21 Apr 2026

எஜமானர்களின் அடிமைகள் – நிலை மாறுமா?!

எஜமானர்களின் அடிமைகள் – நிலை மாறுமா?!

நாம் எல்லோரும் ஓர் அழகான கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதன் பெயர் ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம் என்றால், ஆள்பவர்கள் நம் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும், காதலியைப் போல! போலீஸை வைத்து நம்மை மிரட்டக் கூடாது, நம்மை ஏஜெண்டுகளை வைத்துச் சுரண்டக் கூடாது. இதைக் கேட்கவே எவ்வளவு கியூட் ஆக இருக்கிறது?

ஆனால், நிஜத்தில் நாம் ஒரு வினோதமான அடிமைத்தனத்தில் இருக்கிறோம். வெள்ளையர்கள் வெளியேறிவிட்டார்கள், ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற எஜமானர் மனோபாவம் இன்னும் இங்கேயே தங்கிவிட்டது.

நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறோம், ஆனால் உளவியல் ரீதியாக இன்னும் அந்த பழைய அடிமைச்சங்கிலியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அரசியல்வாதிகள் தங்களை நம் சேவகர்களாகக் காட்டிக்கொள்வார்கள், ஆனால் பதவியில் அமர்ந்ததும் ஜமீன்தார்கள் போல கட் அவுட் வைப்பார்கள்.

மக்கள் எப்போதுமே உலகெங்கும் அறியாமையில் இருப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், அரசாங்கம் என்பது மக்களுக்குப் பக்கத்தில், மிக எளிமையாக இருக்க வேண்டும் என்று அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள்.

நிர்வாகம் பெரிதாகப் பெரிதாக, ஜனநாயகம் நம்மிடமிருந்து விலகி எங்கோ சென்னையிலோ அல்லது டெல்லியிலோ அல்லது கோட்டையிலோ ஒளிந்துகொள்ளும். பிறகு அங்கே போகவே நமக்கு அச்சமாக இருக்கும். ஒரு சின்ன மனு கொடுக்கக்கூட நாம் பத்து தடவை குனிய வேண்டியிருக்கும்.

டெல்லி என்பது பலருக்கு வெறும் ஒரு பெயர்தான். அது எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது என்று எளிய மக்களுக்குத் தெரியவே தெரியாது.

அரசாங்கம் தூரத்தில் இருந்தால் அது அதிகாரம் காட்டும். அருகில் இருந்தால் அது அன்பைக் காட்டும். ஆனால், நமக்கு எப்போதுமே தூரத்துப் பச்சைதான் பிடிக்கிறது!

மக்களாட்சியில் நடக்கும் எல்லாத் தப்பிற்கும் காரணம் நாம்தான். ஆம், நம்முடைய சகிப்புத்தன்மைதான் எல்லா அக்கிரமங்களுக்கும் ஆக்ஸிஜன் கொடுக்கிறது.

இப்போது உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். தேர்தலில் நாம் வாக்களிக்கும் கட்சி நமக்குச் செவி சாய்க்குமா? நம்மை மரியாதையுடன் நடத்துமா? அடிப்படை வசதிகளை ஒழுங்காகச் செய்து கொடுக்குமா? பதில் இல்லை என்றால், நாம் இன்னும் மன்னராட்சிக் காலத்திலேயே தூங்கிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

நிஜமான அதிகாரம் என்பது கோட்டையில் இல்லை, அது உங்கள் தெருமுனையில்  இருக்க வேண்டும். உண்மையான ஜனநாயகம் என்பது மக்களுக்குக் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் ஓர் அமைப்பு. அங்கேதான் பெண்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் நிஜமான பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

ஆக, ஜனநாயகம் என்பது ஏதோ ஒரு பெரிய நிறுவனம் அல்ல, அது நம் கலாசாரமாக மாற வேண்டும். அதன்படி, அரசாங்கத்துக்குக் கொஞ்சம் மனிதாபிமானம் வர வேண்டும். இது கொஞ்சம் கஷ்டம்தான், இருந்தாலும் நாம் ஆசைப்படலாம்.

அடித்தட்டு மக்கள் அச்சம் நீங்கி, அதிகாரத்தில் பங்கெடுக்காத வரை, ஜனநாயகம் என்பது சர்வாதிகாரிகள் போட்டுக்கொள்ளும் ஒரு ரேமண்ட் கோட் மட்டுமே. கோட்டுகளே கோட்டைகளை ஆண்டு கொண்டிருந்தால் எப்படி? நம் கோவணங்களுக்கும் அங்கே குரல் இருக்க வேண்டும்.

அந்தக் குரலுக்கு ஓர் ஆதார சுருதிதான் ஓட்டு. அந்த ஓட்டுக்கு நோட்டை வாங்கினால் அந்தக் குரல் கம்மி விடும். நீங்கள் எஜமானர்களின் அடிமைகள்தான் என்பது நிரூபணமாகி விடும்.

நீங்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் குரல்வளையைக் காத்துக் கொள்ளுங்கள் மக்களே!

*****

குடவோலை முதல் ஓசி குக்கர் வரை – ஒரு பரிணாம வளர்ச்சி!

குடவோலை முதல் ஓசி குக்கர் வரை – ஒரு பரிணாம வளர்ச்சி!

