதியான, அறிவான ஆணைத் தேர்ந்தெடுக்கக் கூடாது; தன்னைத் தெருவில் வைத்து அசிங்கப்படுத்தும் ஒரு பொறுக்கியைத் தத்தெடுத்து, அவனுக்குச் சோறு ஊட்டி, வேலை வாங்கித் தந்து, அவனது வாழ்க்கையைத் திருத்த வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நளினமாக சமூகத்தில் வேரூன்றச் செய்தது.

7ஜி ரெயின்போ காலனி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, மன்மத ராசாவின் அண்ணாவை ஒரு ஹிட் இயக்குநராக ஆக்கியிருக்கலாம். சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு தலைமுறைத் தமிழர்களைப் பொறுக்கித்தனத்தை நோக்கி அனிச்சையாகப் பின்தொடரும் நோயாளிகளாக மாற்றியதில் இந்தத் திரைப்படத்திற்குப் பெரும் பங்குண்டு. உடலை முறுக்கிக் கொண்டு, மப்பை ஏற்றிக் கொண்டு, பைக்கை ஸ்டார்ட் செய்து, எந்தப் பெண்ணாவது தங்களைத் திட்டி உத்தமனாக்க மாட்டாளா என்று ஒரு தலைமுறையே ஏங்கித் தவித்ததுதான் இத்திரைப்படச் சீரழிவின் உச்சக்கட்டம்.

ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களைத் தெருவில் வைத்து மிரட்டுவதுதான் உண்மையான வாலிபம் என்றும், பொறுக்கியாகத் திரிந்துவிட்டுப் பின் அழுது வடியும் நாயகன்தான் உன்னதமான காதலன் என்றும், ஆண்களைத் திருத்தும் இயந்திரமாகத் தங்களைப் பெண்கள் நினைப்பதே காதல் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற டாஸ்மாக் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

16 Jun 2026

மன்மதப் போலியும் திசை மாறிய தலைமுறையும்!

சீரழித்த சினிமா – 14

மன்மதன்

மன்மதப் போலியும் திசை மாறிய தலைமுறையும்!

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின் நவம்பர் மாதம், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பாலினச் சமத்துவத்திற்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, திரையரங்கு வாசலிலேயே சவக்குழி தோண்டப்பட்டது.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய, காதலி ஏமாற்றினால் வேறு வேலையைப் பார்க்க வேண்டும் அல்லது தாடி வளர்த்துக் கொண்டு, சரக்கடித்துக் கொண்டு தெரு நாயோடு திரிய வேண்டும் என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, ஒரு பெண் ஏமாற்றினால், ஒட்டுமொத்தப் பெண் இனமுமே மோசடியானது என்று பொதுமைப்படுத்தி, பெண்களைத் தொடர் கொலை செய்வதுதான் ஆகச்சிறந்த ஆண்மை என்ற ஒரு புதுவிதமான வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை மன்மதன் திரைப்படத்திற்கு உண்டு.

கடையில் வாங்கி வந்த ஓர் ஆப்பிள் அழுகிப் போய்விட்டது என்பதற்காக, உலகத்தில் இருக்கும் அத்தனை ஆப்பிள் மரங்களையும் வெட்டிச் சாய்க்கும் விசித்திரமான மனநோயாளித்தனம்தான் மன்மதன் காட்டிய சைக்கோதனம். இப்படத்தின் ஆகச்சிறந்த சீரழிவே, ஒரு கொலைகாரனைப் பாதிக்கப்பட்ட அப்பாவியாகவும், பெண்களைத் திருத்தும் அவதாரமாகவும் காட்டியதுதான்.

மன்மதன் என்ற போலிப் புனித வேடமிட்ட கொலையாளி பிம்பமும், காதல் வளர்த்தேன் என்ற அந்தப் போலி நாடகத்தின் மீது பின்னப்பட்ட பின்னணி இசையும், ஓ மன்மதனே என்கிற கிளாமர் போதையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கசாப்புக் கடை நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த நெறிமுறைக் கல்வி என்ன தெரியுமா? நீங்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது, அவளுக்கு உங்களைத் தவிர வேறு யாருடனாவது தொடர்பு இருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் போதும்; நீங்கள் நேரடியாக நீதிபதியாக மாறிவிடலாம். அவளைக் கொடூரமாகக் கொலை செய்து, பிணத்தை மறைத்துவிடலாம் என்பதுதான்.

ஒரு பெண் ஏமாற்றுகிறாள். அது தவறுதான், தார்மீகக் குற்றம்தான். ஆனால், அதற்குத் தண்டனை? மரணதண்டனை! அதுவும் நீதிமன்றம் கொடுக்கவில்லை, தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களின் கைதட்டல்களுக்கு நடுவே மன்மதன் கொடுத்தார்.

ஏமாற்றுவது துரோகம் என்றால், கொலை செய்வது என்ன?

இந்தியத் தண்டனைச் சட்டம் செக்சன் 302 – கொலைக்குற்றம் போன்ற சட்டங்கள் எல்லாம் மன்மதன் போன்ற கமர்ஷியல் சினிமா நாயகனுக்குப் பொருந்தாது. காதலில் துரோகம் செய்யும் பெண்களைக் கொலை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என்றாலும், அது ஆண்குலத்தைக் காக்கும் புனிதமான சமூகச் சேவை என்று இப்படத்தின் மூலம் தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் தங்களை ஏமாற்றிவிட்டதாகவோ அல்லது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னாலோ, அவளது கேரக்டரைச் சமூக வலைத்தளங்களில் படுகொலை செய்வதோடு நிறுத்தாமல், அவளுக்கு நிஜ வடிவிலேயே வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் ஓர் ஆபத்தான பெண் வெறுப்புக்கு ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

காதல் கொண்டேன் படத்தில் சைக்கோத்தனத்திற்குப் பரிதாபம் தேடினார்கள் என்றால், மன்மதன் படத்தில் ஒட்டுமொத்தப் பெண்களையும் வில்லிகளாகக் காட்டி வன்முறையை நியாயப்படுத்தினார்கள்.

