11 Sept 2026

தேரோடும் வீதியில் திருவள்ளுவரின் குறள்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 33

தேரோடும் வீதியில் திருவள்ளுவரின் குறள்!

மழையின் மெல்லிய ஈரம் காய்ந்தும் காயாமலும் ஈரப்பதத்தைத் திருவாரூரின் நான்கு வீதிகளிலும் பரப்பிக் கொண்டிருந்தது. தேரோடும் வீதியின் இருபுறமும் ஆங்காங்கே வரிசையாக இருக்கும் பழமையான ஓட்டு வீடுகளும், அதன் உச்சியில் செழித்து வளர்ந்திருக்கும் அரசமரக் கன்றுகளும் காலத்தைக் கடந்து நிற்கும் அடையாளங்கள்.

மாலையின் மஞ்சள் வெயில் சற்றே மங்கி, கமலாலய குளத்தின் குளிர் காற்றும் சேர்ந்து திருவாரூரைக் கொஞ்சம் கூடுதலாகவே குளிர்விக்க, தியாகராஜர் வீதியிலுள்ள அந்தப் பாரம்பரிய வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தான் அவன்.

காலம் எவ்வளவுதான் மாறினாலும், திருவாரூரின் அந்த மந்தமான சோம்பலும், மாலை நேரங்களில் மணக்கும் அந்தக் காபி வாசனையும் எப்போதையும் விட இன்றைக்குச் சற்று அதிகமாகவே அவனுக்குள் இறங்கியிருந்தது. அவனது கையில் அந்தப் பழைய செப்பு டம்ப்ளர். உள்ளே சுடச்சுட இஞ்சிக் காபி. எதிர் வீட்டுத் திண்ணையில் நின்றுகொண்டிருந்தாள் அவள்.

அவள் தன் கூந்தலைக் கொண்டையாகச் சீவிக்கொண்டிருந்தாள். அவளது அந்தத் திடீர் அசைவில் ஒரு மின்னல் வேகம் இருந்தது. அவளது மினுமினுப்பான அந்தத் தோல் மீது சன்னல் வழியே நுழைந்த விளக்கு வெளிச்சம் பட்டுத் தெறித்தது. இயற்கையின் இணையற்ற படைப்பாகத் தெரிந்தது அது. இயந்திரங்களின் இரைச்சலோ கார்ப்பரேட் டென்ஷனோ இல்லாத இந்தத் திருவாரூரில், அவளது ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு பாரம்பரியப் பாடலின் மெட்டு போல அவனுக்குள் சுழன்றது.

திடிரென்று அவள் திரும்பி அவனைக் கவனித்தாள். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. அந்த வெண்மையான பற்கள் முத்துப்போல் மின்ன, அவள் லேசாகச் சிரித்தாள். ஏதோ வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்வில் சென்டம் வாங்கியது போன்ற ஓர் அரிய திருப்தி அவனுக்குள் பரவியது.

அவள் சமையலறையிலிருந்து திண்ணையை நோக்கி நகர்ந்து வரும்போதெல்லாம், அந்த வீட்டின் பாரம்பரிய மல்லிகைப் பூ வாசனையும் அவளது இயல்பான நறுமணமும் சேர்ந்து காற்றில் மிதந்து வந்தது. எந்தவொரு செயற்கை வாசனைத் திரவியமும் இல்லாத, மண்ணின் தூய்மையும் காதலின் குளிர்ச்சியும் கலந்த அந்த வெறிநாற்றம் அவனது நரம்பு மண்டலத்தை முழுமையாகச் சமன்செய்தது.

அவளது அந்தக்  கண்கள், திருவாரூர் தேர்த் திருவிழாவின் போது எரியும் ஆயிரமாயிரம் விளக்குகளின் பிரகாசம் போல் பிரகாசித்தன. அதில் அவனது மொத்த மன அழுத்தமும் மகிழ்ச்சிப் பெருக்கமாய் மாறிப் போனது.

