24 Mar 2026

இரண்டு போர்கள், ஒரு க்ளைமாக்ஸ்!

இரண்டு போர்கள், ஒரு க்ளைமாக்ஸ்!

மத்திய கிழக்கில் நடப்பது ஒரு போர் என்று நினைத்தால் அது தவறு. அங்கே இணைகோடுகளாக இரண்டு போர்கள் நடக்கின்றன.

ஒன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நவீன விமானங்கள் ஈரானின் தலையில் போடும் குண்டுகள்.

இரண்டு, ஈரான் உலகப் பொருளாதாரத்தின் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் எனர்ஜி வார்.

இந்த இரண்டுமே ஒரு பக்கச் சார்புடையவை. அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களை ஈரானால் தடுக்க முடியவில்லை. அதே சமயம், ஈரான் மூடி வைத்திருக்கும் அந்த 54 கிலோமீட்டர் அகலமுள்ள ஹோர்முஸ் நீர்ச்சந்தியை திறக்க அமெரிக்காவால் முடியவில்லை.

ஈரானின் லாஜிக் சிம்பிள், நீ என் மீது குண்டு போட்டால், நான் உலகத்தின் பெட்ரோல் டேங்க்கை உடைப்பேன். வலி தாங்க முடியாமல் நீயே போரை நிறுத்துவாய்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. ஹோர்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் வரை போரை நிறுத்த அவர் தயாராக இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்பத்தில் ஈரானைப் பார்த்து பயந்த வளைகுடா நாடுகள், இப்போது டிரம்புடன் கைகோர்த்து நிற்கின்றன. இப்படியே விட்டால் இவன் வாழ்நாள் முழுக்க மிரட்டுவான், அடித்து ஒழித்துவிடுங்கள் என்பதுதான் அவர்களின் தற்போதைய மைண்ட் வாய்ஸ்.

பென்டகன் கணக்குப்படி 7,000 தாக்குதல்கள் ஈரானில் நடந்துவிட்டன. இஸ்ரேல் ஒரு படி மேலே போய், ஈரானின் முக்கியப் புள்ளிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்குகிறது.

ஈரானின் கப்பல்கள் பல இப்போது கடலுக்கு அடியில் மீன்களுக்கு வீடாக மாறியிருக்கின்றன. ஆனாலும் ஈரான் விடுவதாக இல்லை. ஜலசந்தியைச் சுற்றி கண்ணிவெடிகளையும், ட்ரோன்களையும் ஏவி ஒரு வெர்ச்சுவல் பூட்டைப் போட்டிருக்கிறது.

1988களில் டிரம்ப் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், நான் அதிபரானால் கார்க் தீவை ஒரு கை பார்ப்பேன்.

கார்க் தீவு என்பது ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் ஒரு பாறைத் திட்டு. இப்போது மார்ச் 13 இல் அங்கே குண்டு மழை பொழிந்துவிட்டார். அடுத்து அந்தத் தீவை ஆக்கிரமிக்கவும் திட்டம் இருக்கலாம். வளைகுடா நாடுகள் எண்ணெய் விற்க முடியாவிட்டால், ஈரானும் விற்கக்கூடாது, இதுதான் டிரம்பின் ஈக்விட்டி.

ஈரான் இப்போது தன் வியூகத்தை மாற்றியிருக்கிறது. கப்பல்களைத் தாக்குவதை விட, சவுதி அரேபியா மற்றும் துபாயின் எண்ணெய் வயல்களையும், சுத்திகரிப்பு நிலையங்களையும் நேரடியாகத் தாக்குகிறது. இதனால் பெட்ரோல் விலை எகிறுகிறது. கூடவே செமிகண்டக்டர் தயாரிக்கத் தேவையான ஹீலியம் வாயுவின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது.

துபாய் ஏர்போர்ட்டில் ஈரான் ட்ரோனின் சிதறல்கள் விழுந்ததில் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஹோட்டல்கள் காலியாக கிடக்கின்றன. ரமலான் முடிந்த கையோடு பிசினஸ் களைகட்டும் என்று நினைத்த வளைகுடா நாடுகளுக்கு இது பேரிடி.

ஈரான் இப்போது ஒரு மாப் பாஸ் போலப் பேசுகிறது. அமெரிக்கா எல்லா பேஸ்களையும் காலி செய்ய வேண்டும், போர் நஷ்ட ஈடாக எங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

டிரம்பின் நிஜமான நோக்கம் என்ன? ஈரானின் ஆட்சியைத் தூக்குவதா? அல்லது ஒரு டீல் போடுவதா? யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்:

ஈரான் எப்போது உலகத்தின் எரிசக்தி மீது கை வைத்ததோ, அப்போதே அதன் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். இவனை முழுமையாக முடக்காமல் போர் முடியாது என்கிற ஒற்றைப் புள்ளியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் இப்போது கைகோர்த்து நிற்கின்றன.

ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும் போலிருக்கிறது. எந்தப் பக்கம் என்ன நடக்கும் என்பது வழக்கம் போலவே எதிர்காலத்திற்கு மட்டுமே தெரிந்த விடுகதை.

*****

அப்டேட் ஆகாத கனவுகளும், ஹேங் ஆகும் வாழ்க்கையும்!

அப்டேட் ஆகாத கனவுகளும், ஹேங் ஆகும் வாழ்க்கையும்!

இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுள்ள பெண் என்றால், கையில் ஒரு ஸ்மார்ட்ஃபோன், உள்ளுக்குள் ஒரு தீராத பதற்றம். இதுதான் இன்றைய ஜென் இசட்  பெண்களின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்.

இவர்களைக் கட்டாயப்படுத்தித் தெரபிக்கு கூட்டிட்டுப் போக முடியாது. தப்பான முடிவுகள் எடுக்காதே என்று தடுத்து நிறுத்தவும் முடியாது.

இந்த ஜென் இசட் பெண்களுக்கு, அவர்களின் தோழிகள் என்ன பிராண்ட் லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறார்கள் என்பதை விட, எந்த ஆன்டி டிப்ரஸன்ட் மாத்திரை வேலை செய்கிறது என்பதுதான் அத்துப்படியாக இருக்கிறது.

ஜென் இசட் பெண்களுக்கு வாழ்க்கை என்பது ஒரு கிரிட்டிக்கலான பக் நிறைந்த சாஃப்ட்வேர் போல ஆகிவிட்டது.

இது குறித்த புள்ளிவிவரங்கள் கொஞ்சம் பீதியைக் கிளப்புகின்றன.

எங்காவது ஓடிவிடலாமா என்று யோசிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 19%. பெண்களோ 40%.

எப்போதும் ஒரு பயத்திலேயே இருக்கிறேன் என்று சொல்லும் ஆண்கள் 19%. பெண்களோ 33%.

முன்பெல்லாம் டிவியில் செய்தி பார்ப்பார்கள். இப்போது செய்தி இவர்களைத் துரத்துகிறது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் என எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் தகவல்கள். கூடவே, பக்கத்து வீட்டுப் பெண் காபி டேயில் காபி குடிப்பதைப் பார்த்து வரும் தாழ்வு மனப்பான்மை இந்த ஜென் இசட் பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது.

அட்டென்ஷன்தான் இன்னைக்கு கரன்சி, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பதாகச் சொல்கிறார் இந்த ஜென் இசட் பெண்கள்.

பழைய தலைமுறைப் பெண்கள் நாங்கள் எல்லாம் அப்போது அப்படி இருந்தோம் என்று அட்வைஸ் செய்யலாம். ஆனால், இன்றைய சூழல் வேறு.

இந்த ஜென் இசட் தலைமுறையில் டிகிரி வாங்கிய பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம். ஆனால், கையில் இருக்கும் கல்விக்கடன் மலைபோல இருக்கிறது.

ஜென் இசட் பெண்களின் கையில் மாஸ்டர் டிகிரி என்பது சர்வ சாதாரணம். ஆனால், அதுக்கு மேல் எக்கச்சக்கமான லோன். அதனால் கைக்கு வர்ற சம்பளம், ஒரு வார மளிகைச் சாமானுக்கே மூச்சு வாங்குகிறது அவர்களுக்கு.

அதாகப்பட்டது, சம்பளம் என்னவோ டவுன் பஸ் ரேஞ்சில் இருக்கிறது. ஆனால், மளிகைச் சாமான்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

ஜென் இசட் பெண்களில் முப்பது சதவீதத்துக்கு மேல் ஐம்பதாயிரம், லட்சம் போன்ற சம்பளங்களை அநாயசமாக வாங்குகிறார்கள். ஆனால் சொந்த வீட்டில் இருப்பவர்கள் 25 சதவீதம் கூட இருக்காது. பாவம், மீதி பேர் எல்லாம் வாடகை வீட்டில் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு சம்பாதிப்பவர்களே வீடு வாங்க முடியவில்லை என்றால், மற்ற எழுபது சதவீத ஜென் இசட் பெண்களின் நிலைமை?

அடுத்து செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ இவர்களின் பல வேலைகளைக் காலி பண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சின்ன ஆறுதல். பெண்கள் அதிகம் இருக்கும் ஹெல்த்கேர், டீச்சிங் போன்ற வேலைகளை ஏஐயால் அவ்வளவு சீக்கிரம் அவுட் பண்ண முடியவில்லை.

