24 Jan 2026

ஊதப்போவது வெற்றி ‘விசில்’ தானா?

ஊதப்போவது வெற்றி ‘விசில்’ தானா?

அரசியல் என்றால் சத்தம்தான். சத்தம் இல்லாமல் அரசியல் ஏது? வெற்றிடத்தில் சத்தம் கிடையாது என்கிறது அறிவியல். அரசியலில் ஏது வெற்றிடம்? வெற்றிடமில்லாத அரசியலில் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அதுவும் இப்போது தமிழக அரசியலில் ஒரே சத்தம். அது – ‘விசில்’ சத்தம்! அது வெற்றிச் சத்தமாகுமா? அல்லது விஜயகாந்தின் முரசு சத்தம் போலாகுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்த விசிலுக்குப் பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது. ரஜினிகாந்த் சினிமாவுக்கு வரும் முன்பு அவர் கையில் இருந்தது விசில். இப்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்குச் செல்லும் போது அவர் கையில் கிடைத்திருக்கிறது. அவர் படத்தை விசிலடித்துக் கொண்டாடியவர்கள் இப்போது இந்தச் சின்னம் கிடைத்ததை அதே சின்னத்தை வைத்தே சின்னமடித்து அதாவது விசிலடித்துக் கொண்டாடுகிறார்கள். மொத்தத்தில் கொண்டாட்டத்தில் அதீத ஆர்வம் நிறைந்த தொண்டர்களுக்கு கொண்டாட்டத்திற்கான ஒரு சின்னமே கிடைத்திருக்கிறது. அது வெற்றிச் சின்னமாக ஆகுமா என்பதே கேள்வி.

குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை விசில் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்துவதில் ஒரு பெரிய உளவியலே இருக்கிறது. கொஞ்சம் குஷி வந்து விட்டால் போதும், வெறும் வாயிலாயே விசில் அடிப்பவர்கள் இருக்கிறார்கள். உளவியல் ரீதியாக விசில் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் சின்னம்தான். அரசியலையும் வெற்றி கொள்ளும் சின்னமா?

பேருந்து நடத்துநர்கள் கையில் இருக்கும் விசில் இப்போது விஜய்யின் கட்சியின் கையில் வந்திருக்கிறது. அவர் சரியாக அரசியல் பேருந்தைச் செலுத்துவார் என்று மக்கள் நம்பினால் கோட்டையில் நின்று விசிலடிக்கும் உரிமையும் அவருக்குத்தான். ஒருவேளை அந்தப் பேருந்து கரூரைப் போன்ற ஒரு கூட்ட நெரிசலைச் சந்தித்து விபத்துக்குள்ளானால் விசிலே சங்காகவும் மாறி விடும் ஆபத்து இருக்கிறது.

ஆங்கிலத்தில் விசில் ப்ளோயர் (The Whistleblower) என்பதற்குத் தவறுகளைத் தட்டிக் கேட்பவர் என்று ஒரு பொருள் இருக்கிறது. விஜய் அப்படி மாநில அரசையும் மத்திய அரசையும் நிறைய கேட்டிருக்கிறார். என்றாலும் அவரையே இப்போது தட்டித் தூக்கி டெல்லி சிபிஐ கட்டிடத்தில் வைத்துக் கட்டம் கட்டியிருக்கிறார்கள். இதைத்  தாண்டுவதைப் பொருத்துதான் அவரது விசில் சத்தம் வெற்றிச் சத்தமா அல்லது சமிக்ஞை சத்தமா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

விஜய் – விசில் இந்த இரண்டுக்குமே மூன்றெழுத்துகள் என்பதாலும் வெற்றி என்பதற்கும் மூன்றெழுத்து என்பதாலும் விசில் சின்னத்துக்கும் விஜய் கட்சிக்கும் வெற்றி அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுமா என்றால், அப்படிக் கிடைத்து விடாது. விஜய் கூட்டிய கூட்டங்களில் இனைஞர்களும், பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டதால் அது ஒரு வெற்றி வாய்ப்பாக அவருக்குத் தெரியலாம். தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும் போதும், வாக்குறுதிகள் ஒவ்வொரு கட்சிகளிடமிருந்து வந்து விழும் போது அவர்கள் எப்படி மாறுவார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறிக் கொண்டே இருப்பதுதான் மனிதர்களின் மனநிலை என்பதால், விசிலடித்துக் கொண்டாடியவர்கள் இலையைப் போட்டு பந்திக்கு முந்துபவர்களாகவோ, சூரிய வெளிச்சத்தில் குளிர்காயப் போகிறவர்களாகவோ மாறி விட்டால் ஆட்டம் காலி, படுதா மிச்சம் என்றும் ஆகி விடலாம்.

