29 Jun 2025

மனம் காண்பதை உலகம் காண நாளாகும்!

மனம் காண்பதை உலகம் காண நாளாகும்!

இவ்வளவு கஷ்டம் என்று நினைத்தால்

தம்புடி கூட நகர்ந்திருக்காது

இதெல்லாம் ஒரு கஷ்டமா என்று நினைக்க

வெகுதூரம் நகர்வது அறியாப் பிழையென நிகழ்ந்தது

என்ன காரணமென்றெல்லாம் தெரியாது

காரணம் கண்டுபிடிக்கவும் தோன்றாது போனது

முடியுமா முடியாதா என்பதா முக்கியம்

ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதே முக்கியமானது

செய்ய வேண்டும் என்று தோன்றியது

எத்தனை முறை தோற்றாலும்

அதையே செய்ய வேண்டும் என்று தோன்றியது

அதையே செய்ய செய்ய

உலகம் இன்று மேடையில் தாங்கிக் கொண்டிருக்கிறது

கண்ணுக்குத் தெரியாத காட்சிகளை

உங்கள் மனதுக்குப் பார்க்கத் தெரிந்தால்

சத்தியமாக நீங்கள்தான் நீங்கள்தான்

உங்களால் எதுவும் முடியும்

இப்போதுதான் முடிய வேண்டும் என்பதன்று

எப்போது வேண்டுமானாலும்

முடியும் என்பது முடியும்

எப்போதும் உங்கள் மனதில் தெரியும் காட்சிகளை

உலகம் கண்களால் காண நாட்களாகும்

*****

28 Jun 2025

முடிவு தொடக்கத்தில் இருக்கிறது!

முடிவு தொடக்கத்தில் இருக்கிறது!

எதையெதையோ பார்க்கிறாய்

எதையெதையோ பேசுகிறாய்

எதையெதையோ எழுதுகிறாய்

உன்னைச் சுற்றி ஆயிரம் நடக்கின்றன

உனக்குள்ளே ஆயிரம் நடக்கின்றன

உன்னைப் பற்றி உன்னைச் சுற்றி

நினைப்பது அல்லாது

யாருக்காகவோ பார்க்கிறாய்

யாருக்காகவோ பேசுகிறாய்

யாருக்காகவோ எழுதுகிறாய்

யாருக்காகவோ வாழ்கிறாய்

உனக்கான வாழ்க்கை

அனாதியாய்க் கிடக்கிறது

இயலாமையில் தவிக்கும் போது

ஒரு வெற்றி தேவைப்படுகிறது

எழும்புவதற்கான உற்சாகம் வேண்டியிருக்கிறது

மனதைத் தயார்படுத்த

மனதுக்காகக் காத்திருப்பது எத்தனை முறை

மனம் துவக்க விடாது

ஆனாலும் ஆரம்பித்துவிட வேண்டும்

அதுவே தயார்படுத்தும் முறை

கொஞ்சம் நகர்ந்து விட்டால்

வண்டி கிளம்பி விடும்

வண்டியை சில அடிகள் தள்ளினால்

வண்டி பல கோடி அடிகள்

உன்னைத் தள்ளிக் கொண்டு செல்லும்

ஓடுவது என்று முடிவெடுத்துவிட்டால்

ஓடிக் கொண்டிருக்க வேண்டும்

ஓட ஓட புதிது புதிதாகத் தோன்றும்

ஓடாமல் அமர்ந்து யோசிப்பதால்

ஒடுவதில் எதையும் கண்டுபிடிக்க முடியாது

ஓடிய பின் அமர்ந்து யோசிப்பவர்கள்

வித்தியாசமாக ஓடுகிறார்கள்

எல்லாம் செய்ய செய்ய கண்டுபிடிப்பதே

கண்டுபிடித்து கண்டுபிடித்து செய்வதே

நிகழ நிகழ அறிய வருவதே

அறிய அறிய நிகழ்வதே

*****

27 Jun 2025

உள்நாட்டில் வெளிநாட்டு இந்தியர்கள் எப்படி உருவாகிறார்கள்?

உள்நாட்டில் வெளிநாட்டு இந்தியர்கள் எப்படி உருவாகிறார்கள்?

சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது? நமது கல்வி முறை இங்கிலாந்திலிருந்து வந்தது. நாம் விரும்பிப் பார்த்துக் கொள்ளும் மருத்துவமும் ஆங்கில மருத்துவம்.

