2 Jul 2025

இயற்கையை விரும்புவதில் இருக்கும் சிரமங்களில் ஒன்று!

இயற்கையை விரும்புவதில் இருக்கும் சிரமங்களில் ஒன்று!

            எங்க கிராமத்துல இருக்குற பெரும்பாலான ஆளுங்களுக்கு டவுன்ல வீடு இருக்கு அப்படியில்லன்னா டவுன்ல ஒரு ப்ளாட்டாச்சும் இருக்கு. அவுங்கள கிராமத்து ஆளுங்கன்னு சொல்லவும் முடியாது, டவுனுக்காரவுங்கன்னும் சொல்ல முடியாது. ரெண்டும் கலந்த மாதிரிக்கு ஒரு வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டு இருக்குறவங்க. இப்போ எங்க கிராமத்துல வயல் இல்லாத ஆளுங்க கூட இருக்காங்க, டவுன்ல வீடோ, ப்ளாட்டோ இல்லாத ஆளுங்க இல்ல.

            கொஞ்ச காலமாவே ஊருல இருக்குற நெலங்க அத்தனையும் பெரும்புள்ளிங்க கைக்கு மாறிட்டு இருக்கு. அவுங்க பண்ணை முறை விவசாயமா பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பாத்தீங்கன்னா மின்னாடி எல்லாம் வயலுக்கு வேலிங்க கிடையாது, வரப்புகத்தாம் இருக்கும். இப்போ கொத்துக் கொத்தா நெலத்தை வாங்குனவங்க சிமிட்டுப் போஸ்டப் போட்டு கம்பி வேலிய வெச்சு அடைச்சிட்டாங்க.

            ஆளாளுக்கு இப்படி அடைக்க ஆரம்பிக்க ஆடு, மாடுக அடைக்காத வயல்களுக்குள்ள நொழைய ஆரம்பிக்க வயல அடைச்சாத்தாம் விவசாயம் பண்ண முடியும்ங்ற நெலையில இப்போ பெரும்பாலான வயக்காடு வேலியோட நிக்குதுங்க.

            நெல்லு விவசாயம் லாபம் தர்ற விவசாயமா இல்லாமப் போனதுல பருத்திப் போடுற ஆளுங்க அதிகமாயிட்டாங்க. இந்தக் குறுவை நேரத்துல கிராமத்துல இருக்குற பாதி நெலத்துல பருத்திதாம் எங்க கிராமத்துல நின்னுகிட்டு இருக்கு.

            இன்ஷ்யூரன்ஸோ, நிவாரணமோ கிடைக்குறதுக்கு வாய்ப்பா இருக்குற சம்பாவுல இறங்குனாத்தாம் நெல்லு விவசாயம் தாக்குப் பிடிக்குறாப்புல இருக்குங்றதால அதுலத்தாம் ஒட்டுமொத்தமா நெல்லு விவசாயம் நடக்குது.

            இந்த விசயத்தெ ஏம் சொல்றேம்ன்னா ‘ஊர்ல அவனவனுக்கும் டவுன்ல ப்ளாட்டு இருக்கிறப்போ எம் புள்ளைக்கு ஒண்ணு இல்லையே!’ன்னு எங்கம்மா அழுது, சரிதாம்ன்னு நாமளும் டவுன்ல ஒரு ப்ளாட்ட வாங்கிப் போட்டுப்புடுவோம்ன்னு திருவாரூரு டவுனு சுத்தியுள்ள எடமெல்லாம் அலைஞ்சு, வயக்காட்டுல போட்டு வெச்சுருக்கிற ப்ளாட்டப் பாத்து மனசு குத்தலாயி ப்ளாட்டும் வாணாம் ஒண்ணும் வாணாம்ன்னு திரும்புனேம். அத்தோட அவுங்க சொன்ன விலைக்கு எங்கிட்டெ காசு பணமும் இல்ல அப்போ. கடனுக்கு வாங்குறதுல இஷ்டமும் இல்ல.