வாழைத் தண்டின் மென்மையும் மூங்கிலின் ஒய்யாரமும் கலந்த அவளது தோள்கள் அவனை அப்படியே அள்ளி சொர்க்கத்தில் தள்ளியது போன்ற உணர்வைத் தந்தது. சில விஷயங்களுக்கு தலைமுறைகளும் ஊர்களும் மாறினாலும் காலாவதி தேதி இல்லை என்பதற்கு அவள் ஓர் உயிர்ப்பான சான்று.

"என்ன அப்படி ஒரு பார்வை?" என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

அவன் காபியை ஒரு வாய் குடித்துவிட்டு மென்மையாகப் புன்னகைத்தான். இயற்கையின் உயிர்நுட்பமே வேறுதான். அந்த மேனியின் பிரகாசம், முத்த முறுவல், வெறிநாற்றம், வேல் போன்ற கண்கள், வேய்த்தோள் என இதைவிடச் சிறந்ததொரு சொர்க்கத்தின் கட்டமைப்பு இந்த உலகத்தில், ஏன் இந்தப் பிரபஞ்சத்தில் எங்குமே கிடையாது.

அவனது மைண்ட் வாய்ஸ் எனும் மனதின் குரல் புரிந்தது போல, அவள் அவன் எதிரே வந்து நின்றாள், "என்ன யோசனை மிஸ்டர் கவிஞரே?"

அவன் வார்த்தைகளை மென்று விழுங்குவது போலச் சொன்னான், "ஒன்னுமில்ல! உன்னைப் பார்த்தா, திருவள்ளுவர் காலத்துலேயும் நீதான் இருந்திருக்கணும்னு தோணுது. இல்லன்னா, அவர்தான் உன்னை நேரில் பார்த்துவிட்டு அந்தத் குறளை எழுதி வச்சிருக்கணும்."

"அப்படியா! அப்படியென்ன குறள் அது?" என்றாள் அவள் மீண்டும் முத்துகளைச் சிதற விடும் சிரிப்போடு.

"அதுவா? அது வந்து…

"முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு."                    (குறள், 1113)

அதுதான் அந்தக் குறள்!" என்றான் அவன்.

அவள் அவனது தலையில் லேசாக ஒரு தட்டு தட்டிவிட்டுப் புன்னகையுடன் நகர்ந்தாள். காலம் சுழன்றாலும் காதலின் மொழி மட்டும் மாறுவதேயில்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அந்த மொழி கட்டுக் குழையாமல், நன்னி கூட சிதையாமல் அப்படியே இருக்கிறது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

10 Sept 2026

மறைந்து போகும் ஊதியம்

 