தேர்தல் நடத்துவதில் உலகிற்கே தமிழர்கள்தான் முன்னோடி என்பதற்கு ஆயிரம் வருட பழைய குடவோலை முறையைச் சான்றாக வைத்திருக்கிறோம். உத்தரமேரூர் கல்வெட்டுகள் தமிழர்களை நெஞ்சை நிமிர்த்த வைக்கின்றன.

அன்று ஒருவர் தேர்தலில் நிற்க வேண்டுமானால் வரி கட்டியிருக்க வேண்டும், நன்னடத்தை உள்ளவராக இருக்க வேண்டும், மிக முக்கியமாக நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள். அது சோழர்கள் காலம். இது அமைதிப்படை நாகராஜ சோழர்களின் காலம்.

இன்று நிபந்தனைகள் எல்லாம் அப்டேட் ஆகிவிட்டன. இன்று நீங்கள் வரி செலுத்த வேண்டாம், நன்னடத்தை உள்ளவராக இருக்க வேண்டாம், நேர்மையாளராக இருக்க வேண்டாம். திரையில் நான்கு பேரை உதைத்து பஞ்ச் பேசத் தெரிந்தால் போதும் அல்லது ஜாதி, மதம், பணம் எனும் புனிதப் பொக்கிஷங்களை கையில் வைத்திருந்தால் போதும். கட்டப்பஞ்சாயத்துப் பண்ணத் தெரிந்தால் போதும். ஜனநாயகம் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கும்.

தேர்தல் அறிக்கை என்பது ஒரு காலத்தில் கொள்கை விளக்கக் குறிப்பாக இருந்தது.

விவசாயிகள் நலன், தொழிலாளர்கள் நலன், சமதர்மம், சமத்துவம், பெண்களுக்கு முன்னுரிமை என்று அன்று சீரியஸாக தேர்தல் அறிக்கைகளை எழுதினார்கள். நிஜமாகவே அது ஒரு ஜனநாயகக் காலம்.

ஐந்தாண்டுத் திட்டங்கள், ஏழ்மை ஒழிப்பு, பொதுத்துறை வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, தன்னிறைவு என்று கனவுகள் எல்லாம் தேர்தல் அறிக்கைகளுக்கு இருந்தன. அந்தக் கனவுகள் இன்றும் கனவுகளாகவே இருப்பது தனிச்சிறப்பு.

ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற தேர்தல் அறிக்கைத்தான் அதுவரை இருந்த அனைத்து அறிக்கைகளையும் புரட்டிப் போட்ட புரட்சி அறிக்கை. மக்களின் வயிற்றுக்கும் அரசியலுக்கும் உள்ள நேரடித் தொடர்பை மிகச்சரியாகக் கண்டுபிடித்த புள்ளி அதுதான்.

அதன்பிறகு வந்த தேர்தல் அறிக்கைகள் எல்லாம் மெல்ல மெல்ல ஒரு ஷாப்பிங் லிஸ்ட் போல மாறின.

வீட்டுக்கு ஒரு டிவி பார்த்தால் அறிவு வளரும் என்று நம்பப்பட்டு, இலவச டிவி எனும் வாக்குறுதி தேர்தல் அறிக்கையைப் படமாகவே ஓட விட்டது. சீரியல் பார்த்து மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நம்பிய தேர்தல் அறிக்கையோ அது என்னவோ?

படிப்படியாக மடிக்கணினி முதல் மின்விசிறி வரை ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்குத் தேவையான அத்தனையையும் வாக்குறுதிப் பட்டியலில் கொண்டு வந்தார்கள் தேர்தல் வாக்குறுதிக்காரர்கள். இப்போது ப்ரிட்ஜ் வரை வந்து வருங்காலத்தில் ஏசி வரை முன்னேறும் போல வாக்குறுதிகள்.

இலவசப் பேருந்துப் பயணம், இலவச சைக்கிள், இலவச மின்சாரம் போன்றவை ஒருபுறம் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்தாலும், தேர்தல் அறிக்கை என்பது இப்போது யார் அதிகப்படியாகக் கொடுப்பார்கள்? என்கிற ஏலப் பட்டியலாகிவிட்டது.

கட்சிகளும் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் போட்டிப் போட்டுக் கொண்டு பார்முலா ஒன் கார் ரேஸ் பந்தயத்தையே நடத்துகின்றன.

அன்று தமிழகத்தில் கொடுக்கப்படும் இலவசங்களைக் கேலி செய்த தேசியக் கட்சிகள், இன்று பிற மாநிலங்களில் அதைவிடப் பெரிய கேஷ்பேக் ஆஃபர்களை அறிவிக்கின்றன.

ஆக இவையெல்லாம் தேவையில்லையா என்பதை விட கேள்வி இதுதான். கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, அதற்காக லட்சங்களை செலவழிக்க வைத்து விட்டு, மாதம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாயைத் கையில் திணிப்பது எப்படிபட்டக் கணக்கு?

அதுதான் தெரியவில்லை என்கிறீர்களா? அதுதான் நம் பிரச்சனையே.

பின்தங்கிய மக்களை முன்னேற்றச் சலுகைகள் தேவைதான், மறுப்பதற்கில்லை. ஆனால், தரமான இலவசக் கல்வியும், இலவச மருத்துவமும் கொடுக்க வேண்டிய ஆட்சிகள், அதற்குப் பதில் டிப்ஸ் போன்ற ஒரு தொகையை தந்து விட்டு, மீதி எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கை கழுவுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்.

இப்போது வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். என்ன நடந்திருக்கிறது?

