11 Jun 2026

கிராமியத் தறியின் திரை மகுடம் – பாரதிராஜா!

கிராமியத் தறியின் திரை மகுடம் – பாரதிராஜா!

மனிதர்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நகரத்தை நோக்கி ஓடும் மனிதர்களுக்கு மத்தியில், ஒரு மனிதன் நகரத்திற்கு ஓடிவந்து, பின் ஒட்டுமொத்த நகரத்தையும் கிராமத்தை நோக்கி ஓடவைத்தார். அவர்தான் பாரதிராஜா.

அவருக்குள் ஒரு விசித்திரமான ஏக்கம் இருந்தது. சினிமா கிராமத்திற்குப் போய்விட்டது, ஆனால் கிராமம் ஏன் சினிமாவுக்குள் வரவில்லை? என்பதுதான் அது.

சுகாதார ஆய்வாளர் என்ற அரசுப் பணியைத் துறந்துவிட்டு, சென்னைக்கு அவர் கிளம்பியபோது, அவரிடம் இருந்தது ஒரு பெட்டி அல்ல; கிராமத்து மனிதர்களின் உணர்வும் வியர்வையும் .

இன்று ஐம்பத்தியாறு ஆண்டுகள் கழித்து அவர் பத்மஸ்ரீயுடனும், தேசிய விருதுகளுடனும், உயிரற்ற உடலாகத் தன் சொந்த மண்ணுக்குத் திரும்பியிருக்கிறார். மரணம் என்பது ஒரு பயணத்தின் முடிவு அல்ல, அது ஒரு வட்டத்தின் பூர்த்தி. அவர் கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறார்.

பாரதிராஜாவுக்கு முன்பு வரை தமிழ் சினிமா என்பது அரண்மனைகளிலும், பங்களாக்களிலும், மேல்தட்டு மனிதர்களின் பட்டு வேட்டிகளிலும் படுத்துறங்கிக் கொண்டிருந்தது. பாரதிராஜா அதை இழுத்துக்கொண்டு வந்து சேற்றிலும் சகதியிலும் உட்கார வைத்தார்.

ஏவிஎம், ஜெமினி போன்ற பிரம்மாண்ட ஸ்டூடியோக்களின் செயற்கை வெளிச்சங்களை உடைத்துவிட்டு, தேனி, மதுரை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிஜமான சூரிய வெளிச்சத்திற்குக் கேமராவைத் திருப்பினார்.

அதுவரை திரையில் உலா வந்த கார்த்தி, வஸந்த், ராஜா, திவ்யா, காவ்யா, அனிதாக்களுக்கு மத்தியில் பரட்டை, சப்பாணி, குருவம்மா, மயிலு, பொன்னாத்தா என்ற பெயர்களை உலவவிட்டார். மனிதர்களின் பெயர்களில்தான் எத்தனை மண்வாசனை!

இதற்கெல்லாம் உச்சமாக, அதுவரை நடிகர் திலகம் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் உலகநாயகன் என்றும் கொண்டாடப்பட்ட பிம்பங்களை அவர் கையாண்ட விதம் ஒரு தத்துவார்த்த விந்தை. கமல்ஹாசனை வெறும் கோவணம் கட்ட வைத்துச் சப்பாணியாக்கினார். சிவாஜி கணேசனைத் தன் ராஜ தோற்றத்தைக் கழற்றிவைத்துவிட்டு எளிய மனிதனாக முதல் மரியாதை செய்ய வைத்தார். மனிதன் தன் ஆடைகளையும் பகட்டுகளையும் கழற்றி வைக்கும்போதுதான் அவன் முழுமையான மனிதனாகிறான்; நடிகனும் அப்படித்தான் போல.

வசனங்கள் என்பவை அதுவரை அடுக்கு மொழிகளாகவும், பிரச்சாரப் பாணி பிரசங்கங்களாகவும் இருந்தன. பாரதிராஜா அதை கிராமிய மொழி என்று சொல்லப்பட்ட எளிய மக்களின் பேச்சு மொழியாக மாற்றினார்.

பாரதிராஜா என்னும் திரைசூரியன் ஜூன் 10இல் மறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மரணம் என்பது உடலுக்கு மட்டுமே நிகழும் ஒரு சுருக்கமான விபத்து.

அவர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் ஒரு பொன்மகுடம் அல்லது கிராமத்துத் தறியில் நெய்யப்பட்ட பட்டாடை. அவர் திரையிலிருந்து மறைந்திருக்கலாம், ஆனால் அந்த மண் வாசனை தமிழ் சினிமா இருக்கும் வரை ஒரு கிராமத்துத் தென்றலாக வீசிக்கொண்டே இருக்கும். ஏனெனில், காற்றுக்கு மரணம் இல்லை; காற்றோடு கலந்த மண்வாசனைக்கும் மரணம் இல்லை.

*****

கபடி டூ கடத்தல் – சீரழித்த ஒரு பாஸ்ட் பார்வேர்ட் டெக்னிக்!

சீரழித்த சினிமா – 9

கில்லி

கபடி டூ கடத்தல் – சீரழித்த ஒரு பாஸ்ட் பார்வேர்ட் டெக்னிக்!

இரண்டாயிரங்களின் நடுப்பகுதியில், தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த இளவட்டங்களும் தங்களின் படிப்பு, வேலை, எதிர்காலம் போன்ற அற்பமான விஷயங்களை மறந்துவிட்டு, ஒரே ஒரு சொல்லுக்குப் பின்னால் பைத்தியமாக அலைந்தார்கள். அதுதான் கில்லி. 2004இல் வெளியான இத்திரைப்படம், தமிழ் கமர்ஷியல் சினிமாவின் இலக்கணத்தையே மாற்றி எழுதியது.

கில்லி என்ற தலைப்பு வைக்கப்பட்டாலும், இப்படம் கிட்டிப்புள் விளையாட்டோடு தொடர்புடையது கிடையாது. கபடியோடு அதுவும் கமர்ஷியல் கபடி என்ற பெயரில் ஆள் கடத்தலோடு தொடர்புடையது.

