27 Apr 2026

குண்டர்களும் நரகக் குழிகளும் – ஒரு ட்ரம்ப் புராணம்!

குண்டர்களும் நரகக் குழிகளும் – ஒரு ட்ரம்ப் புராணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு விசித்திரமான மனிதர். அவரது கைபேசியும், அதில் அவர் பகிரும் பதிவுகளும் வானிலை அறிக்கையை விடவும் கணிக்க முடியாதவை.

அமெரிக்காவில் மைக்கேல் சேவேஜ் என்றொரு வானொலி வர்ணனையாளர் இருக்கிறார். இவர் சத்தமாகப் பேசுவதையே தொழிலாகக் கொண்டவர்.

அவர் இந்தியா மற்றும் சீனாவைப் பற்றி சில அழகிய கருத்துகளை உதிர்த்திருந்தார். அதை ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார்.

சேவேஜின் கவிதை வரிகள் சில,

இந்தியாவும் சீனாவும் வெறும் நாடுகள் அல்ல, அவை நரகக் குழிகள்.

அந்த நரகக் குழிகளிலிருந்து அமெரிக்காவுக்கு வருகிறவர்கள், சரியாக ஒன்பதாவது மாதத்தில் அங்கு இறங்கி, குழந்தையைப் பெற்று, அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையை பார்சல் வாங்குகிறார்கள்.

பிறகு, மொத்தக் குடும்பத்தையும் நரகக் குழிகளிலிருந்து அமெரிக்காவுக்கு இழுத்துக் கொள்கிறார்கள்.

சேவேஜின் பார்வையில், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் வெறும் மென்பொருள் வல்லுநர்கள் அல்ல, அவர்கள் கைகளில் லேப்டாப் வைத்திருக்கும் குண்டர்கள்.

அவர்கள் ஒரு மாஃபியா போலச் செயல்பட்டு, அமெரிக்க வளங்களைச் சுரண்டி, அமெரிக்கர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்துகிறார்களாம்.

ஒரு லேப்டாப்பை வைத்துக் கொண்டு எப்படி ஒரு நாட்டைச் சுரண்ட முடியும் என்ற தொழில்நுட்ப ரகசியத்தை அவர் சொல்லவில்லை.

வழக்கம்போல, இந்தப் பதிவைப் பகிர்ந்துவிட்டு உலகம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய பிறகு, ட்ரம்ப் மெதுவாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

இந்தியா ஒரு சிறந்த நாடு, எனது நல்ல நண்பராகிய மோடியால் ஆளப்படும் நாடு என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழியாக ஒரு ஐஸ் வைத்தார்.

அரசியலில் ஒருவரை நரகக் குழி என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடமே சிறந்த நண்பர் என்று அழைப்பதில் இருக்கும் கலை நயம் வியக்கத்தக்கது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரணதீர் ஜெய்ஸ்வாலிடம் கேட்டபோது, அவர் மிகவும் நிதானமாகப் பதிலளித்தார்.

அந்தத் தகவல்கள் தவறானவை, தரமற்ற சிந்தனை என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.

அதாவது, யாரோ எதையோ உளறுகிறார்கள், அதற்கு நாங்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? என்கிற ரீதியில் அந்தப் பதில் இருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கக் குடியுரிமைச் சட்டத்திற்கும், ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்திற்கும் இடையில் இந்தியா ஒரு கால்பந்தாக மாறி இருக்கிறது.

நரகக் குழியில் இருந்து கொண்டு லேப்டாப் தட்டிக் கொண்டிருக்கும் இந்தியக் குண்டர்களுக்கு இது ஒன்றும் புதிய செய்தியல்ல.

டிரம்ப் இருக்கும் வரை இது போன்ற செய்திகள் தொடர்கதையாக அல்லது கதைகளாகத்தான் இருக்கும்.

நாம் கதை அல்லது கதைகளைக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். டிரம்ப் ஒரு நல்ல கதை சொல்லி.

ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்… என்று தொடங்கும் கதைகளில், இவை ஒரு ராஜாவே சொல்லும் கதைகள்.

*****

புத்தகங்களை ஏன் கொண்டாட வேண்டும்?

புத்தகங்களை ஏன் கொண்டாட வேண்டும்?