இன்றைய டேட்டிங் கலாச்சாரம் ஒரு குப்பைத் தொட்டி என்கிறார்கள். ஒருவரைப் பிடிப்பதும், உடனே எக்ஸ்பெண்டபிள் எனத் தூக்கிப் போடுவதும் சாதாரணமாகிவிட்டது இந்த ஜென் இசட் தலைமுறையில்.

இதன் விளைவு? ஒரு குழந்தையோடு போதும் என்று இந்த ஜென் இசட் இளம் தாய்மார்கள் முடிவெடுக்கிறார்கள். இரண்டாவது குழந்தைக்கு இங்கே இடமும் இல்லை, பட்ஜெட்டும் இல்லை.

பதற்றம், நிச்சயமற்ற எதிர்காலம், விலைவாசி உயர்வு இதற்கிடையில் எப்படியாவது பிழைத்துக் கொள்ளப் போராடும் ஒரு தலைமுறைதான் இன்றைய ஜென் இசட் பெண்கள். அவர்கள் சோம்பேறிகள் அல்ல, ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் இருந்து கீழே விழாமல் இருக்க கம்பியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள்.

நாங்கள் வெறுமனே உயிர் வாழத்தான் முயற்சி செய்றோம். ப்ளீஸ், எங்களை வாழ விடுங்களேன் என்பதுதான் ஒட்டுமொத்த ஜென் இசட் பெண்களின் மைண்ட் வாய்ஸ் ஆக மாறிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு குழப்பம், பயம் இருந்தாலும், வாழ்க்கை பயங்கரமாகப் போனாலும், அதை ஒரு சின்ன நையாண்டியோடு, ஒரு மீம் போட்டு சிரித்துக் கொண்டே கடந்து போவதுதான் ஜென் இசட் பெண்களின் ஸ்பெஷாலிட்டி. சிரிக்கவில்லை என்றால் இந்த உலகம் தாங்காதுதானே!

*****

23 Mar 2026

கேக், சிப் மற்றும் எலக்ட்ரான் யுத்தம்!

கேக், சிப் மற்றும் எலக்ட்ரான் யுத்தம்!

என்விடியா பாஸ் ஜென்சன் ஹுவாங் ஒரு தத்துவம் சொல்கிறார், ஏஐ என்பது ஒரு கேக் மாதிரி.

மேலே இருக்கும் க்ரீம் சாட்பாட்கள். நடுவில் இருக்கும் பிரட் எல்.எல்.எம் சாஃப்ட்வேர். அடியில் இருக்கும் பேஸ் செமிகண்டக்டர் சிப்ஸ். ஆனால், இந்த கேக் வேக வைக்க ஒரு அடுப்பு வேண்டுமே? அதுதான் எனர்ஜி.

சீனா இப்போது இந்த ஏஐ கேக்கைப் பேக் பண்ணுவதில் செம பிஸியாக இருக்கிறது. டிக்டாக்காரர்கள் ஒரு வீடியோ ஆப் வைத்திருக்கிறார்கள். ஹுவாய் ஒரு புதிய சிப்பை இறக்குகிறது. ஆனாலும், அமெரிக்காவை முந்த ஒரு ரகசிய ஆயுதத்தை சீனா கையில் எடுத்திருக்கிறது. அதன் பெயர் எலெக்ட்ரான் கேப்.

ஏஐ மாடல்களுக்குப் பசி அதிகம். அவை ட்ரில்லியன் கணக்கில் கணக்குப் போட மின்சாரம் ரத்தம் மாதிரி தேவை. அமெரிக்காவின் கிரிட் பழைய பஞ்சாங்கம். அங்கே ஒரு டேட்டா சென்டர் ஆரம்பிக்க மின்சார கனெக்ஷனுக்குப் பின்னால் வரிசையில் நிற்க வேண்டும்.

ஆனால் சீனா?

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 500 ஜிகாவாட் சேர்த்திருக்கிறார்கள். இது அமெரிக்காவின் மொத்தத் திறனை விட இரண்டு மடங்கு.

சீனாவில் ஒரு யூனிட் மின்சாரம் சுமார் 3 சென்ட்தான். அமெரிக்காவில் இது டபுள்.

அமெரிக்காவில் டேட்டா சென்டர் கட்டினால், எங்கள் வீட்டு மின்சார விலை ஏறிவிடும் என்று மக்கள் கொடி பிடிப்பார்கள். சீனாவில் அந்தப் பேச்சிற்கே இடமில்லை.

சாம் ஆல்ட்மேன் முதல் எலான் மஸ்க் வரை எல்லோருக்கும் இப்போது பயம் வந்துவிட்டது. சிப் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மின்சாரம் இருந்தால் சீனா ஜெயித்துவிடும் என்று முணுமுணுக்கிறார்கள்.