அண்ணன் மன்மதன் செய்யும் அத்தனை உறைபனியூட்டும் கொலைகளையும் பின்னணியில் சோக இசையை ஒலிக்க விட்டு, அவன் பாவம், அவனோட தம்பி காதலிச்ச பெண் அப்படிப் பண்ணிட்டா, என்று பார்ப்பவருக்குக் கொலையாளியின் மீது பரிதாபத்தை வரவழைப்பார் இப்படத்தின் நாயக இயக்குனர்.

ஒரு தொடர் கொலையாளியின் வக்கிரமான குற்றங்களை அவனது தம்பியின் ப்ளாஷ்பேக் சோகத்தைக் காட்டி நியாயப்படுத்தி, பார்ப்பவனுக்குக் கொலைக் குற்றத்தின் மீதான பயத்தையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இதன் விளைவாக நிஜ வாழ்க்கையில் ஆயுள் தண்டனை வழங்கிச் சிறையிலடைக்கப்பட வேண்டிய ஒரு குற்றவாளியை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று திரையரங்கில் கொண்டாடி விசிலடிக்கும் ஒரு மிருகத்தனமான பொதுப்புத்தியைத் தமிழன் வளர்த்துக்கொண்டான்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால் தன் தம்பியின் மேல் கொண்ட பாசத்திற்காகவும், அவனது தற்கொலைக்காகவும் ஒழுக்கமற்ற பெண்களைக் கொல்லலாம் என்பதுதான். ஆனால் கூர்ந்து கவனித்தால், அது பாசம் அல்ல; அது ஒரு சுயநல ஆணின் அகந்தை என்பது புலப்படும். . என் தம்பியைத் தற்கொலைக்குத் தூண்டியது போன்ற பெண்கள் எப்படி இன்னும் உயிரோடு வாழலாம்? என்ற நிலப்பிரபுத்துவக் கௌரவக் கொலை மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைப் பகுத்தறிவைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் சட்டம் நமக்குத் தேவையில்லை, என்ற பாசிச மனநிலையை இது இளைஞர்களிடம் விதைத்தது.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் வக்கிரமானது. படத்தின் நாயகி ஒரு புத்திசாலிப் பெண்ணாகக் காட்டப்படுவார். ஆனால், அவரும் கடைசியில் கொலையாளியான நாயகனின் போலித்தனம் நாடகீயத்தனமான கனிவான குணத்தால் காதலில் விழுந்து அவனைக் காதலிக்க துடிப்பார்.

பெண்கள் ஒன்று காதலில் துரோகம் செய்யும் நாகப்பாம்புகள், இல்லை என்றால் கொலையாளியைக் கூட அடையாளம் காணத் தெரியாமல் ஏமாறும் முட்டாள்கள் என்ற இரு முனைகளுக்குள் பெண்களின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அடியோடு மழுங்கடித்தது இத்திரைப்படம்.

பெண் என்பவள் தனக்கென ஒரு பகுத்தறிவோ, சுய புத்தியோ இல்லாதவள்; அவளை ஆட வைப்பதற்கும், பலியாக்குவதற்கும் மட்டுமே சினிமாவுக்காகப் பயன்படும் ஒரு பொருள் என்பதைத் தமிழனின் ஆழ்மனதில் விதைத்தது மன்மதன்.

மன்மதன் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அப்படத்தின் நாயகனை மாஸ் ஹீரோ பிம்பத்தில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

படம் முழுக்க கிளாமர், இரட்டை அர்த்த வசனங்கள், மன்மத லீலைகள் எல்லாம் தாராளமாக இருக்கும். ஆனால், க்ளைமாக்ஸில் பெண்ணியம் பேசுவது போலவும், பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றிப் பாடம் எடுப்பது போலவும் ஒரு போலி வேஷம் போடப்பட்டிருக்கும். இதுதான் மிகப்பெரிய சீரழிவு. தீமையைக் காட்டிவிட்டு, நான் நன்மையைத் தான் போதிக்கிறேன் என்று சொல்வது போன்ற அப்பட்டமான ஏமாற்று வேலை இது.

மன்மதன் என்பது வெறும் படமல்ல; அது ஒரு சமூக மனநோயின் திரை வடிவம். காதலைக் காமமாகவும், காமத்தைக் கொலையாகவும், கொலையை நியாயமாகவும் மாற்றிய ஓர் அபத்த ரசவாதம்.

மன்மத லீலைகளை ரசிப்பதாக நினைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழனின் நிஜ வாழ்க்கைக்கான பாலினச் சமத்துவத்தை அடியோடு சீரழித்தது இத்திரைப்படம்.

காதல் தோல்வி அடைந்தால் பெண்களைக் கொலை செய்வதுதான் வீரம் என்றும், எல்லாப் பெண்களும் ஏமாற்றுக்காரர்கள் என்று பாட்டுப் பாடுவதுதான் புத்திசாலித்தனம் என்றும், குரூரமான சைக்கோத்தனத்தைக் கொண்டாடுவதே மாஸ் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற பெண் வெறுப்பு சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

15 Jun 2026

கருத்தியல் தொடை நடுக்கமும் அதை மறைத்த பிரேக் டான்ஸ்ம்!

சீரழித்த சினிமா – 13

காதலன்

கருத்தியல் தொடை நடுக்கமும் அதை மறைத்த பிரேக் டான்ஸ்ம்!

