7 Aug 2026

குடை மற்றும் ஏணி தத்துவம்

குடை மற்றும் ஏணி தத்துவம்

மழை பெய்யும் போது மனிதன் குடையைத் தேடுகிறான். அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான். மழை நின்ற அடுத்த விநாடி, அதே குடை மூலைக்குத் தள்ளப்படுகிறது அல்லது மறதியாகப் பேருந்திலேயே விட்டுச் செல்லப்படுகிறது.

இங்கே குடைக்குக் கிடைத்த மரியாதை அதன் மீதுள்ள நேசத்தால் அல்ல, மழையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற தேவையால்.

மனிதர்கள் உங்களைக் கொண்டாடுகிறார்கள் என்றால், நீங்கள் அவர்களுக்குப் பயனுள்ள ஒரு குடையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களிடம் அவர்களுக்கு அன்பு இருக்கிறது என்று நினைத்து ஏமாந்துவிடாதீர்கள். அங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது, எனவே குடை தேவைப்படுகிறது, அவ்வளவுதான்.

ஒருவர் உங்களை எந்நேரமும் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றால், நீங்கள் அவரது வாழ்வில் இறைவன் போன்றவர் என்று அர்த்தமல்ல, அவரது வீட்டு சுத்தியல் போன்றவர் நீங்கள். ஆணி அடிக்க வேண்டிய தேவை வரும்போதெல்லாம் சுத்தியல் பவித்திரமாகத் தேடப்படும்.

நவீன உலகம் என்பது ஒரு மாபெரும் சந்தை. இங்கே உணர்ச்சிகள் கூட பண்டமாற்று அடிப்படையில் தான் இயங்குகின்றன.

எதிர்பார்ப்பு என்பது எப்படி இருக்கிறது என்றால், நான் உனக்கு இதைச் செய்கிறேன், நீ எனக்கு அதைச் செய் என்பதாக இருக்கிறது.

ஏமாற்றம் என்பது எப்படி இருக்கிறது என்றால், அவன் காரியம் முடிந்ததும் என்னை மறந்துவிட்டான் என்பதாக இருக்கிறது.

காரியம் முடியும் வரை காட்டப்படும் அதீத அக்கறையை, நாம் அன்பு என்று தவறாக மொழிபெயர்த்துக் கொள்கிறோம். நேசம் என்பது எந்தக் காரணமும் இன்றி, நிபந்தனைகள் இன்றி மலர்வது. தேவை என்பது இலக்கோடு வருவது. இலக்கு அடைந்ததும், பாதை மாறிவிடும்.

ஓர் ஏணிக்குத் தெரியும், தன்னை மிதித்துக்கொண்டுதான் மனிதர்கள் மேலே ஏறுகிறார்கள் என்று. மேலே ஏறிய பிறகு யாரும் குனிந்து ஏணிக்கு நன்றி சொல்வதில்லை; மாறாக, மேலே இருக்கும் தளத்தின் அழகைப் புகழத் தொடங்கிவிடுவார்கள்.

நம்மில் பலர், பல உறவுகளில் ஏணிகளாகவே வாழ்ந்து முடிந்துவிடுகிறார்கள்.

அவர் என்னைத் தேடி வருகிறாரே, என்று பெருமைப்பட்டுக்கொள்வது அறியாமை. அவருக்குத் வேறு யாரும் கிடைக்கவில்லை, அல்லது உங்களை விடச் சிறந்த கருவி கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இந்த உண்மையை எவ்வளவு சீக்கிரம் ஒருவர் உணர்கிறாரோ, அவ்வளவு சீக்கிரம் அவன் ஏமாற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அப்படியென்றால் இந்த உலகத்தில் தூய அன்பே இல்லையா?

மனிதர்கள் உங்களை நேசிக்கிறார்களா இல்லையா என்பதை அறிய ஒரே ஓர் எளிய வழிதான் இருக்கிறது. உங்களுக்கு எதையும் செய்யத் துப்பில்லை என்றும், உங்களிடம் தருவதற்கு ஒன்றுமே இல்லை என்றும் உலகிற்கு அறிவியுங்கள்.

அதன் பிறகும் யாராவது ஒருவர் உங்களோடு அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்தால், அவரை மட்டும் நம்புங்கள். ஏனெனில், அவர் உங்களை நேசிக்கிறார். உங்களின் வெறும் இருப்பை மட்டுமே நேசிக்கிறார்!

*****

6 Aug 2026

அல்காரிதம் சொல்லித் தர முடியாத பாடம்!

அல்காரிதம் சொல்லித் தர முடியாத பாடம்!

தொண்டை நரம்பு புடைக்க பத்தொன்பதாம் நூற்றாண்டு பாணியில் ஒரு மணி நேரம் விரிவுரை ஆற்றும் கல்வி முறையை இன்றைய மாணவர்கள் விரும்புவதில்லை. இதனால் மாணவர்களுக்குக் கவனக்குறைவு அதிகமாகி விட்டது, பொறுமையில்லை, கற்றலில் ஆர்வமில்லை என்று அர்த்தமில்லை.

