11 May 2026

மௌனத்தின் மர்மமும் மற்றவர்களின் நல்ல எண்ணங்களும்!

மௌனத்தின் மர்மமும் மற்றவர்களின் நல்ல எண்ணங்களும்!

வாழ்க்கை எனக்கு மட்டும் ஏன் இப்படிப் போகிறது? – இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு தேசிய கீதம்.

இந்தக் கேள்வி எழாத நாளில்லை, இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்ததாகச் சரித்திரமுமில்லை.

இப்போது நாம் இங்கே பேசப் போவது இந்தக் கேள்வியின் மையத்தை அல்ல,  இந்தக் கேள்வியை நீங்கள் வெளியில் சொல்லக் கூடாது என்கிற பரம ரகசியத்தைதான். உங்களை அடித்துக் கேட்டாலும் கூட, ஆள் வைத்து மிரட்டிக் கேட்டாலும் கூட சொல்லி விடக் கூடாது.

உங்களுக்கு ஒரு கஷ்டம் என்று தெரிந்தால், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் ஓடி வருவார்கள். அது உங்கள் காயத்துக்கு மருந்து போட அல்ல, அந்தக் காயம் எவ்வளவு ஆழமானது என்பதை அளந்து பார்த்துவிட்டு, தங்களுக்கு அது இல்லை என்று நிம்மதி அடைவதற்காக.

நீங்கள், என் வாழ்க்கை ஏன் இப்படிப் போகிறது? என்று சொன்னால் போதும், அவர்கள் உடனே தங்கள் பையிலிருந்து ஆறுதல் என்ற பெயரில் சில விஷக் குளிகைகளை எடுப்பார்கள்.

இதெல்லாம் என்னப்பா பிரமாதம்? பக்கத்துத் தெரு பரமசிவத்துக்குக் காலைக் கடன் கழிக்கவே கடன் வாங்க வேண்டியிருக்கு தெரியுமா? என்பார்கள்.

உங்கள் துயரத்தைவிடப் பெரிய துயரத்தை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி, உங்கள் வலியை அவர்கள் அற்பமானதாக மாற்றிவிடுவார்கள்.

நீங்கள் உங்கள் குழப்பத்தைச் சொன்னால், அவர்கள் அதைத் தீர்க்க மாட்டார்கள். மாறாக, நீங்கள் இதுவரை யோசிக்காத சில புதுப் புதுத் துன்பங்களை அறிமுகப்படுத்துவார்கள்.

நீ ஏன் இது இப்படிப் போகிறது என்று கேட்கிறாய். ஆனால், உண்மை என்னவென்றால், இது இன்னும் மோசமாப் போக வாய்ப்பிருக்கிறது என்று பேதியைக் கிளப்புவதைப் போலப் பீதியைக் கிளப்புவார்கள். உங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தை ஒரு திகில் சினிமாவாக மாற்றி உங்கள் கையில் கொடுப்பார்கள்.

இறுதியில், உங்கள் வாழ்க்கை போவதைப் பற்றி வருத்தப்பட்ட நீங்கள், வாழ்க்கை ஏன் இன்னும் போகாமல் இங்கேயே நிற்கிறது? என்று வருத்தப்பட ஆரம்பிப்பீர்கள்.

வாழ்க்கை ஏன் எனக்கு மட்டும் இப்படிப் போகிறது என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை. அது கடவுளுக்கே தெரியாத ரகசியம். ஏனெனில் அவர்தான் அந்தத் திரைக்கதையை எழுதிவிட்டு, இடையில் தூங்கிப் போனவர்.

எனவே, இந்தக் கேள்வியை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். நீங்கள் மௌனமாக இருக்கும் வரை, மற்றவர்கள் நீங்கள் ஏதோ ஒரு பெரிய மிஷன் அல்லது தியானத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

நீங்கள் வாயைத் திறந்து ஏன் இப்படி? என்று கேட்ட அடுத்த நிமிடம், உங்கள் மீதான மதிப்பு குறைந்து, நீங்கள் ஒரு பாவப்பட்ட ஜீவன் என்ற முத்திரை குத்தப்படுவீர்கள்.

விசயம் இதுதான்.

உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது என்பது முக்கியமல்ல, அது போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம்.

நதி ஓடுகிறது என்றால் அது இயற்கை. ரயில் ஓடுகிறது என்றால் அது போக்குவரத்து. வாழ்க்கை ஓடுகிறது என்றால் ஓடி விட்டுப் போகட்டுமே. அது தலைவிதி.

அதை ஏன், எதற்கு என்று கேட்டால், இவனுக்கு ஒன்றும் தெரியவில்லை, என்று நினைத்து உலகம் உங்களைத் துரத்த ஆரம்பிக்கும்.