தொண்ணூறுகள் வரை தமிழ் சினிமா காட்டிய கல்லூரி மாணவர்களான படித்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும், பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, ஒரு கல்லூரி மாணவன் நினைத்தால், மாநிலத்தின் உச்சகட்ட அதிகார மையமான கவர்னரின் மகளையே சைட் அடிக்கலாம், அதற்குப் பொறுப்போ தகுதியோ தேவையில்லை, இடுப்பை வளைத்து பிரேக் டான்ஸ் ஆடத் தெரிந்தால் போதும் என்ற ஒரு புதுவிதமான இளமைக்கால வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, 1994இல் வெளியான காதலன் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் இடுப்பை ஒடிக்கும் பிரேக் டான்ஸ் பிம்பமும், காது ஜவ்வு கிழியும் பின்னணி இசையும், பேட்ட ராப் என்கிற சென்னைத் தமிழ்க் கூத்தும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு டான்ஸ் க்ளப் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போடுவோம்.

பொதுவாக ஒரு திரைப்படம் சமூகத்தைச் சீரழிக்கிறது என்றால், அதில் வன்முறையோ அல்லது ஆபாசமோ இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவற்றுடன், ஓர் இளைஞனைத் தன் நிஜ உலகக் கடமைகளில் இருந்து திசை திருப்பி, சாத்தியமே இல்லாத பகற்கனவுகளில் மூழ்கடித்தாலே அதுதான் ஆகச்சிறந்த சீரழிவு. அந்த வகையில் காதலன் செய்த சேதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் கல்வி என்ன தெரியுமா? நாட்டில் என்ன பிரச்சினைகள் நடந்தாலும் நீங்கள் அதைக் கண்டு கொள்ளக் கூடாது.

விலைவாசி உயர்ந்தால் என்ன, பணவீக்கம் ஏற்பட்டால் என்ன? உனக்குத் தேவை டேக் இட் ஈஸி பாலிசி. சமூகத்தின் போலி ஒழுக்கத்தைக் கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த ஒழுக்கத்தையுமே ஒரு ஜோக் ஆக மாற்றியது ஊர்வசி ஊர்வசி டேக் இட் பாலிஸி என்ற இத்திரைப்படப் பாடல்.

பிரச்சினைகளைக் கண்டு கேள்வி கேட்பதை விடுத்து, அதை நோக்கி ஒரு போலிப் புன்னகையை உதிர்த்துவிட்டு பொறுப்பின்றி ஓடிவிடக் கற்றுக்கொடுத்தது இந்த நயவஞ்சகத் தத்துவம்.

இதன் விளைவுதான், இன்று நாட்டின் எந்தவொரு முக்கியப் பிரச்சினையின் போதும், போஸ்டர் ஒட்டிவிட்டு, வாட்ஸ்ஆப் பார்வேட் செய்துத் தப்பித்துக்கொள்ளும் இன்றைய சோம்பேறித்தனமான இளைஞர் கூட்டம்.

படத்தின் கிளைமாக்ஸ் என்று பார்த்தால், தீவிரவாதியை ஒழிக்க இந்திய ராணுவமே திணறும் போது, நம் நாயகன் தன் நடன அசைவுகளாலும், சில பைட்டிங் டெக்னிக்குகளாலும் ஒட்டுமொத்த மக்களையும் காப்பாற்றுகிறார். இயக்குநரின் கற்பனையில் தீவிரவாதம் என்பது ஏதோ வீடியோ கேம் விளையாடுவது போல இத்திரைப்படத்தில் இருந்தது.

இப்படத்தின் ஆகச்சிறந்த கலாச்சாரப் பங்களிப்பு மேற்கத்திய நடன மோகத்தைத் தமிழனின் தலைக்குள் ஏற்றி, அவனது சுய அடையாளத்தை அழித்ததுதான். அதுவரை கரகாட்டமும், தப்பாட்டமும், பரதமும் ஆடிக்கொண்டிருந்த ஒரு சமூகத்தின் முன்னால், உடம்பில் எலும்பே இல்லாதது போல நாயகன் ஆடிய ஆட்டம், தமிழ் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது.

விளைவு?

கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு, முக்காலா முக்காபுலா என்று தங்கள் இடுப்பை உடைக்க முயன்று, பல இளைஞர்கள் சுளுக்கு மருந்துக் கடைகளில் தஞ்சமடைந்த வரலாறு நடந்தேறியது. அந்த வகையில் பிசியோதெரபிஸ்ட்டுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் படம் ஆற்றிய பங்கு அளப்பரியது.

இப்படத்தினால் நிஜ வாழ்க்கையில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள், வகுப்பறையின் பெஞ்சுகளின் மீதும், நடுரோட்டிலும் நின்று கொண்டு காலைத் தூக்கி ஆடும் ஒரு பிரேக் டான்ஸ் சமூகமாகத் தங்களை மாற்றிக்கொண்டார்கள்.

இன்றுவரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இடுப்பை வளைத்துக் கொண்டிருப்பதற்குக் காதலன் போட்ட இந்த விதைப்பிச்சையே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படம் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் கொடுமையானது. படத்தின் வில்லனான கவர்னர் தமிழ்நாட்டையே குண்டு வைத்து அழிக்க நினைக்கும் ஒரு பயங்கரவாதி. ஆனால், நாயகனுக்கு நாட்டின் மீதோ, மக்கள் மீதோ எந்த அக்கறையும் கிடையாது. தன் காதலி கவர்னரால் சிறைபிடிக்கப்படும் போதுதான், அவர் அந்தத் தீவிரவாதச் சதியை முறியடிக்கப் புறப்படுவார். இது நேர்மையோ அல்லது தேசபக்தியோ அல்ல; இது ஒரு சராசரி சினிமா நாயகனின் சுயநலம்.