            கிட்டதட்ட பதினாலு வருஷம் கொஞ்சம் கொஞ்சமா காசு சேத்த பின்னாடித்தாம் டவுன்ல ஒரு ப்ளாட்ட வாங்குறாப்புல காசு எங் கையில சேந்துச்சு. அந்தக் காசை வெச்சு டவுன்ல ப்ளாட்ட வாங்காம எங் கிராமத்துல விவசாய நெலத்தைத்தாம் வாங்குனேம். ஊருல இவ்வேம் யாருடா கையில இருக்கு காசுக்கு தங்கத்தெ வாங்காம துரு பிடிக்க போற இரும்ப வாங்குற கொசக்கெட்ட பயலா இருப்பாம் போலருக்குன்னு அப்போ ஒரு பேச்சு.

            வாங்குன நெலத்துல ரசாயனம் இல்லாம விவசாயம் பண்ணணும்ன்னு ஒரு விருப்பம். அப்படி ரசாயனம் இல்லாம பண்ணுற விவசாயத்துல நாம்ம மட்டும் சாப்புடாம நம்மாள முடிஞ்சதுன்னு ஒரு ரண்டு பேருக்காவது கொடுக்கணும்ங்றது, (அதாச்சிக் காசுக்குத்தாம்) இன்னொரு விருப்பம். அப்படியே செய்யவும் முடிஞ்சது. நாளாவ நாளாவ ரெண்டு பேருக்குக் கொடுக்குறதெ மூணு பேரா ஆக்கணும், மூணு பேருக்குக் கொடுக்குறதெ நாலு பேரா ஆக்கணும்ன்னு நெனைச்சப்போ மூணாவதா ஓர் ஆளு ரொம்ப ஆர்வமா அதாச்சி நம்ம நெலத்துல இயற்கையா வெளையுற நெல்லுலேந்து கிடைக்குற அரிசிய வாங்கிக்கிறதா சொல்லிட்டாரு. இப்படி ஆளுங்க நல்ல விசயத்துக்காகச் சேர்றப்போ வர்ற சந்தோஷமே தனித்தாம்.

            சரித்தாம்ன்னு நாமளும் சந்தோஷமா நெல்ல அவிச்சு அரிசியாக்கிக் கொண்டு போயும் கொடுத்தாச்சு. ஒண்ணரை மாசம் கழிச்சு இனுமே தயவு பண்ணி அரிசியக் கொண்டாராதீங்கன்னு அவுங்ககிட்டேயிருந்து போன் வந்தப்போ கொஞ்சம் அதிந்துத்தாம் போனேம். நாம்ம ஏதோ தப்புப் பண்ணிட்டோம்ன்னு நெனைச்சு விழுந்தடிச்சு அவுக வீட்டுக்குப் போனா, “புள்ளீயோ இந்தச் சோத்தைத் திங்க மாட்டேங்கேது, எங்களுக்குத் தனியாவும், புள்ளீயோளுக்குத் தனியாவும் சோத்தை ஆக்கி மாளா மாட்டேங்குது, நீங்க கொண்டாந்த அரிசி அப்பிடியே இருக்குது”ன்னு சொன்னாங்க பாருங்க. நமக்கு மனசு பக்குன்னுப் போயிடுச்சு.

            “அட பாவிப் பயலே! இப்படி ஒரு நெல்லை வெளைவிச்சு ஒரு குடும்பத்தைச் சாப்புட முடியாத அரிசிய கொண்டு போயிக் கொடுத்து அக்கிரமம் பண்ணிருக்கீயே!”ன்னு என்னைய நானே மனசுக்குள்ள திட்டிக்கிட்டு, அவுககிட்டே வாங்குன காசைக் கொடுத்துட்டு அரிசிய தூக்கியாந்துட்டேம்.