தமிழ்நாட்டு இளைஞர்களின் பொதுப்புத்தியை இப்படம் எப்படி மூர் மார்கெட் ரேஞ்சுக்குச் சீரழித்த்து என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த கல்வி தத்துவம் என்ன தெரியுமா? நீங்கள் வீட்டில் அப்பாவிற்குத் தெரியாமல் பொய் சொல்லிவிட்டு, காலேஜுக்குப் போகாமல் கபடி விளையாடப் போகலாம். வழியில் யாராவது ஒரு பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், அங்கேயே கபடியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மதுரையே அலறும் அளவிற்கு ரவுடித்தனம் செய்யலாம்.

படத்தில் வரும் நாயகன், ஒரு சாதாரணப் போலீஸ் அதிகாரியின் மகன். ஆனால், அவர் சட்டத்தைக் கையில் எடுக்கும் வேகம் இருக்கிறதே, அது எந்த ஒரு சர்வதேச டானுக்கும் குறைவானது அல்ல.

விளையாட்டு வீரனாக வர வேண்டுமென்றால் உங்களுக்கு ஒழுக்கமோ, பயிற்சியோ தேவையில்லை; நடுரோட்டில் ஐம்பது பேரை அடித்துத் துவம்சம் செய்யும் முரட்டுத்தனம் இருந்தால் போதும், என்ற விசித்திரமான வீரத்தை இத்திரைப்படம் இளைஞர்களின் மூளையில் ஏற்றியது.

இப்படத்தின் கதையே ஒரு விசித்திரமான முரண்பாடுதான். வில்லன் நாயகியைக் காதலிப்பதாகச் சொல்லி அவளை மிரட்டுகிறார், பின்தொடர்கிறார், அவளது சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்ய முயல்கிறார். இது டாக்சிக் ஸ்டாக்கிங்.

அவரிடமிருந்து நாயகியைக் காப்பாற்றும் நாயகன் என்ன செய்கிறார்? அவரும் அவளை அவளது சம்மதம் இல்லாமல் மதுரையிலிருந்து சென்னைக்குக் கடத்திக் கொண்டு வந்து, தன் வீட்டின் பரணில் அடைத்து வைக்கிறார்!

வில்லன் செய்தால் அது அராஜகம், ஹீரோ செய்தால் அது காதல் என்ற தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இரட்டை நிலையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

பெண்ணின் பாதுகாப்பு என்ற பெயரில் அவளது தனிமனித சுதந்திரத்தை இரண்டு ஆண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பந்தாடுவதை விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றி விற்றதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

படத்தில் நாயகனின் தந்தை ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் தன் மகன் உருப்படாமல் சுற்றுகிறானே என்று கண்டிப்பதும், சட்டத்தின்படி நடக்க முயல்வதும் படத்தில் எப்படிச் சித்தரிக்கப்படும் தெரியுமா? அவர் ஒரு காமெடிப் பீஸாகவும், வில்லனுக்குப் பயப்படுபவராகவும், மகனின் கெத்துக்கு முன்னால் தோற்றுப் போகும் ஒரு பலவீனமான அதிகாரியாகவும் சித்தரிக்கப்படுவார்.

பெற்றோர்களின் நியாயமான கண்டிப்பையும், சமூக ஒழுங்கையும் நம் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைப் போடும் வில்லத்தனம் என்று இளைஞர்களை எண்ண வைத்தது இத்திரைப்படம். நிஜ வாழ்க்கையில் வீட்டில் அப்பாவையும், வெளியில் சட்டத்தையும் மதிக்காமல், நாங்க கில்லிடா என்று சுற்றும் ஒரு பொறுப்பற்ற தலைமுறையை உருவாக்க இத்திரைப்படம் மிகச் சிறப்பாகப் பயன்பட்டது.

இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் சாபம், இதன் அசாத்தியமான வேகம். படம் பார்ப்பவனுக்குச் சிந்திக்க ஒரு நொடி கூட இடம் தராமல் பாடல்களாலும், சண்டைக்காட்சிகளாலும், பஞ்ச் வசனங்களாலும் அவனது பகுத்தறிவை மழுங்கடித்து, ஒருவிதத் திரைபோதைக்குள் தள்ளிவிட்டது இந்தக் கில்லி.

விளைவு?

திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழன், தன் நிஜ வாழ்க்கையின் வறுமையையோ, வேலையில்லாத் திண்டாட்டத்தையோ பற்றி யோசிக்காமல், தன்னை ஒரு கில்லியாகக் கற்பனை செய்துகொண்டு அலையத் தொடங்கினான்.

கில்லி பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது, அப்படத்தின் நாயகனை தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக அரியணையில் ஏற்றியது. ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

பொறுப்பில்லாமல் பொய் சொல்வதைக் கெத்து என்றும், பெண்களைக் கடத்துவதைக் காதல் என்றும், சட்டத்தை மதிக்காமல் அராஜகம் செய்வதை வீரம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற கில்லித்தனமான சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

10 Jun 2026

காயும் டெல்டா… கரையாத மேட்டூர்!

காயும் டெல்டா… கரையாத மேட்டூர்!

இந்த உலகத்தில் நாம் எப்போதுமே இரண்டு விஷயங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் வருவதாகச் சொல்லும் நண்பர் மற்றும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட வேண்டிய காவிரி தண்ணீர். இரண்டுமே பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை என்பதுதான் பிரபஞ்சத்தின் மாறாத விதி.

வாட் அபௌட் ஜூன் 12 என்றால், நீர் வளத் துறை வட்டாரங்கள் மிகவும் கூலாக, ஜூன் 12இல் சான்ஸே இல்லை பாஸ். ஆகஸ்ட் கடைசியில வேணா வந்து பாருங்க, அப்பவும் இல்லைன்னா செப்டம்பர் பர்ஸ்ட் வீக் கன்பார்ம் என்று டோக்கன் வழங்கிவிட்டார்கள்.

