15 Oct 2024

வளர்க நும் கவிதைக் கடை

வளர்க நும் கவிதைக் கடை

இன்று ஒரு கவிதை இல்லாமல் போய் விட்டதே

என்ன கொடுமை ஐயா

ஒரு கவிதை ஒரே ஒரு கவிதை

கூடுதலாகச் சுட்டால் குறைந்தா போய் விடுவீர்

கவிதை வடை சுடும் கவிப்பித்தரே

ஒரே ஒரு கவிதை

கூடுதலாகப் போட்டுத் தந்தால் குறைந்தா போய்விடுவீர்

கவிதைத் தேநீர் போடும் கவிக்கிறுக்கரே

ஒரே ஒரு தட்டுக் கவிதை

கூடுதலாகக் கொண்டு வந்து வைத்தால்

குறைந்தா போய் விடுவீர் உணவு விடுதியின் கவிச்சேவகரே

என்ன நடக்கிறது என்பது தெரியாதா எனக்கு

நிறைய கவி உணவுகள் மீந்து வீணாகி விட்டதாகக்

குளிர்பதனப் பெட்டியில் வைத்து

மறுநாளுக்குத் தயார் செய்யும் கவி முதலாளியே

அதிலொரு புழுத்த கவி வறுக்கியை

எடுத்து வீசக் கூடாதோ

இப்போது ஒரு கவிதை வடை மட்டும்

எலிக்காகப் பொறியில் காத்திருப்பது

தெரியாது என்றா நினைக்கிறீர்கள்

வாழ்க உங்கள் கவிதைப் பணி

வளர்க நும் கவிதைக் கடை

*****

13 Oct 2024

மோசடிகளின் காலம்!

மோசடிகளின் காலம்!

இது கலி காலம் என்று சொல்வதை விட மோசடிகளின் காலம் என்று சொல்லலாம் போலிருக்கிறது. மோசடிகளில் சிக்காமல் மோட்சம் பெறுவது எப்படி? என்று புத்தகம் போட்டால் அநியாயத்துக்கு விற்றுத் தீரும். மோட்சம் பெறுவதிலும் மோசடிகள் உருவாகி விட்ட காலத்தில் மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கே ரொம்ப பெரிய சாமர்த்தியம் வேண்டும் போலிருக்கிறது.

பெரும்பாலான மோசடிகளைப் பொருத்த வரையில் அவை மக்களாகவே கொண்டு போய் தலையைக் கொடுத்துக் கொள்ளும் வகையினதாகவே இருக்கின்றன.

இது தீபாவளி நேரம். சந்தோசமாகக் கொண்டாட வேண்டிய நேரத்தில் நீங்கள் கவலையோடு அமர்ந்திருந்தால் நீங்கள் தீபாவளி சீட்டுப் போட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். வங்கி, அஞ்சலகம் போன்றவற்றில் தொடர் வைப்பு எனும் Recurrence Deposit (R.D) இருக்கையில் இது போன்ற சீட்டுகள் பக்கமே போக வேண்டியதில்லை. ஒருவேளை தீபாவளிச் சீட்டுப் போட்டு எதுவும் கை நழுவிப் போயிருந்தால் அது போன்ற முயற்சிகளை இந்தத் தீபாவளியோடு தலைமுழுகிவிட்டு, தொலையட்டும் அந்த நரகாசுரன் என்று இனி வரும் தீபாவளிகளிலாவது எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் செய்யுங்கள்.

அடுத்த செய்தி கைபேசி வைத்திருப்பவர்களுக்கானது. அதிலும் கைபேசியிலேயே சலகவிதமான பணப் பரிவர்த்தனைகளையும் செய்பவர்களுக்கானது.

அலைபேசி பண பரிவர்த்தனைகளில் நாம் பணம் அனுப்புவதற்குத்தான் ஆறிலக்க அல்லது நான்கிலக்க கடவு எண்ணைத் (PIN Number) தர வேண்டுமே தவிர, நாம் பணத்தைப் பெறுவதற்கு எதையும் தர வேண்டியதில்லை. பணத்தைப் பெறுவதற்கு கடவு எண்ணைத் தந்தால் உங்கள் பணம்தான் வெளியே போகுமே தவிர, உங்களுக்குப் பணம் வராது. மோசடியாளர்கள் இந்த இடத்தை நுட்பமாகப் பயன்படுத்துகிறார்கள். உங்கள் கணக்கிற்குப் பணம் வேண்டுமானால் உங்கள் ரகசிய கடவு எண்ணை இடுங்கள் என்கிறார்கள். நீங்கள் உங்கள் கடவு எண்ணைப் பதிவிட்டால் உங்கள் கணக்கிலிருந்து அவர்கள் கணக்கிற்குப் பணம் போய் விடும்.

