22 Apr 2026

குடிமக்கள் Pass ஆகி Boss ஆக…

குடிமக்கள் Pass ஆகி Boss ஆக…

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்துபோன குழந்தையைத் தேடுவது சுலபம். ஒரு மைக்கில் காபி கலர் சட்டை போட்ட பாப்பா, ஐஸ்கிரீம் கடை அருகே நிற்கிறது என்று சொன்னால் போதும், பெற்றோர் ஓடி வந்துவிடுவார்கள். ஆனால், இந்தத் தேர்தல் திருவிழாவில் குடிமக்கள் தொலைந்து போவதுதான் பெரும் சோகம்.

இங்கே ஜனங்கள் இருக்கிறார்கள், ஆனால் குடிமக்கள் எங்கே? ஜுராசிக் பூங்கா டைனோசர்கள் போல அவர்கள் ஒரு கற்பனை உயிரினமாக மாறிவிட்டார்கள் போலிருக்கிறது.

நமது அரசமைப்பின் முகவுரையானது இந்திய மக்களாகிய நாம் என்று சிறப்பாகத் தொடங்குகிறது. நாங்கள்தான் பாஸ் எல்லாம் என்பதுதான் இதன் ஒன் லைன் சம்மரி. ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இந்த வரியின் அர்த்தம் புரியாமலேயே நாம் காலத்தைக் கடத்திவிட்டோம்.

சட்டம் என்ன நினைத்தது? வெகுமக்களைக் குடிமக்களாக மாற்றுவோம் என்று ஆசைப்பட்டது. ஆனால், நடைமுறை என்ன செய்திருக்கிறது? அவர்களை வெறும் ஓட்டு போடும் வாக்காளர்களாகச் சுருக்கி, இப்போது இலவசங்களுக்கு ஏங்கும் பயனாளிகளாகத் தரம் குறைத்திருக்கிறது.

அரசியல் கட்சிகள் இப்போது ஜனநாயக அமைப்புகள் அல்ல, அவை ஒருவிதமான வழிபாட்டுத் தலங்கள். அங்கே கொள்கை, லட்சியம் போன்றவற்றை எல்லாம் பழைய பேப்பரில் கூடத் தேடிப் பிடிக்க முடியாது. அங்கே இருப்பது தலைவர் வழிபாடு மட்டும்தான்.

மக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அரசியல் கட்சிகள் அல்ல, அரசியல் கட்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மக்கள். ஆனால், இப்போது வண்டி மாட்டை ஓட்டுவதில்லை, மாடு வண்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறது.

ஜனநாயகம் என்பது மக்களின் குரல் ஒலிக்கும் இடமாக இருக்க வேண்டும். எதிர்ப்புத் தெரிவிக்கவும் அனுமதி இருக்க வேண்டும். ஆனால், ஜனநாயகம் என்பது இப்போது சைலண்ட் மோடில் போடப்பட்ட செல்போன் போல அதிர்ந்து கொண்டே இருக்கிறது, சத்தம் வெளியே கேட்பதில்லை.

எல்லாம் போச்சு என்று ஒப்பாரி வைப்பவர்களுக்கு நடுவில், டிஜிட்டல் உலகம் ஒரு சின்ன நம்பிக்கையைத் தருகிறது. இது ஒரு மாயக் கண்ணாடி போல. தில்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்து, பக்கத்து வீட்டுப் போர் வரை எல்லாவற்றையும் இது ஒருங்கிணைக்கிறது.

அரசியல்வாதிகள் இதை வாட்ஸ்அப் பார்வேர்டு செய்யப் பயன்படுத்துகிறார்கள். நாமோ இதை வாட்ஸ்அப் விசாரணை செய்யப் பயன்படுத்தலாம். நம்மிடம் மூன்று பிரம்மாண்ட ஆயுதங்கள் உள்ளன.

அவையாவன, என் காசு என்னாச்சு? எனக் கேட்க தகவல் உரிமைச் சட்டம், வேலை ஒழுங்கா நடந்ததா? எனப் பார்க்க சமூகத் தணிக்கை, நீதிமன்றக் கதவைத் தட்ட, பொதுநல வழக்குகள்.

ஆயுதம் இருந்தால் மட்டும் போதாது, அதை அன்லாக் செய்யத் தெரிய வேண்டும். இதற்கு இளைய தலைமுறைக்குக் கொஞ்சம் பயிற்சியும், நிறையத் துணிச்சலும் தேவை.

இலங்கையில் நடந்தது ஒரு சான்று. அங்கே ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தவர்கள் வெறும் கட்சி ஆட்கள் மட்டுமல்ல, சிவில் சமூகத்தைச் சேர்ந்த சாமானியர்களும்தான்.

தேர்தல் என்பது ஐந்து வருஷத்துக்கு ஒருமுறை விரலில் மை வைக்கும் சடங்கு மட்டுமல்ல. ஓட்டுப் போட்டதுடன் கடமை முடிந்தது என்று நினைப்பது, கல்யாணம் ஆனதும் வாழ்க்கை முடிந்தது என்று நினைப்பதற்குச் சமம்.

