22 Mar 2025

நம்பியோர் நன்றாக இருந்ததில்லை! ஐந்து வருட தீர்ப்பு!

நம்பியோர் நன்றாக இருந்ததில்லை! ஐந்து வருட தீர்ப்பு!

“ஐயா அரச லிமிடெட் ஊழியர்கள் மற்றும் வாத்தியார்கள் வந்திருக்கிறார்கள்.”

“என்னவாம்?”

“எதாவது செய்ய வேண்டுமாம்.”

“நான்கு வருடத்தில் என்ன செய்திருக்கிறோம்.”

“ஒன்றுமில்லை.”

“பிறகு என்ன நம்பிக்கையில் வந்தார்களாம்?”

“ஐந்தாவது வருடத்திலாவது எதாவது

“நான்கு வருடமாக என்ன செய்தோமோ அதுதான் இந்த வருடத்திற்கும் என்று போய் சொல்லுங்கள்.”

“ஐயா”

“என்னய்யா அய்யா கொய்யாவென்று. ஆட்சியில் இருக்கும் வரை எப்போதும் இப்படித்தான் என்று போய்ச் சொல்லுங்கள். ஆட்சியில் இல்லாவிட்டால் வேண்டுமானால் கொடுப்பது பற்றிப் பரிசீலிப்போம் என்று சொல்லுங்கள்.”

*****

21 Mar 2025

புரிதல்

புரிதல்

உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்கிறாள் மனைவி.

உனக்குமா என்கிறேன்.

உனக்குமா என்றால் என்ன அர்த்தம் என்று முறைக்கிறாள்.

எனக்கும்தான் என்கிறேன்.

புன்முறுவல் பூக்கிறாள்.

*****

“என்னய்யா எழுதுகிறீர்கள். ஒன்று கூட புரிய மாட்டேன்கிறது.”

“உங்களுக்குமா?”

“எனக்கும்தான். என்ன செய்வது? ஒன்றாம் வகுப்பில் எழுத ஆரம்பித்த போது அதைப் பார்த்த ஆசிரியர் தலைதெறிக்க ஓடியவர்தான். அவரைப் பார்க்கும் பாக்கியமே இல்லாமல் போய் விட்டது. 

நீங்கள் பரவாயில்லை வாசித்துப் பார்த்திருக்கிறீர்கள். புரியாமல் போவதற்கு யார் என்ன செய்ய முடியும்? கடவுள் விட்ட வழி.

கடவுள் மேல் பாரத்தைப் போட்டு அடுத்த பத்திக்குச் செல்லுங்கள். அதுவாவது புரிகிறதா என்று பாருங்கள். இப்படியே போய்க் கொண்டிருங்கள். பத்து நாட்களுக்குள் பழகி விடும்.”

*****

எளிமையாக எழுதினால்

எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும்

என்றா நினைக்கிறீர்கள்

அது

எளிமையாகப் புரிந்து கொள்வதில் இருக்கிறது

எழுத்தாளர்களை எளிமையை நோக்கி

வரச் சொல்லக் கூடாது

வாசகர்கள்தான்

தங்களைச் சுலபமாக்கிக் கொள்ள வேண்டும்

*****

20 Mar 2025

நூற்றாண்டு தமிழ் சினிமா!

நூற்றாண்டு தமிழ் சினிமா!

அப்பன் ஆத்தாளுக்கு அடங்காத பிள்ளைகள் தமிழ் சினிமாவில் அதிகம்

அந்தப் பிள்ளைதான் கதை நாயகன்.

அந்த நாயகன் மீது அழகான பெண்ணுக்குக் காதல் வருவதுதான் தமிழ் சினிமா.

அந்தத் தமிழ் சினிமா இப்படி ஆரம்பித்து இப்படி தொடரும்.

செருப்பு பிய்ந்து விடும் என்பது முதல் வசனம்

பிய்ந்த செருப்பையா போட்டிருக்கிறாய் என்பது இரண்டாவது வசனம்

அதற்கு மேல் பாட்டு வந்து விடும், ஒட்டிக்கவா கட்டிக்கவா என்று

ஏது பிய்ந்த செருப்பையா என்று புலம்பிக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

*****

19 Mar 2025

சிங்கத்திற்கு நேர்ந்த அசிங்கம் – நவீன பஞ்ச தந்திரக் கதை

சிங்கத்திற்கு நேர்ந்த அசிங்கம் – நவீன பஞ்ச தந்திரக் கதை

ஒரு சிங்கத்தின் போதாத காலம்.

பேச்சாளனைக் கொன்று தின்ன பார்த்தது.

கடைசி ஆசையென அந்தப் பேச்சாளன் அதனிடம் ஒரு மணி நேரம் பேச அனுமதி கேட்டான்.

தொலைந்து போகிறான் என சிங்கமும் அனுமதித்தது. அதுதான் அதன் போதாத காலம்.