மாணவர்கள் இன்று மூன்று மணி நேர கிரிக்கெட் போட்டியை அல்லது ஒரே மூச்சில் எட்டு அத்தியாயங்கள் கொண்ட ஓடிடி தொடரை கண் இமைக்காமல் பார்க்கிறார்கள். அப்படியென்றால் அவர்களிடம் கவனம் இல்லாமல் இல்லை, ஆர்வம் இல்லாமல் இல்லை, பொறுமை இல்லாமல் இல்லை. மாணவர்களுக்கு ஏற்ற சுவாரசியம் கற்பித்தலில் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

ஒரு காலத்தில் அறிவு என்பது ஆசிரியரின் தலையில் மட்டுமே இருக்கும் அரிய பொருளாக இருந்தது. அதைப் பெற மாணவர்கள் அவர் பின்னால் கைகட்டி நிற்க வேண்டியிருந்தது. புத்தகங்கள் புனிதமானவையாகக் கருதப்பட்டன.

ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ். செயற்கை நுண்ணறிவும், இணையமும் அறிவை தெருவோரக் கடைகளைப் போல ஜனநாயகப்படுத்திவிட்டன.

இன்று தகவல்களை மனப்பாடம் செய்ய வைப்பதற்கு ஆசிரியர் தேவையில்லை. அதை ஓர் எளிய கூகுள் தேடலோ அல்லது சாட்பாட்டோ நொடியில் செய்துவிடும். அப்படியென்றால், ஆசிரியரின் வேலை முடிந்துவிட்டதா?

அங்குதான் உண்மையான சிக்கலே தொடங்குகிறது.

செயற்கை நுண்ணறிவால் தகவல்களைக் கொட்ட முடியும். ஆனால், ஒரு மாணவனின் கண்களில் மின்னும் பயத்தைக் கண்டறிய முடியாது. தோற்றுப்போய் நிற்கும் ஒருவனின் தோளைத் தொட்டு, பரவாயில்லை, எழுந்து வா என்று சொல்ல முடியாது.

இன்றைய குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு முன்பே உலகத்தைப் பற்றிய பல்லாயிரம் அரைகுறைத் தகவல்களுடன் வருகிறார்கள். அந்தத் தகவல்களை யார் தருகிறார்கள்? சமூக வலைத்தளங்களின் அல்காரிதம்கள்.

வலைதளங்கள் தகவல்களைத் தருகின்றன, ஆனால் அவை விமர்சனச் சிந்தனையைத் தருவதில்லை. அவை உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன, ஆனால் அதை நிர்வகிக்கும் முதிர்ச்சியை வழங்குவதில்லை.

ஒரு காலத்தில் ஆசிரியர்கள் குழந்தைகளின் கைகளைப் பிடித்து நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இன்று அவர்களின் கைகளைப் பிடித்து, போலிச் செய்திகளும், வெறுப்புப் பிரச்சாரங்களும் நிறைந்த டிஜிட்டல் காட்டுக்குள்ளிருந்து பாதுகாப்பாக அழைத்து வர வேண்டியிருக்கிறது.

இன்றைய குழந்தைகள் ஆசிரியர்களை மதிப்பதில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. அவர்கள் அதிகாரத்தை மதிப்பதில்லை, ஆனால் அன்பையும் தகுதியையும் ஆராதிக்கிறார்கள். மாணவனின் உலகத்தைப் புரிந்து கொள்ள முயலும் ஆசிரியரை அவர்கள் என்றும் மறப்பதில்லை.

இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு, ஒரு செய்தியைக் கண்டதும் அதைச் ஆராய, சந்தேகிக்கக் கற்றுத் தர வேண்டும். மாற்றுக் கருத்துடையோரையும் சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்ளப் பழக்கப்படுத்த வேண்டும். மனிதர்களிடம் பரிவு காட்டுவதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இனி வகுப்பறையில் ஆசிரியர்கள் அமைதியாக இருந்தால், அந்த இடத்தில் சமூக வலைத்தளங்கள் அமர்ந்து கொள்ளும். பாடப் புத்தகங்களை தாண்டி, மனிதத்தையும் வாழ்க்கைக்கான நிதானத்தையும் கற்றுக்கொடுக்கும் ஒரு வழிகாட்டியாக ஆசிரியர் மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.

*****

86 லட்சம் மாணவர்கள் எங்கே போனார்கள்?

86 லட்சம் மாணவர்கள் எங்கே போனார்கள்?

காலை நேரத்துத் டீக்கடை பெஞ்சில், சுந்தரத்தின் விரல்கள் நாளிதழைப் பற்றிப் பிடித்திருந்தன. டீ மாஸ்டர் நாயர் கிளாஸை ஆற்றி ஊற்றும் சத்தம், பக்கத்து டேபிளில் சுந்தரம் விட்ட பெருமூச்சோடு போட்டியிட்டது.

"என்ன சுந்தரம்? நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையே நீதான் தனியா தாங்கிப் பிடிக்கிற மாதிரி ஒரு முக்கல்?" என்றான் பெருமாள், தனது பன்னை டீயில் தோய்த்தபடி.

"டேய் பெருமாள், இங்க பாருடா 1966 இல் கோத்தாரி ஒரு அறிக்கை கொடுத்தாராம். கல்விக்கு ஜி.டி.பியில 6 சதவீதம் நிதி ஒதுக்குங்கடா சாமின்னு சொன்னாராம். ஆனா நாம அறுபது வருஷம் ஆகியும் இப்போ எவ்வளவு ஒதுக்கியிருக்கோம் தெரியுமா? வெறும் இரண்டரை சதவீதம்தான்!"