ஷான்சி மாகாணத்தில் யங்காஓ என்று ஒரு தூசி படிந்த ஊர். அங்கே ஒரு பழைய பன்றிப் பண்ணையை இடித்துவிட்டுப் பிரம்மாண்டமான டேட்டா சென்டர் கட்டியிருக்கிறார்கள்.

சுற்றிலும் விண்ட் மில், சோலார் பேனல்கள், நிலக்கரி மின் நிலையம் எனப் பவர் சப்ளை தாராளம். ஆனால் ஒரு சின்னப் பிரச்சனை. அமெரிக்காவின் தடையால் அங்கே அதிநவீன சிப்கள் இல்லை. அங்கிருக்கும் மேனேஜர் புலம்புகிறார், எங்களிடம் இருக்கும் சிப்களில் 0.1 சதவீதம் கூட ஏஐ ட்ரெய்னிங் செய்ய லாயக்கில்லை என்று.

சீனா சளைக்கவில்லை. அதிநவீன சிப் இல்லையென்றால் என்ன? சாதாரண சிப்களை நிறைய அடுக்கி வைத்து வேலை வாங்குவோம் என்கிறார்கள். இதற்கு மின்சாரம் அதிகம் செலவாகும். ஆனால் சீனாவில்தான் மின்சாரம் மலிவாச்சே!

ஹுவாய் நிறுவனம் இப்போது 7 நேனோமீட்டர் சிப்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டது. இது அமெரிக்க சிப்களை விட வேகம் கம்மியாக இருந்தாலும், எண்ணிக்கையை அதிகப்படியாக வைத்து அடித்து நொறுக்கப் போகிறார்கள். 2028க்குள் நாடு முழுக்க இருக்கும் டேட்டா சென்டர்களை ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப் போகிறது சீனா.

சீனாவின் இப்போதைய டார்கெட் என்னவென்றால், ஆர்ட்டிபீசியல் ஜெனரல் இன்டெலிஜன்ஸ். அதாவது மனிதனை விட அதிக அறிவுள்ள மெஷின். இதற்குப் பிரம்மாண்டமான மின்சாரம் தேவைப்படும்.

சீனாவின் புதிய ஐந்தாண்டுத் திட்டத்தில் இதைப் பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். நாங்கள் எதையும் கண்டுபிடிக்க வேண்டாம், தொடர்ந்து கட்டிக்கொண்டே இருந்தால் போதும், என்கிறார் ஒரு சீன அறிஞர்.

அமெரிக்காவிடம் புத்திசாலித்தனமான சிப்கள் இருக்கலாம். ஆனால் சீனாவிடம் அந்த சிப்களை ஓட்டத் தேவையான எலக்ட்ரான் மலை போல இருக்கிறது. இறுதியில் இந்த கேக் யாருக்குச் சொந்தம் என்பது மின்சார பில்லில்தான் இருக்கிறது!

என்ன நடக்கப் போகிறது? அமெரிக்காவா? சீனாவா? வெயிட் அன்ட் வாட்ச்.

*****

அந்த ரகசியக் கூட்டணி! - ஒரு குறுங்கதை

அந்த ரகசியக் கூட்டணி!

சென்னையின் அந்தப் புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலின் தனி அறையில் ஒரு முக்கிய சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. வெளியே தேர்தல் காய்ச்சல் ஒருபுறம், சமூக வலைதளங்களில் வதந்தி காய்ச்சல் மறுபுறம் கொதித்துக் கொண்டிருந்தது.

அறையினுள் ரஜினி அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் ஒரு தீர்க்கமான அமைதி. அவருக்கு எதிரே கமல் தன் செல்போனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அதில் அவர்கள் இருவரையும் இணைத்து வந்த வதந்திகள் டிரெண்டிங்கில் இருந்தன.

திடீரென கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்தார் பார்த்திபன். அவர் கையில் ஒரு பெரிய கறுப்பு நிறக் கோப்பு இருந்தது.

யாராவது பார்த்தார்களா பார்த்திபன்? என்றார் ரஜினி குரலில் ஒருவித ரகசியம் ஒலிக்க.

இல்லை சார், எல்லாரும் நம்மைப் பற்றி வரும் வதந்திகளை விவாதிப்பதிலேயே பிஸியாக இருக்கிறார்கள். நான் உள்ளே வந்ததைக் கூட யாரும் கவனிக்கவில்லை, என்றார் பார்த்திபன் தன் டிரேட்மார்க் நக்கல் கலந்த புன்னகையுடன்.

கமல் நிமிர்ந்து பார்த்தார். பிறகு பேசினார், அந்தத் தகவல்கள் எல்லாம் தயார்தானே? மக்கள் இதைப் பார்த்தால் அதிர்ச்சியாகிவிடுவார்கள். குறிப்பாக அந்த லெட்டர் மிக முக்கியம்.