            இதுல ஒரு விசயம் இருக்குது. இயற்கையான முறையில விளைவுக்குற அரிசிய தீட்ட மனசு வராது. அது பாக்குறதுக்கு பளபளன்னு வெள்ளையால்லாம் இருக்காது. செம்பழுப்பு நெறமாத்தாம் இருக்கும். சோறாக்குனாலும் அதுல லேசா சொரசொரப்பு இருக்குது. இதெ தவித்த்தாதாம் அதெ குழந்தைங்க விரும்பிச் சாப்புடும். அதெ மாத்தணும்ன்னு நெனைச்சு இயற்கையிலேந்து விலகிக் போறதெ விட இதெ ஏத்துக்கிட்டுச் சாப்புடுறதே நல்லதுங்ற முடிவுக்கு வந்துட்டதால ரெண்டே மூணாக்குற, மூண நாலாக்குற முயற்சிய அத்தோட விட்டுட்டேம். நாம்ம இயற்கையா விளைவிச்சதெ நாமளே அவிச்சி நாமளே அரிசியாக்கிக் கொடுத்தாத்தாம் நல்லா இருக்கும்ன்னு நெனைச்சு இப்படித்தாம் செய்ய தோணுது. வருங்காலத்துல வேற யோசனைக தோணலாம். அது தோணுறப்போ தோணட்டும்ன்னு இப்போ இருக்குற நெலைக்கு நம்ம வீட்டோட சேத்து இதெ விரும்புற ரெண்டு பேரு வீடுன்னு மூணு பேரு வீட்டுக்கு ஏத்த அளவுல ரசாயனம் இல்லாம விவசாயம் பண்ண முடியுது.

            இயற்கையா விளையுற நெல்லுக்கும் ரசாயனக் கலப்போடு வளந்து ரசாயனம் சேர்த்து அரிசியாவுற நெல்லுக்கும் சாப்புடுறப்போ நெறைய வித்தியாசங்கள நீங்க உணர முடியும். ஒரு ஒப்புமைக்குச் சொல்லணும்ன்னா பிராய்லர் கோழிக் கறிக்கும் நாட்டுக் கோழிக் கறிக்கும் உள்ள வித்தியாம்ன்னு கூட அதெ சொல்லலாம். பிராய்லர் கோழிக்கறி ரொம்ப மென்மையா இருக்கும். நாட்டுக் கோழிக்கறியில அதெ நீங்க எதிர்பார்க்க முடியாது. பிராய்லர் கோழிக் கறியையே சாப்புட்டுப் பழகுனவங்ககிட்டெ, அதைச் சாப்புட விரும்புறவங்ககிட்டெ நாட்டுக்கோழிக்கறிய சாப்புடுங்கன்னு நாம்ம வற்புறுத்த முடியாது. இது மாதிரியான விசயங்கள்ல அவுங்களா விரும்பி வந்தாத்தாம் நல்லா இருக்கும்.

            ஒருத்தரு என்னத்தெ சாப்புடணும், என்னத்தெ உடுத்தணும், எப்படி இருக்கணுங்றதுல பிறத்தியாரோட வற்புறுத்தல்கள் அதிகமா இருக்குறது நல்லதில்ல. ஏன்னா இதுல தனிமனிதரோட சுதந்திரம்ங்ற ஒரு விசயம் இருக்கு. அவுங்களுக்கான தேர்ந்தெடுக்குற சுதந்திரமும் இருக்கு. 

            ஒரு ஆளு நெனைச்சால்லாம் உலகத்தை மாத்துறது ரொம்ப சிரமம். அதுல்லாம் சினிமாவுல நடக்குற சங்கதி. ஒவ்வொருத்தரும் நெனைக்குறப்பத்தாம் உலகம் மாறும். அப்படி மாறுற மாத்தம்ங்றதுதாம் நெலையாவும் நெலைச்சிருக்கும். இதெ நான் எழுத ஆரம்பிச்சதுக்கு இது ஒரு காரணம். இதுல நான் சொல்றதுதாம் எல்லாமும் சரியா இருக்கும்ன்னும் சொல்ல வரல. இதுல மாத்துக் கருத்தும் இருக்கலாம். இருந்தாலும் இதெ உரையாடலுக்கான களமா கொண்டு வரணும்ங்றது என்னோட விருப்பம். உங்களோட கருத்துகளையும் இதுல பதிவு பண்ணணும்ன்னு கேட்டுக்கிறேன். இது இத்தோட முடிஞ்சுப் போற விசயமில்ல. தொடர் விவாதத்துக்கான விசயம். தொடர்ந்து இதெப் பத்தி பேசுவோம், உரையாடுவோம். இப்போதைக்குச் சின்னதா ஒரு கமா போட்டு இத்தோட இந்த அளவோடு நிறைவு பண்ணிக்குவோம். நீங்க சொல்ற கருத்துக்கேற்ப தொடர்ந்துக்குவோம்.