பெருமாள் உதட்டோரச் சிரிப்போடு ஒரு சொட்டு டீயை உறிஞ்சினான்.

"இதுல என்ன ஆச்சரியம் சுந்தரம்? கோத்தாரி சொன்னது 1966ல. அப்போ ஆறு சதவீதம் தேவைப்பட்டிருக்கலாம். இப்போதான் எல்லாம் டிஜிட்டல் ஆயிடுச்சே! ஆறுல இரண்டரை போக மீதி மூன்றரை சதவீதம் எங்க போச்சுன்னு கேட்காதே. அது அப்படித்தான். "

"விளையாடாதே பெருமாள்!" சுந்தரம் நாளிதழ் பக்கத்தைச் சுட்டிக்காட்டினான். "கடந்த இரண்டு வருஷத்துல அரசுப் பள்ளிகள்ல 86 லட்சம் மாணவர்கள் குறைந்திருக்காங்களாம். அதுமட்டுமா? ஒரே வருஷத்துல நாடு முழுக்க 4,791 பள்ளிக்கூடங்களை மூடியிருக்காங்க. தமிழ்நாட்டுல மட்டுமே 369 பள்ளிக்கூடம் அவுட்!"

பெருமாள் தன் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து மேஜையில் தட்டினான்.

"அட லூசுச் சுந்தரம், இதுல இருக்குற தொலைநோக்குப் பார்வையை நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்குற! பள்ளிக்கூடத்தையே மூடிட்டா, அங்கே மாணவர்கள் இடைநிற்றல் பிரச்சனையே வராது இல்ல? பாரு இப்போ தொடக்கப் பள்ளியில இடைநிற்றல் விகிதம் 1.8 சதவீதமா குறைஞ்சிடுச்சாம்! பள்ளிக்கூடமே இல்லைன்னா மாணவன் எப்படி பாதியில ஓடிப்போவான்? இதெல்லாம் பக்கா மாஸ்டர் பிளான்!"

"ஆனா பள்ளிகள்ல இன்னும் அடிப்படை வசதியே இல்லையாம்டா. ஒரு பள்ளிக்கூடத்துல இத்தனை மாணவனுக்கு இத்தனை கழிப்பறை, இத்தனை குடிநீர் குழாய் இருக்கணும்னு அரசாணையே இருக்காம். ஆனா நிஜத்துல குழாய் இருக்கு, தண்ணி வரல!"

"குழாயாவது இருக்கே சுந்தரம், சந்தோஷப்படு," என்றான் பெருமாள் மிகவும் தீவிரமான முகத்துடன். "ஒவ்வொரு பட்ஜெட்லயும் புதுப் புது திட்டங்களை அறிவிக்கிறப்போ கிடைக்கிற கைதட்டலும் விளம்பரமும், ஏற்கனவே இருக்கிற கழிப்பறைக்குத் தண்ணி திருகி விடுறப்போ கிடைக்குமா? அறிவிப்புங்கிறது ஒரு கலை! அமுல்படுத்துறதுங்கிறது தேவையற்ற அலுப்பு! அதான் புதுத்திட்டத்தை அறிவிச்சுட்டு, பழைய குழாயைக் காய விடுறாங்க."

பெருமாள் டீக்கான காசை மேஜையில் வைத்துவிட்டு எழுந்தான்.

டீக்கடை நாயர் பழைய பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினார். அந்த குழாயில் தண்ணீர் வருகிறதா, அல்லது பாத்திரத்தில் ஊற்றி வைத்திருக்கும் தண்ணீரில் சமாளிக்கிறாரா என்பதைச் சுந்தரம் இப்போது உற்றுக் கவனிக்கத் தொடங்கினான்.

*****

5 Aug 2026

வியாபாரம் வாழ்க! உலகம் ஒழிக!

வியாபாரம் வாழ்க! உலகம் ஒழிக!

உலக அமைதிக்கான 405 ஆவது சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தின் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.

அரங்கத்தின் நடுவே ஏசி காற்று ஜிலீரென்று அடிக்க, ஏழை நாடுகளின் பஞ்சத்தைப் பற்றிப் பேசிவிட்டு, தட்டிலிருந்த பீட்ஸாவைப் பீஸ்புல்லாகச் சுவைத்துக்கொண்டிருந்தார் தண்டோரா தேசத்து அதிபர் ஜான்.

அவருக்கு எதிரே அமர்ந்திருந்த மற்றொரு புல்புல்தாரா தேசத்து வல்லரசு அதிபர் அலெக்ஸி, தனது வீட்டோ அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தி உலக அமைதியைக் காப்பாற்றுவது, அதாவது மற்றவன் எவனையும் பேச விடாமல் செய்வது என்று மனதுக்குள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.

"ஜான்! பண்டோரா தேசத்துல அணு ஆயுதம் இருக்குன்னு சொல்லி நாம ஆரம்பிச்ச போர் நல்லா போய்ட்டு இருக்குல்ல? ஆனா பாருங்க, நம்மகிட்ட ஏவுகணை ஸ்டாக் முடியப் போகுது!" என்றார் அலெக்ஸி, டிஷ்யூ பேப்பரால் உதட்டைத் துடைத்தபடி.