சமூக வலைதளங்களில் அப்போதுதான் ஒரு செய்தி தீயாகப் பரவிக் கொண்டிருந்தது. ரஜினி – கமல் – பார்த்திபன் மூவரும் இன்று மாலை ஒரு ரகசிய இடத்தில் சந்திப்பு! பெரிய அறிவிப்பு வெளியாகப் போகிறது!

வதந்திகள் பலவாறு சிறகு விரித்தன. அது ஒருவேளை அரசியல் கூட்டணியா? அல்லது அவர்கள் மூவரும் இணையும் மெகா பட்ஜெட் படமா? எனப் பலரும் மண்டையை உடைத்துக் கொண்டனர்.

பார்த்திபன் அந்தக் கோப்பை மேஜை மீது வைத்தார். இதில் எல்லாமே இருக்கிறது. ரஜினி சார், நீங்கள் இதில் கையெழுத்திட்டால் போதும். எல்லாம் முடிந்துவிடும், என்றார்.

ரஜினி அந்தப் பேனாவை எடுத்தார். கமல் ஆவலுடன் அருகில் வந்து நின்றார். பார்த்திபன் கேமராவைத் தயார் செய்தார். கோப்பில் இருந்த அந்தத் தாளில் ரஜினி கையெழுத்திட்டார். அடுத்துக் கையெழுத்திட கமல் தயாரானார்.

மறுநிமிடம், அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியானது. உலகம் எதிர்பார்த்த அந்த ரகசியத் தகவல் வெளியானது.

அந்தப் புகைப்படம் எதைப் பற்றியது என்பதற்கான விடை கிடைத்தது.

அவர்கள் மூவரும் இணைந்திருப்பது எந்தப் படத்திற்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ அல்ல. அது வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் நடத்தை முறைகள் குறித்த ஒரு குறும்படத்தின் ஒப்பந்தம்!

அதில் ரஜினி கையெழுத்திட்ட அந்தத் தாளில் எழுதியிருந்தது, வதந்திகளைப் பரப்பாதீர்கள், ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்!

பார்த்திபன் இயக்கிய அந்தக் குறும்படத்தில், ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து, தேர்தல் நேரத்தில் பரப்பப்படும் பொய் செய்திகளை மக்கள் எப்படி அடையாளம் காண வேண்டும் என்று பாடம் எடுத்திருந்தார்கள்.

சமூக வலைதளங்களில் பிரேக்கிங் நியூஸையும், வைரல்களையும் தேடியவர்கள், இப்போது தங்கள் ஓட்டுச்சாவடி எங்கே என்று தேடத் தொடங்கினார்கள்.

பின் குறிப்பு : இந்த உலகில் ஒருவர் போல ஏழு பேர் இருப்பார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இச்சித்திரிப்பில் இடம்பெற்றிருக்கும் இப்பாத்திரங்கள் கோலிவுட்டின் பிரபலமான பாத்திரங்களைக் குறிப்பிடுவது கிடையாது, மேலும் இவர்கள் ஹாலிவுட்டோடு தொடர்புடையவர்கள்.

*****

22 Mar 2026

டொனால்ட் டிரம்ப் – புவிஈர்ப்பு விசைக்கு ஒரு சவால்!

டொனால்ட் டிரம்ப் – புவிஈர்ப்பு  விசைக்கு ஒரு சவால்!

யாரும் பந்தயம் கட்டாதீர்கள், குறிப்பாக டொனால்ட் டிரம்புக்கு எதிராக.

2021 ஜனவரி 6-ல் அவருடைய ஆதரவாளர்கள் கேபிடல் ஹில்லுக்குள் புகுந்து கலாட்டா செய்தபோது, முடிந்தது கதை என்றுதான் உலகம் நினைத்தது. ஆனால், 2024 இல் அதைவிட அதிக வாக்குகளுடன் மனிதர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழையும்போது, அரசியல் புவிஈர்ப்பு விசை அவரிடம் மட்டும் வேலை செய்யாதோ என்று தோன்றுகிறது.

ஆனால், இப்போது ஒரு சிக்கல். ஈரானுக்கு எதிராக அவர் ஆரம்பித்திருக்கும் இந்த அவசரக்கோலப் போர், டிரம்ப் எனும் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கப் பார்க்கிறது. இது வெறும் போரல்ல. டிரம்பின் சூப்பர் பவர்களை மழுங்கடிக்கும் ஒரு பொறியாகத் தெரிகிறது.