புத்தகம் என்பது புதிய உலகங்களுக்கான நுழைவாயில் என்கிறார்கள். அதாவது, நிஜ உலகில் போக்குவரத்து நெரிசலிலும், வரி வரிசையிலும் சிக்கிக்கொள்ளாமல், காசே செலவில்லாமல் வேறொரு இடத்திற்கு எஸ்கேப் ஆக உதவும் ஒரு சட்டவிரோதமில்லாத வழி இது.

ஒரு புத்தகம் என்பது வெறும் காகிதக் கட்டு அல்ல, அது மனிதக் கற்பனை செய்துகொண்ட உச்சகட்ட அறிவின் தொகுப்பு.

யுனெஸ்கோகாரர்கள் ஏப்ரல் 23 ஆம் தேதியை உலகப் புத்தக தினம் என்று அறிவித்திருக்கிறார்கள். அன்று நமக்குத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாள் ஆகி விட்டது.

ஏன் அந்தத் தேதி? 1616 இல் ஷேக்ஸ்பியர், செர்வாண்டஸ் போன்ற ஜாம்பவான்கள் இறந்த அதே நாளில்தான் பல எழுத்தாளர்கள் பிறந்தும் இருக்கிறார்கள். இயற்கையின் விசித்திரமான பேலன்சிங் இது.

ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் ஒரு படி மேலே போய், இந்த ஏப்ரல் 23 இல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ரோஜா மலரைப் பரிமாறிக்கொண்டார்களாம். ரோஜாவைப் பரிமாறிக்கொண்டால் மட்டும் போதாது, அந்தப் புத்தகத்தில் இருக்கும் வரிகளையும் கொஞ்சம் உள்ளே ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் சூட்சுமம்.

உன் நண்பனைச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன், என்றார் சாக்ரடீஸ்.

நீ படிக்கும் புத்தகத்தைச் சொல், நீ யார் என்று சொல்கிறேன், என்றார் ஜேம்ஸ் ஆலன்.

இன்றைய நிலவரப்படி பலரிடம் இதைக் கேட்டால், அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் திரையைக் காட்டி, நான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கிறேன் அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் பார்க்கிறேன், என்றுதான் சொல்வார்கள்.

பாவம் நூலகங்கள். ஆயிரக்கணக்கான அறிஞர்களைத் தன்னுள் ஒளித்து வைத்துக்கொண்டு, தெருவோரம் கவனிக்கப்படாத ஓர் அருங்காட்சியகத்தைப் போலக் காத்திருக்கின்றன.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் நூலகம் கட்டுவேன் என்றாராம் காந்தி. இன்று ஒரு கோடி கிடைத்தால், அதை வைத்துக்கொண்டு எந்த ஓடிடி சந்தாவை வாங்கலாம் என்று யோசிக்கும் தலைமுறையில் நாம் இருக்கிறோம்.

புத்தகங்கள் நெருக்கடியான காலங்களில் ஆறுதல் தருகின்றன என்பது உண்மைதான். ஆனால், ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு ஏற்படும் அந்த வெறுமை இருக்கிறதே, அது ஒரு காதலியின் பிரிவை விடக் கொடியது.

வாசிப்பானது உங்கள் சொற்களஞ்சியத்தை இது விரிவுபடுத்தும். அதன் பிறகு நீங்கள் சாதாரண மனிதர்களிடம் பேசும்போது, அவர்களுக்குப் புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தி உங்களை ஒரு அறிவாளி என்று நீங்களே நம்ப வைத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்குப் பிறந்தநாள் பரிசாகப் பொம்மைகளைத் தந்து அவர்களை மொக்கையாக்காதீர்கள். புத்தகங்களைத் தாருங்கள். பாரதிதாசன் சொன்னது போல, நாளை நாட்டை ஆளப்போகிறவர்கள் அவர்கள்தான். அவர்கள் சரியாக ஆள வேண்டும் என்றால், முதலில் அவர்கள் கையில் ஒரு புத்தகம் இருக்க வேண்டும், ரிமோட் கண்ட்ரோல் அல்ல.

ஓடும் நீர்தான் தூய்மையாக இருக்கும், எரியும் விளக்குதான் அதாகப்பட்டது மெழுகுவர்த்தி, அகல் வகையறாக்கள்தான் இன்னொன்றை ஏற்றி வைக்கும். மின்சார பல்புகளை இதனுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அதேபோல், வாசிக்கும் மூளைதான் துருப்பிடிக்காமல் இருக்கும். எனவே, புத்தகங்களை வாங்குங்கள், 10 சதவீத தள்ளுபடி வேறு இருக்கிறது.  