"கவலைப்படாதீங்க அலெக்ஸி. அமைதிப் பேச்சுவார்த்தைன்னு ஒரு போர்டை மாட்டிட்டு, ரெண்டு வாரம் தாக்குதலை நிறுத்துவோம். அந்த கேப்பில் ஆயுத உற்பத்தியை டபுள் ஆக்கிட்டு, அப்புறம் பண்டோரா தேசம் பேச்சுவார்த்தைக்கு வரலைன்னு சொல்லி திரும்ப அணுகுண்டை வீச வேண்டியதுதான்!" என்று ஜான் சிரித்தார்.

அப்போது, மாநாட்டின் மேடைக்கு வந்தார் திரு முனியாண்டி பரமசிவம். அவர் உலக அமைதி அமைப்பின் தலைமைச் செயலாளர். மைக் முன்னால் நின்று தொண்டையைக் கனைத்தார்.

"கணவான்களே! இந்த மாநாட்டின் நோக்கம் உலக அமைதி. ஆனால் பண்டோரா மற்றும் தண்டோரா தேசங்களுக்கு இடையே ஆயுதப் போட்டி முற்றிவிட்டது. நீங்கள் உற்பத்தி செய்து குவித்துள்ள அணுகுண்டுகள், ரோபோட்டிக்ஸ் ஆயுதங்கள், உயிரி இரசாயனப் பொருட்கள். இவை அனைத்தும் மனித குலத்தையே அழித்துவிடும். இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது!" என்றார் முனியாண்டி பரமசிவம்.

அதிபர் ஜான் அலட்சியமாகச் சிரித்தார். "என்ன தீர்வு முனியாண்டி பரமசிவம்? ஐ.நாவில் இன்னொரு கண்டன தீர்மானம் போடுவீங்களா? அதைத்தான் என் பாக்கெட்ல இருக்குற வீட்டோ சுவிட்சை வச்சு ஒரே நொடியில தூக்கிக் குப்பையில போட்டுடுவேனே!"

அலெக்ஸியும் சேர்ந்துகொண்டார், "ஆமாம் முனியாண்டி பரமசிவம், நீங்க பிடிஎப் பைல் அனுப்புறதை விட நாங்க வெடிகுண்டு அனுப்புற வேகம் அதிகம். எங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இந்த உலகத்தின் ஆயுதச் சந்தையே எங்க கைக்குள்ளதான் இருக்கு!"

முனியாண்டி பரமசிவம் லேசாகப் புன்னகைத்தார். அவரது புன்னகையில் ஒரு தத்துவார்த்தமான நக்கல் ஒளிந்திருந்தது.

"ஐயா அதிபர்களே. நீங்க சொல்றது உண்மைதான். ஆனா ஒரு சின்ன திருத்தம். ஆயுத உற்பத்தியில நீங்க மட்டும் பெரிய ஆள் இல்லை." என்று கூறிய முனியாண்டி பரமசிவம், தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய ரிமோட் கன்ட்ரோலரை எடுத்தார்.

அரங்கத்தில் இருந்த பெரிய திரையில் ஒரு வரைபடம் தோன்றியது.

"என்ன இது?" என்று பதற்றத்தோடு கேட்டார் ஜான்.

"இதுதான் உங்களோட ரகசிய அணு ஆயுதக் கிடங்குகள். நீங்க ரெண்டு பேரும் உலகத்துக்குத் தெரியாம தயாரிச்சு வச்சிருந்த மொத்த அணுகுண்டுகளையும், ஏவுகணைகளையும் போன மாசமே உங்க நாட்டு பாதுகாப்பு அமைப்பில் இருந்த சில வியாபாரிகள் மூலமா ரகசியமா ஒருத்தர் மொத்தமாக விலைக்கு வாங்கிட்டார்!" என்றார் முனியாண்டி பரமசிவம்.

அதிபர் அலெக்ஸி அதிர்ச்சியில் நாற்காலியை விட்டு எழுந்தார். "என்னது? எங்க நாட்டு அணுகுண்டை எங்களுக்கே தெரியாம வித்துட்டாங்களா? அதை எவன் வாங்குனான்? உலகத்துலேயே அவ்வளவு பெரிய கோடீஸ்வரன் எவன் இருக்கான்?"

பரமசிவம் கூலாகத் தன் கண்ணாடி லென்ஸைத் துடைத்தபடி சொன்னார்:

"வேற யாரு? அந்த பண்டோரா தேசம்தான் உங்க ரெண்டு பேரோட மொத்த அணு ஆயுதத்தையும் வாங்கிடுச்சு!"

அரங்கமே உறைந்துபோனது. ஜானின் கையிலிருந்த ஒயின் கிளாஸ் கீழே விழுந்து நொறுங்கியது.

"பண்டோரா தேசமா?! அவங்ககிட்ட அணு ஆயுதமே இல்லைன்னு நினைச்சுதானே நாங்க போரே தொடுத்தோம்? அவங்ககிட்ட எப்படி அவ்வளவு பணம் வந்தது?" என்று கத்தினார் ஜான்.

முனியாண்டி பரமசிவம் சிரித்தார்.

"நீங்க போடும் வரிக்கு பயந்து, உங்க தண்டோரா தேசத்து தனியார் ஆயுத நிறுவனங்களே வரி ஏய்ப்பு செய்வதற்காகப் பண்டோரா தேசத்துக்கு மறைமுகமாக ஆயுதங்களை வித்துட்டாங்க. இப்போ நிலவரப்படி, உங்க ரெண்டு பேர்கிட்டயும் பழைய துப்பாக்கியைத் தவிர வேற பெரிய ஆயுதம் எதுவும் இல்லை. ஆனா, பண்டோரா தேசத்துகிட்ட இப்போ உலகத்திலேயே அதிக அணு ஆயுதங்கள் இருக்கு!"