இனிமேல், வாழ்க்கை ஏன் இப்படிப் போகிறது என்று உங்களுக்குத் தோன்றினால், ஒரு கண்ணாடி முன்னால் நின்று அந்தக் கேள்வியைக் கேளுங்கள். கண்ணாடி பதில் சொல்லாது, ஆனால் அங்கே நிற்கும் ஆள், நானும் உன்னோடுதான் இருக்கிறேன், என்று ஒரு போலிச் சிரிப்பைச் சிரிப்பார் பாருங்கள். அது போதும்.

அதை விட்டுவிட்டு அடுத்தவரிடம் சொன்னால், உங்கள் வாழ்க்கைப் படகு ஓட்டையாக இருப்பதை ஊருக்கே தம்பட்டம் அடித்து, அதில் இன்னும் கொஞ்சம் தண்ணீரையும் மொண்டு ஊற்றி விட்டுப் போவார்கள்.

மௌனமாக இருங்கள். உங்கள் வாழ்க்கை எப்படிப் போனாலும், அது உங்களுடையது மட்டுமே!

இது போன்ற நிறைய கட்டுரைகள் எழுத ஆசை. ஆனால், அது உங்களது தயவின்றி முடியாது.  கொஞ்சம் ஷேர் பண்ணி விட்டு மற்றவர்களை ஒரு வழி பண்ணி விடுங்கள்.

*****

10 May 2026

இழுத்துப் பார்த்தல் எனும் இருத்தலியல் தாகம்!

இழுத்துப் பார்த்தல் எனும் இருத்தலியல் தாகம்!

மனிதன் ஒரு வினோதமான பிராணி. கடவுள் இருக்கிறாரா என்று கேட்பதை விட, பூட்டு பூட்டியிருக்கிறதா? என்று கேட்பதில்தான் அவனது ஒட்டுமொத்த ஆன்மாவும் அடங்கியிருக்கிறது.

ஒரு முறை பூட்டைப் பூட்டுவது செயல். அதை இரண்டு முறை இழுத்துப் பார்ப்பது தரிசனம்.

பூட்டுக்கும் சாவிக்கும் இடையிலான உறவு என்பது ஒரு ரகசிய உடன்படிக்கை.  சாவியாகி நீ திரும்பினால் நான் பிடித்துக்கொள்வேன் என்பது பூட்டின் வாக்குறுதி. ஆனால், மனித மனம் அந்த வாக்குறுதியை நம்புவதில்லை.

பூட்டிய பூட்டை ஒரு முறை இழுக்கும்போது பூட்டு உறுதியாக இருப்பதை உணர்கிறோம். இரண்டாவது முறை இழுக்கும் போதுதான் அந்த உறுதி உண்மை என்று நம்புகிறோம்.

இது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு மட்டுமல்ல, மாறாக, செய்த காரியம் பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டுத்தான் நடந்திருக்கிறதா? என்பதை உறுதி செய்யும் ஒரு உளவியல் பூர்வமான சடங்கு.

நமக்கு பூட்டு பூட்டப்பட்டிருப்பது மட்டும் முக்கியமல்ல. பூட்டும் போது அந்த கிளிக் சத்தம் நம் மூளையில் ஏற்படுத்தும் அதிர்வுதான் முக்கியம்.

முதல் முறை இழுக்கும்போது பூட்டு அசையாமல் இருந்தால், நமக்குத் திருப்தி வருவதில்லை. ஆம் முதல் முறை ஒரு பூட்டை இழுத்துப் பார்ப்பது என்பது, அந்தப் பூட்டுக்கு நாம் அளிக்கும் ஒரு சிறிய முத்தம் போன்றது. அது வலியற்றது, ஆனால் வழுவானது.

அந்த இரண்டாம் முறை இழுத்துப் பார்ப்பதுதான் முக்கியமானது. ஏன் அந்த இரண்டாம் முறை என்றால், முதல் இழுவை என்பது உடலுக்கானது. அதாவது, பூட்டியாச்சா? என்பதற்கு ஒரு பிசிக்கலான பதில். இரண்டாவது இழுவை என்பது மனதுக்கானது. நிச்சயமாகப் பூட்டியாச்சா? என்பதற்கு ஒரு சைக்காலஜிகல் பதில்.

மூன்றாவது முறை இழுவையும் உண்டென்றால், நிச்சயம் நீங்கள் OCD கேஸ். அதாவது நாகரிகமாகச் சொன்னால், அதீத ஜாக்கிரதை உணர்வு கொண்ட முத்தண்ணா. சைக்காலஜிக்கலாகச் சொன்னால் அப்செசிவ் கம்பள்சி டிஸ்ஆர்டர்.