உண்மையான ஜனநாயகம் என்பது கண்காணிப்பதில் இருக்கிறது. ஏமாற்றுவதில் பிஹெச்டி முடித்தவர்களைக் கண்காணிக்க, நாமும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக மாற வேண்டும். அப்போதுதான், காணாமல் போன அந்த இந்தியக் குடிமகனை நாம் பேப்பர் விளம்பரம் இல்லாமலேயே கண்டுபிடிக்க முடியும்! பணநாயகம் மாறி ஜனநாயகம் விடியும்!

இப்போது நோட்டை வாங்காமல் ஓட்டைப் போட்டு, அதன் பிறகு ஓட்டுப் போடப்பட்டவர்களை விடாமல் நோட் பண்ணிக் கொண்டிருந்தால், ஜனநாயகத்தில் குடிமக்கள் Pass ஆவது மட்டுமல்ல, எப்போதும் Boss ஆகவே இருப்பார்கள்.

*****

ஜனநாயகக் கடமையும் கதவு இல்லாத கழிவறைகளும்!

ஜனநாயகக் கடமையும் கதவு இல்லாத கழிப்பறைகளும்!

நமது நாட்டில் தேர்தல் என்பது ஒரு திருவிழா என்கிறார்கள். திருவிழா என்றால் அங்கே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இருக்க வேண்டும். ஆனால், இந்தத் திருவிழாவை முன்னின்று நடத்தும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இது ஒரு கட்டாயக் கலைநிகழ்ச்சி போலத்தான் இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த 1,302 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்குச் சராசரியாக ஐந்தரை கோடி ரூபாய். இவ்வளவு பணம் இருந்தும், தேர்தல் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு பல இடங்களில் ஒழுங்கான கழிவறை மற்றும் குளியலறை வசதி கூட கிட்டுவதில்லை என்பதுதான் இந்த டிஜிட்டல் இந்தியாவின் ஆகச்சிறந்த நகைச்சுவை.

ஏன் இந்தக் கழிவறை மற்றும் குளியலறை வசதி குறித்துக் குறிப்பிட்டுப் பேச வேண்டியிருக்கிறது என்றால், தற்போதைய தேர்தல் பணியில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள்.

தேர்தலுக்கு முதல் நாளே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்குச் சென்று தங்க வேண்டும். அது பெரும்பாலும் ஒரு கிராமத்துத் தொடக்கப் பள்ளியாக இருக்கும். அங்கே இருக்கும் கழிப்பறைகள் எல்.கே.ஜி குழந்தைகளுக்கு ஏற்ற அளவில் இருக்குமே தவிர, வளர்ந்த மனிதர்களுக்கு அல்ல.

ஆண்கள் எப்படியோ சமாளித்து விடுவார்கள். திறந்தவெளி அவர்களுக்கு உதவலாம். ஆனால், பெண்கள் அதிகாலையில் இயற்கை உபாதைகளுக்காகவும், குளிப்பதற்கும் பக்கத்து வீடுகளில் தஞ்சம் புக வேண்டியிருக்கிறது. ஜனநாயகத்தின் தூண்கள், அக்கம் பக்கத்து வீடுகளில் குளிப்பதற்கு அனுமதி கேட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

தேர்தல் ஆணையம் ஒரு விஷயத்தில் மிகக் கவனமாக இருக்கிறது. எந்த ஊழியருக்கு எந்த வாக்குச்சாவடி என்று கடைசி நிமிடம் வரை சொல்வதில்லை. இது எதற்கு என்றால் முறைகேடுகளைத் தடுக்க! நியாயமான காரணம்தான்.

ஆனால், கிளைமாக்ஸ் எப்படி இருக்கிறது என்றால், திடீரென ஒரு மலைக் கிராமத்தையோ அல்லது பேருந்து வசதியே இல்லாத குக்கிராமத்தையோ ஒதுக்கும் போது, எப்படியோ பெண் வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்த டார்கெட்டை ரீச்சாக வேண்டும். அதை ரீச் செய்வது என்பது ஹைட் அன்ட் சீக் ஒளிந்து விளையாடும் விளையாட்டு போலவே இருக்கும். இந்த முறை அந்த விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூகுள் மேப் வரை போட்டுக் கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

வாக்குச்சாவடியை அடைந்த பிறகு, அங்கு முதல் நாள் ஏற்பாடுகளை முடித்து விட்டு, மறுநாள் அதாவது தேர்தல் நாளன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இல்லாமல் வேலை செய்ய வேண்டும். பிறகு பெட்டிகள் எடுக்கும் வரை காத்திருந்து அந்த ஊருக்கு பை பை சொல்லி விட்டு விடைபெற வேண்டும். அதுவரை பெண்கள், அதுவரை பார்த்தறியாக அந்தப் பகுதியில், சரியான கழிவறை வசதி இல்லாமல் போனால், தங்கள் இயற்கை உபாதைகளோடு ஈடுகொடுத்து நின்றாக வேண்டும்.

தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு செய்கிறது. இந்த முறை தேர்தல் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்விலும் இருக்கிறது.

1,302 கோடி ரூபாயில் ஒரு சில ஆயிரம் ரூபாய்களைக் கொஞ்சம் தண்ணீர் வசதிக்கும், கழிப்பறைக்கும் செலவு செய்யும் போது ஜனநாயகம் நன்றாகவே இருக்கும். அந்தக் கிராமத்து வாக்குச்சாவடிகளான பள்ளிகளும் கொஞ்சம் அடிப்படை வசதிகள் பெறும்.

இந்த முறை அப்படியான மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றம் எப்படி இருந்தது என்பது பெண் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணி முடித்து விட்டு வரும் போதுதான் தெரிய வரும்.

*****

21 Apr 2026

எஜமானர்களின் அடிமைகள் – நிலை மாறுமா?!

எஜமானர்களின் அடிமைகள் – நிலை மாறுமா?!

நாம் எல்லோரும் ஓர் அழகான கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதன் பெயர் ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம் என்றால், ஆள்பவர்கள் நம் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும், காதலியைப் போல! போலீஸை வைத்து நம்மை மிரட்டக் கூடாது, நம்மை ஏஜெண்டுகளை வைத்துச் சுரண்டக் கூடாது. இதைக் கேட்கவே எவ்வளவு கியூட் ஆக இருக்கிறது?

ஆனால், நிஜத்தில் நாம் ஒரு வினோதமான அடிமைத்தனத்தில் இருக்கிறோம். வெள்ளையர்கள் வெளியேறிவிட்டார்கள், ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற எஜமானர் மனோபாவம் இன்னும் இங்கேயே தங்கிவிட்டது.

நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறோம், ஆனால் உளவியல் ரீதியாக இன்னும் அந்த பழைய அடிமைச்சங்கிலியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அரசியல்வாதிகள் தங்களை நம் சேவகர்களாகக் காட்டிக்கொள்வார்கள், ஆனால் பதவியில் அமர்ந்ததும் ஜமீன்தார்கள் போல கட் அவுட் வைப்பார்கள்.

மக்கள் எப்போதுமே உலகெங்கும் அறியாமையில் இருப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், அரசாங்கம் என்பது மக்களுக்குப் பக்கத்தில், மிக எளிமையாக இருக்க வேண்டும் என்று அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள்.

நிர்வாகம் பெரிதாகப் பெரிதாக, ஜனநாயகம் நம்மிடமிருந்து விலகி எங்கோ சென்னையிலோ அல்லது டெல்லியிலோ அல்லது கோட்டையிலோ ஒளிந்துகொள்ளும். பிறகு அங்கே போகவே நமக்கு அச்சமாக இருக்கும். ஒரு சின்ன மனு கொடுக்கக்கூட நாம் பத்து தடவை குனிய வேண்டியிருக்கும்.

டெல்லி என்பது பலருக்கு வெறும் ஒரு பெயர்தான். அது எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது என்று எளிய மக்களுக்குத் தெரியவே தெரியாது.

அரசாங்கம் தூரத்தில் இருந்தால் அது அதிகாரம் காட்டும். அருகில் இருந்தால் அது அன்பைக் காட்டும். ஆனால், நமக்கு எப்போதுமே தூரத்துப் பச்சைதான் பிடிக்கிறது!

மக்களாட்சியில் நடக்கும் எல்லாத் தப்பிற்கும் காரணம் நாம்தான். ஆம், நம்முடைய சகிப்புத்தன்மைதான் எல்லா அக்கிரமங்களுக்கும் ஆக்ஸிஜன் கொடுக்கிறது.

இப்போது உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். தேர்தலில் நாம் வாக்களிக்கும் கட்சி நமக்குச் செவி சாய்க்குமா? நம்மை மரியாதையுடன் நடத்துமா? அடிப்படை வசதிகளை ஒழுங்காகச் செய்து கொடுக்குமா? பதில் இல்லை என்றால், நாம் இன்னும் மன்னராட்சிக் காலத்திலேயே தூங்கிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

நிஜமான அதிகாரம் என்பது கோட்டையில் இல்லை, அது உங்கள் தெருமுனையில்  இருக்க வேண்டும். உண்மையான ஜனநாயகம் என்பது மக்களுக்குக் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் ஓர் அமைப்பு. அங்கேதான் பெண்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் நிஜமான பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

ஆக, ஜனநாயகம் என்பது ஏதோ ஒரு பெரிய நிறுவனம் அல்ல, அது நம் கலாசாரமாக மாற வேண்டும். அதன்படி, அரசாங்கத்துக்குக் கொஞ்சம் மனிதாபிமானம் வர வேண்டும். இது கொஞ்சம் கஷ்டம்தான், இருந்தாலும் நாம் ஆசைப்படலாம்.