பழங்காலத்தில் குடத்தில் ஓட்டுப் போட்டோம். இன்று ஓட்டுப் போட குக்கர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். வளர்ச்சி என்பது இதுதான் போலிருக்கிறது!

*****

தேர்தல் அரசியல் – ஒரு காஸ்ட்லி திருவிழா!

தேர்தல் அரசியல் – ஒரு காஸ்ட்லி திருவிழா!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்நாட்டில் ஒருவிதமான ஹார்மோன் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டால் போதும், தெருவெங்கும் வேட்பாளர்கள் பல்லைக் காட்டியபடி உங்கள் கைகளைப் பிடித்துக் குலுக்க அலைவார்கள். ஆனால், இந்தத் தரையிறங்கிச் செய்யும் வேலையை விட, உங்கள் தலைக்குள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் போலத் தகவல்களை ஏற்றும் வேலையை ஊடகங்கள்தான் கச்சிதமாகச் செய்கின்றன.

அகில இந்திய அளவில் பார்த்தால் தேர்தல் ஹாட் வேவ்ஸில் தொலைக்காட்சிதான் முதலிடம், பத்திரிகை இரண்டாம் இடம், ரேடியோ மூன்றாவது இடம். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு விசேஷம் உண்டு. இந்திய சராசரியை விட நாம் இந்த ஊடகங்களை இரண்டு மடங்கு அதிகமாகப் பயன்படுத்துகிறோம். அதாவது, மற்றவர்கள் ஒரு முறை செய்தியைப் பார்த்தால், நாம் இரண்டு முறை பார்த்துவிட்டு, அதில் மூன்றாவதாக ஒரு உள்நோக்கத்தையும் தேடிக் கண்டுபிடிப்போம்.

முன்பெல்லாம் தேர்தல் காலங்களில் தூர்தர்ஷனில் அரசியல் தலைவர்கள் வந்து உட்கார்ந்து, ஸ்கிரிப்ட் வாசித்துவிட்டுப் போவார்கள். அது ஒரு பிளாக் அண்ட் ஒயிட் காலத்து அமைதிப் புரட்சி. ஆனால் இப்போது அப்படியல்ல, தனியார் சேனல்களும், எப்.எம் ரேடியோக்களும் தேர்தல் காலத்தைச் சில ஆயிரம் கோடிகளுக்கான அறுவடைக்காலமாக மாற்றியிருக்கின்றன.

2021இல் மெதுவாக எட்டிப்பார்த்த டிஜிட்டல் பிரசாரம், 2024இல் விஸ்வரூபம் எடுத்து, இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் நம் போன் திரையையே கிழித்துக்கொண்டு வெளியே வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

யூடியூப் ஒரு பக்கம் இருக்கட்டும், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் தமிழர்களாகிய நாம் அகில இந்தியாவையே ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறோம்.

விளம்பரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் காட்டிவிட முடியாது. தேர்தல் ஆணையத்திடம் அனுமதிச் சான்றிதழ் வாங்க வேண்டும். தனிநபர் தாக்குதல், ஆபாசம், வன்முறை போன்ற மசாலாக்கள் இருந்தால் கமிஷன் கத்திரிக்கோல் போடும்.

அதற்குட்பட்டு, அதன்படி ஒவ்வொரு கட்சியும் தேர்தல் முடிந்ததும், நாங்கள் இவ்வளவுதான் அட்வர்டைஸ்மென்ட் செலவு செய்தோம், என்று ஒரு பட்டியலைத் தரும். அது நம்பினால் நம்புங்கள் ரகம்தான் என்றாலும் அந்தச் செலவுத்தொகையே உங்களை மயங்கடிக்கும்.

இந்தச் செலவு கணக்குகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று நீங்கள் யோசித்தால், உங்கள் அரசியல் அறிவு அபாரமானது!

ஆட்சிகள் மாறலாம், ஊடகங்கள் மாறலாம், ஆனால் விளம்பரங்களுக்காகக் கொட்டப்படும் கோடிகள் மட்டும் ஒவ்வொரு முறையும் வீக்கம் கண்டு கொண்டே இருக்கின்றன.

நாம் அந்த விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, மீண்டும் அதே மிக்ஸி, கிரைண்டர், ப்ரிட்ஜ், உரிமைத்தொகை, விலையில்லா கூப்பன் என வாக்குறுதி சுழற்சிக்குள் சிக்கிக்கொள்கிறோம்.

அடுத்தமுறை உங்கள் போனில் ஒரு விளம்பரம் வரும்போது, அதன் ஓரத்தில் இருக்கும் அனுமதி எண்ணைப் பாருங்கள். அது வெறும் எண் அல்ல, அது அந்த விளம்பரத்திற்காகச் செலவழிக்கப்பட்ட உங்கள் உரிமையின் விலைப்புள்ளி. உங்கள் காசை எடுத்து உங்களுக்கே வைக்கப்பட்ட சூன்யம் அது என்பதைப் புரிந்து கொண்டால், ஜனங்களும் தப்பித்துக் கொள்வார்கள். ஜனநாயகமும் தப்பித்துக் கொள்ளும்.

*****

20 Apr 2026

விருதுநகர் – மீண்டும் மீண்டும் விபத்து!

பட்டாசு, சாவு மற்றும் சில அனுமதிகள்!

ஏப்ரல் 19, 2026 – ஞாயிற்றுக் கிழமை.