படித்துவிட்டு அப்படியே அலமாரியில் அடுக்கி வைக்காமல், காகித வாசத்தை சுவாசித்து, அதில் இருக்கும் கிறுக்குத்தனங்களை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் என்னால் வாசிக்க முடியாது என்பவர்கள், குறைந்தபட்சம் ஒரு புத்தகத்தின் அட்டையையாவது தொட்டுப் பார்க்கவும்!

*****

26 Apr 2026

புகை பிடிக்கும் பிசாசும், புதிரான நேர்காணலும்!

புகை பிடிக்கும் பிசாசும், புதிரான நேர்காணலும்!

அந்த அறையின் மூலைகளில் நிழல்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. நடுவே, ஒரு மேஜையின் பின்னால் அமர்ந்திருந்தார் அந்த விசித்திரமான படைப்பாளி. அவர் பெயர் ஈஸ்வர் வித்யாதர்.

அவர் கண்களை மூடினால், அவர் முன்னால் ஆயிரக்கணக்கான கதைகள் வரிசைகட்டி நிற்கும். அவற்றில் சில கதைகளில் ரத்தம் சொட்டும், சில கதைகளில் கண்ணீர் கடலாக இருக்கும்.

மாஸ்டர், என்றான் ஓர் இளம் மாயாவதி. கதைகளை எப்படித் தேடுகிறீர்கள்? என்றான்.

ஈஸ்வர் வித்யாதர் மெல்லக் கண்திறந்து சிரித்தார். நானா தேடுகிறேன்? அவையல்லவா என்னைத் தேடுகின்றன. ஒரு கதை என்னிடம் வரும்போது, அதில் சில மந்திரக் காட்சிகள் மின்னும். அந்தக் காட்சிகள் என் மண்டைக்குள் புகுந்து, என்னை எடு என்னை எடு என்று கத்தும். அப்படித் தோன்றினால் மட்டும்தான் நான் உள்ளே இறங்குவேன்.

அப்புறம் எப்படி நடிகரானீர்கள் என்றான் அந்த இளம் மாயாவதி.

சுந்தர் ரங்கநாதன் எனும் ஒரு மந்திரவாதி வந்தான். பழுப்புக் காயிதம் எனும் ஒரு ரத்தச் சிவப்புக் கல்லை நீட்டினான். கோபி விஸ்வநாத் என்பவன் வந்து தெய்வம் மிருகமாகலாம் என்று ஒரு புரியாத புதிரைச் சொன்னான். நானும் அப்படியே அந்த மாய உருவங்களாக மாறினேன். இப்படித்தான் இயக்குநராக இருந்த நான் நடிகரானேன். ஈஸ்வரி முகத்தில் ஒரு பெருமிதம் மின்னலாடியது.

இனிமேல் நீங்கள் ஹீரோதானா? என்று கேட்டான் மாயாவதி.

நானே என் அடுத்த நிமிடத்தை அறியாத பரதேசி. காலத்தின் நதியில் மிதக்கும் சருகு நான். காற்று எங்கே தள்ளுகிறதோ, அங்கே என் படகு போகும். எதையும் திட்டமிடுவதில்லை. திட்டமிட்டால் அது என் உலகமே இல்லை, என்றார் ஈஸ்வர். அவர் குரல் ஒரு பழைய கிராமபோன் தட்டு போலத் தேய்ந்து ஒலித்தது.

திடீரென்று, அறையின் வெப்பநிலை குறைந்தது. ஒரு கருப்பு மேகம் ஈஸ்வரைச் சுற்றிச் சூழ்ந்தது. அது ஒரு புகை மேகம். சமீபத்தில் ஒரு மாயக் கண்ணாடி வழியாக அவர் புகை பிடிக்கும் காட்சி உலகம் முழுக்கப் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஈஸ்வர் தன் கைகளை விரித்தார். அவர் முகத்தில் ஒரு தீராத வலி தெரிந்தது.

இங்கே பாருங்கள், என்றார் அதிகாரபூர்வமான குரலில். நான் ஒரு சாபத்தைப் பெற்றுவிட்டேன். இந்தப் புகை என்னும் பிசாசு. இது உங்கள் நுரையீரலை ஒரு பழைய கரிக்கட்டையாக மாற்றிவிடும். நூறு சதவீதம் சொல்கிறேன், இந்த மாய வலைக்குள் சிக்காதீர்கள். நான் பலமுறை இந்தப் பிசாசிடமிருந்து தப்பிக்க முயன்றேன். ஓடினேன். ஒளிந்தேன். ஆனால் அது விடாமல் என்னைத் துரத்துகிறது.