அடித்தட்டு மக்கள் அச்சம் நீங்கி, அதிகாரத்தில் பங்கெடுக்காத வரை, ஜனநாயகம் என்பது சர்வாதிகாரிகள் போட்டுக்கொள்ளும் ஒரு ரேமண்ட் கோட் மட்டுமே. கோட்டுகளே கோட்டைகளை ஆண்டு கொண்டிருந்தால் எப்படி? நம் கோவணங்களுக்கும் அங்கே குரல் இருக்க வேண்டும்.

அந்தக் குரலுக்கு ஓர் ஆதார சுருதிதான் ஓட்டு. அந்த ஓட்டுக்கு நோட்டை வாங்கினால் அந்தக் குரல் கம்மி விடும். நீங்கள் எஜமானர்களின் அடிமைகள்தான் என்பது நிரூபணமாகி விடும்.

நீங்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் குரல்வளையைக் காத்துக் கொள்ளுங்கள் மக்களே!

*****

குடவோலை முதல் ஓசி குக்கர் வரை – ஒரு பரிணாம வளர்ச்சி!

குடவோலை முதல் ஓசி குக்கர் வரை – ஒரு பரிணாம வளர்ச்சி!

தேர்தல் நடத்துவதில் உலகிற்கே தமிழர்கள்தான் முன்னோடி என்பதற்கு ஆயிரம் வருட பழைய குடவோலை முறையைச் சான்றாக வைத்திருக்கிறோம். உத்தரமேரூர் கல்வெட்டுகள் தமிழர்களை நெஞ்சை நிமிர்த்த வைக்கின்றன.

அன்று ஒருவர் தேர்தலில் நிற்க வேண்டுமானால் வரி கட்டியிருக்க வேண்டும், நன்னடத்தை உள்ளவராக இருக்க வேண்டும், மிக முக்கியமாக நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள். அது சோழர்கள் காலம். இது அமைதிப்படை நாகராஜ சோழர்களின் காலம்.

இன்று நிபந்தனைகள் எல்லாம் அப்டேட் ஆகிவிட்டன. இன்று நீங்கள் வரி செலுத்த வேண்டாம், நன்னடத்தை உள்ளவராக இருக்க வேண்டாம், நேர்மையாளராக இருக்க வேண்டாம். திரையில் நான்கு பேரை உதைத்து பஞ்ச் பேசத் தெரிந்தால் போதும் அல்லது ஜாதி, மதம், பணம் எனும் புனிதப் பொக்கிஷங்களை கையில் வைத்திருந்தால் போதும். கட்டப்பஞ்சாயத்துப் பண்ணத் தெரிந்தால் போதும். ஜனநாயகம் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கும்.

தேர்தல் அறிக்கை என்பது ஒரு காலத்தில் கொள்கை விளக்கக் குறிப்பாக இருந்தது.

விவசாயிகள் நலன், தொழிலாளர்கள் நலன், சமதர்மம், சமத்துவம், பெண்களுக்கு முன்னுரிமை என்று அன்று சீரியஸாக தேர்தல் அறிக்கைகளை எழுதினார்கள். நிஜமாகவே அது ஒரு ஜனநாயகக் காலம்.

ஐந்தாண்டுத் திட்டங்கள், ஏழ்மை ஒழிப்பு, பொதுத்துறை வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, தன்னிறைவு என்று கனவுகள் எல்லாம் தேர்தல் அறிக்கைகளுக்கு இருந்தன. அந்தக் கனவுகள் இன்றும் கனவுகளாகவே இருப்பது தனிச்சிறப்பு.

ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற தேர்தல் அறிக்கைத்தான் அதுவரை இருந்த அனைத்து அறிக்கைகளையும் புரட்டிப் போட்ட புரட்சி அறிக்கை. மக்களின் வயிற்றுக்கும் அரசியலுக்கும் உள்ள நேரடித் தொடர்பை மிகச்சரியாகக் கண்டுபிடித்த புள்ளி அதுதான்.

அதன்பிறகு வந்த தேர்தல் அறிக்கைகள் எல்லாம் மெல்ல மெல்ல ஒரு ஷாப்பிங் லிஸ்ட் போல மாறின.

வீட்டுக்கு ஒரு டிவி பார்த்தால் அறிவு வளரும் என்று நம்பப்பட்டு, இலவச டிவி எனும் வாக்குறுதி தேர்தல் அறிக்கையைப் படமாகவே ஓட விட்டது. சீரியல் பார்த்து மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நம்பிய தேர்தல் அறிக்கையோ அது என்னவோ?

படிப்படியாக மடிக்கணினி முதல் மின்விசிறி வரை ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்குத் தேவையான அத்தனையையும் வாக்குறுதிப் பட்டியலில் கொண்டு வந்தார்கள் தேர்தல் வாக்குறுதிக்காரர்கள். இப்போது ப்ரிட்ஜ் வரை வந்து வருங்காலத்தில் ஏசி வரை முன்னேறும் போல வாக்குறுதிகள்.

இலவசப் பேருந்துப் பயணம், இலவச சைக்கிள், இலவச மின்சாரம் போன்றவை ஒருபுறம் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்தாலும், தேர்தல் அறிக்கை என்பது இப்போது யார் அதிகப்படியாகக் கொடுப்பார்கள்? என்கிற ஏலப் பட்டியலாகிவிட்டது.