பேச்சாளன் பேச ஆரம்பித்தான்.

பத்து நிமிடத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மண்டையைப் போட்டது சிங்கம்.

இதிலிருந்து அறியப்படும் நீதி :

ஒருவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முயலும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உயிர்போகும் அளவுக்கு அவஸ்தையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில நேரங்களில் உயிரும் போனாலும் போய் விடும்.

*****

18 Mar 2025

விண்ணை முட்டிய மரங்களின் ஆர்ப்பாட்ட முழக்கம்!

விண்ணை முட்டிய மரங்களின் ஆர்ப்பாட்ட முழக்கம்!

நல்ல வெயில்.

சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.

அவ்வளவு வெப்பத்தையும் பாவம் காலணி வாங்கிக் கொண்டு வெந்து போய் துடித்துக் கொண்டிருந்தது. காலணியை நினைக்கப் பாவமாக இருந்தது.  அடுத்த முறையாவது காலணிக்கு ஒரு காலணி வாங்கிப் போட வேண்டும். பாவம் அதுதான் எத்தனை நாட்கள் வெயிலிலேயே நடந்து கொண்டிருக்கும்?

தாளாத வெயிலிலும் சாலையோரம் இருந்த மரங்கள் பச்சையத்தைப் பயன்படுத்தி, சூரிய வெப்பம் வீணாகாதவாறு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தன.

நூறு நாள் வேலையைப் பத்து நிமிடம் பார்த்த அசதியில் வீரதீரப் பணியாளர்கள் மரங்களின் அடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கான மதிய உணவை குப்ளான் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்களைப் பயன்படுத்தி திரவாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி – இண்டேன் பிரிவு) வீணாகாத வண்ணம் ஒண்டியப்பன் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர் நஞ்சப்ப தம்புரான் தயாரித்துக் கொண்டிருந்தார்.

திடீரென மரங்களின் அடியில் தங்கள் கடமையை இம்மிப் பிசகாமல் செய்து கொண்டிருந்த முன்களப் பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சாலையோரங்களில் இருந்த மரங்கள் நடுசாலையில் நகர்ந்து வந்து சாலை மறியல் செய்து கொண்டிருந்தன.

எங்களுக்கும் விலையில்லா உணவுப்பொருள் வழங்க வேண்டும். மரங்களின் முழக்கம் விண்ணை முட்டியது.

*****

17 Mar 2025

வீரப்ப தக்கம்!

வீரப்ப தக்கம்!

சப்பாத்தி எப்படி என்கிறாள் மனைவி.

நன்றாக இல்லை என்றா சொல்ல முடியும்.

பிரமாதம் என்கிறேன்.

இன்னொரு சப்பாத்தி வந்து விழுகிறது தட்டில்.

இப்படியாகத் தலையில் வந்து விழ வேண்டிய சப்பாத்தி அல்லது பூரிக் கட்டையிலிருந்து தப்பிக்கிறேன்.

பர்மிய ராணுவம் என் வீர தீர சாகசச் செயலுக்காக மார்பில் வீரப்பதக்கம் அணிவிக்கிறார்கள்.

அவ்வபோது தூக்கம் வராத இரவுகளில் அந்த வீரப்பதக்கத்தை ரகசியமாக எடுத்துப் பார்த்து கொண்டு சந்தோசப்படுகிறேன்.

இன்னும் தூங்கவில்லையா என்ற மனைவியின் அதட்டல் கேட்கிறது.

கனவில் விழித்து விட்டேன் என்று பணிவுடன் தூங்கத் தயாராகிறேன்.

கொசு ஒன்று கடித்துக் குதறி விட்டுப் போகிறது.

ஓசைபடமால் ஒரு கையில் அடித்ததில் ரத்தம் கக்சிச் சாகிறது கொசு.

கொசுவுக்கு வீர மரணம்.

அடுத்த வீரப்ப தக்கம் கொசுவுக்குத்தான்.

அட வீரப்ப தக்கம் தெரியாதா உங்களுக்கு?

வீரப்பதக்கம் என்பதை வீரப்பதக்கம் என்றும் சொல்லாம், வீரப்ப தக்கம் என்றும் சொல்லாம்.

*****

16 Mar 2025

மழையைக் கண்டு ஓடும் மனிதர்கள்!

மழையைக் கண்டு ஓடும் மனிதர்கள்!

மழையென்பது என்ன?

தண்ணீர்த் துளிகளின் கூட்டம்.

கூட்டமாக வந்தால் மதிப்பு இருக்கிறது.

மழையைப் பார்த்த்தும் மக்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

சாலையில் ஓடிய மக்களை விரட்டி விட்டு, இப்போது மழைநீர் ஓடுகிறது.