மறைந்து போகும் ஊதியம்

முப்பது ஆண்டுகளின்

இளமை தொலைந்த பிறகு

எதுவும் இல்லை என்றாகிறது

சந்தையின் நிச்சயமற்ற

விளையாட்டுகளில்

எல்லா எண்களும்

பூஜ்ஜியத்தை நோக்கிச் சென்று விட

முதுமையின் மீது

நடத்தப்பட்ட சூதாட்டமாகியிருந்தன

தவணை செலுத்திய கோப்புகள்

எஞ்சிய காலத்தின் வரைபடத்தின் மீது

அதிகாரத்தின் நாற்காலிகள்

வசதியாய் அமர்ந்திருக்க

அரிசிக்கும் பாலுக்கும்

கையேந்தும் நடுங்கும் கரங்களைப்

பகடைக் காய்கள் உருட்டுகின்றன

கௌரவமான தற்கொலைக்கான

தூக்குக் கயிற்றை

முடிச்சிட முடியாமல்

மரணம் தள்ளிப்போய்க் கொண்டிருக்க

துரதிர்ஷ்டம் பிடித்த ஊழியர்களிடமிருந்து

தள்ளியே நிற்கிறது பென்ஷன்

****

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு

வெறிச்சோடிக் கிடக்கும்

பாலை நிலத்தில்

வெந்து தணிந்து கொண்டிருக்கும்

கருவேலம் காட்டில்

பசுமையைத் தின்று தீர்த்த முட்கள்

தாகத்தை உறிஞ்சிக் குடித்த வெடிப்புகள்

துளி தேனின்றிப் போனாலும்

தேடும் இறகுகள் இருப்பதை எண்ணி

உற்சாகமாய்ப் பறக்கும்

ஒரு பட்டாம்பூச்சியின்

சிறகசைப்பின் விளைவோ என்னவோ

அதன் வண்ணச் சிறகுகளையொத்த

வானவில்லைத் தீட்டி

பல வண்ணப் பூக்களைப் பூக்க வைக்கும்

கருமையைத் திரட்டிக் கொண்டு

எங்கேயே திக்குத் தெரியாமல்

அல்லாடிய மேகம் ஒன்று திரும்பி வருகிறது

*****

கண்ணில் பூ பூக்கும் தொழில்நுட்பம்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 32

கண்ணில் பூ பூக்கும் தொழில்நுட்பம்

மாலை ஆறு மணி. காரைக்கால் கடற்கரையில் உப்பு மணமும், மெல்லிய வறுத்த நிலக்கடலை வாசனையும் சேர்ந்து கொண்டிருந்தன.

அவன் கையில் வாகனத்தின் சாவிக்கொத்தைச் சுழற்றிக்கொண்டிருந்தான். எதிரே அவள் உட்கார்ந்திருந்தாள்.

அவள் கண்கள்! ம்ஹும்! அதைப் பற்றித்தான் பஞ்சாயத்து.

அலை அடிக்கும் கடற்கரையில், அந்தி மயங்கும் பொன்மஞ்சள் மாலை வெயிலில் அவள் கண்களைப் பார்க்காமல் இருக்க முயற்சிப்பது, மின்வெட்டு நேரத்தில் டார்ச் லைட்டை அணைத்து வைக்க முயல்வது போல வீண் வேலை.

"என்ன, நான் பேசுறது உன் காதுல விழுதா இல்லையா?"

"விழுது. ஆனா உன் கண்ணைப் பார்த்துட்டிருந்தா நீ பேசுறது ஆடியோவா கேக்கல, விஷுவல் பிளர் ஆகுது."

அவள் லேசாகச் சிரித்தாள். "என்னது இது புதுசா சைட் அடிப்புக் கலை? பொண்ணுங்களோட கண்ணுப் புகழ்ச்சி சாப்டர் ஒண்ணா? டூவா?"

"இல்ல. சீரியஸா! இந்த உலகத்துல எத்தனையோ பூக்கள் இருக்கு. குறிஞ்சி, பவள மல்லி, தாமரை, செம்பருத்தி, மல்லிகை, முல்லை, செவ்வரளின்னு எத்தனையோ. ஆனா நீ பார்க்கும்போது உன் கண்ணுல ஒரு பூ பூக்குது பாரு! அது மாதிரி பூ உலகத்துல எங்கேயும் இல்ல!"

அவள் இமைகளைச் சிமிட்டி, "அப்படியா!" என்றாள்.

"அப்புறம், நான் என்ன பொய்யா சொல்றேன்? நூறு சதவீத உண்மை!"

"நான் நம்ப மாட்டேன். அக்மார்க் பொய்."

"அப்படின்னா, உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டியதுதான். அதோ பூ விக்குறாங்களே! அவங்ககிட்ட இருக்குற ரோஜாப் பூவை பாரு," என்றான் அவன்.

அவள் அந்தப் பூக்கூடையில் இருந்த சிவப்பு ரோஜாவைப் பார்த்தாள். "ம்ம், அழகா தான் இருக்கு. அதுக்கென்ன இப்போ?"

"அதுதான் பிரச்சனை. பூ அழகாதான் இருக்கு. ஏன்னா, அதை இந்தக் கடற்கரைக்கு வர்ற எல்லாரும் பாக்கலாம். அந்தப் பையன் பாக்கலாம், இந்தப் பொண்ணு பாக்கலாம், அதோ அங்க உட்கார்ந்திருக்குற அந்த வயசானவரு கூட பாக்கலாம். எல்லாரும் பாத்து ஆஹா பூவுன்னு சொல்லலாம்."