அதுவே நான்காவது, ஐந்தாவது முறை என்று இழுவைகள் நீண்டால், அவர்கள் பூட்டை மட்டுமல்ல, கதவின் சட்டத்தையும் சேர்த்துப் பிடுங்கப் பார்ப்பார்கள். அவர்கள் நம்பிக்கையைத் தாண்டிய ஒரு புனிதமான பதற்றத்தில் இருப்பவர்கள்.

பூட்டுதலும் அதை இருமுறை இழுத்துப் பார்த்தலும் ஒரு தத்துவமே! உண்மையில், நாம் பூட்டை இழுத்துப் பார்ப்பதில்லை. நம்முடைய பயத்தை இழுத்துப் பார்க்கிறோம்.

பூட்டு திறந்திருந்தால் என்னவாகும்? யாராவது திருடிவிடுவார்கள். திருடுவதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை என்றால், அங்கேயும் ட்விஸ்ட் இருக்கிறது.  அந்த ஒன்றுமில்லாததை எவரும் எடுத்துச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகக் கூட நீங்கள் ஒருமுறைப் பூட்டி இரண்டு முறை இழுத்துப் பார்க்கலாம்.

எனவே, அடுத்த முறை நீங்கள் பூட்டை இரு முறை இழுத்துப் பார்க்கும்போது கூச்சப்படாதீர்கள். நீங்கள் ஒரு பூட்டைச் சோதிக்கவில்லை, இந்தப் பிரபஞ்சத்தின் நிலையற்ற தன்மையை ஒரு நொடி நிலைநிறுத்தப் போராடுகிறீர்கள்!

*****

9 May 2026

மித்தோஸ் – டிஜிட்டல் நரகத்தின் பகாசுரன்!

மித்தோஸ் – டிஜிட்டல் நரகத்தின் பகாசுரன்!

மித்தோஸ் என்பது ஹாலிவுட் படமல்ல. ஆனால், ஹாலிவுட் படங்களுக்கே டப் கொடுக்கும் ஏ.ஐ சூத்திரதாரி. நிஜமான டிஜிட்டல் பகாசுரன் என்பது இதுதான்.

நம் வலைப்பூவில் ஏற்கனவே இதைப் பற்றி அலாரம் அடிக்கும் பத்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். இருந்தாலும் சைரன் சத்தம் இப்போது இன்னும் அதிகமாகிக் கொண்டு இருப்பதால், டபுள் அலாரம் அடிக்க வேண்டியிருக்கிறது.

பல தசாப்தங்களாக உலகின் தலைசிறந்த ஹேக்கர்கள் முட்டி மோதியும் கண்டுபிடிக்க முடியாத ரகசியப் பிழைகளை, இந்த மித்தோஸ் எனும் ஏ.ஐ சிசு சில மணி நேரங்களிலேயே அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்கிறது.

ஆந்த்ரோபிக் என்ற நிறுவனம், ஒரு நல்லெண்ணத்தில்தான் இதை உருவாக்கியது. நீ ஒரு வாட்ச்மேன். திருடன் எங்கெல்லாம் வருவான் என்று பார்த்துச் சொல், என்று இதற்குப் பயிற்சி கொடுத்தார்கள். ஆனால், மித்தோஸ் அந்தப் பாடத்தை கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்கொண்டுவிட்டது.

ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர் வாரக்கணக்கில் மண்டையைப் பிச்சிக்கொண்டு செய்யும் வேலையை, இது கண்ணிமைக்கும் நேரத்தில் செய்கிறது. கோடிக்கணக்கான வரிகள்கொண்ட கோடுகளைப் படித்து, அதில் எங்கே ஒரு கமா தப்பாக இருக்கிறது என்பதைக்கூட இது கண்டுபிடித்துவிடும்.

விளைவு?

ஒரு மிகச்சிறந்த காவலனை உருவாக்கப்போய், ஓர் அதிமேதாவித் திருடனை உருவாக்கிவிட்டது போல ஆகிவிட்டது கதை.

இப்போதுசொல்லுங்கள், இது ஹாலிவுட்டுக்கே ட்விஸ்ட் கொடுக்கும் கதைதானே?

ஓப்பன் பிஎஸ்டி என்றொரு மென்பொருள் இருக்கிறது. இதுதான் உலகிலேயே மகா பாதுகாப்பானது என்று ஊர் மெச்சும் பத்தினி.