அரங்கத்தின் லைட்டுகள் லேசாக மிளிர்ந்தன. முனியாண்டி பரமசிவம் தனது கோட்டைச் சரிசெய்து கொண்டு தொடர்ந்தார், "அப்புறம் இன்னோரு முக்கியமான விஷயம் அதிபர் ஜான்! பண்டோரா தேசத்து அதிபர் இப்பதான் எனக்கு மெசேஜ் பண்ணாரு. தண்டோரா தேசத்துகிட்ட இப்போ குண்டு தீர்ந்து போச்சுல்ல. சோ, நாங்க அமைதிப் பேச்சுவார்த்தையைத் தற்காலிகமா நிறுத்திட்டு, உங்க மேல போர் தொடுக்கப்போறோம்'னு சொல்லச் சொன்னாரு!"

மாநாட்டு அரங்கத்தில் இருந்த வல்லரசு அதிபர்கள் இருவரும், உலக அமைதிக்காக அல்ல. தங்கள் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதற்கு வழி தெரியாமல் திகைத்து நின்றார்கள்!

வெளியே 'உலக அமைதி மாநாடு வாழ்க' என்ற பிரம்மாண்டமான பேனர் காற்றில் பறந்துகொண்டிருந்தது.

*****

மெல்ல சாகும் இனம்!

ஜீன் எக்ஸ்பிரஸ்

அறை முழுவதும் ஏசி குளிரையும் தாண்டி ஒருவித பரபரப்பு புகையும் வாடையுமாக உறைந்திருந்தது.

"டாக்டர் மார்க்கண்டேய ஞானதிரவியம்! நேத்திரா டிவியில நேத்தி நீங்க பேசினதெல்லாம் ஓகே. ஆனா அரசாங்கம்ங்கறது ஒரு பிசினஸ். மதுவிலக்கைக் கொண்டு வந்தா கள்ளச்சாராயம் பெருகிடும்னு எங்களுக்கு வர்ற ரிப்போர்ட் சொல்லுது!" என்றார் அந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, கையில் இருந்த கோப்பை மூடிவைத்தபடி.

மார்க்கண்டேய ஞானதிரவியம் லேசாகச் சிரித்தார். "சார், 1971க்கு முன்னாடி 30 வருஷம் இங்க பூரண மதுவிலக்கு இருந்தது. அப்போ இல்லாத கள்ளச்சாராயமா இப்போ வரப்போகுது? அரசாங்கமும் போலீஸும் நினைச்சா ஒரு பொட்டு கள்ளச்சாராயம் இல்லாம பண்ண முடியும். கொரோனா டைம்ல கடைகளை மூடுனீங்களே. நாடு என்ன அழிஞ்சா போச்சு?"

அதிகாரி யோசனையுடன் பேனாவைச் சுழற்றினார்.

"சரி. ஆனா இதுக்கு மேல இந்தத் தமிழ்ச் சமூகம் குடிச்சா அடுத்த 30 வருஷத்துல தமிழ் சமுதாயமே அழிஞ்சிடும், மரபணு பேரிடர்ன்னு சொன்னீங்களே. அது கொஞ்சம் ஓவரா தெரியல?"

மார்க்கண்டேய ஞானதிரவியம் தன் லேப்டாப்பைத் திறந்து ஒரு டி.என்.ஏ  வரைபடத்தைக் காண்பித்தார்.

"இல்ல சார். இது பியூர் சயின்ஸ். 1971லிருந்து ரெண்டு தலைமுறையா இங்க குடியோட வீரியம் ரத்தத்துல ஊறிடுச்சு. மூணாவது தலைமுறையும் இதையே தொடர்ந்தா, அடுத்து பிறக்கப்போற குழந்தைகள் வயித்துல இருக்கும்போதே மதுவுக்கு அடிமையாத்தான் பிறக்கும். 55 வயசுல தெம்பா இருந்த தமிழ்நாட்டு ஜீன் அமைப்பு இப்போ சிதையுது. இன்னும் 30 வருஷத்துக்கு அப்புறம் தமிழன்னு சொல்லிக்க இங்க ஆள் இருக்க மாட்டான்."

அறைக்குள் ஒரு கனத்த அமைதி நிலவியது. ஐ.ஏ.எஸ் அதிகாரி பெருமூச்சு விட்டார்.

"ரைட். விஷயம் சீரியஸ்தான். டாஸ்மாக்கைத் தனியாருக்குக் கொடுத்தா லாப நோக்கத்துல இன்னும் அதிகமா விற்பாங்க. நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா, உடனடியாகக் கடைகளை மூடுறதுதான் சமுதாயத்தைக் காப்பாத்துற ஒரே வழி! நான் உடனே இதை மேலிடத்துக்குப் பார்வர்ட் பண்றேன்."

மார்க்கண்டேய ஞானதிரவியம் நிம்மதியுடன் லேப்டாப்பை மூடினார். ஒரு மருத்துவ விஞ்ஞானியின் கடமை முடிந்தது என்ற திருப்தி அவர் முகத்தில்.

*

அடுத்த வாரம்.