டெல்டா மாவட்டங்களில் இருக்கும் 16 லட்சம் ஏக்கர் நிலங்களும், அதை நம்பியிருக்கும் விவசாயிகளும் குறுவை சாகுபடி என்ற பெயரில் ஏதோ ஒரு கனவு கண்டுகொண்டிருந்தார்கள். பாவம், அவர்கள் கனவில் மண் அள்ளிப் போடுவதுதான் தென்மேற்கு பருவமழையின் தற்போதைய பொழுதுபோக்கு.

பொதுவாக நம் ஊரில் காரியம் நடக்கவில்லை என்றால், உடனே ப்ளாஷ்பேக் கதைகளைப் பேச ஆரம்பித்துவிடுவோம். மேட்டூர் அணைக்கும் ப்ளாஷ்பேக் இருக்கிறது.

91 வருஷ அணை வரலாற்றில், கரெக்டா ஜூன் 12க்கு தண்ணி திறந்தது வெறும் 20 முறைதான்.

அணை நிரம்பி வழிந்ததால், சொன்ன தேதிக்கு முன்னாடியே திறந்துவிட்ட கதையும் நடந்திருக்கிறது. அது 11 முறை. இது போன்ற அதிசயங்கள் எப்போதாவது நடக்கும். இப்போது நோ சான்ஸ்.

60 ஆண்டுகள் தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையை லேட்டாகத் திறந்திருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், லேட்டாகத் திறப்பதுதான் மேட்டூர் அணையின் இயல்பு நிலை.

கடந்த நீர்ப்பாசன ஆண்டில் ஏதோ தெரியாமல் 330 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துவிட்டது. உடனே இந்த வருஷமும் அதே மாதிரி நடக்கும் என்று எதிர்பார்ப்பது காளை மாட்டின் கொம்பில் பால் கறக்கும் கதைதான்!

தற்போது அணை நீர்மட்டம் 79 அடியாகவும், உள்ளே வரும் தண்ணீரின் அளவு வெறும் 760 கனஅடியாகவும் இருக்கிறது. ஆனால், வெளியே குடிநீருக்காக 1,000 கனஅடி திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, கல்லாப்பெட்டிக்கு உள்ளே வரும் காசை விட, வெளியில் போகும் காசு அதிகம். இப்படியே போனால் அணை சீக்கிரம் ஜீரோ பேலன்ஸ் ஆகிவிடும்.

இதற்கெல்லாம் காரணம் நம் அண்டை மாநிலமான கர்நாடகா. அங்கே கபினி, கிருஷ்ணராஜசாகர் என்று இரண்டு அணைகள் இருக்கின்றன. அங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுவதை விட, பெங்களூர் டிராபிக்கைக் குறைப்பது எளிது என்று நினைப்பார்கள் போலிருக்கிறது. அந்த இரண்டு அணைகளும் கொள்ளளவு நிரம்பி, வழிந்து, தட்டக் கெட்டு, வேறு வழியே இல்லாமல் வெளியேறும் உபரி நீர் மட்டும்தான் தமிழகத்திற்கு வரும். அதாவது, அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு இலைகளில் சிந்தும் பருக்கைகளைத்தான் நாம் காவிரித் தாய் என்று பயபக்தியோடு வரவேற்க வேண்டும்.

இனி என்ன நடக்கும்?

ஜூன் 12க்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. நாளை கடந்து நாளை மறுநாள் அந்த 12 வந்து விடும். மேஜிக் நடந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப் போவதில்லை. பருவமழை பொய்த்தால் குறுவை சாகுபடி காலி.

மத்திய அரசு, மாநில அரசு, கர்நாடக அரசு, இயற்கை அன்னை என நான்கு தரப்பும் சேர்ந்து நடத்தும் இந்த மாபெரும் வாட்டர் கேம் ஷோவில், எப்போதுமே தோற்றுப் போவது விவசாயி மட்டும்தான்.

டெல்டா விவசாயிகள் இப்போது கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். அணையில் தண்ணீர் இருக்கும்போது விவசாயம் செய்வது சாதாரண விஷயம். அணையில் தண்ணீரைக் கண்ணிலும் காட்டாமல், கவலையை மட்டுமே அறுவடை செய்ய வைப்பதுதான் இந்திய விவசாயத்தின் உன்னதக் கலை!

அடுத்த ஆகஸ்ட் இறுதியில் மேட்டூர் அணையின் மதகுகள் திறக்கப்படுகிறதா, அல்லது விவசாயிகளின் கண்கள் திறக்கப்படுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

*****

சைக்கோத்தனத்தை மசாலாதனமாக்கிப் பின்னோக்கிப் பாய்ந்த திரை!

சீரழித்த சினிமா – 8

வேட்டையாடு விளையாடு

சைக்கோத்தனத்தை மசாலாதனமாக்கிப் பின்னோக்கிப் பாய்ந்த திரை!

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சமிருந்த நிம்மதியும், தூக்கமும் சைக்கோ என்ற ஒற்றை வார்த்தைக்கு முன்னால் மொத்தமாகப் பலியிடப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய லோக்கல் ரவுடிகளையும், அரசியல்வாதிகளையும் ஓரமாக உட்கார வைத்துவிட்டு, மருத்துவப் படிப்பு படித்த இரண்டு இளைஞர்கள் அமெரிக்கா வரை சென்று தொடர் கொலைகள் செய்யலாம்; அவர்களைப் பிடிக்க ஒரு தமிழ்நாட்டு போலீஸ் துப்பாக்கியோடு உலகம் சுற்றலாம் என்ற ஒரு புதுவிதமான உலகளாவிய அத்துமீறல் பார்முலாவைத் தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கு உண்டு.