விருதுநகர் அருகே ஒரு தனியார் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு 25 பேர் இறந்திருக்கிறார்கள். வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில். ஆலை உரிமையாளரின் லாப வெறிக்கு விடுமுறை இல்லாததால், தொழிலாளர்கள் சரவெடி தயாரிப்பில் மும்முரமாக இருந்திருக்கிறார்கள்.

சரியாக 3.30 மணி. ஒரு அறையில் உராய்வு ஏற்பட, அது சங்கிலித் தொடராக அடுத்தடுத்த மூன்று அறைகளையும் தரைமட்டமாக்கியிருக்கிறது.

முடிவு?

25 பேர் மரணம்.

இதில் 21 பேர் பெண்கள் அக்காள், தங்கை உட்பட.

பட்டாசு ஆலைகளில் தீக்குச்சிகளை விட மலிவானது ஏழைத் தொழிலாளர்களின் உயிர்தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் இடிபாடுகளை அகற்ற பொக்லைன் கொண்டு வந்த போது, அங்கிருந்த எஞ்சிய' மருந்துகள், நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்று நினைவூட்டும் விதமாக மீண்டும் வெடித்தன. இதில் உதவி தீயணைப்பு அலுவலர், பெண் காவலர்கள் என மேலும் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்கள்.

வழக்கமான சம்பிரதாயப்படி மேலிடத்திலிருந்து இரங்கல்கள் மழையாய் பொழிந்தன. குடியரசுத் தலைவர் கவலையளிக்கிறது என்று சொல்லியிருக்கிறார். பிரதமர் மிகுந்த வருத்தப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் மனவேதனை அடைந்திருக்கிறார். முதல்வர் வேதனையளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் அமைச்சர் ஒரு முக்கியமான பாயிண்டாக, நிவாரணம் கொடுக்க ஆசைதான், ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் குறுக்கே நிற்கிறதே என்றிருக்கிறார். அதாவது, உயிர்கள் போயிருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதிச் சீட்டு கிடைத்தால் ஒழிய, அந்தப் பிணங்களுக்கு விலை பேச முடியாது என்கிற எதார்த்தத்தைச் சொல்லியிருக்கிறார்.

வெடிவிபத்து நடந்த ஆலையின் உரிமையாளர் ஈஸ்வரி என்பவர் முன்னாள் ஊராட்சித் தலைவர் மனைவி என்பதால் இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

அதை விட இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், கடந்த ஆண்டுதான் இந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாம். அப்புறம் எப்படி மீண்டும் அனுமதி கிடைத்தது?

இதற்கு என்ன பதில் சொல்வது?

இந்தியாவின் மிகச்சிறந்த மாயாஜால வித்தையான ஊழல் அல்லது அலட்சியம் என்று பதில் சொல்வதா? விருதுநகர் என்றாலே அப்படித்தான் என்று பதில் சொல்வதா?

ஒரே அறையில் 30 பேரை அடைத்து வைத்து வேலை வாங்கியிருக்கிறார்கள். இப்போது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து, ஞாயிற்றுக்கிழமை ஏன் வேலை செய்தார்கள்? என்று தீவிரமாக, அதாவது தேர்தல் முடியும் வரை விசாரிப்பார்கள்.

இதனால் அறிய வருவது என்னவென்றால், நீங்கள் தீபாவளிக்கு வெடிக்கும் ஒவ்வொரு சரவெடியிலும் யாரோ ஒரு தொழிலாளியின் சாம்பல் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

உண்மை கசக்கும் என்றாலும் உண்மை இதுதான். தீபாவளி இனிப்புகளில் அந்தக் கசப்புகள் மறைந்து போகுமோ என்னவோ!

*****

தேர்தல் 2026 – ஜெயிக்கப் போவது யாரு?

தேர்தல் 2026 – ஜெயிக்கப் போவது யாரு?

தமிழகம் இந்தத் தேர்தலில் ஒரு விசித்திரமான மசாலா தோசையைப் போல வெந்து கொண்டிருக்கிறது. அதற்குத் தகுந்தாற் போல கோடை வெயில் வேறு போட்டு பொளக்கிறது. இதுவரை இட்லியா அல்லது தோசையா? என்று கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களிடம், திடீரென்று யாரோ ஒருத்தர் பீட்சாவைக் கொண்டு வந்து நீட்டியிருக்கிறார். அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டியது உங்களுக்கான குறுக்கெழுத்துப் புதிர்.

இப்படியெல்லாம் பீடிகைப் போடாமல் நேரடியாக விசயத்திற்கு வந்தால் நிலைமை இதுதான். தமிழகத் தேர்தல் களம் இப்போது ஒரு மல்டி ஸ்டாரர் சினிமா போல இருக்கிறது.

ஸ்டாலின், எடப்பாடி, விஜய், சீமான்.

நான்கு ஹீரோக்கள்.

அதன் கதை மற்றும் கிளைமாக்ஸ்?

அதுதான் தேர்தல் 2026 – ஜெயிக்கப் போவது யாரு?

தமிழகத்தில் ஐந்து கோடியே அறுபத்தேழு லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கைதான் அதிகம். மேத்தமடிக்கலாகப் பார்த்தால் பெண்கள்தான் கோட்டையைத் தீர்மானிக்கப் போகிறார்கள்.