கட்சிகளும் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் போட்டிப் போட்டுக் கொண்டு பார்முலா ஒன் கார் ரேஸ் பந்தயத்தையே நடத்துகின்றன.

அன்று தமிழகத்தில் கொடுக்கப்படும் இலவசங்களைக் கேலி செய்த தேசியக் கட்சிகள், இன்று பிற மாநிலங்களில் அதைவிடப் பெரிய கேஷ்பேக் ஆஃபர்களை அறிவிக்கின்றன.

ஆக இவையெல்லாம் தேவையில்லையா என்பதை விட கேள்வி இதுதான். கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, அதற்காக லட்சங்களை செலவழிக்க வைத்து விட்டு, மாதம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாயைத் கையில் திணிப்பது எப்படிபட்டக் கணக்கு?

அதுதான் தெரியவில்லை என்கிறீர்களா? அதுதான் நம் பிரச்சனையே.

பின்தங்கிய மக்களை முன்னேற்றச் சலுகைகள் தேவைதான், மறுப்பதற்கில்லை. ஆனால், தரமான இலவசக் கல்வியும், இலவச மருத்துவமும் கொடுக்க வேண்டிய ஆட்சிகள், அதற்குப் பதில் டிப்ஸ் போன்ற ஒரு தொகையை தந்து விட்டு, மீதி எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கை கழுவுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்.

இப்போது வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். என்ன நடந்திருக்கிறது?

பழங்காலத்தில் குடத்தில் ஓட்டுப் போட்டோம். இன்று ஓட்டுப் போட குக்கர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். வளர்ச்சி என்பது இதுதான் போலிருக்கிறது!

*****

தேர்தல் அரசியல் – ஒரு காஸ்ட்லி திருவிழா!

தேர்தல் அரசியல் – ஒரு காஸ்ட்லி திருவிழா!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்நாட்டில் ஒருவிதமான ஹார்மோன் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டால் போதும், தெருவெங்கும் வேட்பாளர்கள் பல்லைக் காட்டியபடி உங்கள் கைகளைப் பிடித்துக் குலுக்க அலைவார்கள். ஆனால், இந்தத் தரையிறங்கிச் செய்யும் வேலையை விட, உங்கள் தலைக்குள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் போலத் தகவல்களை ஏற்றும் வேலையை ஊடகங்கள்தான் கச்சிதமாகச் செய்கின்றன.

அகில இந்திய அளவில் பார்த்தால் தேர்தல் ஹாட் வேவ்ஸில் தொலைக்காட்சிதான் முதலிடம், பத்திரிகை இரண்டாம் இடம், ரேடியோ மூன்றாவது இடம். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு விசேஷம் உண்டு. இந்திய சராசரியை விட நாம் இந்த ஊடகங்களை இரண்டு மடங்கு அதிகமாகப் பயன்படுத்துகிறோம். அதாவது, மற்றவர்கள் ஒரு முறை செய்தியைப் பார்த்தால், நாம் இரண்டு முறை பார்த்துவிட்டு, அதில் மூன்றாவதாக ஒரு உள்நோக்கத்தையும் தேடிக் கண்டுபிடிப்போம்.

முன்பெல்லாம் தேர்தல் காலங்களில் தூர்தர்ஷனில் அரசியல் தலைவர்கள் வந்து உட்கார்ந்து, ஸ்கிரிப்ட் வாசித்துவிட்டுப் போவார்கள். அது ஒரு பிளாக் அண்ட் ஒயிட் காலத்து அமைதிப் புரட்சி. ஆனால் இப்போது அப்படியல்ல, தனியார் சேனல்களும், எப்.எம் ரேடியோக்களும் தேர்தல் காலத்தைச் சில ஆயிரம் கோடிகளுக்கான அறுவடைக்காலமாக மாற்றியிருக்கின்றன.

2021இல் மெதுவாக எட்டிப்பார்த்த டிஜிட்டல் பிரசாரம், 2024இல் விஸ்வரூபம் எடுத்து, இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் நம் போன் திரையையே கிழித்துக்கொண்டு வெளியே வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

யூடியூப் ஒரு பக்கம் இருக்கட்டும், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் தமிழர்களாகிய நாம் அகில இந்தியாவையே ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறோம்.

விளம்பரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் காட்டிவிட முடியாது. தேர்தல் ஆணையத்திடம் அனுமதிச் சான்றிதழ் வாங்க வேண்டும். தனிநபர் தாக்குதல், ஆபாசம், வன்முறை போன்ற மசாலாக்கள் இருந்தால் கமிஷன் கத்திரிக்கோல் போடும்.

அதற்குட்பட்டு, அதன்படி ஒவ்வொரு கட்சியும் தேர்தல் முடிந்ததும், நாங்கள் இவ்வளவுதான் அட்வர்டைஸ்மென்ட் செலவு செய்தோம், என்று ஒரு பட்டியலைத் தரும். அது நம்பினால் நம்புங்கள் ரகம்தான் என்றாலும் அந்தச் செலவுத்தொகையே உங்களை மயங்கடிக்கும்.