அவன் சற்றே முன்னால் சாய்ந்து, அவளது கண்களை நேராகப் பார்த்தான்.

"ஆனா உன் கண்ணு அப்படி இல்லை."

அவள் புன்னகையை அடக்க முயன்று, "என் கண்ணு என்னவாம்?" என்றாள்.

"உன் கண்ணைப் பார்த்தா என் நெஞ்சு குழம்பிப் போகுது. இந்த பூவை எல்லாரும் பாக்குற மாதிரி, உன் கண்ணையும் எல்லாரும் பார்த்துட முடியுமா என்ன? சேச்சே இது எல்லாரும் பார்க்கிற சாதாரண பூ மாதிரி இல்ல. இது எனக்கு மட்டும்தான் சொந்தம்னு என் மனசு அடம் பிடிக்குது. ஆனா, இல்லடா லூசு, இதுவும் எல்லாரும் பாக்குற பூ மாதிரிதான்னு என் மூளை சொல்லுது. ரெண்டுக்கும் நடுவுல என் நெஞ்சு கிறுக்குப் பிடிச்சு அலையுது. திருவள்ளுவருக்கே இதுல ஒரு மயக்கம் இருந்திருக்கு. அவர் என்ன சொல்றார்ன்னா,

"மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று."                     (குறள், 1112)

அப்படிங்றார்."

அவள் தன் கையிலிருந்த மொபைலைக் கீழே வைத்துவிட்டு உரக்கச் சிரித்தாள்.

"ஹலோ மிஸ்டர் ஹேண்ட்ஸம்! எதுக்கு இப்போ வள்ளுவரையெல்லாம் கூப்பிட்டு வந்து, இவ்வளவு சுத்தி வளைச்சு கவிதை பேசிட்டு இருக்கீங்க? மேட்டர் என்ன?"

அவன் தன் பாக்கெட்டில் இருந்த சிறிய பெட்டியை வெளியே எடுத்தான்.

"மேட்டர் இதுதான். இந்த உலகத்துல இருக்குற எந்தப் பூவையும் யார் வேணாலும் பாக்கலாம். ஆனா, இந்தக் கண்களை நான் மட்டும்தான் ஆயுசுக்கும் பாக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு இந்த நெஞ்சுக்கு அனுமதி கிடைக்குமா?"

பெட்டியைத் திறந்தான்.

பெட்டியில் இருந்த வைரக் கம்மலில் அந்தச் சிறிய வைரம் மின்னுவது போல், அவள் கண்களில் ஒரு புது ஒளி மின்னி ஒளிர்ந்தது. அது இந்த உலகத்தில் இதுவரை எந்தத் தாவரமும் பூக்காத பூ போன்றிருந்தது.

-          சூத்திரங்கள் தோன்றும்!

*****

9 Sept 2026

யாருமறியா பராபரமே!

அடையாளம்

கழுத்தில் தொங்கிய

அடையாள அட்டையை

அறுத்து வீசிய போது

ஆசுவாசமாக இருந்தது

அன்றிலிருந்து

அடையாள அட்டை

அணிவதை நிறுத்தி

துறவியாகிப் போனவர்

அடையாளத்திற்காக

அணிந்து கொண்டார்

அந்த நிறத்தை

*****

யாருமறியா பராபரமே!

மேய்ச்சலுக்குப் போன சாலையில்

டாடா ஏஸின் மீதேறி

அடி மாடாகப் போவோம் என்பது

அந்த மாட்டிற்கும் தெரியாது

அந்த மாடு போன பிறகு

மாட்டுப்பால் என்று

பாக்கெட்டில் வரப் போகும்

ரசாயனப் பாலைப் பருகப் போகிறோம்

என்பது

மனிதர்களுக்கும் தெரியாது

எல்லாம் கடக்கும் சாலைக்கும் தெரியாது

விபத்துகளில் சிந்தும் ரத்தம்

எந்த ரசாயனத்தின்

எத்தனை அணு எண் நிறை எண் கொண்ட துளியென்று

*****

யாரும் அறியாத மென்மை!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 31

யாரும் அறியாத மென்மை!