இதில் 12 லட்சம் பேர் கன்னி வாக்காளர்கள். இவர்களுக்கு எம்.ஜி.ஆரைத் தெரியாது, கருணாநிதியின் அடுக்குமொழி வசனம் புரியாது, ஜெயலலிதாவின் கம்பீரம் தெரியாது. இவர்கள் அறிந்ததெல்லாம் வெறும் யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் லியோவும் கோட்டும் மட்டும்தான். இவர்களும் இந்தத் தேர்தல் பார்ட்டிசிபேட் ஆகிறார்கள். ஸோ, இவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் பிரச்சார நிலவரம் ஒரு பக்கம் என்றால், களநிலவரம் எப்படி இருக்கிறது?

டீ விலை 12 ரூபாய் ஆனது ஹாட் டாபிக்காக இருக்கிறது. சுடச்சுட டீ விலை ஏறியது போல வருமானம் ஏறவில்லை என்று பலரது கவலையாக இருக்கிறது. இந்தக் குறையை அதிகப்படியாக வந்த நலத்திட்டங்கள் போக்கியிருக்கின்றன.

பெண்களுக்கான உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணங்கள் ஆகியன ஆண் வாக்காளர்களை விட அதிகமிருக்கும் பெண் வாக்காளர்களை அட்ராக்ட் செய்யும் மேக்னடிக் பார்முலா ஒன் திட்டங்கள்.

இப்படி நலத்திட்டங்கள் நிறைய வந்தாலும், கஞ்சா குடியர்களும், டாஸ்மாக் வெறியர்களும், பெண்களைச் சீண்டும் காமுகர்களும் எப்படி நிறைய வருகிறார்கள்? என்பது வாக்காளர்களான பொதுமக்கள் மனதில் எழும் கேள்விகள். லாஜிக்காக இந்த விசயம் ஆளும் திமுகவுக்கு நெகடிவ் பாய்ண்ட்.

இந்த லாஜிக் ஒருவேளை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால், எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அந்த சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்போரின் லாஜிக் திமுகவை மீண்டும் கொண்டு வரவும் வாய்ப்பிருக்கிறது.

ஆளும் திமுகவின் ப்ளஸ் பாய்ண்ட் அதன் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் களப்பணிகள். அதை பீட் பண்ணுவது சாதாரணமல்ல. மற்றவர்கள் இன்னும் ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் ஷூட்டிங் முடித்து எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அப்படியானால் எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலை? அதிமுக நிறைய இடங்களைப் பிடிப்பதில் சில பலவீனங்களைச் சந்திக்கிறது. அவை என்னவென்றால், அதிமுக ஓபிஎஸ், செங்கோட்டையனை இழந்திருக்கிறது. அன்புமணி – ராமதாஸ் என இரண்டாகப் பிரிந்திருக்கும் பாமகவின் அன்புமணி பக்கத்தைத் தன் கூட்டணியில் வைத்திருக்கிறது. ராமதாஸ் சசிகலாவோடு அமைத்திருக்கும் கூட்டணி வாக்குகளைப் பிரிக்கக் கூடும். அதிமுக கூட்டணியை மேலாண்மை செய்வது அதிமுகவா? பாஜகவா? என்ற கேள்வி தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது. இவையெல்லாம் மைனஸ் பாய்ண்டுகளாக நீடிப்பதால் பெரும்பான்மையை எட்டிப் பிடிப்பது அதிமுகவுக்கு தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதைப் போலத்தான் இருக்கும்.

அடுத்து, தவெகவின் நிலை? தமிழகத்தில் புதிதாகக் கட்சித் தொடங்கும் பிரபலங்கள் கணிசமாக வாக்குகளை அறுவடை செய்தது கடந்த கால வரலாறு. அந்த வகையில் விஜய் திமுக அல்லது அதிமுகவின் ஓட்டுகளைப் பிரித்து மேய்ந்தால் இரண்டுக்கும் போதுமான இடங்கள் கிடைக்குமா என்பது எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும் என்பதைப் போன்ற கேள்வி.

மேற்படி நிலையை நாம் எதனோடு ஒப்பிட வேண்டும் என்றால், 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் போது விஜயகாந்தின் தேமுதிக அரசியல் வரவினால், திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது ஜெயலலிதா ஆளும் திமுகவை மைனாரிட்டி அரசு என விமர்சித்தது தனிக் கதை. அப்படி ஒரு நிலைமை விஜய்யால் திமுகவுக்கு ஏற்படுமா? அல்லது அதிமுக எதிர்பார்க்கும் வெற்றி வாய்ப்பைப் பறிக்குமா? என்பது மக்கள் மனதில் ஏப்ரல் 23 அன்று வெடிக்கப் போகும் லாஜிக்கைப் பொருத்தது.

தவெக எவ்வளவு வாக்குகளைப் பெறும் என்று, விஜய்க்குக் கூடும் கூட்டத்தைக் கொண்டு அப்ராக்சிமேட்டாகவும் மேத்தமடிக்கலாகவும் யோசிக்கும் போது அது ஐம்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி வாக்குகளாக இருக்கலாம். இது தமிழகத்தின் மொத்த வாக்குகளில் பத்திலிருந்து இருபது சதவீதமாகும். அப்படி நடந்தால், இது விஜயகாந்தின் அரசியல் என்ட்ரியின் போது நடந்ததை விட அதிகம்தான்.