அடுத்த செய்தி வீட்டுமனை வாங்குவதற்காக முண்டி அடித்துக் கொள்பவர்களுக்கானது.

வீட்டு மனைகள் வாங்குவதென்றால்நம்மவர்களுக்கு அடங்காத ஆசை இருக்கிறது. பல நேரங்களில் எந்த விதமான விசாரணையும் இன்றி வாங்கி விட்டு, பின்னர் ஒரு பெரிய விசாரணை வளையத்திற்குள் சிக்கிக் கொள்வார்கள். குறிப்பாகப் புறம்போக்கு நிலங்களையும் வீட்டு மனைகளாகப் போட்டு வாங்குபவர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். போகப் போகத்தான் அது புறம்போக்கு இடம் என்பதே வாங்கியவர்களுக்குத் தெரிய வரும். பிறகுதான் வில்லங்கம், சிக்கல், பிரச்சனை எல்லாம் ஆரம்பமாகும். இந்த இடம்தான் நீங்கள் விசாரணை வளையத்திற்குள் வரும் இடம். இந்த இடத்திற்குள் வராமல் வீட்டு மனை வாங்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது. மனைகளைப் பார்த்த உடன் அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஆசைப்படாமல் கொஞ்சம் அக்கம் பக்கம் விசாரித்து, பட்டா, சிட்டா, அடங்கல் எல்லாம் பார்த்து விட்டு கொஞ்சம் இதற்கென இருக்கும் வழக்கறிஞர்களிடம் சட்டப்பூர்வ அபிப்ராயத்தைக் கேட்டு விட்டுச்  செய்தால் பிரச்சனைகள் இருக்காது.

இப்போது இந்த மூன்று சம்பவங்களையும் எடுத்துக் கொள்ளுங்களேன். மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பணம்தான் அந்தத் தொடர்பு. பணத்தைப் பயன்படுத்திதான் எவ்வளவு மோசடிகள். ஆக உங்களைச் சீட்டுப் போட வைத்து ஏமாற்றலாம், அலைபேசி பணபரிவர்த்தனைகளில் ஆசையைத் தூண்டி ஏமாற்றலாம், வீட்டு மனை விற்பதில் ஏமாற்றலாம்.

இனி வரும் காலத்தில் ஏமாற்றுவதும், ஏமாறாமல் இருப்பதும் பெரிய கலையாக ஆகி விடும் போலிருக்கிறது. காலந்தோறும் கலைகளில் விற்பன்னர்கள் உருவாகிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

*****

12 Oct 2024

இலவசம் எனும் மாயமான்!

இலவசம் எனும் மாயமான்!

இலவசம் என்றால் வாய்ப் பிளப்பவர்கள் ஆயிற்றே நாம்.

ஓசியில் கொடுத்தால் பினாயிலையும் குடிப்பவர்கள் என்று கவுண்டமணி சும்மாவா சொன்னார்?

மருத்துவப் பரிசோதனைகளுக்காகச் செலவு செய்து அலுத்து வெறுத்துப் போனவர்களுக்கு, இலவச மருத்துவப் பரிசோதனை என்றால் எப்படி இருக்கும்? கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருக்குமா? தேடிப் போன புதையல் நாடி வந்தது போல இருக்குமா?

எதற்காக இலவச மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்?

ஏதேனும் நோயிருந்தால் கண்டறிந்து விடலாம் என்று சொல்வீர்கள்.

நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால்தான் அப்படி நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். அதை விடுத்து நோயில்லாத ஒருவர் தனக்கு நோய் இருக்குமோ என்றெல்லாம் இது போன்ற இலவசப் பரிசோதனைகள் பக்கம் போகக் கூடாது.