அவர் குரல் மெலிந்து, ஒரு ரகசியத்தைச் சொல்வது போல மாறியது. எனக்கு மட்டும் ஒரு மந்திரச் சாவி கிடைத்தால், ஒரே விநாடியில் இந்தப் புகை பூதத்தை என் வாழ்க்கையிலிருந்து விரட்டிவிடுவேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். வேண்டுமானால் வானத்திலிருந்து குதியுங்கள், அல்லது நெருப்பில் நடந்து செல்லுங்கள். ஆனால், அந்தச் சுருட்டுப் பிசாசை மட்டும் தொடாதீர்கள்.

அவர் சொல்லி முடித்ததும், ஜன்னல் வழியாக ஒரு பலமான காற்று வீசியது. அந்தப் புகை மேகம் மெல்லக் கலைந்தது. ஆனால், அந்தப் படைப்பாளியின் கண்களில் மட்டும் ஒரு ஏக்கம் மிஞ்சியிருந்தது. எப்போதாவது ஒருநாள், அந்தப் புகை இல்லாத ஒரு விடியலில் தான் விழிப்போம் என்ற நம்பிக்கை அது.

இளம் மாயாவதிக்கு ஒரு விசித்திரமான மாய மனிதரைப் பேட்டிக் கண்டது போலிருந்தது.

*****

ஏப்ரல் 23 – ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்!

ஏப்ரல் 23 – ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்!

ஏப்ரல் 23, 2026 இல் நடைபெற்ற இந்தச் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் 74 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

அதாவது, தமிழ்நாட்டில் இருக்கும் பத்து பேரில் எட்டு பேருக்கும் மேல் தங்கள் வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள்.

அப்படியானால், அந்த மீதி ஒன்றரை சொச்சம் பேரில் ஒருத்தர் சீரியல் கிளைமாக்ஸை மிஸ் பண்ண விரும்பாதவர், இன்னொருவர் அல்லது அந்த அரை சொச்சம் பேர் யாரென்றால், யார் வந்தால் என்ன? என்று தத்துவம் பேசுபவர்.

இந்தச் சாதனையைச் சாத்தியப்படுத்திய தேர்தல் ஆணையத்திற்கு முதலில் ஒரு ஓ போடலாம். அவர்கள் செய்த மேஜிக் இதுதான். எஸ்ஐஆர் (SIR), ஏதோ பள்ளிக்கூட வாத்தியார் பெயர் போல இருந்தாலும், இதன் புண்ணியத்தில் சுமார் ஒரு கோடிப் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். இதில் இறந்தவர்கள், ஊரை விட்டு ஓடியவர்கள், இரு ஊர்களில் அட்ரஸ் வைத்திருந்த டபுள் ஆக்டிங் பார்ட்டிகள் என அனைவரும் அடக்கம்.

பட்டியல் இளைத்ததால், வாக்குப் பதிவு சதவீதம் தானாகவே தடித்திருக்கிறது. உடல் எடையைக் குறைக்க முடியாமல் தவிப்பவர்கள், தராசின் எடையைக் குறைத்துக்கொள்ளும் ஒரு நுணுக்கமான உத்தி இது.

அடுத்துத் தேர்தல் கள நிலவரம் என்னவென்று பார்க்க வேண்டுமே.

இந்த முறை ஆட்டம் சீரியஸானது. திமுக, அதிமுக எனும் நித்தியக் கன்னிகளோடு, தம்பிகளின் அண்ணன் சீமானும், தளபதி விஜய்யும் களத்தில் குதித்திருக்கிறார்கள்.

மொத்தம் 4,023 வேட்பாளர்கள்!

இதில் எத்தனை பேருக்கு டெபாசிட் திரும்பக் கிடைக்கும் என்பது, எத்தனை பேருக்குத் தமிழ் சரியாகப் பேசத் தெரியும்? என்ற கேள்விக்கு நிகரானது.

இந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க, காலை 7 மணிக்கே மக்கள் குட் மார்னிங் சொல்லிவிட்டு வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டார்கள்.