ஆனால், முக்கியமான கேள்வி என்னவென்றால், விஜய் கோட்டையைப் பிடிக்க முடியுமா? ஒரு தலைவரை மட்டும் வைத்து ஒரு கட்சி ஜெயித்து விட முடியாது. லோக்கலில் இறங்கி அடிக்கும், தட் மீன்ஸ் வேலை பார்க்கும் தொண்டர்கள் வேண்டும். அந்த வகையில் கிரவுண்ட் லெவலில் ஆடகள் இல்லாததால் தவெக கோட்டையைக் கோட்டை விடவும் வாய்ப்பு இருக்கிறது.

அதுமட்டுமல்ல, விஜய் இன்னும் எல்லாத் தொகுதிகளுக்கும் விசிட் அடிக்கவில்லை. ஸ்கிரீனில் பார்த்த முகத்தை நேரில் பார்க்கவில்லை என்றால், தமிழக வாக்காளனுக்குக் கொஞ்சம் சுணக்கம் வந்து விடும். விஜய் பிரசாரத் திட்டங்களில் ஏதோ ஒரு பக் இருக்கிறது. கூட்ட நெரிசல், மயக்கமடிப்போர், ஆக்சிடென்ட் ஆவோர் என்று விஜய் கூட்டங்களுக்கான பிரேக்கிங் நியூஸ் விஜய்யின் மூவ்மெண்டுக்கு அடிக்கடி பிரேக் அடித்துக் கொண்டிருக்கிறது.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். சீமான்? எப்படியும் விஜய் சீமானைப் பின்னுக்குத் தள்ளி விடுவார் போலிருக்கிறது நிலைமை. அவர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தைத் தக்க வைப்பாரா என்பதே எஞ்சியிருக்கும் கேள்வி.

இந்த மல்டி ஸ்டாரர் படத்தில் விஜய், சீமானைக் கழித்து விட்டுப் பார்த்தால் திமுகவும் அதிமுகவும் பிரதான போட்டியாளர்களாக மோத இருக்கிறார்கள். இவர்களை எந்த அளவுக்கு விஜய்யின் தவெக பாதிக்கப் போகிறது என்பது மே 4 தரும் கிளைமாக்ஸில்தான் தெரிய வரும்.

அந்தக் கிளைமாக்ஸில் ஒருவேளை மேஜிக் நம்பரான 118ஐ யாரும் எளிதில் தொட முடியாமலும் போகலாம்.  20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மைனாரிட்டி அரசாங்கம் அமையவும் அமையலாம். நாம் மே 4 வரை பொறுத்திருப்பது நல்லது.

*****

19 Apr 2026

பிள்ளைகளும் பணமும் – ஒரு நடுத்தர வர்க்கக் திகில் கதை!

பிள்ளைகளும் பணமும் – ஒரு நடுத்தர வர்க்கக் திகில் கதை!

இன்றைய உலகம் ராக்கெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வேகத்தில் பிள்ளைகள் எங்கே போகிறார்கள் என்று பார்த்தால், நேராக ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களுக்குள் போய் விழுகிறார்கள்.

முன்னெல்லாம் பணம் என்றால் என்ன? என்று கேட்டால், அது ஒரு காகிதம் என்பார்கள் பிள்ளைகள். இப்போது கேட்டால், அது அப்பாவின் போனில் இருக்கும் ஒரு ஓடிபி என்கிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி பிள்ளைகளின் மூளையை விட, அவர்களின் ஆசை லிஸ்ட்டைப் பெரிதாக்கியிருக்கிறது.

குழந்தைகள் இப்போது கார்ட்டூன் பார்ப்பதில்லை, விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சம் கார்ட்டூன் பார்க்கிறார்கள். அந்த விளம்பரத்தில் வரும் ரோபோ பொம்மையைப் பார்த்ததும், இது இல்லை என்றால் என் வாழ்க்கையே சூன்யம் என்கிற லெவலுக்கு அடம் பிடிக்கிறார்கள். மார்க்கெட்டிங்காரர்களுக்குத் தெரியும், அப்பாவை விடக் குழந்தையை நம்பினால்தான் கல்லா கட்ட முடியும் என்று.

பள்ளிக்கூடத்தில் பாடம் ஏறுகிறதோ இல்லையோ, பக்கத்து சீட்டு மாணவி வைத்திருக்கும் புது பிராண்ட் பேனா மட்டும் துல்லியமாகத் தெரிகிறது. அவ வச்சிருக்கா, எனக்கு வேணும், என்பதுதான் இன்றைய குழந்தைகளின் தாரக மந்திரம். இது தேவை அல்ல, இது ஒரு வகையான கௌரவப் போர். இதில் தோற்றுப் போனால் சமூகத்தில் தலை காட்ட முடியாது என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்.

பெற்றோர்களும் இதற்கு ஒரு காரணம். பிள்ளைகள் கேட்ட உடனே, ஏதோ ஏடிஎம் மெஷின் மாதிரி பொருட்களைத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாமதான் கஷ்டப்பட்டோம், புள்ளைங்க சந்தோஷமா இருக்கட்டுமே என்கிற அந்தச் சென்டிமென்ட் இருக்கிறதே, அதுதான் ஆபத்து.

எதை கேட்டாலும் உடனே கிடைத்தால், பணத்தின் மதிப்பு எப்படித் தெரியும்? ரூபாய் நோட்டை வெறும் காகிதமாகத்தான் பார்ப்பார்கள்.