*****

30 Jun 2025

மனதைக் கையாளும் முறைகள்!

மனதைக் கையாளும் முறைகள்!

மனதின் பிரச்சனைகள் என்பன இதை இப்படிச் செய்ய வேண்டும், அதை அப்படிச் செய்ய வேண்டும், இதை இவ்வண்ணம் மாற்ற வேண்டும், அதை அவ்வண்ணம் மாற்ற வேண்டும், இது எனக்குப் பிடிக்கும், இது எனக்குப் பிடிக்காது என்பன போன்ற ஆசைகளாலும், பிடிவாதங்களாலும், எதிர்பார்ப்புகளாலும் ஓயாது அலைவுறுத்துவதால் ஏற்படுவன.

இயன்றவரை இன்று செய்தாகி விட்டது, இனி நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டால் உங்கள் மனதால் உங்களை அலைவுறச் செய்ய முடியாது.

ஓர் அளவிற்கு மேல் எதையும் செய்ய வேண்டாம், ஓர் எல்லைக்கு மேல் எதையும் மாற்ற வேண்டாம் என்று நீங்கள் நினைத்து விட்டால், உங்கள் மனதில் எந்தப் பிரச்சனைகளும் இருக்காது.

மனதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை என்னவென்றால், மனம் என்பது அது பாட்டுக்கு எதுவும் செய்யாமல் இருக்க பிறந்த வஸ்து. அதைப் போட்டு அது அப்படியாக்கும், இது இப்படியாக்கும் என்று நாம் இயக்க ஆரம்பித்தால், ஆரம்பத்தில் மனம் பலவிதமாக யோசிப்பது சுவாரசியமாக இருந்தாலும், முடிவில் அது நம்மைப் போட்டு வதைக்க ஆரம்பித்து விடும்.

மனதைப் பொருத்த மட்டில் நாம் பாட்டுக்கு எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அது பாட்டுக்கு அடங்கி விடும். இது மனதுக்கானது, செயலுக்கானது அல்ல.

மனதின் பிரச்சனைகளோடு ஒப்பிட்டால், மனதைக் கையாளத் தெரியாமல் ஒருவர் அனுபவிக்கும் சித்திரவதைகளை விட உலகில் வேறெதும் பெரிய அராஜகமோ, வன்முறையோ கிடையாது. உண்மையில் மனதின் பிரச்சனைகளானது அராஜகங்கள், வன்முறைகளை விட கொடுமையானவை, அதி பயங்கரமானவை.

மனதைக் கையாளும் போது நாம் சில வழக்கங்களைக் கையாளலாம். மனம் என்னதான் கொந்தளித்தாலும் கொந்தளிக்காமல் இருந்து விடுவது நல்லது. மனம் என்னதான் கோபப்பட்டாலும் கோபப்படாமல் இருந்து விடுவது நல்லது. மனம் என்னதான் வேகப்பட்டாலும் வேகப்படாமல் இருப்பது நல்லது. மனம் என்னதான் உணர்ச்சிவசப்பட்டாலும் உணர்ச்சிவசப்படாமல் இருந்து விடுவது நல்லது. மனதைப் பொருத்த வரையில் எல்லாம் அந்த கொஞ்ச நேரத்துக்குத்தான். அதற்குப் பிறகு அதன் சுவடு தெரியாமல் இருக்கும் மனது.