டிரம்பின் மேஜிக், தனக்கென்று ஓர் உண்மையை உருவாக்கி அதை நம்ப வைப்பது. இப்போதும் நான் ஈரானில் ஜெயித்துவிட்டேன் என்றுதான் சொல்கிறார். ஆனால், தரை எதார்த்தம் வேறு. ஈரானின் உட்கட்டமைப்பு சிதைக்கப்பட்டிருக்கலாம், அலி லாரிஜானி போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனாலும், ஈரான் அவர் சொல்வது போன்ற நிலைக்கு வரவில்லை. யுரேனியத்தை வைத்துக்கொண்டு ஈரான் இன்னமும் கண்ணாமூச்சி ஆடுகிறது.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலரைத் தாண்டிவிட்டது. மார்ச் 18 இல் கத்தார் எரிவாயு மையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல், சந்தையை உலுக்கிவிட்டது. இவற்றையெல்லாம் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை.

டிரம்பின் பிரம்மாஸ்திரம், மற்றவர்களைத் தன் பிடிக்குள் வைத்திருப்பது. ஆனால் இப்போது உலக நாடுகள் உஷாராகிவிட்டன. ஹோர்முஸ் நீர்ச்சந்தியைத் திறக்க நேட்டோ நாடுகளின் உதவியை அவர் கேட்டபோது, அவர்கள் நோ சொல்லிவிட்டார்கள். உடனே, எனக்கு யார் உதவியும் தேவையில்லை என்று அந்தர் பல்டி அடித்தார் டிரம்ப்.

ஈரானும் இப்போது லிவரேஜ் அரசியலில் இறங்கிவிட்டது. எங்களுக்குப் பிடித்த நாடுகளின் கப்பல்களை மட்டும் விடுவோம் என்கிறார்கள். ஒருவேளை ஏப்ரல் இறுதி வரை இந்தப் போர் நீடித்தால், பெட்ரோல் விலை 150 டாலரைத் தொடலாம். இது ஒரு கணிப்புதான். நிலைமை அதைத் தாண்டியும் போகலாம். அதை இப்போது முன்கூட்டியே சொல்வது சிரமம். அமெரிக்கப் பொருளாதாரம் சரிந்தால் டிரம்ப் என்ன செய்வார்? ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்றுவாரா அல்லது பணிவாரா? இவையெல்லாம் டிரில்லியன் டாலர் கேள்விகள். அதென்ன மில்லியன் டாலரை விட்டு விட்டு இப்போது டிரில்லியன் டாலருக்கு கேள்வியை உயர்த்தி விட்டாயே என்றால், உலகப் பொருளாதாரம் அப்படி இருக்கிறது.

டிரம்பின் அசுர பலம், குடியரசுக் கட்சி அவர் கைக்குள் இருப்பது. ஆனால், போர் வரும்போது விலைவாசியும் எகிறுகிறது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை கலிபோர்னியா வெயிலைப் போல சுட்டெரிக்கிறது. டிரம்பின் தீவிர ஆதரவாளரான டக்கர் கார்ல்சனே இப்போது துரோகம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். ஆகக் கட்சியில் அவரது பலத்தைப் பற்றி நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

வரும் நவம்பர் இடைத்தேர்தலில் செனட் சபையைக் குடியரசுக் கட்சி இழக்க 50 சதவீத வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அப்படி நடந்தால், டிரம்ப் ஓர் அதிகாரமற்ற தலைவர் ஆகிவிடுவார்.

ஆனால், தோற்பது டிரம்புக்குப் பிடிக்காத விஷயம். போர் தோல்வியில் முடிந்தால், அவர் தன் கோபத்தை வேறு பக்கம் திருப்புவார். உக்ரைனைக் கைவிடலாம், நேட்டோவை விட்டு வெளியேறலாம், அல்லது மெக்சிகோ எல்லையில் அதிரடி காட்டலாம்.

உள்நாட்டிலும் மீடியாக்கள் மீது பாயத் தயாராகிவிட்டார் டிரம்ப். டிவி உரிமங்களை ரத்து செய்வேன் என்று இப்போதே மிரட்டல் ஆரம்பித்துவிட்டது. ஈரான் விவகாரத்தில் டிரம்ப் ஜெயிப்பது கடினம் என்பது போலத்தான் தெரிகிறது. உண்மை வெளிப்பட நாட்களாகும். அவர் உண்மையையும் வேறு விதமாகத் திரிப்பார்.

கடந்த காலத்தைப் பார்க்கையில் டிரம்ப் ஒரு கெட்ட வெற்றியாளராக இருந்திருக்கிறார். ஆனால் ஒரு 'மோசமான தோல்வியாளராக அவர் மாறினால், அது உலகிற்கு இன்னும் ஆபத்து. டிரம்ப் என்ன செய்யப் போகிறார்? அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் கணிப்பது அவருக்கே சிரமமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

*****

ஹாலிவுட் சிண்ட்ரோம் – ஏன் இவர்கள் கீழே விழுகிறார்கள்?