ஒரு வகையில் விஜய்யின் கைகளுக்கு விசில் கிடைத்து விட்டது. விசிலுக்கான பேருந்து எந்த அளவுக்கு ஓடப் போகிறது? கோட்டை வரையா? கோட்டை விடும் வரையா? என்பதற்குத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் தினமே பதிலைக் கொடுக்கும். அதுவரை அவர் கரூர் வரை ஓட்டிச் சென்ற பேருந்தைப் பழுது பார்த்து, தனது விசிலின் வேகத்திற்கேற்ப ஓடும் வாகனமாக அவர் மாற்ற வேண்டும். மாற்றுவரா என்பதைப் பொருத்திருந்து பார்ப்பதைத் தவிர, பொதுமக்களான நமக்கு வேறு என்ன வழியிருக்கிறது?

இதை வாசிக்கும் நீங்களும் ஒரு வாக்காளர் என்பதால், நீங்கள் இந்த விசிலை வைத்து ஊதப் போகிறீர்களா? அமைதி காக்கப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு ஒரு பதிலை உங்களை வைத்தேச் சொல்லுங்கள். மற்றவற்றைக் கருத்துக் கணிப்புகள் விரைவில் சொல்லும். முடிவு விசிலா? சங்கா? என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாள் துல்லியமாகச் சொல்லி விடும்.

****

2026 - ஆட்சியைத் தீர்மானிக்கும் 5 காரணிகள்!

2026 - ஆட்சியைத் தீர்மானிக்கும் 5 காரணிகள்!

ஒவ்வொரு தேர்தலும் ஓர் உணர்ச்சிமிக்க போர்க்களம். புதிததாக ஆட்சியைப் பிடிப்பதும், ஆட்சியைத் தக்க வைப்பதும், ஆட்சியை இழப்பதும், ஆட்சியை மீட்பதும் இந்தப் போர்க்களத்தில் முடிவாகிறது. தமிழகத்தின் ஐந்தாண்டுக்கான தலைவிதியைத் தீர்மானிக்கும் இந்தப் போர்க்களத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை? அவை ஐந்து இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. விலையில்லா வாக்குறுதிகள்

2001 ஆம் ஆண்டின் தேர்தலுக்குப் பின் விலையில்லா வாக்குறுதிகளே ஆட்சியைப் பிடிக்கும் முதன்மையான காரணியாக மாறியிருக்கின்றன. விலையில்லா அரிசி, தொலைக்காட்சி, மின்விசிறி, சட்டினி அரைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் என இருந்த இந்த வாக்குறுதிகள் பரிணாம வளர்ச்சியடைந்து (அப்டேட்டாகி) உரிமைத்தொகை என்று ரூபாய் நோட்டு வரை நீண்டு விட்டது. தமிழகத்தைக் காப்பியடித்து பல மாநிலங்கள் உரிமைத்தொகை என்ற பெயரில் ஆட்சியைப் பிடிக்கும் உரிமையைப் பெற்று விட்டன. இந்தத் தேர்தலில் இதுவரை ஆயிரமாக இருந்த உரிமைத்தொகை இரண்டாயிரமாக உயரப் போவதை அதிமுகவின் தேர்தல் அறிக்கை உறுதிபடுத்தி விட்டது. இன்னும் திமுகவின் தேர்தல் அறிக்கை வர வேண்டியிருக்கிறது. இத்தொகை மூவாயிரமாக இருக்குமா? ஐந்தாயிரமாக ஆகுமா? என்பதெல்லாம் தெரிய இன்னும் சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் தேர்தல் போர்க்களத்தின் பிரம்மாஸ்திரம் இதுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை.