ஒரு தமிழன் நாட்டுக்காகவோ, சமூக நீதிக்காகவோ தீவிரவாதத்தை எதிர்க்க மாட்டான். அவனுடைய காதலிக்கு ஆபத்து வந்தால் மட்டுமே அவன் தேசபக்தனாக மாறுவான் என்ற அபத்தமான, சுயநலக் கோட்பாட்டை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

உங்களுக்கு நன்றாக நடனமாடத் தெரிந்தால், தீவிரவாதிகளை ஒழித்து, கவர்னர் மகளைக் கைப்பிடித்து, நாட்டின் ஜனாதிபதி விருது வரை வாங்கலாம் என்பது இத்திரைப்படம் ஓதிய சேதி. ஆனால், இந்தத் திரையரங்குப் பிரமையிலிருந்து விடுபட்டு நிஜ உலகிற்கு வந்த இளைஞர்களுக்குக் காத்திருந்தது என்னவோ, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நீண்ட வரிசையும், அரசாங்கப் பேருந்தின் நெரிசலும் மட்டும்தான்.

காதலன் திரைப்படத்தில் நாயகிக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. படத்தின் நாயகி ஆரம்பத்தில் பாரம்பரியமான பரதநாட்டியக் கலைஞராகக் காட்டப்படுவார். ஆனால், படத்தின் வியாபாரத்திற்காக அவரைப் நாயகனோடு சேர்ந்து மேற்கத்திய உடையில் குத்தாட்டம் போட வைப்பார்கள். பெண் என்பவள் நாயகனோடு தன் நடனத் திறமையைக் காட்டுவதற்கும், வில்லனைப் பழிவாங்குவதற்கும் பயன்படும் ஓர் அலங்காரப் பொருள் மட்டுமே என்பதைத் தமிழனின் ஆழ்மனதில் விதைத்தது இந்தக் காதலன்.

காதலன் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலைக் குவித்து, அப்படத்தின் நாயகனை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிம்பத்தில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

படத்தில் வில்லன் ஏசி அறையில், நாற்காலியில் அமர்ந்துகொண்டே பாம்களை வெடிக்க வைப்பார். அதுவரை தீவிரவாதம் என்றால் ஏதோ காடுகளுக்குள் நடக்கும் விஷயம் என்று நினைத்திருந்த இளைஞர்களுக்கு, ஓஹோ, ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டும் தீவிரவாதம் செய்யலாம் போலிருக்கிறது, அது ரொம்ப கௌரவமான வேலை போல என்ற ஒரு மாயையை இது உருவாக்கியது.

காதல் என்ற பெயரில் பொறுப்பின்றித் திரிவதுதான் வாலிபம் என்றும், டேக் இட் ஈஸி என்ற பெயரில் சமூகப் பொறுப்புகளைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும், குப்பையான தத்துவங்களை ரசிப்பதே ஆகச்சிறந்த அறிவுத்திறன் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற டான்ஸ் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

இது போன்ற கமர்ஷியல் சினிமாக்கள் தமிழர்களின் சிந்தனையை அடித்துத் துவம்சம் செய்துவிட்டன. இப்போது வெளியே வந்து பார்த்தால், சீரழிவதற்குக் கூட தமிழர்களிடம் எதுவும் மிச்சமில்லை என்பதுதான் யதார்த்தம்!

*****

14 Jun 2026

காதல் வறட்சி & சைக்கோ புரட்சி காட்டிய விபரீதப் பாதை!

சீரழித்த சினிமா – 12

காதல் கொண்டேன்

காதல் வறட்சி & சைக்கோ புரட்சி காட்டிய விபரீதப் பாதை!

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் ஜூலை மாதம், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பகுத்தறிவுக்கும், மனநலம் சார்ந்த புரிதல்களுக்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, திரையரங்கு வாசலிலேயே சவக்குழி தோண்டப்பட்டது.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய காதல் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது, பிடிக்கவில்லை என்றால் விலகிப் போக வேண்டும், என்ற நாகரிக விதியை அடியோடு மாற்றி, ஒருவன் சிறுவயதில் சித்திரவதைக்கு ஆளாகியிருந்தால், அவன் கல்லூரியின் டாப் ஸ்டூடென்ட்டாக இருந்தாலும் சரி, தனக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை மிருகத்தனமாக அடைய நினைப்பதும், அதற்காக அவளது காதலனைக் கொல்லத் துரத்துவதும் புனிதமான காதல் என்ற ஒரு புதுவிதமான மனப்பிறழ்வு வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை 2003 இல் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்திற்கு உண்டு.

ஒடுக்கப்பட்ட, அதேசமயம் ஆபத்தான சைக்கோ நாயக பிம்பமும், அதனோடு ஒத்தூதிய பின்னணி இசையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மனநலக் காப்பக நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த மனிதநேயக் கல்வி என்ன தெரியுமா? ஒரு பெண் உங்களிடம் அன்பாகப் பழகி, உங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து, உங்களை ஒரு நல்ல நண்பனாகப் பார்த்தால் போதும்; நீங்கள் உடனடியாக அவளை உங்கள் சொத்து என்று முடிவு செய்துவிடலாம். அவளுக்கு இன்னொரு காதலன் இருந்தால், அவனைக் கொலை செய்யத் திட்டமிடலாம் என்பதுதான்.