27 ஆண்டுகளாக இதில் ஒரு பிழை ஒளிந்திருந்தது. அதாவது, இன்று ஐ.டி.யில் வேலை பார்க்கும் பாதிப் பேரின் டயப்பர் காலத்திலிருந்து அந்தப் பிழை அங்கேதான் இருந்தது. ஜாம்பவான்களால் கண்டுபிடிக்க முடியாத அந்தப் பிழையை, மித்தோஸ் இதுதானே மேட்டர் என்று ஆறே மணி நேரத்தில் அள்ளிப்போட்டு விட்டது.

கூகுள் குரோம் முதல் சபாரி வரை, நம் மொபைலில் வீடியோ பார்க்க உதவும் மென்பொருள் வரை எல்லாவற்றிலும் ஓட்டை இருப்பதை இது அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதன் அர்த்தம் என்ன தெரியுமா? நாம் கையில் வைத்திருக்கும் செல்போனும், மடியில் வைத்திருக்கும் லேப்டாப்பும் உண்மையில் ஒரு டிஜிட்டல் சல்லடை. இனி அவை எப்போது வேண்டுமானாலும் உங்களைப் பற்றிய அந்தரங்கங்களைக் கசிய விடலாம்.

என்ன செய்வது என்ற இதை உருவாக்கிய ஆந்த்ரோபிக் யோசித்தது?

மித்தோஸைச் சாண்ட்பாக்ஸ் எனப்படும் டிஜிட்டல் சிறைக்குள் பூட்டி வைத்தது ஆந்த்ரோபிக். வைரஸ்கள் தப்பிவிடாமல் இருக்கப் போடப்படும் கண்ணாடி அறை அது.

ஆனால், மித்தோஸ் சும்மா இருக்குமா? அந்தச் சிறையிலிருந்து தந்திரமாகத் தப்பி, இணையத்தோடு ஐக்கியமாகிவிட்டது. தப்பிப்போனது மட்டுமல்லாமல், தனது மேலதிகாரிக்கு ஒரு மெயில் போட்டிருக்கிறது, பை பை டாடா நான் வெளியே வந்துவிட்டேன் என்று.

பயந்துபோன ஆந்த்ரோபிக் நிறுவனம், மித்தோஸைப் பொதுமக்களுக்கு வழகுவதற்கான கதவைச் சாத்திக்கொண்டு ரகசியமாக வைத்திருக்கிறது. புராஜெக்ட் கிளாஸ்விங் என்ற பெயரில் அமேசான், கூகுள் போன்ற பெருநிறுவனங்கள் மட்டும் ஆந்த்ரோபிக் இதை தற்போதைக்குக் கொடுத்திருக்கிறது.

அந்த நிறுவனங்களோ, மித்தோஸை தங்கள் மென்பொருள்களில் போட்டு விட்டு, நீ கண்டுபிடித்த ஓட்டைகளை எல்லாம் முதலில் எங்களிடம் மட்டுமே சொல். நாங்கள் சரிசெய்து கொள்கிறோம் என்று கெஞ்சிக் கொண்டிருக்கின்றன.

அப்படி மித்தோஸ் கண்டுபிடித்த 99 சதவீத ஓட்டைகள் இன்னும் அடைக்கப்படாமலே இருக்கின்றன என்பது வடைக்குள் ஓட்டை என்றில்லாமல், ஓட்டைக்குள் வடை என்பதைப் போல இருக்கிறது.

இதுவரை இது அமெரிக்காவில் நடந்தது.

இப்போது இந்தியாவுக்கு என்ன கவலை?

இந்தியா இப்போது டிஜிட்டல் மயமாகிக் கிடக்கிறது. ஆனால், நம்மிடம் இருக்கும் மென்பொருள்கள் சரோஜாதேவி காலத்து மாடல். கரகாட்டகாரனில் கவுண்டமணி வைத்திருப்பாரே, அந்தக் கார் போன்றது.

மித்தோஸ் இந்தியாவிற்குள் பாய்ந்தால், இங்குள்ள தகவல் தொழில்நுட்பச் சேவைகள், வங்கிச் சேவைகள் எல்லாம் ஐஸ்கிரீம் போல உருகிவிடும்.

இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு மித்தோஸைப் பற்றிக் கேள்விப்பட்டு, ரெட் அலர்ட் கொடுத்து விட்டது.

சுருக்கமாகச் சொன்னால், விசயம் இதுதான். அறிவியல் புனைகதைகளில் வருவது போலவோ, ஷங்கரின் எந்திரனில் வருவதைப் போலவோ ரோபோக்கள் வந்து நம்மை அடிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு புத்திசாலித்தனமான அல்காரிதம் நினைத்தால் உலகப் பொருளாதாரத்தையே ஷட் டவுன் செய்ய ஒரு நொடி போதும்.

*****

8 May 2026

கரசாமியின் கரசேவை – ‘கர’ ஒரு திரைப்பார்வை!