2. மொழி உணர்ச்சி

1967 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்ததே மொழி உணர்ச்சிதான். தற்போது தமிழர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பேசும் தமிங்கிலத்தின் மீது உயிருக்கு உயிராக இருப்பதால், இதைத் தாண்டி மூன்றாவது ஒரு மொழியைத் திணிக்கும் அரசியலை ஏற்க மாட்டார்கள். எவ்வளவு நைச்சியமாக சமஸ்கிருதத்தையோ, இந்தியையோ கையிலெடுத்தால் தமிழக அரசியலைப் பொருத்தவரை அது தோல்வியைக் கையில் எடுப்பதற்குச் சமம். இந்த மொழி உணர்ச்சிதான் மாறி மாறி இரு திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதற்கும் காரணம். அந்த வகையில் இந்தித் திணிப்பின் மீது ஆர்வமாக இருக்கும் தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் திராவிட கட்சிகளுக்கு அது ஒரு கழித்தல் புள்ளியாகவே (மைனஸ் பாய்ண்ட்) இருக்கும். இரண்டாவது காரணியாக இருக்கும் இந்தக் கத்தியைக் கூர்மையாகச் சாணை பிடித்தால் இதுவே ஆட்சியைப் பிடிப்பதற்கான முதன்மையான காரணியாகவும் மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

3. கூட்டணிக் கணக்கு

விலையில்லாக் காரணிகள், மொழியுணர்ச்சிக் காரணிகளைத் தாண்டி தமிழக தேர்தல் போர்க்களத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி கூட்டணிக் கணக்குதான். இதில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்குச் சரியாக வர வேண்டும். வரவில்லையென்றால் எப்படி படிநிலைகளை (ஸ்டெப்) போட்டாலும் பல்டிதான் அடிக்க வேண்டியிருக்கும். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் வலுவான வாக்கு வங்கி இருக்கிறது. அது எந்த அலை அடித்தாலும் பெரும்பாலும் மாறுவதில்லை. அந்த மாறாக வங்கிக் கணக்கோடு கூடுதலாக எவ்வளவு கொசுறு சேர்கிறது என்பதுதான் தமிழகத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. இதுவரை வழமையாக இருந்த கூட்டணிக் கணக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவும், பாட்டாளி மக்கள் கட்சியின் இருமுனைப் பிரிவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். சமீப தேர்தல்களில் இரு திராவிட கட்சிகளிடையேயான இருமுனைப் போட்டிகளிடையே நாம் தமிழர் கட்சி மூன்றாவது முனையாகத் தனித்தே களமாடி வருகிறது. அத்துடன் தமிழக வெற்றிக் கழகமும் தனித்துக் களமாடினால் தமிழகத்தில் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியாகவும் இந்தத் தேர்தல் போர்க்களம் மாறலாம்.

4. பெண்களின் வாக்குகள்

சக்தி இல்லையேல் சிவமில்லை என்பதுதான் தமிழகத் தேர்தல்களைப் பொருத்த வரையான மாறாத உண்மை. தமிழகத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. எம்ஜியாருக்கும், ஜெயலலிதாவுக்கும் பெண்களின் வாக்குகள் எப்போதும் துணை நின்றிருக்கின்றன. பெண்களின் வாக்குகளைக் குறி வைத்தே மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், தாலிக்குத் தங்கம், மகப்பேறு உதவிகள், பெண்கல்வி ஊக்கத்தொகைகள் போன்ற வாக்குறுதிகள் முன்வைக்கப்படுகின்றன. சமீப காலங்களில் ஆண்களை விட அதிகம் படிப்பவர்களாகவும், வேலைக்குச் சென்று குடும்பத்தைத் தாங்குபவர்களாகவும் பெண்கள் உருவெடுத்து வருகின்றனர். குடும்பப் பொருளாதாரத்தோடு, மாநிலப் பொருளாதாரத்தின் அச்சாணியாகவும் மாறி வரும் பெண்கள் எடுக்கப் போகும் முடிவானது இந்தத் தேர்தலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பெண்களை அதிக அளவில் ரசிகர்களாகப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்க்கு இது ஒரு சாதகமான அம்சமாகவும் அமையலாம். அது எப்படி அமையப் போகிறது என்பதைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டே கணிக்க முடியும் என்பதால் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

5. இளைய தலைமுறையின் உடனடி மனப்போக்கு

இரு திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வருவதால் இளைஞர்கள் இவ்விரு கட்சிகளை மட்டுமே விரும்புகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. நாம் தமிழர் கட்சியின் பக்கம் கணிசமாக இளைஞர்களின் ஓட்டுகள் சமீப தேர்தல்களில் பிரிந்து செல்கின்றன. இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கமும் அந்த வாக்குகள் கணிசமாகச் செல்லக் கூடும். புதிய தலைமுறை இளைஞர்களின் மனநிலையும் சிந்திக்கும் திறனும் பல விதங்களில் முந்தைய தலைமுறையை விட மாறியிருக்கிறது. அவர்களுக்குத் தேவையானது என்பது உடனடி மாற்றம். அதை யார் தருகிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்களோ அவர்களின் பக்கமே அவர்களின் வாக்குகள் செல்ல வாய்ப்பிருக்கிறது.