மார்க்கண்டேய ஞானதிரவியம் மருத்துவமனையில் தனது வழக்கமான பரிசோதனைகளை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் அரசு வெளியிட்ட அதி அவசர அறிவிப்பு ஒலித்தது,

"பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உடனடியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது! அனைத்து டாஸ்மாக் கடைகளும், பார்களும் இன்றோடு மூடப்படுகின்றன!"

மார்க்கண்டேய ஞானதிரவியம் புன்னகைத்தார், "செய்துவிட்டார்கள்!"

*

மார்க்கண்டேய ஞானதிரவியத்தின் கார் ஒரு சிக்னலில் நின்றது. பக்கத்துச் தெருவில் திடீரென ஒரு மிகப்பெரிய கூட்டம் அலைமோதியது. ஏதோ திருவிழா போல ஆட்களின் கூச்சல்.

மார்க்கண்டேய ஞானதிரவியம் காரின் கண்ணாடியை இறக்கி, பக்கத்தில் நின்ற ஒரு இளைஞனிடம் கேட்டார், "தம்பி என்ன அங்கே கூட்டம்? டாஸ்மாக் மூடுனதைக் கொண்டாடுறாங்களா?"

அந்த இளைஞன் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்தான்.

"ஹலோ அங்கிள்! எந்த உலகத்துல இருக்கீங்க? கவர்மென்ட் மதுக்கடையை மூடுன செய்தி வந்த அரை மணி நேரத்துல, பக்கத்து மாநிலத்துல இருந்து லாரி லாரியா சரக்கு உள்ள வர ஆரம்பிச்சிடுச்சு! அதைவிடக் கூத்து, இங்க இருக்கிற பார்மா கம்பெனிகள் எல்லாம் ஹோம் டெலிவரி ஆப் மூலமா லீகலா ஆல்கஹால் சப்ளிமெண்ட் விக்க ஆரம்பிச்சிட்டாங்க! டாஸ்மாக் இருந்தப்பக்கூட இவ்வளவு ஸ்பீடா கிடைக்கல சார்!"

மார்க்கண்டேய ஞானதிரவியம் அதிர்ச்சியுடன் பார்த்தார். அந்த இளைஞன் தன் மொபைல் திரையைக் காண்பித்தான். அதில் ஒரு புது ஆப் மிளிர்ந்தது, டிராப்ஸ் - 10 நிமிடத்தில் உங்கள் வாசலில்!'

அப்போது மார்க்கண்டேய ஞானதிரவியத்தின் மொபைல் போன் அடித்தது. ஸ்கிரீனில் அதே மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பெயர்.

மார்க்கண்டேய ஞானதிரவியம் பதற்றத்துடன் போனை எடுத்தார், "ஹலோ சார்"

மறுமுனையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒருவித கார்ப்பரேட் நக்கல் இருந்தது.

"டாக்டர்! உங்க ஜீன் தியரி ரொம்ப அற்புதம் சார்! டாஸ்மாக் மூலமா அரசுக்கு வந்த வருமானத்தை விட, இப்போ இந்த ஆல்கஹால் ஆல்டர்நேட்டிவ் ஆப்ஸ் மூலமா அரசுக்கு வரியும், தனியாருக்கு லாபமும் 3 மடங்கு அதிகமா வருது! மதுவிலக்கு கொண்டு வந்தா பிசினஸ் அடிபடும்னு நினைச்சோம். ஆனா அதுவே ஒரு புதிய மிகப்பெரிய சந்தையைத் தொறந்து விட்டுடுச்சு! தேங்க்ஸ் டாக்டர்!"

மார்க்கண்டேய ஞானதிரவியத்தின் கையில் இருந்த போன் மெதுவாக நழுவியது.

கார்ப்பரேட் உலகமும், மனித மூளையும் அறிவியலை விட எவ்வளவு வேகமாக அப்டேட் ஆகிவிடுகிறது என்பதை நினைத்தபோது, 30 ஆண்டுகள் தேவையில்லை, தமிழ் சமுதாயத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது!

*****

4 Aug 2026

மெய்யறிதலின் புதிர்வெளியும் சில அவசரக் குடுக்கைத்தனங்களும்!

மெய்யறிதலின் புதிர்வெளியும் சில அவசரக் குடுக்கைத்தனங்களும்!

கார் பயணத்தில் தொடங்கும் ஜெயமோகனின் கட்டுரை, மனித மண்டையோட்டைக் கிழித்துக்கொண்டு போய், இறுதியில் பிரபஞ்சத்தின் பெருவெளியில் போய் நிறைகிறது. ஜெயமோகன் பாணி உரைநடையின் அசாத்திய வசீகரத்தையும், அதே சமயம் அதில் ஒளிந்திருக்கும் சின்னச் சின்னத் தர்க்கக் கோளாறுகளையும் ஒருசேரத் தரிசிக்க ‘மேகங்களின் குரல்’ தொடர் கட்டுரையின் ‘புத்திக்கும் அப்பால்…’ என்ற இக்கட்டுரை ஒரு நல்ல வாய்ப்பு.

அறையில் அமர்ந்து பேசினால் "அன்றாட விஷயங்கள்" மட்டுமே பேசப்படுமாம்; காரில் வேகமாகப் போனால் "புற உலகம் இல்லாமல் ஆகி, உரையாடல் கூர் கொள்ளுமாம்".