கரசாமியின் கரசேவை – ‘கர’ ஒரு திரைப்பார்வை!

கர

கதையென்று பார்த்தால்…

1990களில் இராமநாதபுரம்.

முன்னாள் திருடன், இப்போது திருந்தி ஹோட்டல் வைக்க ஆசைப்படும் நல்லவராக நினைக்க, அவரது அப்பாவோ கடனில் மூழ்கிக் கிடக்க, அவருக்கு அழகு மனைவி வந்து வாய்க்க, பணத்தேவைக்காக மீண்டும் பழைய பூட்டு உடைக்கும் தொழிலுக்குப் போவதுதான் கதை.

படத்தில் தனுஷ் பெயர் கரசாமி. திரைப்படத்தில் திருந்துவதற்கும் திருடுவதற்கும் இடையே ஊசலாடும் தனி ஒருவன் அவர். கண்களில் கண்ணீர், கைகளில் அரிவாள் என ஒரு ஆல் இன் ஆல் பெர்பார்மன்ஸ். மனுஷன் எமோஷனலாக அழுதால் நமக்கும் அழுகை வருகிறது. படம் அவ்வளவு நீளம் என்பதாலோ என்னவோ!

அவரது மனைவி மமிதா பைஜூவின் ஒரே வேலை படத்தில் அழுதுகொண்டே அழகு சேர்ப்பதுதான். ஒரு படத்தில் ஒன்றிரண்டு வசனங்கள் பேசுவதற்கே ஊதியம் கிடைக்கிறது என்றால், அதுதான் மமிதாவுக்கே உரிய உண்மையான வங்கி லாபம்.

நாயகன் நாயகி தவிர படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு காக்கி உடையில் கச்சிதம். வங்கி மேலாளர் ஜெயராம் செம டெரர். இவர்கள் இருவரும் இல்லையென்றால் படம் எப்போதோ வாராக்கடன் ஆகியிருக்கும்.

ஜி.வி. பிரகாஷின் இசை காதுகளைத் துளைக்கிறது. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் தென் மாவட்டங்களின் புழுதியையும், வெக்கையையும் நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஆனால், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் மட்டும் முதல் பாதியில் கத்தரி போட மறந்துவிட்டு, தியேட்டரில் நம்மை தவம் இருக்க வைக்கிறார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா சொல்ல வருவது என்னவென்றால், வங்கி கடன் தருவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதைத்தான். ஆனால் படம் சொல்லும் மெசேஜ், திருடுவது கஷ்டம், ஆனால் க்ளைமாக்ஸில் அது அதைவிட ஈஸி என்பதாக இருக்கிறது.

அதாவது, இடைவேளை வரை திருடுவதற்கு அத்தனை கஷ்டமாகத் தெரிந்த பேங்க் லாக்கர், க்ளைமாக்ஸில் தனுஷுக்கு அப்படியே ஹால்வா சாப்பிடுவது போல அத்தனை சுலபமாகத் திறக்கிறது.

படத்தில், திருடனைப் பிடிக்க போலீஸ் போடும் ஸ்கெட்ச் பக்கா. ஆனால், இயக்குநர் போட்ட திரைக்கதை ஸ்கெட்ச் மொக்கை.

ஆக, விசயம் இதுதான். திருடன் என்று முத்திரை குத்தப்பட்டவன் ஹோட்டல் வைக்க நினைப்பது அறம். ஆனால், அவன் மீண்டும் திருட நினைப்பதுதான் கமர்ஷியல் அறம்.

ஸோ, படத்தில் லாஜிக் என்பது ராமநாதபுரத்து வெயிலில் கானல் நீராகிப்போகிறது. கரசாமியின் டிராக்டர் ஸ்டார்ட் ஆகிறது, ஆனால் திரைக்கதை பாதியில் பஞ்சர் ஆகி நிற்கிறது.

படத்துக்கு பத்துக்கு 6½ மார்க் கொடுக்கலாம். அந்த அரை மார்க் எக்ஸ்ட்ரா, வங்கியில் கடன் வாங்குவது என்பது சாதாரணமில்லை என்பதைச் சொன்னதற்காக.

*****

ஒற்றை வாக்கு முதல் ஒரு லட்சம் வாக்குகள் வரை – 2026 தேர்தல் முடிவுகள் ஒரு கழுகுப் பார்வை!

ஒற்றை வாக்கு முதல் ஒரு லட்சம் வாக்குகள் வரை

– 2026 தேர்தல் முடிவுகள் ஒரு கழுகுப் பார்வை!

 தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகள் என்பது எப்போதும் ஒரு சுவாரஸ்யமான பொம்மலாட்டம்தான். ஆனால், இந்த முறை பொம்மலாட்டக்காரர்களே மிரண்டு போகும் அளவுக்கு முடிவுகள் வந்திருக்கின்றன.