இன்னும் கொஞ்சம் தண்ணீர்க் கூட்டம் ஜாஸ்தி என்றால் அதை வெள்ளம் என்கிறார்கள்.

தண்ணீர்த் துளிகளின் வெள்ளக் கூட்டம் வீடு தேடி வந்தால் மக்கள் வீட்டை விட்டே ஓடுகிறார்கள்.

படகுகளில் ஏறி தண்ணீர் கூட்டத்தின் தலை மேல் சவாரி செய்து, தண்ணீர் கூட்டம் தட்டுப்படாத மேட்டுப்பகுதிக்கு ஓடுகிறார்கள்.

நாம் கடலுக்குப் பயப்படுவதேன்? அங்கு தண்ணீர் துளிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

ஏரியிலும் குளத்திலும் கூட தண்ணீர் துளிகளின் கூட்டம் உள்ளது.

கூட்டம் என்றாலே மானுட சமூகத்துக்குப் பயம் உள்ளது.

அதனால்தான் தண்ணீர்த் துளிகளின் கூட்டத்தைக் குறைத்துத் தம்பளரிலோ, கூஜாவிலோ வைத்துப் பருகுகிறோம். அதில் ஓர் ஆனந்தம். “மழையாய், வெள்ளமாய் வந்து பயமுறுத்தல் செய்தாயே! பார்த்தாயா இப்போது உன்னைச் சீசாவில் அடைத்து விழுங்குகிறேன்” என்று.

தலைக்கு மேல் தண்ணீர்த் துளிகளின் கூட்டம் போனால் சாணென்ன? முழமென்ன? என்பாள் என் எள்ளுப் பாட்டி, கொள்ளுப்பாட்டிக் காலத்திலிருந்து தற்போது உள்ள பாட்டி வரை.

ஊழிக்காலம் என்பது தண்ணீர்த் துளிகளின் பெருங்கூட்டம் என்கிறார்கள். அந்தக் கூட்டம் வரும் போது அதற்குள் மானுட சமூகத்தின் கூட்டம் அடங்கிப் போய் விடுமாம்.

நிலவுக்கோ, பிற கிரகத்துக்கோ ஊழிக்காலம் வரப்போவதில்லை. அங்கு தண்ணீர் இல்லை.

இந்தத் தண்ணீர்த் துளிகளின் புரட்சிக் கூட்டத்தை எதிர்த்துதான் கருப்புக் குடை பிடித்து சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தண்ணீர்த் துளிகளின் கூட்டம் காற்றோடு கூட்டணி சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றோடு கூட்டணி அமைந்து விட்டால் வானிலை ஆய்வு மையம்தான் அந்தக் கூட்டணி குறித்த கருத்துக் கணிப்புகளைக் கூற முடியும்.

காற்றோடு கூட்டணி அமைக்கும் தண்ணீர்த்துளிகளின் கூட்டணிக்குப் புயல், சூறாவளி என பல நாமகரணங்கள்.

ராணுவம், துப்பாக்கிகள், பீரங்கிகள் இருந்தாலும் காற்று மற்றும் தண்ணீர்த் துளிகளின் கூட்டணிக்கு அடிபணியத்தான் வேண்டியிருக்கிறது. பேரிடர் மீட்புப் படை என்று வைத்திருக்கிறோமே, அதைக் கொண்டு துப்பாக்கிச் சூட்டையெல்லாம் நடத்தி விட முடியாது.

தண்ணீர்த்துளிகளின் கூட்டம் மிகுந்த ஜனநாயகத் தன்மையோடு அகிம்சை வழிமுறையோடு போராடும். அதன் போராட்டத்துக்கு ஒதுங்கிச் செல்வது அல்லது விலகி ஓடுவதுதான் நல்லது.

நம்மை விட வலிமை குறைந்த்து என்றாலும் மீன்கள் தண்ணீர்த்துளிகளின் கூட்டத்தைச் சமாளிக்கும். மீனுக்கு இருக்கும் கொடுப்பினை மனிதப் பிறவிகளுக்கு இல்லை.  

தண்ணீர்த்துளிகளின் கூட்டம் மீன்களைத் தன்னுடைய பிரஜையாகச் சேர்த்துக் கொள்கிறது. மனிதர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. மனிதன் பாவம். கோபம் வந்தால் ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து அகந்தையை அகற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் பிரியாவிட்டால் டயாலிஸிஸ் என்பதெல்லாம் ரொம்ப கஷ்டம்.

*****

நம்பியோர் நன்றாக இருந்ததில்லை! ஐந்து வருட தீர்ப்பு!

நம்பியோர் நன்றாக இருந்ததில்லை! ஐந்து வருட தீர்ப்பு! “ஐயா அரச லிமிடெட் ஊழியர்கள் மற்றும் வாத்தியார்கள் வந்திருக்கிறார்கள்.” “என்னவாம்?” ...