இப்படித் தமிழகத் தேர்தல் போர்க்களத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளை ஐந்தாகப் பகுத்துக் கொள்ளலாம். இந்த ஐந்துக் காரணிகளில் சரியாகக் கவனம் வைத்து எந்தக் காட்சி முறையாகக் காய் நகர்த்துகிறதோ, அந்தக் கட்சிக்கே புனித ஜார்ஜ் கோட்டையின் சாவி வழங்கப்படும். எந்தக் கட்சி அந்தச் சாவியைக் கைப்பற்றப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த ஐந்துக் காரணிகளில் எந்தக் காரணி இந்தத் தேர்தலில் பிரதானமாக வெற்றி, தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறேன் என்கிறீர்களா? உங்கள் வாக்கும் தேர்தலில் வெற்றித் தொல்வியின் ஒரு முக்கியமான காரணி என்பதால் ஆறாவது அறிவைப் போல இந்த ஆறாவது காரணியும் முக்கியமானது என்றே நான் கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

*****

10 Jan 2026

வாழும் இந்த வாழ்வில்…

வாழும் இந்த வாழ்வில்…

சிதறு காய் உடைக்கிறேன் என்று

தேங்காய் உடைத்து

மண்டையை உடைத்துவிடுகிறார்கள்

திருஷ்டி கழிக்கிறேன் என்று

பூசணியை உடைத்துவாகனத்தில் போகிறவர்களின்

உயிரை எடுத்து விடுகிறார்கள்

என்ன பெரிதாக சம்பாதிக்கிறார்கள்

தினம் தண்ணீரை

முப்பது ரூபாய்க்கு வாங்குகிறார்கள்

நடிகரைப் பார்க்க நாற்பது மணி நேரம் நிற்பவர்கள்தான்

ரேஷன் கடையில்

கால் மணி நேரம் நிற்க அலுத்துக் கொள்கிறார்கள்

ஓட்டுக்கு நோட்டா என்று கொதித்தெழுபவர்கள்தான்

ஒரு கிராம் தங்கம் என்றால் வாய் பிளக்கிறார்கள்

பெயரே வேண்டாமென

உருவான புயல்

வலுவிழந்து போய் விடுகிறது

எல்லா அபத்தங்களையும் தாண்டியும் தாங்கியும்

நகர்ந்து போய்க் கொண்டே இருக்குமிந்த வாழ்வில்

கல்வி கற்றுத் தராததை

அனுபவங்கள் கற்றுத் தர

அனுபவங்கள் கற்றுத் தராததை

அவமானங்கள் கற்றுத் தருகின்றன

*****

9 Jan 2026

கதைக்கின்ற வாழ்வு!

கதைக்கின்ற வாழ்வு!

எல்லாரும்

ஒரு காலத்தில் போகத்தான் போகிறோம்

அதற்குள்

போனவர்களைப் பற்றி

குய்யோ முய்யோ அய்யோவென்று கதறி

ஒப்பாரி வைத்து

போனது பற்றி

போகிற போக்கில்

பேசிப் பேசி

ஒருவர் ஒருவராய்

போகப் போக

போக இருப்பவர்கள்

போனவர் பற்றி

எதையாவது சொல்லிக்

புலம்பிக் கொண்டிருக்க

போனவர்கள் பற்றி

போகப் போகிறவர்கள்

கதைப்பதன்றோ வாழ்வு

*****

8 Jan 2026

வீடு தேடி வரும் கடல்

அசந்தர்ப்பவெளி

ஒட்டிக் கொண்டு

கூடவே

வீடு வரும் வரை

கடலைப் பிரியும்

பிரிக்ஞையின்றியே

வந்து சேர்ந்த

மணல் துகள்

தட்டி விட்டு

டைல்ஸ் தரையில்

விழுந்த கணத்தில்

ஓவென்று கதறப் பார்க்கையில்

ஒளிபெற்றும் பிம்பத்தை உமிழும்

தொலைக்காட்சி

கடலலைச் சத்தத்துடன்

நீல வண்ண திரவப் பரப்பைக் காட்டி

மறுநொடியில் காட்சியை மாற்றி

மஞ்சள் வண்ண மணல் துகள் பரவிய

பாலைவனத்தில் யாருமற்ற பெருவெளியில் உறைகிறது

*****

7 Jan 2026

முரண் மாற்றங்கள்

முரண் மாற்றங்கள்

தமிழ்த் திரையுலகின் முரண் மாற்றத்தைத் திரைப்படங்களைக் கொண்டே விளக்க முடியுமா என்றால், முடியும்.