நமக்கான பென்சில்கள், பொம்மைகள் சீனாவிலிருந்து வருகின்றன.

சமைப்பதற்கும், இயங்குவதற்கும் தேவையான எரிவாயுவும், எரிபொருளும் அரபு நாடுகளிலிருந்து வருகின்றன.

பீட்ஸாவின் தாயகம் இத்தாலி. நூடுல்ஸின் தாயகம் சீனா. அமெரிக்காவில் பிரபலமான பர்க்கரின் தாயகம் ஜெர்மனி. பெப்சியும் கோக்கும் அமெரிக்காவில் பிறப்பெடுத்த இந்தியர்களின் ஆஸ்தான பானங்கள். நாம் விரும்பி உண்ணும் உணவின் நிலை இப்படி இருக்கிறது.

மகிழ்வாக நாம் பயணிக்கும் ஊர்திகளான ஹூண்டாய், டொயொட்டா, வோல்க்ஸ்வேகன், போர்டு போன்றவை கொரியா, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சார்ந்தன.

எல்ஜி மின்சாதனப் பொருட்களும் சாம்சங் மின்சாதனப் பொருட்களும் கொரியாவைச் சார்ந்தவை. வேர்ல்பூல் மின்சாதனப் பொருட்கள் அமெரிக்காவைச் சார்ந்தவை.

கூகுள், வாட்ஸ்ஆப், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் அமெரிக்க உபயம்.

வானில் பயணிக்கும் போயிங் விமானம் அமெரிக்க தயவு.

அவ்வளவு ஏன் இராணுவம் பயன்படுத்தும் ரபேல் விமானம் பிரான்ஸ் தயவு.

கையில் இருக்கும் கணினியாக இருந்தாலும், மேசையில் இருக்கும் கணினியாக இருந்தாலும் லெனோவா சீனாவைச் சார்ந்தது என்றால் ஹெச்பி, டெல், ஆப்பிள் போன்றவை அமெரிக்காவைச் சார்ந்தவை.

ஆப்பிள் அலைபேசி அமெரிக்க நாட்டுக் கொடை என்றால் சாம்சங் கொரிய நாட்டுக் கொடை. விவோவும், ஆப்போவும் சீனாவின் கொடை.

சரிதான் போ என்று திரையரங்கில் உட்கார்ந்தால், பார்க்கின்ற படங்கள் எல்லாம் கொரியன் படங்களைச் சுட்ட தமிழ்ப் படங்களாகவோ, ஹாலிவுட்டின் வெட்டி ஒட்டிய (காப்பி – பேஸ்ட்) படங்களாகவோ இருக்கின்றன.

நாம் இருக்கும் நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. இங்கு இருப்பதெல்லாம் வெளிநாட்டுப் போருட்களாய் இருக்கின்றன.

என்ன செய்வது?

இவ்வளவு வெளிநாட்டு சமாச்சாரங்களோடுதான் இந்தியராய் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இதனால்தானோ என்னவோ பலரும்வெளிநாட்டு இந்தியராய் மாற விரும்புகிறார்களோ?!

நாம் மட்டும்தான் என்ன? நாம் உள்நாட்டில் வாழும் வெளிநாட்டு இந்தியர்கள்!

*****

26 Jun 2025

மாபெரும் பாராட்டு பெற்ற கவிதை!

மாபெரும் பாராட்டு பெற்ற கவிதை!

எத்தனையோ கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதைக்குக் கிடைத்த பாராட்டும், கைத்தட்டல்களும் என்னை ஆச்சரியப்படுத்தின. அது கல்யாணம் தொடர்பான ஒரு கவிதை. அந்தக் கவிதையைக் கடைசியில் சொல்கிறேன்.

இப்போது அதை படித்துப் பார்க்கும் போது அது ஒரு கவிதையா என்று எனக்குத் தோன்றுகிறது. நண்பர்களோ அதைப் படித்துப் பார்த்து விட்டு, இப்போதும் அது ஆகச் சிறந்த கவிதை என்கிறார்கள். இதனால்தான் வாழ்க்கை என்பது அபத்தமான முரண்பாடு என்ற முடிவுக்குப் பல நேரங்களில் நான் வந்துவிடுகிறேன்.

கொஞ்சம் கால்த்தில் பின்னோக்கிப் போகும் போது, அதாவது, கல்யாணம் நடந்த போது மனைவி எனக்குப் பயந்து இருப்பாள் என்கிற மிதப்பு இருந்தது. ஆண் என்கிற ஆதிக்க உணர்வும் இருந்தது. நான் இவளை வைத்து எப்படிக் குடும்பத்தைக் கொண்டு போகிறேன் பார் என்கிற தெனாவெட்டு இருந்ததும் உண்மை.