இந்தச் செலவு கணக்குகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று நீங்கள் யோசித்தால், உங்கள் அரசியல் அறிவு அபாரமானது!

ஆட்சிகள் மாறலாம், ஊடகங்கள் மாறலாம், ஆனால் விளம்பரங்களுக்காகக் கொட்டப்படும் கோடிகள் மட்டும் ஒவ்வொரு முறையும் வீக்கம் கண்டு கொண்டே இருக்கின்றன.

நாம் அந்த விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, மீண்டும் அதே மிக்ஸி, கிரைண்டர், ப்ரிட்ஜ், உரிமைத்தொகை, விலையில்லா கூப்பன் என வாக்குறுதி சுழற்சிக்குள் சிக்கிக்கொள்கிறோம்.

அடுத்தமுறை உங்கள் போனில் ஒரு விளம்பரம் வரும்போது, அதன் ஓரத்தில் இருக்கும் அனுமதி எண்ணைப் பாருங்கள். அது வெறும் எண் அல்ல, அது அந்த விளம்பரத்திற்காகச் செலவழிக்கப்பட்ட உங்கள் உரிமையின் விலைப்புள்ளி. உங்கள் காசை எடுத்து உங்களுக்கே வைக்கப்பட்ட சூன்யம் அது என்பதைப் புரிந்து கொண்டால், ஜனங்களும் தப்பித்துக் கொள்வார்கள். ஜனநாயகமும் தப்பித்துக் கொள்ளும்.

*****

20 Apr 2026

விருதுநகர் – மீண்டும் மீண்டும் விபத்து!

பட்டாசு, சாவு மற்றும் சில அனுமதிகள்!

ஏப்ரல் 19, 2026 – ஞாயிற்றுக் கிழமை.

விருதுநகர் அருகே ஒரு தனியார் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு 25 பேர் இறந்திருக்கிறார்கள். வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில். ஆலை உரிமையாளரின் லாப வெறிக்கு விடுமுறை இல்லாததால், தொழிலாளர்கள் சரவெடி தயாரிப்பில் மும்முரமாக இருந்திருக்கிறார்கள்.

சரியாக 3.30 மணி. ஒரு அறையில் உராய்வு ஏற்பட, அது சங்கிலித் தொடராக அடுத்தடுத்த மூன்று அறைகளையும் தரைமட்டமாக்கியிருக்கிறது.

முடிவு?

25 பேர் மரணம்.

இதில் 21 பேர் பெண்கள் அக்காள், தங்கை உட்பட.

பட்டாசு ஆலைகளில் தீக்குச்சிகளை விட மலிவானது ஏழைத் தொழிலாளர்களின் உயிர்தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் இடிபாடுகளை அகற்ற பொக்லைன் கொண்டு வந்த போது, அங்கிருந்த எஞ்சிய' மருந்துகள், நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்று நினைவூட்டும் விதமாக மீண்டும் வெடித்தன. இதில் உதவி தீயணைப்பு அலுவலர், பெண் காவலர்கள் என மேலும் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்கள்.

வழக்கமான சம்பிரதாயப்படி மேலிடத்திலிருந்து இரங்கல்கள் மழையாய் பொழிந்தன. குடியரசுத் தலைவர் கவலையளிக்கிறது என்று சொல்லியிருக்கிறார். பிரதமர் மிகுந்த வருத்தப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் மனவேதனை அடைந்திருக்கிறார். முதல்வர் வேதனையளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் அமைச்சர் ஒரு முக்கியமான பாயிண்டாக, நிவாரணம் கொடுக்க ஆசைதான், ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் குறுக்கே நிற்கிறதே என்றிருக்கிறார். அதாவது, உயிர்கள் போயிருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதிச் சீட்டு கிடைத்தால் ஒழிய, அந்தப் பிணங்களுக்கு விலை பேச முடியாது என்கிற எதார்த்தத்தைச் சொல்லியிருக்கிறார்.

வெடிவிபத்து நடந்த ஆலையின் உரிமையாளர் ஈஸ்வரி என்பவர் முன்னாள் ஊராட்சித் தலைவர் மனைவி என்பதால் இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

அதை விட இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், கடந்த ஆண்டுதான் இந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாம். அப்புறம் எப்படி மீண்டும் அனுமதி கிடைத்தது?

இதற்கு என்ன பதில் சொல்வது?

இந்தியாவின் மிகச்சிறந்த மாயாஜால வித்தையான ஊழல் அல்லது அலட்சியம் என்று பதில் சொல்வதா? விருதுநகர் என்றாலே அப்படித்தான் என்று பதில் சொல்வதா?

ஒரே அறையில் 30 பேரை அடைத்து வைத்து வேலை வாங்கியிருக்கிறார்கள். இப்போது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து, ஞாயிற்றுக்கிழமை ஏன் வேலை செய்தார்கள்? என்று தீவிரமாக, அதாவது தேர்தல் முடியும் வரை விசாரிப்பார்கள்.