என்ன ஓர் அழகான கற்பனை! பொதுவாகக் கார் பயணங்களில் "அடுத்த டோல் பிளாசா எப்போ வரும்?", "டீ குடிக்க வண்டி நிறுத்துவோமா?" என்று பேசிக்கொண்டு போவதுதான் நம் ஊர் வழக்கம். ஆனால், எழுத்தாளரின் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டும் கார் கதவு சாத்தப்பட்டதும் ஆளுக்கொரு தத்துவப் பொட்டலத்தைப் பிரித்து வைக்கிறார்கள் போலிருக்கிறது. என்னவோ போங்கள், காரில் போனால் மட்டுமே தீவிரம் கூடும் என்றால், நம்மூர் டிராபிக் ஜாமில் சிக்குபவர்கள் எல்லாம் எப்போதுதான் மெய்ஞானம் அடையப் போகிறார்களோ தெரியவில்லை!

விபத்தில் சிக்கிய தோழியின் அனுபவ விவரிப்பு பகுதி மிக அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது, ஒரு சிறுகதைக்குரிய அடர்த்தியோடு. ஆனால், அங்கேயும் ஒரு கிண்டலான நண்பர் கேட்கிறார், "கண்ணாடிதான் பறந்துபோயிருக்குமே, அப்புறம் எப்படி கூழாங்கல் முதற்கொண்டு துல்லியமாகத் தெரிந்தது?"

நியாயமான கேள்விதான்! அதற்கு எழுத்தாளர் சொல்லும் பதில் என்னவென்றால், "மூளைக்குத் தேவைப்பட்டால் ஒலியைக் காட்சியாகவும், காட்சியை மணமாகவும் மாற்றிக்கொள்ளும்!"

சுவாரஸ்யமான வாதம். ஆனால், பார்வை போன பிறகு மூளை கண்ணாடி வேலையைத் தானே பார்த்துக்கொள்ளும் என்றால், அப்புறம் எதற்கு அந்த அம்மா தடிமனான கண்ணாடி போட்டுக்கொண்டு திரிய வேண்டும்? மூளையின் இந்த அசாத்திய திறமையை ஏன் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை என்ற கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை.

பீனியாஸ் கேஜின் மண்டையோட்டுக்குள் கடப்பாரை புகுந்து சென்ற கதை, நரம்பியலில் ஒரு புகழ்பெற்ற சம்பவம். அதை மிக அழகாக விவரித்துவிட்டு, 'Brain அல்ல, Braining' என்று ஆலிவர் சாக்ஸையும் துணைக்கு அழைத்து வருகிறார் ஜெ.மோ. இதுவரைக்கும் அறிவியல் ரொம்பவே சுவாரஸ்யமாகவும் அழகாகவும் போகிறது.

ஆனால், அதற்குப் பிறகுதான் எழுத்தாளர் தனது வழக்கமான செம்பைச் செருகுகிறார்.

"நான் வேதாந்தி. என் பாதை தூய அறிவின் பாதை. அறிவியலுக்கு அப்பால் யோசிப்பதில்லை" என்று சுய சான்றிதழ் கொடுத்துக்கொண்டே, அடுத்த அடியை அப்படியே அறிவியல் எல்லைக்கு வெளியே எடுத்து வைக்கிறார்.

கேஜின் சிதைந்த மூளை தன்னைத்தானே சரிசெய்துகொண்டது உயிரியலின் அசாத்தியமான ஒரு தன்னமைவு இயக்கம்.

ஆனால், அதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல், "அப்படிச் செய்ய வைத்தது எது? அதுதான் அது!" என்று ஒரே தாவலாகக் கீதையின் புத்தே பரதஸ்து சஹ் என்பதற்குள் போய் விழுந்துவிடுகிறார்.

அறிவியல் இன்னும் ஒரு கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவில்லை என்றால், "அடடா, அங்கேதான் மெய்ஞானம் ஒளிந்திருக்கிறது!" என்று உடனடியாகப் பிரகடனம் செய்துவிடுவது நம்மூர் வேதாந்திகளுக்கு கைவந்த கலை. அறிவியலின் இடைவெளியில் ஆன்மிகக் கொடியை நட்டு வைக்கும் இந்த அவசரம் இருக்கிறதே, அதுதான் சுவாரஸ்யமானது!

ஒன்றை ஒத்துக்கொண்டாக வேண்டும். கட்டுரை வாசிக்க மிகச் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், "நான் தூய அறிவியல் வழியில் சிந்திக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே, அறிவியலின் தோள் மீது ஏறி நின்று வேதாந்தக் கொடி பிடிக்கும் இந்த நுட்பமான போலித் தருக்கம்தான் இதில் வேடிக்கையான விஷயம்.

சுருக்கமாகச் சொன்னால், இக்கட்டுரை ஓர் அரிய அனுபவப் பதிவு; சுவாரஸ்யமான அறிவியல் விவாதம். ஆனால், இறுதியில் எழுத்தாளர் அடையும் அந்த வேதாந்த முடிவு என்பது தூய அறிவின் பாதை' அல்ல; அது அவருடைய சொந்த ஆன்மிக விருப்பம் மட்டுமே!

*****

தொண்ணூற்று ஒன்பது + ஒன்று!

தொண்ணூற்று ஒன்பது + ஒன்று!

அந்த வகுப்பறையில் மொத்தம் இரண்டு பேர்தான் இருந்தார்கள்.