உலக நாயகனின் மிடுக்கான காக்கிச் சட்டை பிம்பமும், பொளந்து கட்டும் தீம் இசையும், நியூயார்க் நகரப் பின்னணியும் சேர்ந்து, தமிழர்களின் சிந்திக்கும் திறனை எப்படி ஒரு குரூரமான எல்லைக்குள் சுருக்கியது என்பதை ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த காவல்துறை ஜனநாயகம் என்ன தெரியுமா? நீங்கள் ஒரு திறமையான போலீஸ் அதிகாரியாக இருந்தால் போதும், உங்களுக்குச் சர்வதேசச் சட்டங்களோ, எப்.ஐஆரோ, நீதிமன்ற வாரண்ட்டோ தேவையில்லை. அமெரிக்காவுக்கே சென்றாலும், அங்குள்ள உள்ளூர் போலீஸை விட உங்களுக்குத்தான் இன்ஸ்டிங்க்ட் அதிகமாக இருக்கும். எவனை வேண்டுமானாலும் சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொல்லலாம்.

படத்தில் வரும் காவல்துறை நாயகன், ஒரு நாகரிகமான போலீஸாகக் காட்டப்பட்டாலும், அவர் சட்டத்தைக் கையில் எடுக்கும் விதம் அப்பட்டமான அராஜகம்.

வில்லன் சைக்கோ என்பதால், அவனைக் கொல்லும் போலீஸும் கொஞ்சம் சைக்கோத்தனமாக மாறலாம் என்ற ஆபத்தான சிந்தனையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

விளைவு?

நிஜ வாழ்க்கையிலும் குற்றவாளிகளுக்கு மனித உரிமை எதுக்கு சார்? ஸ்பாட்லேயே போட்டுத் தள்ளுங்க, என்று சட்டத்தின் ஆட்சியைக் கேலி செய்யும் ஒரு வன்முறைப் பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது ஆழமாக விதைத்தது.

இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் சாபம், அது வன்முறையைக் காட்டிய விதம். அதுவரை தமிழ் சினிமாவில் வன்முறை என்பது கச்சாத்தனமான அரிவாள் வெட்டுகளாக இருந்தன. அதை மிகவும் கிளாஸ் ஆக, ஸ்டைலிஷ் ஆக, மருத்துவக் கருவிகளைக் கொண்டு துண்டு துண்டாக வெட்டும் குரூரமாக மாற்றி வேட்டையாடி விளையாடியது இத்திரைப்படம்.

கொலையையும், சித்திரவதையையும் ஒரு கலை வடிவம் போலக் காட்சிப்படுத்தி, பார்ப்பவனுக்கு ஒருவித வக்கிரமான சுவாரசியத்தைத் தந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழர்கள், தன் சக மனிதர்களை நேசிப்பதை விடுத்து, நமக்குத் தெரியாத ஒரு சைக்கோ நம்ம பக்கத்துலேயே சுத்திட்டு இருப்பானோ? என்ற தேவையற்ற அவநம்பிக்கையையும், மனப்பயத்தையும் தன் மூளையில் ஏற்றிக்கொண்டார்கள்.

படத்தில் வரும் வில்லன்கள் இருவருமே மனநலம் பாதிக்கப்பட்ட கொடூரக் கொலைகாரர்கள். அவர்களது பெயர்கள் அக்மார்க் தமிழில் அமுதன் மற்றும் இளமாறன் எனப் பெயரிடப்பட்டிருந்தது, தமிழர்களைச் சைக்கோவாகச் சித்தரிக்க நினைத்த குறியீடோ என்னவோ?

இத்திரைப்படம் மருத்துவத் துறையையும், மனநலப் பிரச்சினைகளையும் கையாண்ட விதம் மிகவும் முதிர்ச்சியற்றது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலே அவர்கள் கொடூரமானவர்கள், அவர்களைச் சுட்டுக் கொல்வதுதான் சமூகத்திற்கு நல்லது, என்ற ஒரு தவறான புரிதலையம் இது பொதுப்புத்தியில் விதைத்தது.

அறிவியல் பூர்வமாகவும், மருத்துவ ரீதியாகவும் அணுக வேண்டிய ஓர் உளவியல் சிக்கலை, வெறும் மசாலா படத்திற்கான வில்லத்தனக் கருவியாக மாற்றி, சமூகத்தில் மனநலம் பற்றிய தவறான பிம்பத்தை இன்னும் பலப்படுத்தியதுதான் இத்திரைப்படம் செய்த ஆகச்சிறந்த சீரழிவு.

படத்தின் மிக மோசமான, கசப்பான பகுதி என்னவென்றால், அமுதன் மற்றும் இளமாறன் ஆகிய இருவருக்குள் இருக்கும் ஓரினச்சேர்க்கை அல்லது மாற்றுப் பாலின ஈர்ப்பை ஏதோ ஒரு பெரும் குற்றச்செயல் போலவும், அதுதான் அவர்களைச் சைக்கோக்களாக மாற்றியது போலவும் சித்தரித்ததுதான். இயற்கைக்கு மாறானவர்கள் என்ற போலி முத்திரையைக் குத்தி, அவர்களின் பாலியல் அடையாளத்தையே வன்முறையின் ஊற்றுக்கண்ணாகக் காட்டியது இத்திரைப்படம்.

ஒரு முற்போக்குச் சமூகம் பாலின சமத்துவத்தைப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், கமர்சியல் சினிமா தன் கிளைமாக்ஸ் விறுவிறுப்பிற்காகத் தன்பாலின ஈர்ப்பாளர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் மீதான பொதுச் சமூகத்தின் வெறுப்பை மிகக் கச்சிதமாக மூலதனமாக்கிக் கொண்டது வேட்டையாடு விளையாடு.

தன்னை முற்போக்குக் கலைஞனாகக் காட்டிக் கொள்ளும் உலக நாயகன் இப்படத்தின் நாயகனாக நடிக்க ஒத்துக் கொண்டு, கமர்ஷியல் காக்டெயிலைத் தமிழ் மக்களின் வாயில் ஊற்றி, ஒரு வித சைக்கோ போதையில் தள்ளியதுதான் விசித்திரம்.