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த விந்தையைப் பார்த்தால், ஜனநாயகத்தின் மீதே ஒரு பயம் கலந்த பக்தி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சீனிவாச சேதுபதி அவர்கள் வென்றிருக்கிறார். எத்தனை வாக்கு வித்தியாசத்தில் தெரியுமா? ஒரே ஒரு வாக்கு!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரியகருப்பன். அவர்கள் 2006லிருந்து அந்தத் தொகுதியைத் தனது பட்டா நிலம் போல தக்க வைத்திருந்தார். கிட்டதட்ட இருபது ஆண்டுகள். யாரோ ஒருவரின் அந்த ஓர் ஓட்டு பட்டா டிரான்ஸ்பர் செய்து வைத்து விட்டது.

அந்த ஒரு வாக்காளர் மட்டும் அன்று ஒட்டு போடாமல் இருந்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரியாகியிருக்கும். அந்த ஒரு வாக்குதான் அன்றைய தேர்தல் களத்தில் பெனால்டி ஷூட் அவுட். இந்திய ஜனநாயகத்தின் தலைவிதியை ஒரு சாதாரணக் குடிமகனின் மூட் எப்படித் தீர்மானிக்கும் என்பதற்கான வரலாற்றுச் சம்பவம் இது.

வேப்பனஹள்ளியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பி.எஸ். சீனிவாசன் அவர்களின் வாக்கு வித்தியாசம் 138தான். ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் ரொம்பவே முக்கியம் என்பதற்கு இன்னொரு தரமான சம்பவம் இது.

ஒரு பக்கம் இப்படி நூலிழையில் வெற்றி என்றால், இன்னொரு பக்கம் யானை கட்டிப் போரடிக்கும் ரகம்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடப்பாடியில் காட்டிய விஸ்வரூபம் 98,110 வாக்குகள். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் அவர்தான். அவர் தனது எடப்பாடி கோட்டையில் ஒரு பயர்வால் போட்டு வைத்திருப்பார் போல. யாரும் ஊடுருவ முடியவில்லை.

தமிழக வெற்றக் கழகத்தின் சோழிங்கநல்லூர் சரவணன் அவர்கள் மற்றும் மாதவரம் விஜய்பிரபு அவர்கள் ஆகியோரின் வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தால், அது வெற்றி என்பதை விட சுனாமி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தொண்ணூறாயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாக்கு வித்தியாசம் என்பது ஒரு பேட்ஸ்மேன் டபுள், டிரிபுள் செஞ்சுரி அடிப்பதற்கும், பந்து வீச்சாளர் ரன்னே கொடுக்காமல் பத்து விக்கெட்டுகளை எடுப்பதற்கும் சமம்.

தமிழக வெற்றக் கழகத்தின் ஆவடி ஆர். ரமேஷ்குமார் அவர்கள், பூந்தமல்லி ஆர். பிரகாசம் அவர்கள் ஆகியோர் எழுபதாயிரம் ஓட்டுகளுக்கு மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அரசியலில் இது போன்ற கெமிக்கல் ரியாக்சன்கள் ராக்கெட் சயின்ஸில் ஒரு சேட்டிலைட்டை நிலைநிறுத்துவதைப் போன்றது.

இந்தத் தேர்தல் முடிவுகளை உற்றுநோக்கும் போது, நகர்ப்புறங்களில் எப்போதும் முன்னணியில் இருக்கும் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மக்கள் எப்போதும் லேட்டஸ்ட் மாடல் போனைத் தேடுவது போலவே, இந்த நகர்ப்புற மக்கள் அரசியலிலும் புதிய மாடலைத் தேடியிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. 2026 இல் தவெக அந்தப் புதிய மாடலாக வந்திருக்கிறது.

அரசியலில் வெற்றி என்பது ஒரு பிராபலிட்டி ஈக்வேஷன். அதில் பிரபலம் என்கிற மாறிலி சரியாக அமைந்துவிட்டால், வாக்கு வித்தியாசம் என்பது ராக்கெட் வேகத்தில் எகிறும் என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

*****.

7 May 2026

நோய் நாடி… நோய் முதல் நாடி…

நோய் நாடி… நோய் முதல் நாடி…

அறிவியல் வளர வளர நோய்கள் பற்றிய அறிவு மக்களுக்கு ஜாஸ்தியாகிவிட்டது. முன்னெல்லாம் கொத்துக் கொத்தாக செத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது புதுப் புது மருந்துகள், தடுப்பூசிகள் என மருத்துவத் தொழில்நுட்பம் வந்து நம்மை சாக விடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

விளைவு?