காதலில் நாகரிகம், சம்மதம் போன்ற அற்பமான விஷயங்கள் எல்லாம் கமர்ஷியல் சினிமாவுக்குப் பொருந்தாது. ஒருவன் அனாதை என்ற ஒற்றைக் காரணத்திற்காக, அவன் செய்யும் அத்தனை குற்றங்களையும், கடத்தல்களையும், கொலைமுயற்சிகளையும் காதலின் தீவிரம் என்பதாக இத்திரைப்படத்தால் தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் தங்களைப் பிடிக்கவில்லை என்று சொன்னால், அவளைப் பின்தொடர்ந்து சென்று ஆசிட் ஊற்றுவதையும், வன்முறையில் ஈடுபடுவதையும் காதல் கொண்டேன் நாயகன் பாணியில் நியாயப்படுத்தும் ஓர் ஆபத்தான வக்கிரத் தலைமுறையின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

காதல் கொண்டேன் திரைப்படம் வன்முறையைக் கண்ணீரோடு கலந்த கமர்ஷியல் வியாபாரம். வில்லன் அல்லது எதிரிகளைத் தாக்கும்போது ரத்தம் தெறிக்கத் தெறிக்க வன்முறையைக் கையாள்வது, காதலியைக் காட்டுக்குள் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுவது போன்ற உறைபனியூட்டும் கொடூரங்களை நாயகன் செய்வான். ஆனால், பின்னணியில் சோக இசையை ஒலிக்க விட்டு, அவன் பாவம், சின்ன வயசில் அடி வாங்கினவன் என்று பார்ப்பவனுக்கு அவனது குரூரத்தின் மீது பரிதாபத்தை வரவழைப்பார் இப்படத்தின் இயக்குனர்.

ஒரு சைக்கோவின் கொடூரமான குற்றங்களை அவனது ப்ளாஷ்பேக் சோகத்தைக் காட்டி நியாயப்படுத்தி, பார்ப்பவனுக்கு வன்முறையின் மீதான பயத்தையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச் சிறந்த வியாபாரத் தந்திரம்.

இதன் விளைவாக, நிஜ வாழ்க்கையில் மனநல மருத்துவரிடம் அனுப்பப்பட வேண்டிய ஒரு குற்றவாளியை, திரையரங்கில் சூப்பர் டூப்பர் ஹீரோ என்று கொண்டாடி விசிலடிக்கும் ஒரு மிருகத்தனமான பொதுப்புத்தியைத் தமிழன் வளர்த்துக்கொண்டான்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், தன் காதலிக்குத் தன்னைத் துளியும் பிடிக்கவில்லை, அவளுக்கு அவளது காதலனைத்தான் பிடிக்கும் என்று தெரிந்ததும், நாயகன் தன் மரணத்தைத் தேடிக் கொள்வான். இதை ஏதோ காதலின் உச்சக்கட்டத் தியாகம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது தியாகம் அல்ல; அது ஒரு சுயநலவாதியின் பிடிவாதம். நீ எனக்குக் கிடைக்கவில்லை என்றால், நான் செத்துப் போய் உனக்கு ஆயுசுக்கும் குற்ற உணர்ச்சியைப் பரிசாகத் தந்துவிட்டுப் போவேன், என்ற ஒரு கொடூரமான மனநிலையை இது இளைஞர்களிடம் விதைத்தது.

குடும்ப உறவுகளோ, சுய முன்னேற்றமோ இல்லாமல், காதல் தோல்வி அடைந்தால் செத்துப் போவதுதான் கெத்து, என்ற தற்கொலை மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு.

இத்திரைப்படத்தின் நாயகிக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. ஏதோ இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை சைக்கோக்களையும், அனாதைகளையும் திருத்த வந்த ஒரு மதர் தெரசா பிம்பமாகவே அவர் காட்டப்படுவார். அவளுக்கு என்று தனியாக ஒரு காதல் வாழ்க்கை இருந்தாலும், ஹீரோவின் பைத்தியக்காரத்தனத்திற்குப் பயந்து அவனுக்குப் பணிந்து போவதும், அழுவதுமே அவளது வேலையாக இருக்கும்.

பெண் என்பவள் தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது; அவளைப் பைத்தியமாகத் துரத்தும் ஒருவனுக்கு அவள் தாய்மை உணர்வோடு இரக்கம் காட்ட வேண்டும் என்ற ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நளினமாக ஏற்றுமதி செய்தது.

காதல் கொண்டேன் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை ஒரு நடிப்பு அரக்கன் பிம்பத்தில் ஏற்றி, இயக்குநரை ஜீனியஸ் ஆக்கியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

சொறிபிடித்த நாய் ஒன்று தெருவில் அலைவதற்கும், ஒரு தமிழ் இளைஞன் தாடி வளர்த்துக்கொண்டு சுவரில் தலைகீழாகத் தொங்குவதற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதை இத்திரைப்படம் நிறுவியது. நான் சைக்கோவாக இருக்கிறேன், எனவே நான் காதலிக்கிறேன் என்கிற ஒரு புதிய தத்துவத்தையும் இத்திரைப்படம் உருவாக்கியது.

அதுவரை வகுப்பறையின் கடைசி பெஞ்சில், யாரிடமும் பேசாமல், நகம் கடித்துக்கொண்டு, சாம்பிராணி என்றும் சாம்பார் என்றும் உலகத்தால் மதிக்கப்பட்ட அல்லது மிதிக்கப்பட்ட அப்பாவிகள் யாவரும், திடீரென தங்களைக் காதல் கொண்டேன் நாயகனாகப் பாவிக்கத் தொடங்கினார்கள்.