மனதின் பொது இயல்பு என்னவென்றால், அதற்கு எதையாவது போட்டு உருட்டிக் கொண்டிருக்க வேண்டும். அதன் உருட்டல்களுக்கு மனதைக் கொண்டிருக்கும் மனிதரே இரையாகி விடக் கூடாது.

நீங்கள் பாட்டுக்கு இருந்தால் மனம் அது பாட்டுக்கு அமைதியாகி விடும். அவ்வளவுதான் மனம். மனம் பலவிதமாக இயங்கும் போது நீங்கள் யோசிக்காமல் இருக்க வேண்டும். அதெப்படி முடியும்? சரிதான் போ என்று அடங்கிக் கொள்ள வேண்டும் அல்லது போனால் போகட்டும் போ எனத் தைரியமாக இருந்து விட வேண்டும் அல்லது அவ்வளவுதான் இதற்கு மேலேல்லாம் நம்மால் முடியாது எனத் தீர்க்கமாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

மனதிற்கான விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால், சொல்லிக் கொண்டே இருக்கலாம். அதற்கு ஒரு முடிவில்லை. நிறுத்தி விட்டால் அவ்வளவுதான். ஒன்றுமே இல்லை. ஏனென்றால் மனம் என்பது ஒன்றுமே இல்லாத ஒன்றுதான். அதற்கான உரு, வடிவம், கற்பனை எல்லாம் நாம் கொடுப்பதுதான். நாம் கொடுக்கவில்லை என்றால் அங்கே ஒன்றும் இல்லை. விசயம் அவ்வளவுதான்.

*****

29 Jun 2025

மனம் காண்பதை உலகம் காண நாளாகும்!

மனம் காண்பதை உலகம் காண நாளாகும்!

இவ்வளவு கஷ்டம் என்று நினைத்தால்

தம்புடி கூட நகர்ந்திருக்காது

இதெல்லாம் ஒரு கஷ்டமா என்று நினைக்க

வெகுதூரம் நகர்வது அறியாப் பிழையென நிகழ்ந்தது

என்ன காரணமென்றெல்லாம் தெரியாது

காரணம் கண்டுபிடிக்கவும் தோன்றாது போனது

முடியுமா முடியாதா என்பதா முக்கியம்

ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதே முக்கியமானது

செய்ய வேண்டும் என்று தோன்றியது

எத்தனை முறை தோற்றாலும்

அதையே செய்ய வேண்டும் என்று தோன்றியது

அதையே செய்ய செய்ய

உலகம் இன்று மேடையில் தாங்கிக் கொண்டிருக்கிறது

கண்ணுக்குத் தெரியாத காட்சிகளை

உங்கள் மனதுக்குப் பார்க்கத் தெரிந்தால்

சத்தியமாக நீங்கள்தான் நீங்கள்தான்

உங்களால் எதுவும் முடியும்

இப்போதுதான் முடிய வேண்டும் என்பதன்று

எப்போது வேண்டுமானாலும்

முடியும் என்பது முடியும்

எப்போதும் உங்கள் மனதில் தெரியும் காட்சிகளை

உலகம் கண்களால் காண நாட்களாகும்

*****

28 Jun 2025

முடிவு தொடக்கத்தில் இருக்கிறது!

முடிவு தொடக்கத்தில் இருக்கிறது!