காலம் கடக்க கடக்கத்தான் மனம் கொள்ளும் நம்பிக்கைகள், மனம் ஏற்படுத்திக் கொண்ட திமிர்த்தனங்கள், மனதில் உருவாகியிருந்த கருத்தாக்கங்கள் எவ்வளவு தவறு என்பது புரியத் தொடங்கியது.

மனம் நினைப்பது போலெல்லாம் வாழ்க்கையில் நடக்காது என்பதும், வாழ்க்கையில் எதார்த்தமாக எது நடக்குமோ அதையெல்லாம் மனம் நினைக்காது என்பதும் புரிந்தது.

‘என் ராசாவின் மனசில’ என்ற படத்தில் கவுண்டமணி “எல்லாம் பொண்டாட்டிக்குப் பயந்த பசங்க” என்ற ஒரு வசனம் பேசுவார். இந்த வசனத்தைக் கேட்ட போது, உங்களைப் போலப் பொங்கி எழுந்தவர்களில் நானும் ஒருவன். வரலாற்றில் ஏற்பட்ட இந்தப் பிழையை மாற்றிக் காட்ட வேண்டுமென்று, இந்த வசனத்தைக் கேட்ட அன்று பிற்பகல் ஏழரை மணி அளவில் நான் எடுத்துக் கொண்ட சபதமும் எனக்கு நினைவுக்கு வருகிறது. என் சபதம் ஏழரையில் முடிந்து போனது. இப்போது சபதம் எடுப்பதென்றால் ஏழரை மணிக்கு எடுப்பதில்லை, அது முற்பகலாக இருந்தாலும் சரி, பிற்பகலாக இருந்தாலும் சரி.

பயம் என்பதும் கோழைத்தனமல்ல. வீரத்துடன் பயப்படுவது தவறானதும் அல்ல. அதெப்படி வீரத்துடன் பயப்படுவது என்று கேட்கக் கூடாது. பயம் மனதுக்குள் இருக்கும், ஆனால் உடலில் உதறல் தெரியக் கூடாது. பயப்படாத மாதிரி நடிக்க வேண்டும், ஆனால் வேறு வழியில்லை உள்ளுக்குள் பயந்துதான் ஆக வேண்டும். இது சாதாரணமாகத் தெரியலாம். இதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வருவது என்பது சிவாஜியின் நடிப்பை விடக் கடினமானது. பல வருடப் பழக்கத்தில் எனக்கு இந்த நடிப்பு கைகூடி வர பத்தாண்டுகளுக்கு மேல் ஆனது.

இப்போது நான் மனைவியிடம் நிற்கும் தோரணையைப் பார்த்தால் நீங்களே மிரண்டு விடுவீர்கள். என்னடா இவன் இவ்வளவு மோசமான ஆணாதிக்கவாதியாக இருக்கிறானே என்று. ‘பயிற்சியே மனிதரை மேம்படுத்தும்’ என்ற வாசகம் பொய்யாகி விடுமா என்ன?

வள வளவென்று பேசியது போதும், கவிதைக்கு வா என்கிறீர்களா?

கடைசியில் பொண்டாட்டியிடம்

பயந்து கிடப்பதற்காகக்

கல்யாணம்.

*****

25 Jun 2025

தத்துவ ஞானத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளைச் சமாளிப்பது!

தத்துவ ஞானத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளைச் சமாளிப்பது!

சாக்ரடீஸே சமாளிக்க முடியாத பிரச்சனையைச் சமாளித்த அனுபவம் ஒன்று. இது போன்ற பிரச்சனைகளைச் சமாளிப்பது தத்துவ ஞானத்திற்கு அப்பாற்பட்டது என்றாலும் சமாளிப்பது சாதாரணப்பட்ட காரியம் இல்லை.

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் ‘கூலி’ என்று மனைவி சொன்ன போது நான் வாய் திறக்கவே இல்லை.

ஒருவேளை வாய் திறந்திருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

ரஜினி நடித்த படம் குறித்துத் தெரிந்தும் அந்தச் செய்தியை மறைக்கப் பார்த்தீர்களே என்பாள்.

அத்துடன் விடுவாளா என்றால், அதுதான் இல்லை! உன் குடும்பமே இப்படித்தான் எல்லாவற்றையும் மறைத்தே பழக்கம் என்பாள்.