ஹாலிவுட் சிண்ட்ரோம் – ஏன் இவர்கள் கீழே விழுகிறார்கள்?

முதலில் ஒரு பிளாஷ்பேக். மர்லின் மன்றோ தொடங்கி இன்றைய பிரிட்னி ஸ்பியர்ஸ் வரை எல்லாருக்குமே ஒரே பேட்டர்ன். உச்சகட்ட புகழ், கணக்கில்லாத பணம், அப்புறம் திடீரென்று ஒரு நாள் போலீஸ் லாக் அப் அல்லது போதைப்பொருள் ஓவர் டோஸ். இது ஏன்? இதுதான் ஹாலிவுட் சின்ட்ரோம்.

நமது மூளையில் டோபமைன் என்று ஒரு கெமிக்கல் இருக்கிறது. இதுதான் மனுஷனக்கு ரிவார்டு சிஸ்டம். ஒரு சாதாரண மனுஷனுக்கு ஒரு நல்ல காபி குடித்தால் சுரக்கும் டோபமைன், இந்த ஸ்டார்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தும்போது பிளட் பிரஷர் போல எகிறும்.

புகழ் குறையும்போது அல்லது தனிமை வரும்போது, அந்த டோபமைன் லெவலை மெயின்டெய்ன் செய்ய மூளை அடம் பிடிக்கும். அங்கேதான் ஆல்கஹாலும், ஆட்ரலும் என்ட்ரி கொடுக்கின்றன. மூளை ஒரு போதை அடிமை ஆகிறது.

ஹாலிவுட்டில் இதற்கு கோல்டன் கேஜ் என்று பெயர்.

அதென்ன கோல்டன் கேஜ் என்கிறீர்களா?

சுற்றிலும் ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால், உன்னை எனக்குப் பிடிக்கும் என்று சொல்வதை விட, உன் புகழை எனக்குப் பிடிக்கும் என்று சொல்பவர்களே அதிகம் இருப்பார்கள். இது ஒரு வகை தங்கச் சிறை.

பிரிட்னி ஸ்பியர்ஸின் 200 மில்லியன் டாலர் டீல் போல, பெரிய தொகை வரும்போது கழுகுகள் தானாக வரும்.

நீங்கள் குளிப்பதைக் கூட ஒரு பப்பராஸி படம் எடுப்பான் என்றால், யாருக்குத்தான் மூளை குழம்பாது?

சாதாரண மனிதன் விழுந்தால் யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு செலிபிரிட்டி விழும்போது அது பிரேக்கிங் நியூஸ். பிரிட்னி மொட்டையடித்துக் கொண்டபோது உலகம் சிரித்தது. ஆனால் அது உண்மையில் ஒரு சைக்கோடிக் பிரேக். மனதின் ஒரு பகுதி உடைந்து சிதறுவதன் வெளிப்பாடு.

மொத்தத்தில் இதிலிருந்து மீண்டு வருவதற்கான சக்சஸ் ரேட் மிகக் குறைவு. அதே நேரத்தில் ஸ்ட்ரெஸ் லெவல் ரொம்பவே அதிகம். இதற்குத் தீர்வு என்று பார்த்தால், ஒரு நல்ல மனநல மருத்துவர்  +  உண்மையான நட்பு. இது இரண்டுமே ஹாலிவுட்டில் கிடைப்பது அபூர்வம்.

இதைப் பற்றி என்ன சொல்வது?

புகழ் என்பது ஒரு எலக்ட்ரிக் சேர் மாதிரி. உட்கார்ந்திருக்கும் வரை கெத்து. சுவிட்ச் போட்டால் காலி.

பிரிட்னி போன்றவர்களுக்குத் தேவை மீளுதல் மற்றும் மீட்கொணர்தல் மட்டுமல்ல, நிபந்தனையற்ற அன்பு. அது மார்க்கெட்டில் கிடைப்பதில்லை.

அதுதான் அங்கு பிரச்சனை. இதனால் இந்த ஹாலிவுட் சின்ட்ரோம் பலரைப் போட்டுத் தள்ளிக் கொண்டு இருக்கிறது. கோலிவுட்டிலும் இது உண்டே என்கிறீர்களா? மல்லுவுட், டோலிவுட், சாண்டல்உட் என எந்த உட்டாக இருந்தாலும் புகழ் எனும் உச்சாணிக் கொம்பில் ஏறும் போது இது ஆட்டமேட்டிக்காக இன்புட் ஆகும்.

“நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்

உயிர்க்குஇறுதி ஆகி விடும்.”        (குறள், 476)

என்று வள்ளுவரும் சொல்கிறாரே!

*****

கிளைமேட் சேஞ்ச் – பினான்ஸ் பாலிடிக்ஸ்!