ஆவணி மாதத்து மாலை.

மெல்லிய சாரல்.

எஸ்.ஆர்.ஆர் கபேயில் அமர்ந்தபடி திருவாரூருக்கே உரிய வாசன் காபி தூளில் தயாரான காபியைக் குடித்துக்கொண்டிருந்தான் அவன்.

ஈரக் காற்றில் ஏதோ ஒரு மெல்லிய பூவின் வாசனை.

அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த அவளது மேஜை மீது, ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையில் அனிச்ச மலர் வைக்கப்பட்ருந்தது. தொட்டாலே அல்லது முகர்ந்தாலே வாடிவிடும் அபூர்வ வகை அது.

அதைப் பார்த்ததும் அவனது நண்பன் தன் மொபைலில் அந்தப் பூவைப் பற்றி ஆர்வம் தாங்காமல் தேடிக் கொண்டிருந்தான்.

"டேய், இந்த அனிச்சப் பூ பத்தி கூகுள் பண்ணிட்டு இருக்கேன்டா. முகர்ந்து பார்த்தாலே வாடிடுமாம். எவ்வளவு சென்சிட்டிவ் பார்த்தியா? உலகத்திலேயே இதான் இருக்கறதுலயே ரொம்ப மென்மையான விஷயம்னு நினைக்கிறேன்." என்றான் நண்பன் ஆச்சரியத்துடன்.

அவன் காபியை ஒரு மிடறு உறிஞ்சிவிட்டு உரக்கச் சிரித்தான்.

"அடப்பாவமே! பூவை முகர்ந்தா வாடும்னா, நிச்சயம் என் எதிரே உட்கார்ந்திருக்க அவளைப் பார்த்திருக்க மாட்டான்."

எதிரே அமர்ந்திருந்த புருவத்தை உயர்த்தினாள். "என்ன? சும்மா இருந்த என்னை எதுக்கு வம்பு இழுக்கிறீங்க?"

"பின்ன என்ன? இந்த அனிச்சப் பூவெல்லாம் லோக்கல் மேட்டர். அன்னைக்கு ஒரு நாள் உன்கிட்ட, ஏய், இன்னைக்கு கொஞ்சம் டல்லா இருக்க போலன்னு சும்மாதான் கேட்டேன். அவ்வளவுதான். அன்னைக்கு ஈவினிங் வரைக்கும் மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு பேச்சையே நிறுத்திட்ட. கண்ணுல இருந்து டப் டப்னு தண்ணி கொட்டுது. குடம் வெச்சு பிடிச்சிருந்தா நாலு குடமாவது நிரம்பியிருக்கும்."

"சும்மா எதாச்சும் சொல்லணும்னு சொல்றதுக்காக, எதையாவது அடிச்சு விடாதீங்க!" என்றாள் அவள்.

நண்பன் சிரித்துக்கொண்டே இருவரையும் பார்த்தான்.

அவன் தன் காபி கப்பை கீழே வைத்துவிட்டு அவளது கண்களை நேரடியாகப் பார்த்தான். குரலில் இருந்த கேலி மறைந்து, ஒரு மெல்லிய ஆழம் கூடியது.

"அப்படியெல்லாம் அடிச்சு விடல. இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய தீசிஸே இருக்கு. அதாவது,

"நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்."         (குறள், 1111)

அப்படின்னு வள்ளுவர் ஒரு சூத்திரமே சொல்லியிருக்கார். அனிச்சப் பூவே! நீ நல்ல இயல்புடையவள்தான், ஆனா, நான் விரும்பும் என் காதலி உன்னை விட ரொம்ப மென்மையானவள்ன்னு தலைவன் பூகிட்ட சவாலே விடுறான்னா பார்த்துககோ!"

"அப்படியா சார்?" அவள் லேசாகச் புன்னகைத்தபடி, "அவ்வளவு மென்மையான பொண்ணா உங்க ஆளு? ஒரு வார்த்தை தவறா சொன்னாக் கூட உடனே வாடிடுவாளா?" எனக் கேட்டாள்.