தேர்தல் ஆணையம் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பர்சன்டேஜ் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

காலை 9 மணி அளவிலேயே காபி குடித்து விட்டு வாக்களிக்க வந்த வாக்காளர்களால் 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன.  

9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை வெயிலைச் சபித்துக் கொண்டே வாக்காளர்கள் வந்த போதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன.

அதன் பிறகு மாலை 6 மணி வரை ஆர அமர வாக்காளர்கள் வந்த போதும் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன.

தமிழகத்தின் வெயிலுக்கும், ஜனநாயகத்தின் மீதான காதலுக்கும் நடக்கும் போராட்டத்தில், எப்போதும் ஜனநாயகமே ஜெயிக்கிறது அல்லது அந்த விரல் மை தரும் ஒரு கெத்து ஜெயிக்கிறது என்பது நிரூபணமாகி விட்டது.

தலைவர்கள் அனைவரும் முறைப்படி கடமையை ஆற்றினார்கள்.

முதல்வர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் வாக்களித்தார்.

எடப்பாடி பழனிசாமி எடப்பாடியிலேயே ஓட்டுப் போட்டார்.

விஜய் நீலாங்கரையில் வாக்களித்தார். அவர் நடையிலேயே ஒரு அரசியல் இருந்தது என்கிறார்கள் ரசிகர்கள்.  சீமானும் அங்கேயேதான்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், விஜய் போட்டியிடும் பெரம்பூரில் 90 சதவீதம், திருச்சி கிழக்கில் 82 சதவீதம், ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் 86 சதவீதம், எடப்பாடியார் தொகுதியில் 92 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

அதிகபட்சமாக கரூர் மக்கள் 92.62 சதவீதம் ஓட்டுப் போட்டு நாங்கதான் டாப் என நிரூபித்திருக்கிறார்கள்.

சென்னை 16 தொகுதிகளில் 84 சதவீதம் பதிவு.

மொத்தத்தில் 2021 தேர்தலை விட 12 சதவீதம் அதிகம்.

வாக்குப் பெட்டிகள் இப்போது 62 மையங்களில் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக இருக்கின்றன. மே 4 ஆம் தேதிதான் அந்த ரகசியப் பெட்டிகள் வாய் திறக்கும். அதுவரை அரசியல் கட்சியினர் நகம் கடித்துக் கொண்டிருப்பார்கள்.

மக்களாகிய நாம்?

நாம் எப்போதோ அடுத்த சீரியலுக்கும், அடுத்த ஐபிஎல் மேட்சுக்கும் நகர்ந்துவிட்டோம்.

மே 4 – அந்த ஒரு நாள் கொஞ்சம் சீரியலுக்கும் ஐபிஎல்லுக்கும் விடை கொடுப்போம். பிறகு மீண்டும் சீரியல், ஐபிஎல் முருங்கை மரத்தில் ஏறி விடுவோம்.

*****

வெள்ளை நிறமும், விவகாரமான மன்னிப்பும்!

வெள்ளை நிறமும், விவகாரமான மன்னிப்பும்!

பாலிவுட்டில் எப்போதுமே ஒரு மேஜிக் உண்டு. அங்கே சில நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திவிடுவதில்லை; அவ்வப்போது வாயைத் திறந்து வம்பையும் விலை கொடுத்து வாங்குவார்கள்.

இந்த வரிசையில் இப்போது லேட்டஸ்ட் வரவு, சீனியர் நடிகர் அன்னு கபூர்.

விஷயம் இதுதான். தமன்னா ஸ்திரீ 2 படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தார். அந்தப் பாட்டைப் பார்த்த அன்னு கபூருக்குப் பாராட்டு மழை பொழியத் தோன்றியிருக்கிறது. ஆனால், அவர் பயன்படுத்திய ரெசிபிதான் கொஞ்சம் தப்பாகிவிட்டது.

தமன்னாவைப் பால் போன்ற மேனி கொண்டவர் என்று இந்தியில் சொன்னாராம். அப்படி அவர் வர்ணிக்க, சோஷியல் மீடியா பொங்கி எழுந்துவிட்டது.

என்ன சார், இது உருவக்கேலி மாதிரி இருக்கே? என்று நெட்டிசன்கள் கேட்க, அன்னு கபூர் உடனே ஒரு விளக்கத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.

அந்த விளக்கம், சர்ச்சையைத் தீர்ப்பதற்குப் பதில், எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல் இருக்கிறது.