எதையெதையோ பார்க்கிறாய்

எதையெதையோ பேசுகிறாய்

எதையெதையோ எழுதுகிறாய்

உன்னைச் சுற்றி ஆயிரம் நடக்கின்றன

உனக்குள்ளே ஆயிரம் நடக்கின்றன

உன்னைப் பற்றி உன்னைச் சுற்றி

நினைப்பது அல்லாது

யாருக்காகவோ பார்க்கிறாய்

யாருக்காகவோ பேசுகிறாய்

யாருக்காகவோ எழுதுகிறாய்

யாருக்காகவோ வாழ்கிறாய்

உனக்கான வாழ்க்கை

அனாதியாய்க் கிடக்கிறது

இயலாமையில் தவிக்கும் போது

ஒரு வெற்றி தேவைப்படுகிறது

எழும்புவதற்கான உற்சாகம் வேண்டியிருக்கிறது

மனதைத் தயார்படுத்த

மனதுக்காகக் காத்திருப்பது எத்தனை முறை

மனம் துவக்க விடாது

ஆனாலும் ஆரம்பித்துவிட வேண்டும்

அதுவே தயார்படுத்தும் முறை

கொஞ்சம் நகர்ந்து விட்டால்

வண்டி கிளம்பி விடும்

வண்டியை சில அடிகள் தள்ளினால்

வண்டி பல கோடி அடிகள்

உன்னைத் தள்ளிக் கொண்டு செல்லும்

ஓடுவது என்று முடிவெடுத்துவிட்டால்

ஓடிக் கொண்டிருக்க வேண்டும்

ஓட ஓட புதிது புதிதாகத் தோன்றும்

ஓடாமல் அமர்ந்து யோசிப்பதால்

ஒடுவதில் எதையும் கண்டுபிடிக்க முடியாது

ஓடிய பின் அமர்ந்து யோசிப்பவர்கள்

வித்தியாசமாக ஓடுகிறார்கள்

எல்லாம் செய்ய செய்ய கண்டுபிடிப்பதே

கண்டுபிடித்து கண்டுபிடித்து செய்வதே

நிகழ நிகழ அறிய வருவதே

அறிய அறிய நிகழ்வதே

*****

27 Jun 2025

உள்நாட்டில் வெளிநாட்டு இந்தியர்கள் எப்படி உருவாகிறார்கள்?

உள்நாட்டில் வெளிநாட்டு இந்தியர்கள் எப்படி உருவாகிறார்கள்?

சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது? நமது கல்வி முறை இங்கிலாந்திலிருந்து வந்தது. நாம் விரும்பிப் பார்த்துக் கொள்ளும் மருத்துவமும் ஆங்கில மருத்துவம்.

நமக்கான பென்சில்கள், பொம்மைகள் சீனாவிலிருந்து வருகின்றன.

சமைப்பதற்கும், இயங்குவதற்கும் தேவையான எரிவாயுவும், எரிபொருளும் அரபு நாடுகளிலிருந்து வருகின்றன.

பீட்ஸாவின் தாயகம் இத்தாலி. நூடுல்ஸின் தாயகம் சீனா. அமெரிக்காவில் பிரபலமான பர்க்கரின் தாயகம் ஜெர்மனி. பெப்சியும் கோக்கும் அமெரிக்காவில் பிறப்பெடுத்த இந்தியர்களின் ஆஸ்தான பானங்கள். நாம் விரும்பி உண்ணும் உணவின் நிலை இப்படி இருக்கிறது.

மகிழ்வாக நாம் பயணிக்கும் ஊர்திகளான ஹூண்டாய், டொயொட்டா, வோல்க்ஸ்வேகன், போர்டு போன்றவை கொரியா, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சார்ந்தன.

எல்ஜி மின்சாதனப் பொருட்களும் சாம்சங் மின்சாதனப் பொருட்களும் கொரியாவைச் சார்ந்தவை. வேர்ல்பூல் மின்சாதனப் பொருட்கள் அமெரிக்காவைச் சார்ந்தவை.

கூகுள், வாட்ஸ்ஆப், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் அமெரிக்க உபயம்.

வானில் பயணிக்கும் போயிங் விமானம் அமெரிக்க தயவு.

அவ்வளவு ஏன் இராணுவம் பயன்படுத்தும் ரபேல் விமானம் பிரான்ஸ் தயவு.

கையில் இருக்கும் கணினியாக இருந்தாலும், மேசையில் இருக்கும் கணினியாக இருந்தாலும் லெனோவா சீனாவைச் சார்ந்தது என்றால் ஹெச்பி, டெல், ஆப்பிள் போன்றவை அமெரிக்காவைச் சார்ந்தவை.