இதனால் அறிய வருவது என்னவென்றால், நீங்கள் தீபாவளிக்கு வெடிக்கும் ஒவ்வொரு சரவெடியிலும் யாரோ ஒரு தொழிலாளியின் சாம்பல் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

உண்மை கசக்கும் என்றாலும் உண்மை இதுதான். தீபாவளி இனிப்புகளில் அந்தக் கசப்புகள் மறைந்து போகுமோ என்னவோ!

*****

தேர்தல் 2026 – ஜெயிக்கப் போவது யாரு?

தேர்தல் 2026 – ஜெயிக்கப் போவது யாரு?

தமிழகம் இந்தத் தேர்தலில் ஒரு விசித்திரமான மசாலா தோசையைப் போல வெந்து கொண்டிருக்கிறது. அதற்குத் தகுந்தாற் போல கோடை வெயில் வேறு போட்டு பொளக்கிறது. இதுவரை இட்லியா அல்லது தோசையா? என்று கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களிடம், திடீரென்று யாரோ ஒருத்தர் பீட்சாவைக் கொண்டு வந்து நீட்டியிருக்கிறார். அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டியது உங்களுக்கான குறுக்கெழுத்துப் புதிர்.

இப்படியெல்லாம் பீடிகைப் போடாமல் நேரடியாக விசயத்திற்கு வந்தால் நிலைமை இதுதான். தமிழகத் தேர்தல் களம் இப்போது ஒரு மல்டி ஸ்டாரர் சினிமா போல இருக்கிறது.

ஸ்டாலின், எடப்பாடி, விஜய், சீமான்.

நான்கு ஹீரோக்கள்.

அதன் கதை மற்றும் கிளைமாக்ஸ்?

அதுதான் தேர்தல் 2026 – ஜெயிக்கப் போவது யாரு?

தமிழகத்தில் ஐந்து கோடியே அறுபத்தேழு லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கைதான் அதிகம். மேத்தமடிக்கலாகப் பார்த்தால் பெண்கள்தான் கோட்டையைத் தீர்மானிக்கப் போகிறார்கள்.

இதில் 12 லட்சம் பேர் கன்னி வாக்காளர்கள். இவர்களுக்கு எம்.ஜி.ஆரைத் தெரியாது, கருணாநிதியின் அடுக்குமொழி வசனம் புரியாது, ஜெயலலிதாவின் கம்பீரம் தெரியாது. இவர்கள் அறிந்ததெல்லாம் வெறும் யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் லியோவும் கோட்டும் மட்டும்தான். இவர்களும் இந்தத் தேர்தல் பார்ட்டிசிபேட் ஆகிறார்கள். ஸோ, இவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் பிரச்சார நிலவரம் ஒரு பக்கம் என்றால், களநிலவரம் எப்படி இருக்கிறது?

டீ விலை 12 ரூபாய் ஆனது ஹாட் டாபிக்காக இருக்கிறது. சுடச்சுட டீ விலை ஏறியது போல வருமானம் ஏறவில்லை என்று பலரது கவலையாக இருக்கிறது. இந்தக் குறையை அதிகப்படியாக வந்த நலத்திட்டங்கள் போக்கியிருக்கின்றன.

பெண்களுக்கான உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணங்கள் ஆகியன ஆண் வாக்காளர்களை விட அதிகமிருக்கும் பெண் வாக்காளர்களை அட்ராக்ட் செய்யும் மேக்னடிக் பார்முலா ஒன் திட்டங்கள்.

இப்படி நலத்திட்டங்கள் நிறைய வந்தாலும், கஞ்சா குடியர்களும், டாஸ்மாக் வெறியர்களும், பெண்களைச் சீண்டும் காமுகர்களும் எப்படி நிறைய வருகிறார்கள்? என்பது வாக்காளர்களான பொதுமக்கள் மனதில் எழும் கேள்விகள். லாஜிக்காக இந்த விசயம் ஆளும் திமுகவுக்கு நெகடிவ் பாய்ண்ட்.

இந்த லாஜிக் ஒருவேளை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால், எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அந்த சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்போரின் லாஜிக் திமுகவை மீண்டும் கொண்டு வரவும் வாய்ப்பிருக்கிறது.

ஆளும் திமுகவின் ப்ளஸ் பாய்ண்ட் அதன் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் களப்பணிகள். அதை பீட் பண்ணுவது சாதாரணமல்ல. மற்றவர்கள் இன்னும் ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் ஷூட்டிங் முடித்து எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அப்படியானால் எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலை? அதிமுக நிறைய இடங்களைப் பிடிப்பதில் சில பலவீனங்களைச் சந்திக்கிறது. அவை என்னவென்றால், அதிமுக ஓபிஎஸ், செங்கோட்டையனை இழந்திருக்கிறது. அன்புமணி – ராமதாஸ் என இரண்டாகப் பிரிந்திருக்கும் பாமகவின் அன்புமணி பக்கத்தைத் தன் கூட்டணியில் வைத்திருக்கிறது. ராமதாஸ் சசிகலாவோடு அமைத்திருக்கும் கூட்டணி வாக்குகளைப் பிரிக்கக் கூடும். அதிமுக கூட்டணியை மேலாண்மை செய்வது அதிமுகவா? பாஜகவா? என்ற கேள்வி தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது. இவையெல்லாம் மைனஸ் பாய்ண்டுகளாக நீடிப்பதால் பெரும்பான்மையை எட்டிப் பிடிப்பது அதிமுகவுக்கு தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதைப் போலத்தான் இருக்கும்.