‘சூரிய வம்சம்’ திரைப்படத்தில் சரத்குமாரும் தேவயானியும் ‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது’ என்ற ஒரே பாடலில் உச்சத்தை எட்டிப் பிடிப்பார்கள். அதே ஜோடிதான் ‘3BHK’ என்ற படத்திலும் நடித்திருந்தது. உச்சத்தை எட்ட ஒரு முழு படமுமே தேவைப்பட்டது. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கான முழு திரைப்படம் அது. அதுதான் எதார்த்தம்.

இதற்கு முரணான மாற்றம் ரஜினியுடையது. அவர் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ என்ற திரைப்படத்தில் மெதுமெதுவாக வாழ்க்கையின் போக்கில் உச்சத்தை அடையும் எதார்த்தமான திரைப்படத்தைத் தந்து, அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என்று ஒரு பாடலில் உச்சத்தை நோக்கிச் செல்லும் திரைப்படத்தைத் தந்தவர். அந்த ரஜினியிச தாக்கத்தில் உருவானதுதான் ‘சூரிய வம்சம்’. அதே ரஜினியிசத்தின் பின்னோக்கிய வரலாற்றில் உருவான ‘ஆறிலிருந்து அறுபது வரை’ திரைப்படத்தின் தாக்கத்தில் உருவானதுதான் ‘3BHK’.

*****

புலிக்குப் பிறந்த பூனை

புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?

ஏன் ஆகாது? ஆகும்!

பொதுவாகப் பழமொழிகள் பொய்க்காது என்பார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு உள்ளது.

எத்தனையோ பேர் வியாபாரத்தில் மரண அடி வாங்கி, பின்பு சுதாரித்துக் கொண்டு அதிரடி காட்டியிருக்கிறார்கள். இப்படி பூனைக்குப் பிறந்து புலிகளானோர் எத்தனையோ பேர்.

ஆனால், திருபாய் அம்பானியின் மகன் அனில் அம்பானியோ அப்படி மீண்டு வராமல், புலிக்குப் பிறந்து பூனையாகிப் போனதுதான் சோகம்.

*****

6 Jan 2026

உருமாற்ற இயலாத சாவின் புன்னகை

உருமாற்ற இயலாத சாவின் புன்னகை

நீங்கள் பேசுவது போல

யாரோ ஒருவர்

உங்களைப் போலப் பேசிக் கொண்டிருக்கலாம்

நீங்கள் முகம் காட்டாத காணொளியில்

உங்கள் முகத்துடன்

உலகம் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கலாம்

நீங்கள் பேசாத வார்த்தையை

நீங்கள் செய்யாத செயலை

நீங்கள் கொடுக்காத உறுதிமொழியை

நீங்கள் விரும்பாத ஒன்றை

இணையவெளியில் நீங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கலாம்

உங்களுக்காக உங்களை நிகழ்த்த

உங்கள் பிம்பம்ங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன

நீங்கள் செய்ததற்கும்

உங்கள் பிம்பம் செய்ததற்கும்

இந்த உலகிற்கு வேறுபாடு தெரியாது

நீங்கள் செய்யாததை

செய்யவில்லை என்று நிரூபிப்பது

சாதாரணமாக இருக்கப் போவதில்லை

புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும்

என்ற பாட்டி தப்பித்து விட்டாள்

புகைப்படம் எடுத்துப் பதிவிட்டால்

லைக்குகள் கூடும் என்ற நீங்கள் பதிவிட்ட ஒவ்வொன்றும்

பெற்றெடுத்த தறுதலைகளைப் போல

உங்கள் பெயரைக் கெடுக்கவென்றே

உலவிக் கொண்டிருக்கையில்

ரத்தக் கொதிப்பிலும்

மெல்லிய மாரடைப்புகளிலும்

ஆயுள் குறைந்து கொண்டிருக்க

சாவின் போது எடுத்த புகைப்படத்திலிருந்து

சிரித்துக் கொண்டிருப்பாள் பாட்டி

*****