தவிரவும் உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை தேவையா இல்லையா என்பதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும். அவர் உங்களுக்கு எந்த விதமான சோதனை செய்ய வேண்டும் என்பதை உங்களைப் பரிசோதித்து எழுதித் தர வேண்டும்.

தெருவில் வருவோர், போவோர் எல்லாம் இது போன்ற இலவச மருத்துவப் பரிசோதனைகள் என்று சொல்லி உங்களைப் பரிசோதிக்கக் கூடாது.

காசா? பணமா? செய்து கொண்டால் ஆயிற்று என்றால், இலவச மருத்துவப் பரிசோதனைகளைச் செய்பவர்கள் கேனைகளா என்ன?

அவர்கள் பாட்டுக்கு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து விட்டு, அதன் முடிவுகளைத் தந்து அங்கே முகாமிட்டு இருக்கும் மருத்துவர்களைப் போய் பார்க்கச் சொல்கிறார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து விட்டு சர்க்கரை அதிகமாக இருக்கிறதே, ரத்த அழுத்ததுக்கான அறிகுறி தெரிகிறதே, கொழுப்பு கூடுதலாவது போலத் தெரிகிறதே என்று அவர்கள் பாட்டுக்கு மருந்து மாத்திரைகளை எழுதித் தள்ளி விட்டு அதை வாங்கி முன்கூட்டியே நோய்களைத் தடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

அந்த மருந்துகளை வாங்கி விட்டு ரசீதைப் பார்த்தால் இரண்டாயிரம், மூவாயிரம் ஆகிறது. இதற்கு நீங்கள் காசு கொடுத்தே உங்களைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை இதை விட குறைவானத் தொகையில் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இலவச மருத்துவ பரிசோதனைகள் என்பன இலவசங்களே அல்ல. உங்களுக்கான பரிசோதனை முடிவுகள் என்று சொல்லி, உங்களை மருத்துவரை நாட வைத்து, உங்களுக்கான பரிசோதனைக் கட்டணத்தை உங்களுக்குத் தேவையில்லாத மருந்துகளை வாங்க வைத்து அதில் ஈடுகட்டிக் கொள்கிறார்கள்.

இனி இலவச மருத்துவப் பரிசோதனைகள் பக்கம் தலைவைத்து படுப்பீர்கள்?

எப்போதும் இலவசமாக ஒன்றைக் கொடுக்கும் போது, எதற்காக உங்களுக்கு அதை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்பிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இலவசமாக ஒன்றைக் கொடுப்பதால் கொடுப்பவருக்கு என்ன லாபம் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்த இரண்டையும் செய்தால் நீங்கள் இலவசம் என்ற பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டீர்கள்.

ஆம்!

இலவசம் என்பது மாயமான்.

அதைத் தேடிப் போன ராமனின் கதையை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

அதுவும் இலவச மருத்துவப் பரிசோதனைகளில் நோய்கள் என்ற மாயமானைத் தேடிப் போய் உங்கள் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்.

*****

11 Oct 2024

இரண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லுங்கள்!

இரண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லுங்கள்!

நாங்கள் படிக்கின்ற காலத்தில் இலவசப் புத்தகங்கள் கிடையாது. புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்க வேண்டும். முழுக்காசையும் கொடுத்து வாங்குவதற்கு யோசனைபட்டுக் கொண்டு பழைய புத்தகங்களைப் பாதி விலைக்கும் கால்வாசி விலைக்கும் முன்கூட்டியே மூத்த மாணவர்களிடம் பேசி வைத்துக் கொண்டு வாங்குவதுண்டு. இப்போதைய பாஷையில் சொன்னால் அவை செகண்ட் ஹேண்ட் புத்தகங்கள்.

இப்போது அந்தப் பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது. அரசாங்கப் பள்ளிக் கூடங்களில் புது புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுகிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களில் பழைய புத்தங்களை வாங்கிக் கொடுக்கிறேன் என்றால் சீட்டைக் கிழித்து விடுவார்கள். சேர்க்கையைச் செய்யும் போதே சகலவற்றிற்கும் சேர்த்து ரசீதைத் தீட்டி எடுத்து விடுகிறார்கள். இப்போதிருக்கும் பிள்ளைகளிடம் செகண்ட் ஹேண்ட் என்று புத்தகங்களை வாங்கிக் கொடுத்தால் பார்வையாலேயே எரித்து விடுவார்கள். அண்ணன் படித்த நோட்ஸைக் கூட தம்பி படிப்பதற்கு யோசிக்கிறான். புதிதாகத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்.