நான் பேசாமல் அமைதியாக இருக்கிறேன் என்றால், என் பின்னால் ஒரு கொடூரமான கடந்த காலமும், என் பாக்கெட்டில் ஒரு துருப்பிடித்த கத்தியும் இருக்கிறது, என்று அவர்கள் கொடுத்த பில்டப், தமிழ்நாட்டின் சராசரிப் பெண்களை அலற வைத்தது. அமைதியாக இருக்கும் பசங்களைக் கண்டாலே பெண்கள் அஞ்சத் தொடங்கிய வரலாற்றுச் சீரழிவு அங்குதான் ஆரம்பமானது.

அவன் கெட்டவன்தான், ஆனா அவனோட லவ் பியூர் என்கிற ஓர் அபத்தமான தர்க்கத்தை இந்தச் சமூகம் இத்திரைப்படத்திலிருந்துதான் கற்றுக்கொண்டது.

இத்திரைப்படத்தால் ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கலாம் என்று நம்பிய அற்ப ஜீவிகளின் மண்டையில் பலத்த அடி விழுந்தது. அவள் உன்னை நண்பனாகப் பார்த்தால் என்ன? நீ அவளைக் கடத்திச் சென்று ஒரு பாழடைந்த பங்களாவில் வைத்து, அரிசி சாதம் ஊட்டலாம், என்கிற ஒரு மாற்றுச் சிந்தனையை இப்படம் விதைத்தது. இதன் விளைவாக, கல்லூரிகளில் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் என்று சுற்றிய பல இளைஞர்கள், திடீரென சுவரில் முட்டிக்கொண்டு தங்களுக்குள் ஒரு சைக்கோ நாயகனைத் தேட ஆரம்பித்தார்கள்.

காதல் கொண்டேன் மனிதருக்குள் ஏற்கனவே பதுங்கியிருந்த சைக்கோதனத்திற்கு ஒரு அழகிய, ரசிக்கத்தக்க முகமூடியை மாட்டிக் கொடுத்தது. அதன் பிறகுதான், காதலில் தோற்பது என்பது ஒரு ஏமாற்றமல்ல, அது ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படம் என்ற புரிதல் இங்குள்ள சராசரி இளைஞனுக்கு ஏற்பட்டது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் செய்த ஒரே நல்ல காரியம், இப்பட நாயகனைப் போன்றவர்கள் நிஜ வாழ்க்கையில் சுற்றினால் என்ன நடக்கும் என்பதை, கடைசியில் மலை உச்சியிலிருந்து விழ வைத்துக் கதையை முடித்து வைத்ததுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழ்ச் சமூகம் நாயகனின் வீழ்ச்சியை மறந்துவிட்டு, அவனது விசித்திரப் புன்னகையை மட்டும் தத்தெடுத்துக் கொண்டது.

ஆக மொத்தத்தில், ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களைத் துரத்துவதுதான் உண்மையான வாலிபம் என்றும், மனப்பிறழ்வோடு அலைவதுதான் காதலின் ஆகச்சிறந்த அடையாளம் என்றும், குரூரமான சைக்கோத்தனத்தைக் கொண்டாடுவதே முற்போக்கு என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சைக்கோ சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

13 Jun 2026

தமிழனின் பொதுப்புத்தியைச் சாம்பலாக்கிய ஆக்சன் கொள்ளி!

சீரழித்த சினிமா – 11

தூள்

தமிழனின் பொதுப்புத்தியைச் சாம்பலாக்கிய ஆக்சன் கொள்ளி!

இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகம் தன் அறிவையும், சட்டத்தின் மீதான குறைந்தபட்ச நம்பிக்கையையும் மொத்தமாகத் திரையரங்கு வாசலிலேயே கழற்றி எறிந்துவிட்டு, ஆக்‌ஷன் என்ற ஒற்றைப் போதைக்குள் தங்களை ஒட்டடை அடித்துக் கொண்டது.

அந்தப் புனிதமான காரியத்தைக் கங்கணம் கட்டிக் கொண்டு 2003இல் மிக நேர்த்தியாகச் செய்து முடித்த பெருமை தூள் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அதிரடி வேகமும், சிங்கம் போல நடந்து வரான் என்ற பாடலும் சண்டையும் கலந்த கொத்து பரோட்டா பின்னணி இசையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையில் சட்டமன்ற உறுப்பினரையும், அமைச்சரையும் ஆக்சன் ரூட்டில் எதிர்கொள்வதே ஆகச்சிறந்த சமூகச் சீர்திருத்தம் என்ற ஆபத்தான பாசிச நச்சை  எப்படி இத்திரைப்படம் நளினமாக விதைத்தது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த ஜனநாயகப் பாடம் என்ன தெரியுமா?

உங்கள் கிராமத்தில் ஒரு தொழிற்சாலையால் தண்ணீர் மாசுபடுகிறது என்றால், நீங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தையோ, நீதிமன்றத்தையோ நாடக் கூடாது. நேராகச் சென்னைக்கு வந்து, அந்த ஏரியா தாதாவையும், அவனுக்குப் பின்னால் இருக்கும் அமைச்சரையும் எதிர்த்து குஸ்தி சண்டை போட வேண்டும் என்பதுதான்.

ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் தன் கடமையைச் செய்வதற்கென்று சில வழிமுறைகள் உண்டு. ஆனால், தூள் பட நாயகனோஅரசமைப்பு வழிமுறைகள் என்பன ஏழைகளுக்குப் பயன்படாத ஒரு குப்பை; ஆக்சன்தான் மக்கள் கையில் எடுக்க வேண்டிய உண்மையான நீதிமுறை, என்ற அராஜகச் சிந்தனையைத் தமிழர்களின் மூளையில் ஆழமாக நட்டார்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் நமக்கொரு சமூகப் பிரச்சினை என்றால், சட்டப்பூர்வமாகப் போராடுவதை விடுத்து, நம்ம ஆறுமுகம் மாதிரி அதிரடியா இறங்கி நாலு பேரை ஆக்சனில் பொளந்தால்தான் நாடு விளங்கும் என்று வன்முறையை ஆராதிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற பொதுப்புத்தியை இந்தச் சினிமா உருவாக்கியது.