வேட்டையாடு விளையாடு பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது. படையப்பாவின் வசூலை முந்திக் காட்டியது. உலக நாயகனின் திரையுலகப் பாதையில் மற்றுமொரு மைல்கல் என்று கொண்டாடப்பட்டது. ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

வன்முறையை ஸ்டைலாகப் பார்ப்பதைக் கெத்து என்றும், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை இன்ஸ்டிங்க்ட் என்றும், பிற மனிதர்களின் அடையாளங்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதை ஓர் ஆளுமை என்றும் மாற்றியதுதான் இந்த வேட்டையாடு விளையாடு தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையில் நிகழ்த்திய ஆகச்சிறந்த சைக்கோதனமான சீரழிவு!

*****

9 Jun 2026

பால்காரனைப் பணக்காரனாக்கி, தமிழனைப் பரம ஏழையாக்கிய சபதச் சீரழிவு!

சீரழித்த சினிமா – 7

அண்ணாமலை

பால்காரனைப் பணக்காரனாக்கி, 

தமிழனைப் பரம ஏழையாக்கிய சபதச் சீரழிவு!

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகம் பொருளாதார ரீதியாகப் புதிய தாராளமயமாக்கலுக்குள் நுழைந்து கொண்டிருந்த சமயம். உலகமே அறிவையும், உலகளாவிய வணிக நுணுக்கங்களையும் நோக்கி நகர்ந்தபோது, தமிழனை மட்டும் ஒரு சைக்கிள், இரண்டு மாடு, கொஞ்சம் பாசம், நிறையக் கோபம் இருந்தால் போதும்... உலகக் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்று நம்ப வைத்த உன்னதத் திரைப்படம்: 1992இல் வெளியான 'அண்ணாமலை.

உச்ச நடிகரின் மாஸ் பிம்பமும், கமர்ஷியல் சினிமாவுக்கே உரிய விறுவிறுப்பான இயக்கமும் சேர்ந்து அண்ணாமலை என்ற திரைப்படம் தமிழர்களின் உழைப்பு, நட்பு, பொருளாதாரம் சார்ந்த சிந்தனைகளை எப்படிக் கூசாமல் சீரழித்தன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தைத் தட்டி எழுப்பிட்டீங்க. இதுவரை இந்த அண்ணாமலையை நண்பனாத்தான் பாத்திருக்கே. இனிமே விரோதியா பார்க்கப் போறே. இந்த நாள் உன்னுடைய காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ… என்று தொடங்கி, நண்பன் கட்டிய ஹோட்டலுக்கு முன்னால் அண்ணாமலை போடும் அந்தச் சபத வசனம் தமிழர்களின் நரம்புகளை இன்றும் புடைக்கச் செய்கிறது. ஆனால், கூர்ந்து கவனித்தால் அது கற்றுக்கொடுத்த தத்துவம் என்ன?

நண்பனுடனான ஈகோ பிரச்சினையைத் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்க்கவோ அல்லது சட்டப்படி அணுகவோ கூடாது. அவனுக்கு இணையாகப் பணக்காரனாகி, அவன் கண் முன்னால் அவனது கௌரவத்தை மிதிப்பதே ஆணழகன் லட்சணம் என்பதுதானே?

ஆரோக்கியமான தொழில் போட்டி என்பதற்கும், தனிநபர் வன்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தைத் துடைத்து அழித்துவிட்டு, பழிவாங்குவதற்காகவே தொழில் தொடங்குங்கள் என்ற ஆபத்தான வணிகப் புத்தியைத் தமிழனின் மண்டையில் ஏற்றியது அண்ணாமலைதான்.

இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் அபத்தம் என்னவென்றால், அண்ணாமலை பால்காரனாக இருந்து வெற்றி நிச்சயம்… எனத் தொடங்கும் ஒரே ஒரு பாடலில்  சென்னை நகரின் ஆகப்பெரும் தொழிலதிபராக மாறுவார். எந்தவித அறிவார்ந்த முன்னெடுப்பு இல்லாமல், முறையான வணிகத் திட்டமிடல் இல்லாமல், வெறும் உழைப்பையும், நண்பன் மீதான வெறியையும் மட்டுமே முதலீடாக வைத்து ஒருவன் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற மாயையை இந்தப் படம் வெற்றிகரமாக விற்றது.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் திட்டமிட்டு, படித்து, உழைத்து முன்னேற வேண்டிய இளைஞர்கள் பலரை, நமக்கும் ஒரு ஜாக்பாட் அடிக்காதா? ஒரே நாளில் நாமும் நண்பனைப் பழிவாங்க மாட்டோமா? என்று உழைப்பின் மீதான யதார்த்த நம்பிக்கையை இழந்து, பகற்கனவு காணும் சோம்பேறிக் கூட்டமாக மாற்றியது இத்திரைப்படம்.

அண்ணாமலை பணக்காரனான பிறகு தன் மகளைக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பார். அவளுக்குக் காதல் வரக்கூடாது, நவீன நாகரிகம் தெரியக்கூடாது, அப்பா சொல்லும் பழமைவாத வட்டத்திற்குள் மட்டுமே வாழ வேண்டும் என்று நிர்பந்திப்பார். தன் மகள் தன் எதிரியின் மகனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும், அண்ணாமலையின் உள்ளே இருக்கும் முரட்டுப் பாசக்காரன் ஒரு சர்வாதிகாரியாக மாறுவார்.

பெண்களின் தனிமனித சுதந்திரத்தை, அப்பாக்களின் போலிக் கௌரவம் என்ற பெயரில் அடக்கி ஆள்வதை இந்தப் படம் நியாயப்படுத்தியது. என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டா, என்று நிஜ வாழ்க்கையில் மகள்களின் கழுத்தை நெரிக்கும் பல அண்ணாமலைகளுக்கு இந்தப் படமே ஊக்க மருந்து.