ஆப்பிள் அலைபேசி அமெரிக்க நாட்டுக் கொடை என்றால் சாம்சங் கொரிய நாட்டுக் கொடை. விவோவும், ஆப்போவும் சீனாவின் கொடை.

சரிதான் போ என்று திரையரங்கில் உட்கார்ந்தால், பார்க்கின்ற படங்கள் எல்லாம் கொரியன் படங்களைச் சுட்ட தமிழ்ப் படங்களாகவோ, ஹாலிவுட்டின் வெட்டி ஒட்டிய (காப்பி – பேஸ்ட்) படங்களாகவோ இருக்கின்றன.

நாம் இருக்கும் நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. இங்கு இருப்பதெல்லாம் வெளிநாட்டுப் போருட்களாய் இருக்கின்றன.

என்ன செய்வது?

இவ்வளவு வெளிநாட்டு சமாச்சாரங்களோடுதான் இந்தியராய் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இதனால்தானோ என்னவோ பலரும்வெளிநாட்டு இந்தியராய் மாற விரும்புகிறார்களோ?!

நாம் மட்டும்தான் என்ன? நாம் உள்நாட்டில் வாழும் வெளிநாட்டு இந்தியர்கள்!

*****

26 Jun 2025

மாபெரும் பாராட்டு பெற்ற கவிதை!

மாபெரும் பாராட்டு பெற்ற கவிதை!

எத்தனையோ கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதைக்குக் கிடைத்த பாராட்டும், கைத்தட்டல்களும் என்னை ஆச்சரியப்படுத்தின. அது கல்யாணம் தொடர்பான ஒரு கவிதை. அந்தக் கவிதையைக் கடைசியில் சொல்கிறேன்.

இப்போது அதை படித்துப் பார்க்கும் போது அது ஒரு கவிதையா என்று எனக்குத் தோன்றுகிறது. நண்பர்களோ அதைப் படித்துப் பார்த்து விட்டு, இப்போதும் அது ஆகச் சிறந்த கவிதை என்கிறார்கள். இதனால்தான் வாழ்க்கை என்பது அபத்தமான முரண்பாடு என்ற முடிவுக்குப் பல நேரங்களில் நான் வந்துவிடுகிறேன்.

கொஞ்சம் கால்த்தில் பின்னோக்கிப் போகும் போது, அதாவது, கல்யாணம் நடந்த போது மனைவி எனக்குப் பயந்து இருப்பாள் என்கிற மிதப்பு இருந்தது. ஆண் என்கிற ஆதிக்க உணர்வும் இருந்தது. நான் இவளை வைத்து எப்படிக் குடும்பத்தைக் கொண்டு போகிறேன் பார் என்கிற தெனாவெட்டு இருந்ததும் உண்மை.

காலம் கடக்க கடக்கத்தான் மனம் கொள்ளும் நம்பிக்கைகள், மனம் ஏற்படுத்திக் கொண்ட திமிர்த்தனங்கள், மனதில் உருவாகியிருந்த கருத்தாக்கங்கள் எவ்வளவு தவறு என்பது புரியத் தொடங்கியது.

மனம் நினைப்பது போலெல்லாம் வாழ்க்கையில் நடக்காது என்பதும், வாழ்க்கையில் எதார்த்தமாக எது நடக்குமோ அதையெல்லாம் மனம் நினைக்காது என்பதும் புரிந்தது.

‘என் ராசாவின் மனசில’ என்ற படத்தில் கவுண்டமணி “எல்லாம் பொண்டாட்டிக்குப் பயந்த பசங்க” என்ற ஒரு வசனம் பேசுவார். இந்த வசனத்தைக் கேட்ட போது, உங்களைப் போலப் பொங்கி எழுந்தவர்களில் நானும் ஒருவன். வரலாற்றில் ஏற்பட்ட இந்தப் பிழையை மாற்றிக் காட்ட வேண்டுமென்று, இந்த வசனத்தைக் கேட்ட அன்று பிற்பகல் ஏழரை மணி அளவில் நான் எடுத்துக் கொண்ட சபதமும் எனக்கு நினைவுக்கு வருகிறது. என் சபதம் ஏழரையில் முடிந்து போனது. இப்போது சபதம் எடுப்பதென்றால் ஏழரை மணிக்கு எடுப்பதில்லை, அது முற்பகலாக இருந்தாலும் சரி, பிற்பகலாக இருந்தாலும் சரி.