படத்தில் நாயகி மற்றும் நாயகனுக்கு இடையேயான காதல் மற்றும் நட்பு சித்தரிக்கப்பட்ட விதம் அலாதியானது. சென்னைக்கு வந்தக் கிராமத்து நாயகி, ஆரம்பத்தில் நாயகனை வெறுப்பது போலக் காட்டப்பட்டாலும், இறுதியில் அவனது முரட்டுத்தனத்தைக் கண்டு உருகிப் போவாள்.

ஒரு பெண் தன் சுயமரியாதையோடு இருக்கும்போது, அவளது விருப்பங்களை மதிக்காமல், அவளது எல்லைகளுக்குள் ஓர் ஆண் தன் கிராமத்து ஆணதிகாரப் பிம்பத்தோடு நுழைவதைக் காதல் என்று நியாயப்படுத்தியது இந்தச் சினிமா. பெண்கள் என்னதான் ஓடினாலும், இறுதியில் ஆண்களின் முரட்டுத்தனத்திற்கு முன்னால் மண்டியிடுவார்கள், என்ற ஆணாதிக்கப் புத்தியைத் தமிழர்களின் நெஞ்சில் இன்னும் ஆழமாகப் பதியவைத்தது இந்த சினிமா கரம்மசாலா தூள்.

படம் முழுவதிலும் நாங்க கிராமத்துக்காரங்க, எங்க மண் கெத்து, நாங்க நேர்மையானவங்க, என்ற போலிப் பெருமித வழிந்தோடும். அதேநேரம், சென்னை போன்ற பெருநகர மனிதர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்களாகவும், ரவுடிகளாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும் சித்தரிக்கப்படுவதை இத்திரைப்படமும் குறையின்றிச் செய்தது.

அறிவியலும், தொழில்நுட்பமும், நவீன நாகரிகமும் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த சிந்தனையையும் ஆக்சன் எனும் கரம்மசாலா வட்டத்திற்குள்ளேயே சுருக்கி வைத்தது இந்தத் திரைப்படம்.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வந்த இளைஞர்கள், உலகளாவிய சிந்தனைகளை நோக்கித் தங்களை வளர்த்துக்கொள்வதை விடுத்து, அடிதடி மற்றும் தூள் பறக்கும் ஆக்சன் வட்டப் பெருமைகளுக்குள் சுருங்கிப் போனார்கள்.

ஒட்டுமொத்தப் படமும் விவேகத்தோடும், பகுத்தறிவோடும் அணுக வேண்டிய ஒரு சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் பிரச்சினையை, வெறும் அடிதடி, ரத்தக் களறி, சேஸிங், பஞ்ச் வசனங்கள், ஆக்சன் என்ற கமர்சியல் பார்முலாவுக்குள் அடைத்துத் தமிழர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்தது.

தூள் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, சீயானுக்கு மாஸ் பிம்பத்தை நிலைநிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

சிங்கம் போல நடந்து வர்றான் என்ற பாடலின் கோதாவிலும், தான் ஒரு வேட்டை விலங்கு என்ற மாயையிலும், பக்கத்து வீட்டு நாய் குரைத்தால் கூட நாய்க்கா இந்த வெறி? என்று தன்னைத்தானே ஹீரோவாகப் பாவித்துக்கொள்ளும் உளவியல் நோய் தமிழர்களிடம் இதனால் பரவியது.

தூள் என்பது வெறும் திரைப்படம் அல்ல; அது தமிழ் சமூகத்தின் கூட்டு நனவிலி மனதிற்குள் செலுத்தப்பட்ட ஒரு நச்சு ஊசி. அதன் உளவியல் பாதிப்புகளைக் கணக்கிட்டால் அது முடிவிலி வரை செல்லும்.

இதித்ரைப்படம் ஏற்படுத்திய இன்ஸ்டன் ஆங்கர் ஆக்சன் மாடல், நிஜ வாழ்க்கையிலும் மக்களிடையே பரவியது. டிராபிக் சிக்னலில் ஒரு விநாடி லேட்டானால் கூட, மக்கள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வில்லனைத் தேடும் அளவுக்குப் பொறுமை இழந்தவர்களாக மாறினர்.

ஆக மொத்தத்தில், சட்டத்தையும், ஜனநாயக அமைப்புகளையும் மதிக்காமல், உணர்ச்சிவசப்பட்டு ஆக்சன் அவதாரத்தைக் கையில் எடுப்பதே ஆகச்சிறந்த வீரம் என்று நம்பி ஒரு தூள் கிளப்பும் முரட்டுச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

12 Jun 2026

மண், மனிதர்கள், மற்றும் கிராமியம் - ஒரு பாரதிராஜாவியல்!

மண், மனிதர்கள், மற்றும் கிராமியம் - ஒரு பாரதிராஜாவியல்!

மனிதர்கள் தங்களைச் சுற்றி எப்போதும் ஒரு சுவரை எழுப்பிக் கொள்கிறார்கள். அந்தச் சுவருக்கு யதார்த்தம் என்று பெயர். ஆனால் தேனி அல்லிநகரத்திலிருந்து கிளம்பிய ஒரு மனிதர், அந்தச் சுவர்களில் ஜன்னல்களை அல்ல, வாசல்களையே செதுக்கத் தொடங்கினார். அவர்தான் பாரதிராஜா.