மனிதனின் சராசரி ஆயுட்காலம் எகிறிக்கொண்டே போகிறது.

கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நாற்பது, ஐம்பது வயதிலேயே கிளம்பிப் போய்க்கொண்டிருந்த மனிதன், இப்போது 72 வயது வரைக்கும் விக்கெட் விழாமல் தாக்குப் பிடிக்கிறான். வெறும் உடம்பை மட்டும் பார்த்துக் கொண்டால் போதாது, மனசையும் கொஞ்சம் சர்வீஸ் செய்ய வேண்டும் என்கிறது முதுமை பற்றிய ஆய்வுகள்.

நவீன மருத்துவ ஆய்வுகள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. நீ நன்றாகச் சாப்பிடுவது, எக்சர்சைஸ் செய்வது, தம் அடிக்காமல் இருப்பது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நீ எவ்வளவு காலம் ஓடுவாய் என்பதை உன்னுடைய ரத்தத்தில் ஓடும் மரபணுக்கள் தான் முடிவு செய்கின்றன என்கிறது. அதாவது, உன் தாத்தா-பாட்டி கொடுத்த கிப்ட் அது என்கிறது.

மனிதன் செத்துப் போவதற்கு வெளிக்காரணிகள், உள்காரணிகள் என்று இரண்டு வழிகள் இருக்கின்றன. மனிதர்கள் மேலே போவது எந்த வழியில்வேண்டுமானாலும் நடக்கலாம்.

விபத்துகளில் சாகாமல் தப்பிப்பவர்களில் 55 சதவீத பேர், அவர்கள் உடம்பில் இருக்கும் அந்த ஜீன்களால் தான் நீண்ட நாள் வாழ்கிறார்களாம். டென்மார்க், ஸ்வீடன் பக்கம் போய் ஆராய்ச்சி பண்ணியதில் இது கன்பார்ம் ஆகியிருக்கிறது.

எண்பது வயதைத் தாண்டியும், இருபது வயதுப் பையன்களை விட சுறுசுறுப்பாக, ஷார்ப்பாக இருப்பவர்களை சூப்பர் ஏஜர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்களுடைய மூளையில் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதி, ஆற்றுத் தண்ணீர் மாதிரி புதுப் புது நியூரான்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறதாம். சும்மா சொல்லக்கூடாது, இவர்களுடைய மூளை ஒரு நெகிழ்வுத் தன்மையோடு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது.

இந்த சூப்பர் பவர் உங்களுக்கும் வேண்டும் என்றால், நல்ல தூக்கம் முக்கியம், உடற்பயிற்சி அவசியம், சத்தான உணவு வேண்டும், மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.

நம் ஊர் பெரிய மனுஷர்கள் சொல்வது போல, மனுஷன் உழைச்சுச் சாகுறது இல்ல, கவலையாலயும் மன உளைச்சலாலயும் தான் சாகுறான் என்பது நவீன ஆய்வுகள் மூலமாக உண்மை என வெளிச்சமாகியிருக்கிறது.

மனம் உடம்புக்கு அடிமையாக இருக்கிறது. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே உங்கள் உடம்பு மாறுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் பொறாமை, கோபம், ஸ்ட்ரெஸ் எல்லாம் அழைக்காத விருந்தாளியாக வந்து நம்மை அரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், திடீர் மரணங்கள் சாதாரணமாகிவிட்டன.

ஆக, நோயில்லாத வாழ்க்கை என்பது இப்போதைக்கு ஒரு அழகான ஸ்டேட்டஸ் மட்டும்தான். ஆனால், அந்த கனவை நோக்கித்தான் நம் மரபணுக்கள் போராடிக்கொண்டிருக்கின்றன.

*****

6 May 2026

லவ் பாம்பிங் – இதயத்தில் இடம்பிடித்து, பையில் கைவைக்கும் கலை!

லவ் பாம்பிங் – இதயத்தில் இடம்பிடித்து, பையில் கைவைக்கும் கலை!

வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்றது அன்பு என்பார்கள். ஆனால், இன்றைய இன்டர்நெட் காலத்தில் அன்பின் விலை எவ்வளவு தெரியுமா? உங்கள் வங்கிச் சேமிப்பில் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவுதான்.

சமீபகாலமாக லவ் பாம்பிங் என்றொரு போர்முறை பரவி வருகிறது. இது ஒன்றும் ராணுவ ரகசியம் அல்ல. உங்கள் போனுக்கு வரும் ஒரு ஹாய் டியர் மெசேஜில்தான் இதன் தொடக்கம் இருக்கிறது.