அண்ணாமலை நண்பனிடம் காட்டும் அந்தப் போலித் தீவிர நட்பு, நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியமே இல்லாதது. நண்பன் அப்பா செய்யும் சதிகளுக்கு நண்பனை வில்லனாக்குவதும், அண்ணாமலை தன் நண்பனை முழுமையாக நம்பாமல் உணர்ச்சிவசப்படுவதும் தமிழர்களின் உறவுச் சிக்கல்களை இன்னும் சிக்கலாக்கியது. இந்த மெலோடிராமா தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் அதீத உணர்வார்ந்த தளத்திலானது. அறிவார்ந்த நகர்தலுக்கான முன்னெடுப்பைப் பின்னுக்குத் தள்ளுவதாக இத்திரைப்பட உள்ளடக்கம் அமைந்தது.

ஆக மொத்தத்தில், சமூகத்தில் உறவுகளைப் பகுத்தறிவோடு அணுகாமல், எல்லாவற்றிலும் அதீத எமோஷனல் கலந்து, சின்னச் சின்ன தவறுகளையும் துரோகம் என்ற பெரிய லேபிளுக்குள் அடைக்கும் முதிர்ச்சியற்ற உறவுப் பழக்கத்தை இது தமிழர்களிடம் உருவாக்கியது.

அண்ணாமலை பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைத்தது. நாயகனுக்கு உச்ச நட்சத்திரம் என்ற பிம்பத்தை முத்திரையிட்டது. ஆனால், சிந்தனை ரீதியாக அது தமிழ்ச் சமூகத்தை எங்கு கொண்டு போய் விட்டது?

ஒருவன் பொருளாதார ரீதியாக உயர வேண்டுமென்றால் அறிவு சார்ந்த உழைப்போ, நவீன வணிகப் புரிதலோ தேவையில்லை. வெறும் பழிவாங்கும் வெறியும், உணர்ச்சிவசப்படும் மனோபாவமும் இருந்தால் போதும் என்று நம்ப வைத்ததுதான் இந்த அண்ணாமலை செய்த ஆகப்பெரும் சாதனை, மன்னிக்கவும், சீரழிவு!

*****

8 Jun 2026

ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து... நீட் விநோதக் கூத்துகள்!

ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து... நீட் விநோதக் கூத்துகள்!

உலகில் மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கிறது. கல்வித் துறைக்கு இருக்கும் ஒரே கடமை, மாணவர்களுக்குப் பரீட்சை வைப்பது. அந்தப் பரீட்சையை எப்படியாவது லீக் செய்வது மாபியாக்களின் கடமை.

கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 70 வினாத்தாள்கள் கசிந்துள்ளனவாம். இரண்டு கோடி மாணவர்கள் இதனால் மன அழுத்தத்தில் இருக்கிறார்களாம்.

எனக்கு என்னவோ, வினாத்தாள் தயாரிப்பதை விட, அதை எப்படிக் கசியவிடுவது என்பதில் தான் நம் ஊர் மாபியாக்கள் அதிக மேலாண்மைத் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழல் எல்லாம் ஒரு பல்கலைக்கழக அளவிலான பிஹெச்டி ஆராய்ச்சி. இப்போது நீட் தேர்விலும் அந்த வித்தையைக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த முறை ராஜஸ்தானில் ஆரம்பித்து, மகாராஷ்டிராவின் தாவரவியல் பெண் விரிவுரையாளர் மனீஷா, பேராசிரியர் குல்கர்னி என சிபிஐ லிஸ்ட் நீள்கிறது. தாவரவியல் டீச்சர் என்பதால், வினாத்தாளை எப்படிக் கிளைபரப்பச் செய்வது என்று தாவரவியல் ரீதியாக யோசித்திருப்பார் போலிருக்கிறது!

முதல் அடுக்கில் ஒரு கொஸ்டின் பேப்பர் 5 கோடி முதல் 10 கோடி வரை விற்கப்பட்டதாம். ஆஹா, கல்வியின் மதிப்பு எவ்வளவு உயர்ந்துவிட்டது பாருங்கள்!

கடந்த மே 3ஆம் தேதி, சுமார் 22 லட்சம் அப்பாவிகள், மன்னிக்கவும், மாணவர்கள், நீட் தேர்வை எழுதப் போனார்கள். தேர்வு மையங்களில் இருந்த கட்டுப்பாடுகளைப் பார்த்தால் ஏதோ சர்வதேச எல்லை பாதுகாப்புப் படை முகாம் போல இருந்தது.

 மதியம் 2 மணி பரீட்சைக்கு காலை 11 மணிக்கே ஆஜராக வேண்டும்.

மெட்டல் டிடெக்டர் சோதனை.

ஏதோ ஓர் அரசு அடையாள அட்டை அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு

கைப்பேசி, கால்குலேட்டர் தடை சரி. மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, கண்ணாடி, தாயத்து, பெல்ட் எல்லாவற்றையும் கழற்றச் சொன்னார்கள்.

பாவம் மாணவ மாணவிகள், நகைகளைக் கழற்றிப் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, ஏதோ போருக்குப் போகும் துறவிகள் போல உள்ளே போனார்கள்.

அதிக உயரமுள்ள காலணிகளுக்கும் தடை. தப்பித்தவறி செருப்புக்குள் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் வைத்து பிட் அடித்தால் என்ன செய்வது?

இவ்வளவு இரும்புத்திரை பாதுகாப்போடு, துபாய், அபுதாபி, சிங்கப்பூர் என உலகமெங்கும் 5,500 மையங்களில் தேர்வு நடத்தி முடித்தார்கள். ஆனால், இவ்வளவு சோதனையிலும் எதைச் சோதிக்க மறந்தார்கள் தெரியுமா? அந்த வினாத்தாளின் ரகசியத் தன்மையை மட்டும்தான்!