இந்தச் சின்னச் சின்ன ஆசைகளை இப்போதே கிள்ளி எறியவில்லை என்றால், வளர்ந்த பிறகு அவர்கள் கிரெடிட் கார்டு என்கிற எமனிடம் சிக்கிக் கொள்வார்கள். அதற்கு ஆண்டுக்கு 40% வட்டி. இதைக் கட்டவே அவர்கள் ஆயுள் முழுக்க ஓட வேண்டியிருக்கும். கடைசியில், ஒரு வீட்டுக் கடன் வாங்கக் கூடத் தகுதி இல்லாமல், சிபில் ஸ்கோர் பாதாளத்தில் கிடக்க, நடுத்தர வர்க்கத் துயரம் ஆரம்பமாகும்.

இதற்கு என்னதான் தீர்வு

பிள்ளைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சொல்லிக் கொடுக்க பொருளாதாரப் பாடம் தேவையில்லை, நடைமுறை போதும்.

ஒரு நாள் உங்கள் அலுவலகத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். அங்கே பாஸ் கொடுக்கும் டார்ச்சரையும், டிராஃபிக்கில் நீங்கள் படும் அவஸ்தையையும் பார்த்தால், அடுத்த முறை ஐஸ்கிரீம் கேட்கும்போது ஒரு நிமிடம் யோசிப்பார்கள்.

மாதம் ஒரு 500 ரூபாயைக் கொடுத்து, உன் தேவையை நீயே பார்த்துக்கோ, என்று சொல்லிப் பாருங்கள். அந்த 500 ரூபாயை வைத்துக்கொண்டு அவர்கள் படும் பாடுதான் அவர்களுக்குப் பெரிய பாடம்.

புத்தகம் வாங்குவது தேவை, ஆனால் அந்த 5000 ரூபாய் வீடியோ கேம் என்பது வெறும் ஆசை என்பதைப் புரிய வையுங்கள்.

மொத்தத்தில், பிள்ளைகளைச் செல்லம் கொடுத்துக் கெடுப்பதை விட, கொஞ்சம் கணக்கு காட்டி வளர்ப்பதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.

சிறு வயதில் உண்டியலில் சேமிக்கும் அந்த ஒரு ரூபாய், பின்னாளில் அவர்கள் கடனாளியாகாமல் தடுக்கும் இன்சூரன்ஸ்.

இல்லையென்றால், நீங்கள் சேர்த்து வைத்த சொத்து எல்லாம் அவர்களின் ஒரு மாத ஆன்லைன் ஷாப்பிங் பில்லுக்கே சரியாகப் போய்விடும்!

இனி என்ன செய்வது என்பது ஒவ்வொரு பெற்றோரின் முடிவுதான். பெற்றோரின் முடிவு குழந்தைகளைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். விசயம் அவ்வளவுதான்.

*****

தொகுதி மறுவரையறை மசோதா – நடந்தது என்ன?

தொகுதி மறுவரையறை மசோதா – நடந்தது என்ன?

தொகுதி மறுவரையறை மசோதா என்ற பெயரைக் கேட்டாலே ஏதோ தையல் கடையில் சட்டைக்கு அளவு எடுப்பது போல இருக்கிறதல்லவா? கிட்டத்தட்ட அதுதான். ஆனால் இங்கே தைக்கப்படுவது சட்டை அல்ல, நம் நாட்டின் அரசியல் வரைபடம்.

தற்போது லோக்சபாவில் 543 பேர் இருக்கிறார்கள். இதை இனி இதை 815 ஆக ஆக்கப்போகிறார்களாம். அதாவது 50 சதவீத டாப்-அப். அதுதான் இந்த மசோதா.

இந்தியாவில் மக்கள் தொகை கூடிக் கொண்டே போகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை அப்படியே இருக்கிறது. இது எப்படி இருக்கிறதென்றால், பத்து பேர் இருக்கும் குடும்பத்தில் ஒரே ஒரு ‘பேமிலி பேக் பிரியாணியை வைத்துக்கொண்டு, எல்லோருக்கும் லெக் பீஸ் வேணும் என்று அடம் பிடிப்பது போலத்தான்.

அதனால், எந்த ஊரில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அதற்கேற்ப எம்.பிக்களைப் பிரித்துக் கொடுப்போம் என்பதுதான் இந்த மசோதாவின் அடிப்படை நோக்கம்.

நோக்கம் சரியாகத்தான் இருக்கிறது என்று நினைத்தால், இங்கேதான் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் அரசு சொன்னதைக் கேட்டு, பெற்றால் டூ, இல்லையேல் ஒன் என்று குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப் பின்பற்றின. விளைவு? மக்கள் தொகை குறைந்தது.

வடக்கிலோ நிலைமை வேறு. மக்கள் தொகையே மாபெரும் சக்தி, என்று ராகுல் காந்தி ஸ்டைலில் கிளம்பி, எண்ணிக்கையைப் பெருக்கிவிட்டார்கள்.

இப்போது தொகுதி மறுவரையறை வந்தால், வட மாநிலங்கள் நாங்கள் நிறையப் பேர் இருக்கிறோம், அதனால் எங்களுக்கு அதிக எம்.பி சீட் கொடுங்கள் என்று கேட்பார்கள், ஹோம்வொர்க் செய்யாத பையனுக்கு அதிக மார்க் போடுவது போல!

ஆனால், தென் மாநிலங்களின் நிலைமை. நாங்கள் சமத்தாகச் சொன்னதைக் கேட்டோம், அதற்காக எங்கள் சீட்டைக் குறைக்கிறீர்களே? என்பார்கள், கிளாஸில் அமைதியாக இருந்ததற்குத் தண்டனை கொடுப்பது போல!