நான் தமன்னாவின் ஹார்ட் வொர்க்கைப் பார்த்துதான் அப்படிச் சொன்னேன், ஒருத்தர் அழகைப் பாராட்டுறது தப்பா? என்று கேட்கிறார் அன்னு கபூர்.

போதாக்குறைக்கு, நான் இதையே ஆங்கிலத்தில் மில்கி பாடி என்று சொல்லியிருந்தால் யாரும் கண்டுக்க மாட்டார்கள், ஹிந்தியில் சொன்னதுதான் குத்தமா? என்று ஒரு லாஜிக் வேறு.

ஆங்கிலத்தில் சொன்னால் மட்டும் அது எப்படி கவிதையாகும் என்பது அவருக்கே வெளிச்சம்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, தமன்னாவுக்கு வருத்தம் இருந்தால், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயார். எனக்கு 71 வயதாகிறது, என்று சென்டிமென்ட் கார்டை இறக்கியிருக்கிறார்.

71 வயதாகிறது என்பதற்கும், ஒரு பெண்ணின் உடல் பாகங்களை வர்ணிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று யாருக்கும் புரியவில்லை.

மன்னிப்பு கேட்க காலில் விழுவது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் அந்த வர்ணனை நாகரிகமா என்பதுதான் இங்கே பில்லியன் டாலர் கேள்வி.

மொழியை விடுங்கள், ஹிந்தியோ? இங்கிலீஷோ? ஒரு பெண்ணின் உடல் நிறத்தையும், அங்கங்களையும் பொதுவெளியில் வைத்து மார்க் போடுவது எந்த ஊர் நாகரிகம் என்று இணையவாசிகள் மல்லுக்கட்டுகிறார்கள்.

கடின உழைப்பைப் பாராட்ட காலில் விழ வேண்டாம் சார், கொஞ்சம் கண்ணியமாகப் பேசினாலே போதும் என்பதுதான் அன்னு கபூரை நோக்கிய பொதுவான கருத்தாக இருக்கிறது.

பாராட்டு என்பது பூங்கொத்து மாதிரி இருக்க வேண்டும். அது ஏன் சிலருக்கு மட்டும் பூமராங் மாதிரி திரும்பி வந்து மூக்கைத் தாக்குகிறது என்பதுதான் புரியாத புதிர்!

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றுஆகா தாகி விடும்.     (குறள், 128)

என்கிறார் வள்ளுவர்.

உண்மைதானே?!

*****

25 Apr 2026

அநீதிக்கு எதிரான நீதி – காலத்தின் தேவை!

அநீதிக்கு எதிரான நீதி – காலத்தின் தேவை!

உலகெங்கும் அநீதியின் முழங்கால் ஒரு கழுத்தை நெரிக்கும் போது, நீதியின் குரல் வீதிகளில் கேட்கிறது. ஆனால் இங்கே? இங்கே அநீதி என்பது ஒரு டெய்லி பேசஞ்சர் போல. தினமும் வந்து போகிறது. யாரும் கவனிப்பதில்லை.

கொரோனா காலத்தில் உலகமே வீட்டுக்குள் அடைந்து கிடந்தபோது, சாத்தான்குளம் காவல் நிலையச் சுவர்களுக்குள் ஒரு மௌனக் கொடூரம் அரங்கேறியது. ஜெயராஜும் பென்னிக்ஸும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அதிகாரம் தன் பற்களைக் காட்டியது.

வழக்கம் போல, காவல்துறை தன் கற்பனைத் திறனைத் தட்டிவிட்டது. அவங்க தரையில் உருண்டாங்க, அதான் காயம் என்றது, மாரடைப்பு வந்துடுச்சு, அதனால்தான் மரணம் வந்துடுச்சு என்றது, ஏறும்போது தவறி விழுந்துட்டாங்க, அதனால்தான் எலும்பு முறிவு என்றது.

இந்தக் கதைகளை எல்லாம் கேட்டால், அந்தப் பகுதியில் புவி ஈர்ப்பு விசை கொஞ்சம் அதிகமாக இருந்ததோ என்று ஒரு சந்தேகம் வரும். இது காவல் மரணமே இல்லை என்று அதிகாரம் தன் முழுத் தொண்டையையும் பயன்படுத்திச் சொன்னது.