அடுத்து, தவெகவின் நிலை? தமிழகத்தில் புதிதாகக் கட்சித் தொடங்கும் பிரபலங்கள் கணிசமாக வாக்குகளை அறுவடை செய்தது கடந்த கால வரலாறு. அந்த வகையில் விஜய் திமுக அல்லது அதிமுகவின் ஓட்டுகளைப் பிரித்து மேய்ந்தால் இரண்டுக்கும் போதுமான இடங்கள் கிடைக்குமா என்பது எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும் என்பதைப் போன்ற கேள்வி.

மேற்படி நிலையை நாம் எதனோடு ஒப்பிட வேண்டும் என்றால், 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் போது விஜயகாந்தின் தேமுதிக அரசியல் வரவினால், திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது ஜெயலலிதா ஆளும் திமுகவை மைனாரிட்டி அரசு என விமர்சித்தது தனிக் கதை. அப்படி ஒரு நிலைமை விஜய்யால் திமுகவுக்கு ஏற்படுமா? அல்லது அதிமுக எதிர்பார்க்கும் வெற்றி வாய்ப்பைப் பறிக்குமா? என்பது மக்கள் மனதில் ஏப்ரல் 23 அன்று வெடிக்கப் போகும் லாஜிக்கைப் பொருத்தது.

தவெக எவ்வளவு வாக்குகளைப் பெறும் என்று, விஜய்க்குக் கூடும் கூட்டத்தைக் கொண்டு அப்ராக்சிமேட்டாகவும் மேத்தமடிக்கலாகவும் யோசிக்கும் போது அது ஐம்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி வாக்குகளாக இருக்கலாம். இது தமிழகத்தின் மொத்த வாக்குகளில் பத்திலிருந்து இருபது சதவீதமாகும். அப்படி நடந்தால், இது விஜயகாந்தின் அரசியல் என்ட்ரியின் போது நடந்ததை விட அதிகம்தான்.

ஆனால், முக்கியமான கேள்வி என்னவென்றால், விஜய் கோட்டையைப் பிடிக்க முடியுமா? ஒரு தலைவரை மட்டும் வைத்து ஒரு கட்சி ஜெயித்து விட முடியாது. லோக்கலில் இறங்கி அடிக்கும், தட் மீன்ஸ் வேலை பார்க்கும் தொண்டர்கள் வேண்டும். அந்த வகையில் கிரவுண்ட் லெவலில் ஆடகள் இல்லாததால் தவெக கோட்டையைக் கோட்டை விடவும் வாய்ப்பு இருக்கிறது.

அதுமட்டுமல்ல, விஜய் இன்னும் எல்லாத் தொகுதிகளுக்கும் விசிட் அடிக்கவில்லை. ஸ்கிரீனில் பார்த்த முகத்தை நேரில் பார்க்கவில்லை என்றால், தமிழக வாக்காளனுக்குக் கொஞ்சம் சுணக்கம் வந்து விடும். விஜய் பிரசாரத் திட்டங்களில் ஏதோ ஒரு பக் இருக்கிறது. கூட்ட நெரிசல், மயக்கமடிப்போர், ஆக்சிடென்ட் ஆவோர் என்று விஜய் கூட்டங்களுக்கான பிரேக்கிங் நியூஸ் விஜய்யின் மூவ்மெண்டுக்கு அடிக்கடி பிரேக் அடித்துக் கொண்டிருக்கிறது.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். சீமான்? எப்படியும் விஜய் சீமானைப் பின்னுக்குத் தள்ளி விடுவார் போலிருக்கிறது நிலைமை. அவர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தைத் தக்க வைப்பாரா என்பதே எஞ்சியிருக்கும் கேள்வி.

இந்த மல்டி ஸ்டாரர் படத்தில் விஜய், சீமானைக் கழித்து விட்டுப் பார்த்தால் திமுகவும் அதிமுகவும் பிரதான போட்டியாளர்களாக மோத இருக்கிறார்கள். இவர்களை எந்த அளவுக்கு விஜய்யின் தவெக பாதிக்கப் போகிறது என்பது மே 4 தரும் கிளைமாக்ஸில்தான் தெரிய வரும்.

அந்தக் கிளைமாக்ஸில் ஒருவேளை மேஜிக் நம்பரான 118ஐ யாரும் எளிதில் தொட முடியாமலும் போகலாம்.  20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மைனாரிட்டி அரசாங்கம் அமையவும் அமையலாம். நாம் மே 4 வரை பொறுத்திருப்பது நல்லது.

*****