மேலும், இப்படி எல்லாவற்றையும் மறைத்து மறைத்து என்னத்தைக் கண்டு விட்டீர்கள் என்பாள்.

நல்லவேளை தமிழகத்துக்கே தெரிந்த இச்செய்தியை நான் தெரியாதது போலக் காட்டிக் கொண்டது.

இது போன்ற பிரச்சனைகளைத் தத்துவத்தோடு இணைத்து தர்க்கம் பார்த்தால் பிரச்சனை தொலையாது. நாம்தான் தொலைய வேண்டியிருக்கும்.

மேலும், தெரியாதது போலக் காட்டிக் கொண்டு அப்பாவி போலத் தப்பித்துக் கொள்வது, வீரனாய்க் காட்டிக் கொண்டு காலில் விழுவதை விட மேலானதாக இருக்கிறது.

*****

24 Jun 2025

ஏன் இந்த விவசாய முறை தவறானது?

ஏன் இந்த விவசாய முறை தவறானது?

இது லாபத்திற்கான விவசாய முறை. அந்த லாபம் விவசாயிக்கானதன்று என்றாலும் நிச்சயமாகத் தற்போதைய விவசாய முறை வாழ்க்கைக்கானது கிடையாது.

இது வாழ்க்கைக்கான விவசாய முறை என்றால், இவ்வளவு ரசாயனங்களைப் பயன்படுத்தாது. முக்கியமாகக் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தாது.

இந்தக் களைக்கொல்லிகள் என்ன செய்திருக்கின்றன தெரியுமா?

மூலிகைகளை அழித்திருக்கின்றன. ஆடுகள், மாடுகளுக்கான உணவை அழித்திருக்கின்றன. எத்தனையோ புழு, பூச்சிகளை அழித்து விட்டன. பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காலி செய்து விட்டன. நெற்பயிரைக் கூட சுணங்க வைத்திருக்கின்றன.

எவ்வளவோ பேர் உழைத்த விவசாயம் இன்றில்லை. பல பேர் என்பதற்குப் பதிலாக இயந்திரங்கள் உழைக்கின்றன.

களைக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் மூலமாக உருவாகும் விளைபொருட்கள் உடலுக்கு ஊறு விளைவிப்பன என்பது நிரூபணமாகி விட்டது. என்றாலும் நாம் ஏன் இந்த விவசாயத்தை நிறுத்த முடியவில்லை.

நாம் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்? நம்மையேவா?

ஒரு கேள்விக்கான பதிலை இப்படி கேள்வியிலேயே முடிப்பது கொடுமையானதுதான் இல்லையா?

*****

23 Jun 2025

இது ராஜபாட்டை!

ராஜபாட்டை

யாரோ சிலர்தான் மருத்துவர்கள் ஆகிறார்கள்

யாரோ சிலர்தான் பொறியாளர்கள் ஆகிறார்கள்

யாரோ சிலர்தான் ஆட்சியராகிறார்கள்

யாரோ சிலர்தான் நட்சத்திரமாக மின்னுகிறார்கள்

இந்த யாரோ சிலருக்காக

எல்லாரும் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறார்கள்

தங்கள் சுயத்தை இழக்கிறார்கள்

சந்தோசத்தைத் தனித்தன்மையை இழந்து விட்டு

நிராசைகளைச் சுமக்கிறார்கள்

ஆயிரத்தில் ஒருவராக

லட்சத்தில் ஒருவராக

கோடியில் ஒருவராக

முயல்வதை விட

நீங்கள் ஏன் நீங்களாக முயலக் கூடாது

எல்லாரும் மருத்துவரானால்

யாருக்கு யார்தான் மருத்துவம் பார்ப்பது

எல்லாரும் பொறியாளர் ஆனால்

யாருக்கு யார்தான் வீடு கட்டுவது

எல்லாரும் ஆட்சியரானால்

யாருக்கு யார்தான் ஆட்சி செய்வது

நீங்கள் விரும்பும் வழியில் செல்லுங்கள்

யாரோ விரும்பச் சொல்லும் வழியில் செல்லாதீர்கள்

இன்னொருவருக்காக நீங்கள் வேறொருவர் ஆனால்

நீங்கள் ஓர் அடிமை

உங்கள் விருப்பமான வழியில் நீங்கள் ஓர் அடிமையானாலும்

நீங்கள் ஒரு ராஜா

*****