இருள் அடர்ந்திருந்த வேளையில், உயர்நீதிமன்றம் தானாகவே உள்ளே நுழைந்தது. அங்கிருந்துதான் சீன் மாறியது. சி.பி.ஐ. விசாரணை, 2000 பக்கக் குற்றப்பத்திரிகை, 100 சாட்சிகள் என மேட்டர் சீரியஸ் ஆனது.

இதில் ஹீரோயினாகத் தெரிந்தது தலைமைக் காவலர் ரேவதி. அதிகாரத்தின் கண்ணுக்கு முன்னால் நின்று, ஆமா, அடிச்சது உண்மைதான் என்று அவர் சொன்ன சாட்சியம், ஒரு திகில் படத்தில் வரும் திருப்புமுனை போன்றது. நீதிபதி முத்துக்குமரனின் தீர்ப்பு, இந்திய நீதித்துறையின் வரலாற்றில் ஒரு டைமண்ட் கட்டி. ஒன்பது காவலர்களுக்கு இரட்டை மரண தண்டனை.

பாதிக்கப்பட்டோருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணத்தால் உயிரைத் திரும்பக் கொண்டுவர முடியாதுதான், ஆனால் அதிகாரம் செய்த தப்புக்கு ஒரு அபராதம் வேண்டாமா?

இது வெறும் லத்தி அடி மட்டுமல்ல. மாஜிஸ்திரேட்டின் அலட்சியம். அதாவது, பார்க்காமலேயே ரிமாண்ட் செய்தது. மருத்துவத்துறையின் பொய்ச் சான்றிதழ். சிறைத்துறையின் கள்ள மௌனம். இப்படி எல்லாரும் சேர்ந்து போட்ட ஒரு பிளான்தான் அந்த இரண்டு மரணங்கள். இது அதிகாரத்தின் அரிவாளில் அறுந்த மனிதத்துவத்தின் ரத்தச் சுவடு.

மரண தண்டனை பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், தென்காசி மணிகண்டன் மீது நடந்த துப்பாக்கிச் சூடு என்ன சொல்கிறது? நாங்க மாற மாட்டோம் என்று காவல்துறை அடம் பிடிப்பது போல இருக்கிறது.

இந்தியாவில் சித்திரவதைக்கு எதிராக இன்னும் ஒரு தனிச் சட்டம் இல்லை என்பது, ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கு பிரேக் போட மறந்துவிட்ட கதையாக இருக்கிறது.

சித்திரவதைக்கு எதிராகக் கடுமையான சட்டம் வேண்டும், அதைவிடக் கடுமையாக அமலாக்கம் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, லத்தியை ஏந்தும் கைகளுக்குப் பின்னால் இருக்கும் மூளைக்குசக் கொஞ்சம் மனிதநேயம் தேவை. அதுவரை, காவல் நிலையங்களின் இருண்ட அறைகள் வெறும் விசாரணை அறைகள் அல்ல, அவை மரணக் கூடங்கள்.

சாத்தான்குளம் தீர்ப்பு ஒரு நம்பிக்கை ஒளி. ஆனால், அந்த ஒளி அணைந்துவிடாமல் இருக்க, சித்திரவதைக்கு எதிரான சட்டம் எனும் பேட்டரி நமக்குத் தேவை. மத்திய அரசு செய்யுமா? அல்லது தமிழக அரசு முந்துமா? பார்ப்போம்.

*****

ஷேக்ஸ்பியரை ஏன் கொண்டாட வேண்டும்?

ஷேக்ஸ்பியரை ஏன் கொண்டாட வேண்டும்?

இங்கிலாந்துக்கு ஒரு ஷேக்ஸ்பியர் என்றால், இந்தியாவுக்கு ஒரு காளிதாசர். ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தின் காளிதாசர் என்றால், காளிதாசர் இந்தியாவின் ஷேக்ஸ்பியர். இப்படிக் குழப்பினால்தான் இருவரின் பெருமைகளும் உங்களுக்குக் கொஞ்சமாவது புரியும். இருவரும் நாடகம் எழுதுவதில் பலே கில்லாடி ஆட்கள்.

காளிதாசரை ஜெர்மனியின் கதே ரசித்த போது நாடக உலகின் சூப்பர் ஸ்டார் ஆனார். அதுவரை நம்மூர் ஆட்கள் அவரை வைத்து குண்டுசட்டியில் குதிரைதான் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஷேக்ஸ்பியரோ நாடகம் எழுதிவிட்டு நாடக உலகின் முடிசூடா மன்னன் என்று ஒரு கற்பனை கிரீடத்தைச் சூட்டிக்கொண்டார்.