மகிழுந்து (கார்), இரு சக்கர வாகனம் போன்றவற்றில் இந்த செகண்ட் ஹேண்ட் என்பது இன்னும் மவுசு குறையாமல்தான் இருக்கின்றன. மகிழுந்து விடயத்தில் ஒன்றரை லட்சத்துக்கு வாங்கி ஒரு சில வருடங்கள் ஓட்டி விட்டு இரண்டு லட்சத்திற்கு விற்றவர்களும் இருக்கிறார்கள். ஒன்றரை லட்சத்துக்கு வாங்கி ஒரு லட்சத்துக்கு விற்றவர்களும் இருக்கிறார்கள்.

இரு சக்கர வாகனங்கள் விடயத்தில் வாங்கிய விலையை விட குறைவாக விற்றவர்களைத்தான் பார்த்திருக்கிறேன்.

பொதுவாக இந்த செகண்ட் ஹேண்ட் விசயத்தில் தலை வைத்துப் படுக்காமல் இருப்பது நல்லது என்பது பெரியோர்களின் பொதுவான அபிப்ராயம். வாங்கி விட்டு பிறகு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடல் கணக்காய் வண்டி அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை என்று பாட்டுப் பாடும்படி ஆகிவிடும்.

ஒன்றரை லட்சத்துக்கு மகிழுந்தை வாங்கி அதற்கு இரண்டு லட்சம் செலவு செய்து அதை ஐம்பதாயிரத்துக்கு விற்ற நண்பர்களின் கதையெல்லாம் எனக்குத் தெரியும். வாங்குவதைப் புதிதாக வாங்கி விட்டால் நீங்கள் வைத்துக் கொள்வதைப் பொருத்து பத்து வருடங்களுக்குக் கூட அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். அப்படி இல்லையென்றாலும் ஐந்து வருடங்களுக்காவது எந்தப் பிரச்சனையும் தராமல் அது உண்டு, நீங்கள் உண்டு என்று அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும்.

ஏன் இந்த செகண்ட் ஹேண்டை நாடுகிறோம்? எல்லாம் இல்லாத குறைதான். ஆனால் அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் கதற கதற பணப்பையை வழித்துக் கொண்டு விடும். இரண்டாம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வேண்டாம் என்று சொல்லி விடுங்கள். விதியோடு விளையாடுவானேன்?

*****

10 Oct 2024

அன்புக்குத் தர வேண்டிய சுதந்திரம்

அன்புக்குத் தர வேண்டிய சுதந்திரம்

என்னுடைய மனதிலிருந்து விடுபடுவது

எனக்குக் கடினமாக இருக்கிறது

இப்படியே போய்க் கொண்டிருந்தால்

விரைவில் நான் சலித்து விடுவேன்

எப்போதும் உன்னிடம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்

நான் நிச்சயம் அலுத்து விடுவேன்

எதற்கு நான் மாற வேண்டும்

ஏன் நான் மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும் என்பது பிரச்சனை

அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்

உன்னை என்னை இந்த உலகை

அதனால் பிரச்சனை ஒன்றும் வந்து விடப் போவதில்லை

எப்போதும் மாற்றுவதா வேண்டாமா என்பதுதான் பிரச்சனை

அந்தப் பிரச்சனைக்குள் ஏன் போக வேண்டும்

இப்போது நான் எனக்குச் சலிப்பாக இருக்க மாட்டேன்

உனக்கு நான் அலுத்துப் போக மாட்டேன்

நீ நீயாக இருக்கப் போகிறாய்

நான் நானாக இருக்கப் போகிறேன்

எனக்கேற்ப நான் என்னையறியாமல்

மாறிக் கொள்வேன்

உனக்கேற்ப நீ உன்னையறியாமல்

மாறிக் கொள்வாய்

யாருக்காகவும் யாரும் மாறப் போவதில்லை

அவரவர் அவரவராக இருக்கையில்

சேர்ந்திருப்பதோ பிரிந்திருப்பதோ

யாருக்காகவும் யாரும் எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை

அவரவர் முடிவை அவரவர் எடுத்துக் கொள்வது

அன்புக்கு ஒவ்வொருவரும் தர வேண்டிய சுதந்திரம்

*****

9 Oct 2024

வாழ்க்கை எனும் சுண்டி விடப்படும் நாணயம்

வாழ்க்கை எனும் சுண்டி விடப்படும் நாணயம்

நடக்கிறது நடக்கவில்லை

மென்மையாக இருங்கள்

தோல்வியில் முடிவதற்காகக் கடினமாகி விடாதீர்கள்

வெற்றியைப் போல தோல்வி ஒரு நிகழ்வு

தோல்வியைப் போல வெற்றி ஒரு நிகழ்வு

நிகழ்தலில் எது வேண்டுமானால் நிகழட்டும்

பூவா தலையா எது வேண்டுமென

யார் நிர்ணயிக்க முடியும்

நிர்ணயிக்க முடியாத ஒன்றுக்காக

சுண்டி விடுதலை நிறுத்த முடியாது

வாழ்க்கை சுண்டி விடப்படும் நாணயம்

எது வேண்டுமானாலும் விழலாம்

விழுந்து விட்டுப் போகட்டும்

நாணயத்திற்கு ஆகப் போவதென்ன

இரண்டு பக்கங்களும் உள்ள நாணயத்தில்

ஏன் ஒற்றைப் பக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்

*****

8 Oct 2024

பகுதி நேரத் தொழிலாகி விட்ட விவசாயம்!

பகுதி நேரத் தொழிலாகி விட்ட விவசாயம்!

இப்போது திருவாரூர் மாவட்டமாகி விட்டாலும் இது ஒருங்கிணைந்த தஞ்சையின் ஒரு பகுதி. இங்கு விவசாயம்தான் முக்கியமான தொழில். விவசாயப் பெருங்குடி மக்களால் நிரம்பியிருந்த இப்பகுதி தற்போது நிறைய விவசாயிகளைக் கட்டிடத் தொழிலாளர்களாகவும், ஒப்பந்த தொழிலாளர்களாகவும், ஓசூர் மற்றும் திருப்பூர் என்று இடம் பெயரும் தொழிலாளர்களாகவும் மாற்றியிருக்கிறது.

கிராமங்கள் பலவும் வயதானவர்களால் நிரம்பியிருக்கின்றன. இளவயதில் இருப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பாலான இளவயது மக்கள் நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்திருக்கின்றனர். கிராமங்களில் இருக்கும் இளவயது மக்களும் வேலைவாய்ப்பிற்காக நகரத்திற்குச் சென்று வருபவர்களாக இருக்கிறார்கள்.

விவசாயத்தை முழுநேரமாகச் செய்யும் தொழிலாளர்களை அநேகமாகத் திருவாரூர் மாவட்டம் இழந்து விட்டது. விவசாய நிலங்கள் வைத்திருக்கும் பலரும் வருமானத்திற்கு ஒரு தொழிலில் இருந்து கொண்டு, பகுதி நேரமாகத்தான் விவசாயத்தைச் செய்து வருகின்றனர். விவசாயத்தில் நிகழ்ந்து விட்ட எவ்வளவு பெரிய மாற்றம் இது. ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம் என்றால் விவசாயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்த காமகோடி அண்ணன் திருவாரூரில் காவல்காரராக அதாவது வாட்ச்மேனாக இருக்கிறார். அத்துடன் தன்னிடம் இருக்கும் நிலங்களில் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார். விவசாயப் பணிகள் தீவிரமாக இருக்கும் போது தேவைக்கேற்ப விடுப்பு எடுத்துக் கொள்கிறார்.

காமகோடி அண்ணன் விவசாயத்தை மட்டும் நம்பி இயங்கியவர். விவசாய வருமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தியவர். இனிமேல் அது இயலாது என்பதை உணர்ந்து நான்கைந்து ஆண்டுகளாக நகரத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் காவல்காரராகப் பணியாற்ற சென்று விட்டார்.