"அது மட்டும் இல்ல!" அவன் குரலைச் சற்றே தாழ்த்தினான். "வள்ளுவர் சொன்னது வெறும் உடம்போட மென்மையைப் பத்தி மட்டும் இல்ல. மனசைப் பத்தி. இந்த அனிச்சப் பூவை முகர்ந்து பார்த்தாத்தான் வாடும். ஆனா என் காதலி இருக்காளே, அவளை ஏன் இப்படி இருக்கன்னு லேசாக நினைச்சுக் கேட்டாலோ, இல்ல நான் கவனிக்காம வேற பக்கம் என் பார்வை திரும்பினாலோ அவளோட மனசு வாடிடும். அந்தப் பூவை விட அவ அவ்வளவு மென்மையானவ!"

நண்பன் சூழலைப் புரிந்து கொண்டு அமைதியானான்.

அவளது குரலில் ஒரு மெல்லிய நடுக்கம் கூடியது. வேறு யாராவது பெண்ணைப் பற்றி இவன் சொல்கிறானோ என்ற சந்தேகம் வேறு மனதைப் போட்டு அரிக்க ஆரம்பித்து விட்டது. அத்துடன் மனதுக்குள் சின்னதாக ஒரு கோபமும் வந்தது. அதற்கு மேல் முடியாமல், அவள் வினவினாள், "யார் அந்தப் பொண்ணு?"

அவன் மேஜை மீதிருந்த அந்தச் சிறிய அனிச்சம்பூவை லேசாகத் தொட்டான். பூ தன் இதழ்களைச் சாய்த்துக் கொண்டது. பிறகு அவன் நிமிர்ந்து அவளது கண்களை நேராகப் பார்த்தான்.

"வேற யாரு? நீதான்!"

அவள் இமைகளைச் சிமிட்டினாள். அவளது கன்னங்களில் லேசான சிவப்பேறியது. மேஜை மீதிருந்த பூ வாடியதோ இல்லையோ, ஆனால் அவளது வெட்கப் புன்னகை சாரல் மழை பொழியும் அந்த மாலையை இன்னும் அழகாக மாற்றியது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

8 Sept 2026

இடையில் கொஞ்சம் இருக்கிறது மற்றும் இல்லை

காணாமல் போன கற்கள்

ஒரு குடத்தில்

கொஞ்சம் தண்ணீரைக்

காகத்திற்கு வைத்த காலம்

ஒரு லிட்டர் 20 ரூபாய் என்று

வாசகம் எழுதப்பட்ட

சுவரைத் தங்குவதற்காக

கற்களையெல்லாம்

காங்கீரிட்டாக்கி மூடியிருந்தது

*****

அவரவர்க்குத் தெரிந்த ரகசியம்

யாரோ சேமித்து வைத்திருந்ததை

பெருச்சாளிகள் தின்று விட்டுப் போகும்

பூனைகள் வந்து பிடித்து விட்டால்

இத்தனை நாட்கள் தப்பித்த

சாகசத்தை நினைத்துக் கொள்ளும்

சிக்கியது ஒன்று

சிக்காதது பலவென்று

பூனைகளுக்கும் தெரியும்

பூனைகளை வளர்ப்பவர்களுக்கும் தெரியும்

*****

இடையில் கொஞ்சம் இருக்கிறது மற்றும் இல்லை

கடைசியில் எல்லாம் இதற்குத்தானா என்று

எளிமையாகச் சொல்லி விடலாம்

இடையில் எத்தனை ஆசைகள்

எத்தனை சுயநலங்கள்

எத்தனை பழிதீர்த்தல்கள்

எல்லாம் கடந்து வந்த பிறகு தெரியும்

ஒன்றுமில்லை என்பதை

துவங்கும் போது

எப்படி இல்லையென்று துவங்க முடியும்

இருக்கிறதென்று துவங்கி

இல்லையென்று முடிப்பதைத் தவிர

வேறு வழியில்லை

*****