கிளைமேட் சேஞ்ச் – பினான்ஸ் பாலிடிக்ஸ்!

கிளைமேட் சேஞ்ச் பற்றிப் பேசும்போதெல்லாம் ஏன் பணம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே அதிகம் வருகின்றன? டெரிஸ்கிங், பாண்ட் மார்க்கெட், ஈல்டு கர்வ் – இதற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் மற்றும் நமக்கும் என்ன சம்பந்தம்?

புதிய கிரீன் டெக்னாலஜி என்பது ரொம்ப காஸ்ட்லி. ரிஸ்க்கும் அதிகம். லாஜிக் படி பார்த்தால், அரசுதான் அந்த ரிஸ்க்கை எடுக்கவேண்டும். ஆனால் இப்போது நடப்பது என்னவோ சாண்ட்பேப்பரிங். அதாவது மழுப்பி விடுதல். உப்புத்தாளை வைத்து மழுப்பலாகத் தேய்த்து விடுதல் என்பார்களே, அதுதான் நடக்கிறது.

அதாவது, தனியார் முதலாளிகளுக்குப் பயம் வராமல் இருக்க, அந்த ரிஸ்க்கைத் தேய்த்து மழுப்பலாக மாற்றி வாங்க முதலீடு பண்ணுங்க என்று அரசு கெஞ்சுகிறது. பிளாக்ராக் போன்ற நிறுவனங்கள் இதில் புகுந்து விளையாடுகின்றன. வியட்நாமிலும் கென்யாவிலும் என்ன நடந்தது தெரியுமா? தனியார் நிறுவனங்களை ஈர்க்க அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒத்துக்கொண்டு, கடைசியில் அந்த நாடுகள் பில்லியன் டாலர் நஷ்டத்தில் நிற்கின்றன.

தனியாருக்கு லாபம், பொதுமக்களுக்கு ரிஸ்க்.  இதுதான் இன்றைய கிளைமேட் பாலிசி.

மத்திய வங்கிகள் அதாவது ஒவ்வொரு நாட்டின் ரிசர்வ் பேங்குகள் அல்லது சென்ட்ரல் பேங்குகள் இப்போது வெறும் வட்டி விகிதத்தையும், பணவீக்கத்தையும் மட்டும் கவனிக்கும் டெக்னீஷியன் கூடாரங்களாக மாறிவிட்டன. ஆனால், கிளைமேட் சேஞ்சைத் தடுக்க நமக்குத் தேவை ஒரு தொலைநோக்குள்ள அரசு.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

எரிசக்தித் துறையை அரசாங்கமே வைத்துக்கொள்வது பிரைவேட் கம்பெனிகளிடம் கெஞ்சுவதை விட சீப். எனவே அவையெல்லாம் எப்போதும் கவர்ன்மென்ட் செக்டார்களாக இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தயாரிக்கும்போது வேலைவாய்ப்பும் பெருகும். அரசாங்கம் அதற்கு கொஞ்சமல்ல, நிறையவே மனசு வைக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் உச்சவரம்பும், சம்பளத்தில் அடிமட்ட வரம்பும் அவசியம். விலைவாசி ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுக்கு மேலேயும் போய் விடக் கூடாது. சம்பளம் ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுக்குக் குறைவாகவும் கொடுக்கப்பட்டு விடக் கூடாது. இரண்டிலுமே ஒரு நியாயவிலை இருக்க வேண்டும்.

மத்திய வங்கிகள் வெறும் வட்டி என்ற ஒரு அம்பை வைத்துக்கொண்டு பணவீக்கம், கிளைமேட் சேஞ்ச் என எல்லா இலக்குகளையும் அடிக்க முடியாது. அவை பாலிஸி மேக்கர்கள்தான். மக்களும் தங்கள் பொறுப்புணர்வை விரிவுபடுத்தி, ஜனநாயக ரீதியாக இதில் பங்கேற்க வேண்டும்.

எவ்வளவு ஹைட்ரோ கார்பன் எரிபொருட்களைக் குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் ஆர்வத்துடனும் முன்வர வேண்டும். குளிர்சாதன வசதி, குளிர்சாதனப் பெட்டி போன்ற இத்தியாதிகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும். ஆளுக்கொரு மரம் வளர்ப்பது ஒரு நல்ல கான்செப்ட். முடியாவிட்டால் தொட்டியில் ஒரு பூச்செடியை வளர்ப்பது கூட நல்ல மாற்றம்தான்.

இப்படி பொதுமக்களும் யோசித்து காய் நகர்த்தினால் இந்த கிளைமேட் சேஞ்ச் எனும் பெருநிறுவனங்கள் நடத்தும் சதுரங்க வேட்டையிலிருந்து தப்பிக்கலாம்.

*****