இப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்றால், நாடாளுமன்றத்தில் இருக்கைகள் கூடும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை அவ்வளவு பெரிதாகக் கட்டியதே இதற்காகத்தான். சுமார் 800க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் சரியாகச் சொன்னால் 815 எம்.பிக்கள் அமர்வார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், குடும்பக் கட்டுபாடு செய்த மாநிலங்கள் அரசியல் பலத்தை இழக்கும். குடும்பக் கட்டுபாட்டைக் காற்றில் பறக்க விட்ட மாநிலங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும்.

ஜனநாயகத்தில் தலைகளுக்குத்தான் மதிப்பு, மூளைகளுக்கு அல்ல என்பதை இந்த மசோதா நிரூபித்து விடலாம்.

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு உங்கள் ஊர் தொகுதி பெயர் மாறலாம், ஆனால் உங்கள் தெருவில் இருக்கும் அந்தப் பாதாளச் சாக்கடை ஓட்டை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கலாம். அது வேறு விசயம்.

இப்போது விசயத்திற்கு வருவோம்.

இந்த மசோதாவுக்குத் தென் மாநிலங்களின் எதிர்ப்பை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கணக்குப் போட்டுக் காண்பித்தார்.

தமிழ்நாட்டில் 39 ஆக இருப்பதை 59 ஆக்குவோம். அதாவது எம்.பிக்கள் சீட். கேரளாவில் 20ஐ 30 ஆக்குவோம். மொத்தமாகத் தெற்கில் 129லிருந்து 195 சீட்கள் வரும் என்றார்.

அதாவது, தெற்கு மாநிலங்களின் பலம் 23.76 சதவீதத்திலிருந்து 23.87 சதவீதமாக உயருமாம். அதாவது, ஒரு கிலோ பிரியாணியில் ஒரு பருக்கை அரிசியை அதிகமாகப் போடுவது போல.

வடக்கில் இந்த எண்ணிக்கையைப் போட்டால், 815 – 195 = 620. அதாகப்பட்டது, மொத்த அதிகரிப்பு தொகுதிகள் மைனஸ் தென் மாநிலங்கள் என்றால் மிச்சமிருப்பது வடமாநில அதிகரிப்புத் தொகுதிகள்தானே. அப்படிப் பார்த்தால் 620 என்ற எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு என்பது சர்வ சாதாரணமாக வந்து விடுகிறதே. இன்னும் சரியாகச் சொன்னால் நான்கில் மூன்று பங்கு எம்பிக்கள் வட மாநில எம்.பிக்களாகவே இருப்பர்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே, தென் மாநிலங்களில் ஜெயிக்காமலேயே, வட மாநிலங்களில் ஜெயித்தால் ஆட்சியை அலேக்காகத் தூக்கி விடலாம். சட்டத் திருத்தங்களையும் ஜரூராக முடித்து விடலாம்.

இதனால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது இந்த மசோதா.

ஆனால், கிளைமாக்ஸ் என்னவென்றால், இறுதியில் புஸ்ஸென்று போய் விட்டது.

என்ன நடந்தது என்றால், நடந்தது இதுதான்.

528 பேர் ஓட்டுப் போட்டார்கள். அதில் 298 பேர் ஆஹா, சூப்பர் மசோதா என்று ஆதரவு தந்தார்கள். ஆனால், சட்டப்படி மூன்றில் இரண்டு பங்கு அதாவது 352 பேர் ஆதரவு வேண்டும்.

கடைசியில் பார்த்தால், 54 ஓட்டுகள் குறைவாகப் பெற்று மசோதா பரிதாபமாகத் தோற்றுப்போனது.

தமிழ்நாட்டின் ரியாக்‌ஷன் தான் இதில் ஹைலைட். தில்லி ஒரு பவுலர் என்றால், தமிழ்நாடு ஒரு ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மேட்சை முடித்துவிட்டது. தமிழ்நாட்டின் எதிர்ப்பு அப்படி இருந்தது.

முடிவு இதுதான். 815 எம்.பிக்கள் வந்து, சென்ட்ரல் விஸ்டாவில் நெருக்கிக் கொண்டு அமர்வார்கள் என்று பார்த்தால், இப்போது மீண்டும் பழைய 543 பேரே நாங்கதான் கெத்து என்று அமரப்போகிறார்கள்.

இந்தத் தோல்வியால் ஒரு விஷயம் தெளிவாகின்றது. தென் மாநிலங்களின் குரல் இன்னும் தில்லியில் கேட்கிறது. ஒருவேளை மசோதா ஜெயித்திருந்தால் தென் மாநிலங்களின் குரல்வளையைத் தூக்கிக் காயலான் கடையில்தான் போட வேண்டியிருந்திருக்கும்.

மசோதா தோற்றதால், தொகுதிப் பங்கீடு இனி மாறாது. எனவே, உங்கள் ஊர் எம்.பியிடம் அதே பழைய புகார்களை மீண்டும் கொடுக்கலாம். ஆனால் என்னதான் வந்தாலும் மாற்றம் என்பது மசோதாவில் மட்டுமே, மக்கள் வாழ்க்கையில் அல்ல என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது! என்ன செய்வது? அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டர் எப்போதோ கவுண்டர் கொடுத்து விட்டார்.

*****