பயம் என்பதும் கோழைத்தனமல்ல. வீரத்துடன் பயப்படுவது தவறானதும் அல்ல. அதெப்படி வீரத்துடன் பயப்படுவது என்று கேட்கக் கூடாது. பயம் மனதுக்குள் இருக்கும், ஆனால் உடலில் உதறல் தெரியக் கூடாது. பயப்படாத மாதிரி நடிக்க வேண்டும், ஆனால் வேறு வழியில்லை உள்ளுக்குள் பயந்துதான் ஆக வேண்டும். இது சாதாரணமாகத் தெரியலாம். இதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வருவது என்பது சிவாஜியின் நடிப்பை விடக் கடினமானது. பல வருடப் பழக்கத்தில் எனக்கு இந்த நடிப்பு கைகூடி வர பத்தாண்டுகளுக்கு மேல் ஆனது.

இப்போது நான் மனைவியிடம் நிற்கும் தோரணையைப் பார்த்தால் நீங்களே மிரண்டு விடுவீர்கள். என்னடா இவன் இவ்வளவு மோசமான ஆணாதிக்கவாதியாக இருக்கிறானே என்று. ‘பயிற்சியே மனிதரை மேம்படுத்தும்’ என்ற வாசகம் பொய்யாகி விடுமா என்ன?

வள வளவென்று பேசியது போதும், கவிதைக்கு வா என்கிறீர்களா?

கடைசியில் பொண்டாட்டியிடம்

பயந்து கிடப்பதற்காகக்

கல்யாணம்.

*****

25 Jun 2025

தத்துவ ஞானத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளைச் சமாளிப்பது!

தத்துவ ஞானத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளைச் சமாளிப்பது!

சாக்ரடீஸே சமாளிக்க முடியாத பிரச்சனையைச் சமாளித்த அனுபவம் ஒன்று. இது போன்ற பிரச்சனைகளைச் சமாளிப்பது தத்துவ ஞானத்திற்கு அப்பாற்பட்டது என்றாலும் சமாளிப்பது சாதாரணப்பட்ட காரியம் இல்லை.

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் ‘கூலி’ என்று மனைவி சொன்ன போது நான் வாய் திறக்கவே இல்லை.

ஒருவேளை வாய் திறந்திருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

ரஜினி நடித்த படம் குறித்துத் தெரிந்தும் அந்தச் செய்தியை மறைக்கப் பார்த்தீர்களே என்பாள்.

அத்துடன் விடுவாளா என்றால், அதுதான் இல்லை! உன் குடும்பமே இப்படித்தான் எல்லாவற்றையும் மறைத்தே பழக்கம் என்பாள்.

மேலும், இப்படி எல்லாவற்றையும் மறைத்து மறைத்து என்னத்தைக் கண்டு விட்டீர்கள் என்பாள்.

நல்லவேளை தமிழகத்துக்கே தெரிந்த இச்செய்தியை நான் தெரியாதது போலக் காட்டிக் கொண்டது.

இது போன்ற பிரச்சனைகளைத் தத்துவத்தோடு இணைத்து தர்க்கம் பார்த்தால் பிரச்சனை தொலையாது. நாம்தான் தொலைய வேண்டியிருக்கும்.

மேலும், தெரியாதது போலக் காட்டிக் கொண்டு அப்பாவி போலத் தப்பித்துக் கொள்வது, வீரனாய்க் காட்டிக் கொண்டு காலில் விழுவதை விட மேலானதாக இருக்கிறது.

*****