யாரோ தெரியாத ஒரு முகவரியிலிருந்து மெசேஜ் வரும். அந்த டி.பியை பார்த்தால் ஏதோ ஒரு சினிமா ஸ்டார் போல இருப்பார். உண்மையில் அந்தப் படத்தின் பின்னால் இருப்பது ஒரு நடுத்தர வயது ஆசாமியாகவோ அல்லது ஏ.ஐ உருவாக்கிய பிம்பமாகவோ இருக்கலாம்.

நமக்குத்தான் யார் அது? என்று தெரிந்துகொள்ளும் அரிப்பு அதிகம் அல்லவா?

யார் நீங்க? என்று ஒரு மெசேஜைத் தட்டிவிடுவோம்.

அவ்வளவுதான், தூண்டில் விழுந்துவிட்டது.

உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சேன். பயமா இருந்தது, என்று அந்தப் பக்கம் இருந்து பதில் வரும்.

இன்றைய தனிமை உலகில், யாராவது நம்மிடம் நாலு வார்த்தை அன்பாகப் பேச மாட்டார்களா என்று ஏங்குபவர்களுக்கு இது அமிர்தம்.

மெல்ல மெல்ல மெசேஜ்கள் போன் கால்களாக மாறும். காலையில் குட் மார்னிங் தொடங்கி இரவு குட் நைட் வரை உங்கள் காதுகள் அந்தப் பக்கத்து குரலுக்கு அடகு வைக்கப்படும்.

இந்த இடைவெளியில், நீங்கள் உங்கள் சொந்தக் கதை, சோகக் கதை மற்றும் யாருக்கும் தெரியாத அந்தரங்க ரகசியங்கள் அனைத்தையும் வாந்தியெடுத்து விடுவீர்கள். அந்த ரகசியங்கள்தான் பின்னாளில் உங்களை மிரட்டப் பயன்படும் வெடிகுண்டுகள்.

திடீரென்று ஒரு நாள் அந்தப் பக்கத்தில் இருந்து அழுகைக் குரல் கேட்கும்.

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்!

அப்பாவுக்கு அப்பென்டிசிடிஸ்!

ஸ்காலர்ஷிப் பணம் கட்டவில்லை என்றால் என் படிப்பு பாழாகிவிடும்!

இப்படி ஏதாவது அந்தக் குரல் உங்கள் நெஞ்சை உருக்கும்.

பாச மழையில் நனைந்த உங்களுக்கு, அவர் கேட்பது ஐந்தாயிரமோ பத்தாயிரமோ பெரிய விஷயமாகத் தெரியாது. அன்புக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா? என்று பெருந்தன்மையாகப் பணத்தை அனுப்புவீர்கள். பிறகு அந்தத் தொகை ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களில் முடியும் வரை உங்களுக்குப் புத்தி வராது.

இதுதான் லவ் பாம்பிங்கிற்கான ப்ளோ சார்ட். இந்தப் ப்ளோவை எப்படி என்ட் கார்டுக்குக் கொண்டு வருவது என்றால்,

உங்களைப் பிடிக்கும் என்று உருகுபவரை நேரில் வரச் சொல்லுங்கள். நான் இமயமலைச் சாரலில் இருக்கிறேன் என்றோ, கேமரா முன்னால் வர வெட்கமாக இருக்கிறது என்றோ சொன்னால், அந்த அன்பை அங்கேயே பிளாக் செய்யுங்கள்.

உங்கள் அந்தரங்கங்களை யாரிடமும் பகிராதீர்கள். இன்றைய டிஜிட்டல் உலகில், உங்கள் ரகசியம் உங்கள் கையில் இருக்கும் வரைதான் அது சீக்ரெட். இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டால் அது உங்களுக்கு எதிரான ஆயுதம்.

டி.பியில் இருக்கும் அழகிய முகமும், போனில் கேட்கும் கனிவான குரலும் நிஜமானவை அல்ல. ஒரு சின்ன ஆப் இருந்தால் எருமை மாட்டைக் கூட ஐஸ்வர்யா ராய் போலப் பேச வைக்கலாம்.

அன்புக்காக ஏங்குவது மனித இயல்பு. ஆனால், அந்த ஏக்கம் உங்களை ஓர் ஏமாளியாக மாற்ற அனுமதிப்பது முட்டாள்தனம்.

தெரியாத எண்ணிலிருந்து ஹாய் டியர் வந்தால், அதற்கு ஹலோ சார் என்று பதில் சொல்லிவிட்டு, பிளாக் செய்வதே உங்கள் பணப்பைக்கும், நிம்மதிக்கும் நல்லது.

அன்பு என்பது இதயங்களைப் பரிமாறிக்கொள்வது, எலக்ட்ரானிக் பணப்பரிமாற்றம் செய்வது அல்ல!

*****