திரையரங்கின் இருட்டில், தன் குரலால் என் இனிய தமிழ் மக்களே... என்று அவர் அழைக்கும்போது, அது வெறும் விளிப்புச்சொல் அல்ல; தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் ஆன்மாவை உலுக்கும் இருத்தலியல் பள்ளியெழுச்சி.

வாழ்வின் ஒரு பகுதியைத் துறக்காமல், இன்னொரு பகுதியைக் கண்டடைய முடியாது. பாரதிராஜா சுகாதார ஆய்வாளர் என்ற பணியைத் துறந்து திரை ஆய்வாளர் ஆனவர். சென்னைக்கு வந்து பெட்ரோல் பங்க்கில் வேலை செய்தபோதும், நாடகங்களுக்காக அலைந்த போதும் அவர் தன் படைப்பு மனதிற்கான தீயைத் தேடிக்கொண்டிருந்தார்.

புட்டண்ண கனகல், பி.புல்லையா போன்றவர்களிடம் உதவியாளராக இருந்த காலம், ஒரு சிற்பி இன்னொரு சிற்பியிடம் உளி வாங்கும் காலம்.

பாரதிராஜாவுக்கு முன், தமிழ் சினிமாவுக்குக் கிராமம் என்பது ஸ்டூடியோவுக்குள் நடப்பட்ட இரண்டு செயற்கை வாழை மரங்களும், ஒரு வைக்கோல் போரும் மட்டும்தான். அவர்தான் கேமராவைத் தூக்கிக்கொண்டு அசல் சாணி நாற்றமும், ஈரமண்ணின் வாசனையும் வீசும் மனிதர்களிடம் சென்றார்.

முதலிரண்டு படங்களுக்குப் பிறகு, இவருக்குக் கிராமத்து மண்ணைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்று உலகம் தீர்ப்பெழுதியது. உலகம் எப்போதும் அப்படித்தான்; உங்களை ஒரு பெட்டிக்குள் அடைக்கத் துடிக்கும்.

பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?

சிகப்பு ரோஜாக்கள் என்ற கத்தியை எடுத்து அந்தப் பெட்டியைப் பிளந்தார். கமல்ஹாசனை ஒரு சைக்கோ கொலைகாரனாக மாற்றினார்.

வாழ்வு என்பது ஒரே பாதையில் செல்வதல்ல, பாதை இல்லாத இடத்தில் ஓடுவது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

காதல் ஓவியம் தோற்றபோது அவர் தமிழ் மக்களைச் சபித்தார் என்று வரலாறு சொல்கிறது. ஒரு கலைஞனின் சாபம் என்பது கோபமல்ல, அது அவனது அதீத அன்பின் ஏமாற்றம். நான் உங்களுக்கு அமிர்தத்தைத் தருகிறேன், நீங்கள் ஏன் இன்னும் சாக்கடையைக் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ற தார்மீகக் கோபம் அது.

அவர் ரஜினியையும் விஜயகாந்தையும் வைத்து கொடி பறக்குது, தமிழ்ச்செல்வன் எடுத்தபோது விமர்சனங்கள் வந்தன. உண்மைதான், ஒரு சிங்கம் சில சமயம் புல் தின்ன முயலலாம், ஆனால் அதற்காக அது பசுவாகிவிட முடியாது. அந்திமந்தாரை மீண்டும் அவரது கலைமனதை நிரூபித்தது.

மகன் மனோஜை வைத்து தாஜ்மஹால் எடுத்த பிறகு, பாரதிராஜா தன் பழைய பலங்களை உடைக்கத் துணிந்தார். கண்களால் கைது செய், பொம்மலாட்டம் என்று அவர் புதிய திசைகளில் அலைந்தார். கலை என்பது தேங்கி நிற்கும் குட்டை அல்ல, அது ஓடும் நதி என்பதை அவர் அறிந்திருந்தார்.

மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் அவர் கேமராவுக்கு முன்னால் வந்தபோது, தமிழ் சினிமா ஒரு புதிய நடிகனைக் கண்டடைந்தது.

இயக்குநராக இருந்து நடிகனாக மாறுவது என்பது, படைத்தவன் தன் படைப்புக்குள்ளேயே ஒரு சாதாரண மனிதனாக இறங்கி நடப்பதைப் போன்றது. அது ஒரு தத்துவார்த்தத் தேடல்.

ஒரு மரத்தின் வெற்றி என்பது அது தரும் பழங்களில் இல்லை, அது உருவாக்கும் காட்டில் இருக்கிறது. கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, பொன்வண்ணன் என ஒரு பெரும் இயக்குநர் படையையே அவர் உருவாக்கினார்.

தன் பெயரைத் தியாகம் செய்து, பிற கதையாசிரியர்களின் கதைகளையும் வாங்கிப் அவர் படமாக்கினார். இது அவரது அகந்தையின்மையைக் காட்டுகிறது.

சினிமா என்பது கூட்டுப் பிரார்த்தனை, அதில் தன் முகம் மட்டுமே தெரிய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. சுதாகர், பாண்டியன் என வீதியில் நடந்த மனிதர்களையெல்லாம் பிடித்து வந்து நட்சத்திரங்கள் ஆக்கினார்.

பாரதிராஜாவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் தத்துவம் எளிதானது. உன் அடையாளத்தை நீயே தீர்மானி. உலகம் உன்னைச் சுருக்க நினைத்தால், நீ விரிவடைந்துகொண்டே இரு என்பதுதான் அது.

அவர் வெறும் இயக்குநர் இமயம் மட்டும் அல்ல; இமய மலைகள் அசையாது, ஆனால் பாரதிராஜா என்ற இமயம் தன் ஆயுட்காலம் முழுவதும் நடந்து கொண்டே இருந்தது, தன் காமிராவோடும், தீராத தாகத்தோடும்!

*****