தேசிய தேர்வு முகமை இப்போது நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மிகவும் பொறுப்புணர்வோடு, நீங்கள் கட்டிய எக்ஸாம் பீஸைத் திரும்பத் தருகிறோம், என்று அறிவித்திருக்கிறது. என்னவொரு பெருந்தன்மை!

இரண்டு மூன்று வருடங்கள் தூக்கமில்லாமல், கோச்சிங் சென்டருக்குப் பல லட்சங்களை அழுதுவிட்டுப் படித்த மாணவனிடம், இந்தாப்பா உன் அப்ளிகேஷன் பீஸ், வச்சுக்கோ, என்று கொடுப்பது எவ்வளவு பெரிய நகைச்சுவை!

22 லட்சம் மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணமாக மட்டுமே ரூ.300 கோடி வசூலாகும். ஜேஇஇ எல்லாம் சேர்த்தால் வருஷத்துக்கு 800 கோடி ரூபாய் டர்ன்ஓவர் பார்க்கும் இந்த மாபெரும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு, சொந்தமாக ஒரு பிரிண்டிங் பிரஸ் கூட கிடையாதாம். கேள்வித்தாள் டைப் செய்வதில் இருந்து அதை அச்சிட்டு, பார்சல் கட்டி அனுப்புவது வரை நூறு கைகள் மாறுகிறதாம். பிறகு கசியாமல் என்ன செய்யும்?

போனால் போகிறது, ஜூன் 21இல் மறுதேர்வு நடத்தப்படும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.  அதுமட்டுமில்லாமல், அடுத்த வருஷத்தில இருந்து எல்லாமே கம்ப்யூட்டர் வழி ஆன்லைன் தேர்வுதான் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அங்கே ஹேக் செய்ய மாட்டார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை!

மாணவர்களுக்கு இருக்கும் மருத்துவ மோகத்தைப் பயன்படுத்தி, அவர்களைத் தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டே இருப்பதுதான் தற்போதைய கல்வி முறையின் உன்னத நோக்கம் போலும். இந்த லட்சணத்தில், இனியும் நீட் தேர்வு தொடரக் கூடாது என்று அறிவார்ந்த மக்கள் ஆசைப்படுகிறார்களாம்.

அறிவார்ந்த மக்கள் ஆசைப்படலாம். ஆனால் மாபியாக்களும், கோச்சிங் சென்டர்களும் அத்தனை சீக்கிரம் இந்தச் சுவாரசியமான விளையாட்டை நிறுத்த விடுவார்களா என்ன?

வரும் ஜூன் 21ஆம் தேதி வினாத்தாள் கசியுமா, அல்லது விடைத்தாள் மறையுமா என்பதைப் பார்க்க நாம் அனைவரும் ஆவலோடு காத்திருப்போம்!

*****

காக்கிச் சட்டையைக் கசாப்புக் கத்தியாக்கித் தமிழனைக் கர்ஜிக்க வைத்த பாசிசச் சீரழிவு!

சீரழித்த சினிமா – 6

சிங்கம்

காக்கிச் சட்டையைக் கசாப்புக் கத்தியாக்கித் 

தமிழனைக் கர்ஜிக்க வைத்த பாசிசச் சீரழிவு!

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் முடியும் தருவாயில், தமிழ் சினிமா தன் ஆகச்சிறந்த காட்டுமிராண்டித்தனமான பார்முலாவைக் கண்டறிந்தது. அதுதான் 2010இல் வெளியான சிங்கம். நாம் முன்பே பார்த்த சாமி என்ற திரைப்படத்தில் விதைக்கப்பட்ட போலீஸ் அராஜக நச்சை, இத்திரைப்படத்தில் இன்னும் கொஞ்சம் சத்தமாகவும், அதிவேகமாகவும், எக்கச்சக்கமான அலறல்களோடும் அப்டேட் செய்து கொடுத்தது கோடம்பாக்கத்து கமர்ஷியல் சினிமா பேக்டரி.

முறுக்கிய உடலும் மற்றும் மீசையும், காது ஜவ்வு கிழியும் பின்னணி இசையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் சிந்தனையை ஒரு மிருகத்தனமான வட்டத்திற்குள் சுருக்கியதுதான் சிங்கம் திரைப்படம் உருவாக்கிய அசிங்கச் சீரழிவு.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்ற இத்திரைப்படத்தின் வசனம் அறிவற்ற தசைகளின் போலிப் பெருமிதம். இப்போலிப் பெருமிதம் போலி ஆண்மையைத் தூண்டி விட்டுத் தமிழக இளைஞர்களைப் பித்துப் பிடித்து டன் கணக்கில் உளறச் செய்தது.

இத்திரைப்படம் தமிழர்களின் பொதுப்புத்தியில் ஏற்றிய ஆகச்சிறந்த தத்துவம் என்ன தெரியுமா? விவேகமும், சட்டப் புரிதலும், மனித உரிமைகளும் பலவீனமானவர்களுக்கானது. உண்மையான போலீஸ் அதிகாரிக்குத் தேவை அறிவு அல்ல, ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் எடையை உருவாக்கும் முரட்டுத் தசைகள் மட்டும்தான். அப்படித் தசைகளை மனிதர்களில் உருவாக்க முடியுமா என்ன? மனிதர்களை இன்னும் மேன்மையான மனிதர்களாக்குவதற்குப் பதிலாக, மனிதர்களை மிருகங்களாக மாற்ற முயற்சித்தது இத்திரைப்படம். டார்வினின் பார்வையில் சொன்னால் இது பின்னோக்கிய பரிணாம வளர்ச்சியாகும்.