மனித மனங்களின் ஆழத்தை அளக்கப்போவதாகச் சொல்லி, நம் எல்லோருடைய அந்தரங்கப் பொறாமைகளையும், பேராசைகளையும் காகிதத்தில் அம்பலப்படுத்தியவர் ஷேக்ஸ்பியர்.

ஷேக்ஸ்பியர் எங்கே படித்தார், என்ன படித்தார் என்பது இன்றும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்தான். அவருடைய அம்மா அவருக்கு தேவதைக் கதைகளைச் சொல்லியிருப்பார் போல. அதனால் தான் பின்னாளில் அவர் எழுதிய நாடகங்களில் பேய்களும், மந்திரவாதிகளும், தேவதைகளும் அடிக்கடி வந்து விசிட் அடித்துப் போகிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் லத்தீன் மொழியை அரைகுறையாகப் படித்தது அவருக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது அதாகப்பட்டது, கதையைத் தழுவுவதற்கு. ஒரு சில விமர்சகர்கள் கதையைத் திருடுவதற்கு என்பார்கள். அதை நாம் கண்டுகொள்ள வேண்டாம். அப்படிப் புளூடார்க் போன்ற பழைய வரலாற்று ஆசிரியர்கள் அவருக்கு வசதியாகப் போய்விட்டார்கள்.

ஷெல்லி தனது கவிதையில் வானம்பாடியைப் பற்றிச் சொல்லும்போது, அது யாராவது காசு கொடுப்பார்கள் என்றோ, யாராவது கைதட்டுவார்கள் என்றோ பாடுவதில்லை என்கிறார்.

ஷேக்ஸ்பியரும் அப்படித்தான். யாரும் வற்புறுத்தாமலேயே 37 நாடகங்களை எழுதித் தள்ளினார். அவருக்குத் தெரிந்ததெல்லாம் மனிதர்களின் மண்டைக்குள் இருக்கும் அன்பு, வெறுப்பு, துக்கம் எனும் ரசாயனக் கலவைகள் மட்டும்தான்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நம்மை ஆண்டபோது அவர்கள் மீது நமக்குக் கோபம் இருந்திருக்கலாம், ஆனால் ஷேக்ஸ்பியர் மீது மட்டும் ஒரு சாப்ட் கார்னர் எப்போதும் உண்டு. விளைவு? அவரது 37 நாடகங்களில் 34 தமிழுக்கு வந்துவிட்டன.

விபுலானந்த அடிகள் ஒரு படி மேலே போய், ஷேக்ஸ்பியர் என்ற பெயரை செகசிற்பியர் என்று மாற்றி ஒரு சுத்திகரிப்புச் சடங்கே செய்துவிட்டார்.

தமிழர்கள் மெக்பத்தை மகபதி என்றும், ரோமியோவை இரம்மியன் என்றும் தமிழ் முறைப்படி பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். ஷேக்ஸ்பியர் மட்டும் இப்போது உயிரோடு வந்து இதைப் பார்த்தால், இது என் நாடகமா இல்லை ஏதோ சங்க காலத்துக் கதையா? என்று லத்தீனிலேயே குழம்பியிருப்பார்.

பென் ஜான்சன் சொன்னது போல, ஷேக்ஸ்பியர் ஒரு காலத்துக்கு மட்டும் உரியவர் அல்ல. மனிதன் எப்போது பொறாமைப்படுவதை நிறுத்துகிறானோ, எப்போது காதலிப்பதை நிறுத்துகிறானோ, அன்றுதான் ஷேக்ஸ்பியர் அவுட் ஆப் டேட் ஆவார். அது நடக்கப்போவதில்லை என்பதால், இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரை நாம் கொண்டாடித்தான் ஆக வேண்டும்.

உலகெங்கும் உள்ள மனிதர்களின் முட்டாள்தனங்களையும், மேன்மைகளையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டிய அந்த மதங்க சூளாமணியை நாமும் கொஞ்சம் வாசித்துப் பார்க்கலாம். புரியவில்லை என்றால் கவலையை விடுங்கள், ஷேக்ஸ்பியருக்கே பல இடங்களில் தான் என்ன எழுதினோம் என்று புரிந்திருக்காது! அவர் அவருடைய பெயரையே நான்கைந்து வெவ்வேறு ஸ்பெல்லிங்கில் எழுதக் கூடியவராம்!

*****