ஒருவர், ஆசிரியர் தமிழரசன். இன்னொருவன், மாணவன் கபிலன்.

கடந்த மூன்று வருடங்களாகவே வகுப்பறை அப்படித்தான் இருந்தது. கபிலன் தும்மினால் தமிழரசனுக்கு ஜலதோஷம் பிடிக்கும்; தமிழரசன் பெருமூச்சு விட்டால் கபிலன் புத்தகத்தை விரிப்பான்.

வகுப்பில், யாருக்காவது சந்தேகம் இருக்கா? என்று கேட்கும்போதெல்லாம், கபிலன் தமிழரசனையும், தமிழரசன் கபிலனையும் பார்த்துக் கொள்வார்கள்.

மதிய உணவு சமைக்கும் இரு அக்காக்களும் வாசலில் அமர்ந்து, "இன்னிக்கு ஒரு முட்டை மிச்சம் சாமி, யார் சாப்பிடுறது?" என்று தினமும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டுவார்கள்.

ஒரு நாள், தலைமை ஆசிரியர் போல வந்த ஓர் அதிகாரி, அட்டவணையோடு வகுப்பறைக்குள் நுழைந்தார்.

"தமிழரசன் ஐயா! எமிஸ் தரவுப்படி உங்க ஸ்கூல்ல 10 பேருக்கு கம்மியா இருக்கு. பக்கத்து யூனியன்ல இருக்குற பெரிய ஸ்கூல் கூட இந்த ஸ்கூலை மெர்ஜ் பண்ணப்போறோம். பையனுக்கு ஒரு மினி வேன் வச்சு அங்க அனுப்ப போறோம்! நீங்க நாளைல இருந்து 100 பேர் இருக்குற பெரிய ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர்!" என்றார்.

தமிழரசனுக்குக் கண்கள் கலங்கின. "அப்போ கபிலன்? அவன் மத்தப் பிள்ளைகளோட ஓடிப் பிடிச்சு விளையாடுவானா சார்? அவனுக்கு சமூகத் திறன் வளருமா சார்?"

"ஆமாம் ஐயா! மினி வேன்ல பாட்டு பாடிட்டே போவான். தினமும் புதுசு புதுசா சண்டை போடுவான், கலைத் திருவிழாவுல ஜெயிப்பான்! நீங்களும் நூறு பேருக்குப் பாடம் நடத்தலாம். நிதி மிச்சம், ஆசிரியர் வளம் மிச்சம்!" என்று கவிதையாகச் சொல்லிவிட்டு அதிகாரி கிளம்பினார்.

மறுநாள் காலை.

புதிய, பிரம்மாண்டமான ஒன்றிய நடுநிலைப் பள்ளி. நூறு மாணவர்கள், விளையாட்டு மைதானம், நூலகம், காலை உணவுத் திட்டம் என ஒரே அமர்க்களமாக இருந்தது.

தமிழரசன் உற்சாகமாக வகுப்பறைக்குள் நுழைந்தார். அடடா! எத்தனை குழந்தைகள்! எத்தனை கேள்விகள்! எத்தனை சமூகத் திறன்! என்று நெகிழ்ந்துபோய், கரும்பலகையில் எழுதத் தொடங்கினார்.

அப்போது, வகுப்பறையின் கடைசிப் பெஞ்சில் ஒரு சிறுவன் தனிமையாக, மிகவும் சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.

பக்கத்திலிருந்த மாணவனிடம் கேட்டார், "யார் அது? ஏன் அவ்வளவு சோகமா இருக்கான்?"

அந்த மாணவன் சலிப்பாகச் சொன்னான், "அவன் பேரு பாரிவேந்தன். அவன் தான் போன வருஷம் வரைக்கும் இந்த பெரிய ஸ்கூல்ல படிச்ச ஒரே ஆளு!"

தமிழரசன் அதிர்ச்சியுடன், "என்னது? போன வருஷம் வரைக்கும் இந்த பெரிய ஸ்கூல்ல ஒரே ஒரு பையன்தான் இருந்தானா? அப்போ மிச்ச 99 பேர் யாருடா?" என்று கேட்டார்.

மாணவன் சிரித்துக்கொண்டே சொன்னான், "ஐயா! அரசாங்கம் இந்த வருஷம் பத்து  மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளை மூடி, ஒரே பெரிய பள்ளியா இணைப்போம்னு அறிவிச்சங்கல்ல? அப்படி ஒன்றியம் முழுக்கப் பூட்டப்பட்ட 49 சின்னப் பள்ளிகளுல இருந்து, 49 மினி வேன்கள்ல ஒண்ணு, ரெண்டு. மூணுன்னு கூட்டிட்டு வந்து மொத்தமா இறக்கின 99 மாணவர்கள்தான் ஐயா நாங்க எல்லாரும்!"

தமழரசன் மலைத்துப்போய் நின்றார்.

இப்போது அங்கே, வேனில் வந்த 99 மாணவர்களும் புதிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டுபோய், "நாங்க பழையபடி எங்க ஊரு இரண்டு பேர் ஸ்கூலுக்கே போறோம்டா சாமி!" என்று மினி வேனை நோக்கி ஓடத் தொடங்கியிருந்தார்கள்.

தமிழரசனின் கண்கள் அந்த 99 பேரில் கபிலன் எங்கே எனத் தேடத் தொடங்கியது.

*****