இப்படத்தில் வரும் நாயகன், எதற்கெடுத்தாலும் கத்துவார், கையை ஓங்குவார், சட்டப் புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டுத் தன் சொந்தக் கைகளால் தீர்ப்பு வழங்குவார். ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் தன் கடமையைச் செய்வதற்கு முறையான வழிமுறைகள்  உண்டு. ஆனால், இத்திரைப்பட நாயகச் சிங்கமோ, நானே சட்டம், நானே நீதிபதி என்ற பாசிச மனோபாவத்திற்கு ஹீரோயிசம் என்ற போலி முலாம்பூசி கமர்ஷியல் ஹிட்டடித்தார்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் நடக்கும் லாக்அப் மரணங்களையும், மனித உரிமை மீறல்களையும் பார்த்துவிட்டு, நம்ம சிங்கம் சார் மாதிரி சும்மா அதிரடியா பண்றாங்கப்பா, என்று கைதட்டி ரசிக்கும் ஒரு மூர்க்கமான பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது ஆழமாக விதைத்தது.

படத்தில் வரும் வில்லனை அடக்க, நாயகச் சிங்கம் கையாளும் உத்திகள் எவையுமே சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல. நீதிமன்ற விசாரணையோ, முறையான சாட்சியங்களோ இல்லாமல், ஒரு குற்றவாளியைச் சுட்டுக் கொல்வதே ஆகச்சிறந்த கிளைமாக்ஸ் என்று இத்திரைப்படம் கொண்டாடியது.

ஒரு குற்றவாளிக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் திறமையான போலீஸின் லட்சணம். ஆனால், கொலைக்குக் கொலை, அராஜகத்திற்கு அராஜகம் செய்வதுதான் கெத்து என்று காட்டியதன் மூலம், சட்டத்தின் ஆட்சியை  இத்திரைப்படம் கேலிக்கூத்தாக்கியது.

இதன் சீரழிவு என்னவென்றால், நிஜ சமூகத்தில் காவல்துறையினர் தங்களின் கடமையிலிருந்து தவறி, அராஜகத்தில் ஈடுபடும்போது அதைக் கேள்வி கேட்கும் அறிவை இந்தச் சமூகம் மொத்தமாக இழந்தது. காவல்துறையை என்கவுண்ட்டர் கூலிப்படையாகச் சித்தரித்தது மனித உரிமைகளுடன் கூடிய நாகரிக ஜனநாயக முறைக்கு எதிராக ஒரு பாசிசவாதத்தை முன் வைத்தது.

படம் தொடங்கும்போதே நாயகன் தன் கிராமம், தன் மண், தன் குடும்பக் கௌரவம் என்று அதீதப் பாசம் காட்டுவார். தமிழ் சினிமாவில் கிராமத்துப் பாசம் என்ற லேபிளுக்குப் பின்னால் எப்பொழுதும் ஒளிந்திருப்பது ஒரு குறிப்பிட்ட சாதியப் பெருமிதமும், நிலப்பிரபுத்துவ மனோபாவமும்தான்.

படிப்பறிவோ, நவீன உலகப் புரிதலோ இல்லாத ஒரு முரட்டுத்தனமான கிராமியச் சூழலை ஆகச்சிறந்த பண்பாடாகக் காட்டி, நகரத்து நாகரிகத்தையும் சட்ட ஒழுங்கையும் மட்டம் தட்டுவதுதான் இந்தச் சிங்கத்தின் ராஜதந்திரம். இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வந்த இளைஞர்கள், உலகளாவிய சிந்தனைகளை நோக்கித் தங்களை வளர்த்துக்கொள்வதை விடுத்து, எங்க ஊரு கெத்து, எங்க மண் கெத்து என்று குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுருங்கிப் போவதைப் பெருமிதம் என்ற கருத ஆரம்பித்தார்கள். கிராமத்துப் பெருமை என்ற பெயரில் தூண்டப்பட்ட சாதியப் பொதுப்புத்தியை மறைமுகமாகத் தூக்கிப் பிடித்ததில் இத்திரைப்படத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

படத்தில் வரும் நாயகி, சென்னை போன்ற பெருநகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் ஒரு படித்த பெண். ஆனால், அவளுக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்ன? மீசையை முறுக்கிக் கொண்டு கத்தும் நாயகனின் பின்னால் அலைவது, அவனது முரட்டுத்தனத்தைக் கண்டு உருகிப் போவது, பாடல்களுக்குத் தகுந்தாற்போல் ஆடுவது மட்டும்தான்.

ஒரு பெண்ணின் சுயமரியாதை, அவளது கல்வி, அவளது ஆளுமை அனைத்தையும் ஒரு ஆணின் அதிகாரப் பிம்பத்திற்கு முன்னால் மண்டியிட வைப்பதுதான் தமிழ் கமர்சியல் சினிமாவின் வழக்கம். அதை இத்திரைப்படமும் மிக நேர்த்தியாகச் செய்து, பெண்களை வெறும் போகப் பொருளாகவும் பின்துணையாகவும் மட்டுமே பார்க்கும் ஆணாதிக்கப் புத்தியைத் தமிழர்களின் நெஞ்சில் இன்னும் ஆழமாகப் பதியவைத்தது.

சிங்கம் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் பின் மேலும் இரண்டு பாகங்களாக சிங்கம் 2, சிங்கம் 3 எனத் தமிழ்நாட்டைத் துவைத்து எடுத்தது, ஆனால், அழுக்குதான் போகவில்லை.

ஒரு முற்போக்குச் சமூகமாக மாற வேண்டிய தமிழர்களை இத்திரைப்படம் கொண்டு போய் நிறுத்திய இடம் எது தெரியுமா? ஸ்டைலிஷான காட்டுமிராண்டித்தன வெளி.

அறிவையும் மனிதநேயத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு சமூகத்தை, வெறும் கர்ஜனை, அதிரடி, என்கவுண்ட்டர் என்ற வன்முறைப் போதைக்கு அடிமையாக்கியதில், துரைசிங்கத்தின் அந்தச் சிங்க முத்திரை காக்கிச் சட்டைக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதுதான் இத்திரைப்படம் மற்றும் அதன் தொடர்ச்சியான மேலும் இரு பாகங்கள் குறித்த கசப்பான உண்மை!

*****