ஏன் அண்ணா இப்படி? என்றால், மாதம் எட்டாயிரம் சம்பளம் கொடுக்கிறான் தம்பி, குடும்பம் ஓடுகிறது. அத்தோடு விவசாய வருமானம் கிடைத்தால் எப்படியோ வாழ்க்கையை ஓட்டி விடலாம். அது மட்டும் காரணம் கிடையாது தம்பி! அங்கே கிடைக்கும் மாதம் எட்டாயிரம் வருமானம் நிரந்தரம், விவசாய வருமானம் நிரந்தரமில்லை என்கிறார். இனிமேலும் விவசாயத்தை மட்டும் நம்பி காலத்தை ஓட்ட முடியாது, இப்படி மாறினால்தான் விவசாயத்தையும் தொடர்ந்து செய்ய முடியும் என்கிறார்.

முழுநேரமாக விவசாயம் செய்த போது காமகோடி அண்ணன் எப்படி செய்திருப்பார்? தற்போது இது போல பகுதி நேரமாகக் செய்யும் போது எப்படி செய்து கொண்டிருப்பார்? நிச்சயம் வேறுபாடு இருக்கத்தானே செய்யும். அது குறித்தும் அண்ணனிடம் கேட்டேன், ஏதோ நடக்கிறது தம்பி! திருப்தி இல்லைதான். வேறு வழியில்லையே என்கிறார்.

விவசாயிகளை விவசாயத்தை விட்டு ஓட அடித்து விட்டோம் என்பதுதான் உண்மை. வேறு வேலையில் இருந்து கொண்டாவது விவசாயத்தில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர்களே காமகோடி அண்ணன் போலவாவது விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனோடு எதற்கு மல்லுகட்ட வேண்டும் என்று நினைத்த பலர் விவசாய நிலங்களை விற்று விட்டனர்.

முன்பு நகரப் பகுதிகளிலில் வீட்டுமனைகளாக மாறிக் கொண்டிருந்த விவசாய நிலங்கள், தற்போது கிராமப் புறங்களில் வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்களை அலைபேசி கோபுரங்கள் அமைக்க, கிடங்குகள் அமைக்க குத்தகைக்கு விடுவோரும் இருக்கிறார்கள்.

மற்றொரு புறம் எளிய மக்கள், நடுத்தர மக்கள் என்று பலரிடம் இருந்த விவசாய நிலங்களைப் பெரும் வசதி படைத்த மனிதர்கள் கொத்து கொத்தாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் அநேகம். அவர்கள் பண்ணை முறையிலான விவசாய முறைகளைத் தொடர்கிறார்கள். மிக நவீனமாக அனைத்திற்கும் எந்திரங்களையும், ரசாயனங்களையும் கொண்டு அவர்கள் விவசாயம் செய்வதையும் பார்க்க முடிகிறது. அவர்கள் விவசாயம் செய்கிறார்கள் என்றாலும் அவர்களும் பகுதி நேர விவசாயிகள்தானே. ஆக பகுதி நேர விவசாயத்தை நோக்கி திருவாரூர் மாவட்டம் நகர்ந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி நிலங்களை வாங்கிப் போட்டு அவர்கள் ஏன் விவசாயம் செய்கிறார்கள் என்றால், அதன் பின்னுள்ள உண்மை வேறு மாதிரியானது. அவர்களுக்கு இப்போது வேலி கணக்கில், ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்வது என்பது அவர்களுக்கிடையேயான கௌரவமாக மாறியிருக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணையத்தை வைத்திருப்பது அவர்களது அடையாளமாக இருக்கிறது. மிகையான பணத்தை எதில் முதலீடு செய்வது என்பது புரியாமல் இப்படி ஒரு வழிவகையை அவர்கள் கண்டறிந்திருப்பதாகத் தெரிகிறது.

இவற்றையெல்லாம் நீங்கள் தெளிவான தரவுகளைக் கொண்டே முடிவு செய்யலாம். சில பத்தாண்டுகளில் விவசாய நிலங்கள் யாருக்கெல்லாம் கைமாறியிருக்கிறது என்கிற பத்திரப்பதிவு விவரங்களை ஆய்வு செய்தால் மேற்படி உண்மைகள் வெகு எளிதாகப் புலனாகும்.

*****

வளர்க நும் கவிதைக் கடை

வளர்க நும் கவிதைக் கடை இன்று ஒரு கவிதை இல்லாமல் போய் விட்டதே என்ன கொடுமை ஐயா ஒரு கவிதை ஒரே ஒரு கவிதை கூடுதலாகச் சுட்டால் குறைந்தா போ...