18 Oct 2024

மன கோபுரங்கள்

மன கோபுரங்கள்

அசலான கேள்வியை எதிர்கொள்ளும் போது

உடைந்து போவீர்கள்

உங்கள் அழுகை உங்கள் பலவீனத்தைக் காட்டலாம்

அநேகமாக உறைந்து போதலும் நடக்கலாம்

உங்கள் மனம் வெடித்துச் சிதறியும் போகலாம்

துண்டு துண்டாகக் கிடக்கும் இதயத்தை

நீங்கள் பொறுக்கிக் கொண்டிருக்கலாம்

எதுவும் நடக்காது என்றும் சொல்ல முடியாது

எது நடக்கும் என்றும் சொல்ல முடியாது

ஒவ்வொன்றும் நடக்கும் போது

நீங்கள் ஒவ்வொரு மாதிரியாக வினையாற்றுவீர்கள்

எல்லா உதவியும் கிடைக்கும் போதும் தோற்றுப் போவீர்கள்

புத்திசாலித்தனமாகச் சிந்தித்துச் செயல்படும் போது

மிகப்பெரும் சறுக்கலை எதிர்கொள்வீர்கள்

என்ன செய்ய முடியும் உங்களால்

எல்லாவற்றையும் எதிர்கொள்வதைத் தவிர

ஒரு சிலவற்றிற்குக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டதற்காக

எல்லாவற்றுக்கும் காரணத்தைத் தேடாதீர்கள்

முடங்குவதும் திமிரி எழுவதும் மாறி மாறி நடக்கும்

எல்லாம் துடைத்தெறியப்படும் போது

நீங்கள் புதிதாக முளைத்தெழுவீர்கள்

நம்பிக்கையோ அவநம்பிக்கையோ விசயமல்ல

வெறுமனே இருக்கையில் வெற்றிடத்தில்

பறவையைப் போல சிறகடித்துக் கொண்டிருப்பீர்கள்

எதில் மோதி விழுகிறீர்களோ

அது நீங்கள் எழுப்பிய மனகோபுரங்கள்

*****

17 Oct 2024

நாம் ஏன் நம் பிரச்சனைகளுக்கு நன்றி சொல்லக் கூடாது

நாம் ஏன் நம் பிரச்சனைகளுக்கு நன்றி சொல்லக் கூடாது

ஒரு கட்ட பிரச்சனை முடிவது

அடுத்த கட்ட பிரச்சனையை உண்டாக்கிறது

இதை எப்படி சரி செய்யப் போகிறோம்

சிலரிடம் சொல்லி வைத்திருக்கிறோம் இல்லையா

ஆனால் இது பெரிய பிரச்சனை இல்லை

தீர்வு வரா விட்டாலும் பரவாயில்லை

இது சம்பந்தமாக யாரிடமும் பேசியிருக்கக் கூடாது

அவர்கள் ஏகப்பட்ட திருத்தங்களைச் சொல்கிறார்கள்

 சட்ட விதிகளை நீட்டுகிறார்கள்

அவ்வளவையும் மிகச் சரியாக நிறைவேற்றுவது என்றால்

சில நேரங்களில் நீங்கள் தற்கொலைக்கும் முயற்சிக்கலாம்

ஏன் அந்தப் பிரச்சனை இருக்கக் கூடாது

அந்தப் பிரச்சனையோடு நாம் இருக்கக் கூடாதா

நம்மோடு அந்தப் பிரச்சனை இருக்கக் கூடாதா

பிரச்சனைகளைத் தீர்ப்பதினும் பிரச்சனைகளோடு இருந்து விடுவது

நீங்கள் உயிர் வாழ்வதற்கு உத்தமான வழி

நம்மை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கும்

பிரச்சனைகளுக்கு இன்றாவது நன்றி சொல்லுங்கள்

*****

16 Oct 2024

வீடுபேறு

வீடுபேறு

அனுமதி பெற்று வீடு கட்டுவது என்றால்

குளவி அனுமதி பெற்றா கூட்டைக் கட்டுகிறது

பாம்பு அனுமதி பெற்றா புற்றைக் கட்டுகிறது

தேனீக்கள் யாருடைய அனுமதியைக் கேட்கின்றன

தூக்கணாங்குருவி யாரைக் கேட்கிறது

முன் அனுமதி பெறாமல் வீட்டைக் கட்டியது குற்றமாகி விட்டது

குளவிக் கூட்டை பாம்புப் புற்றை தேன் கூட்டை குருவிக் கூட்டை

கலைத்தால் கொட்ட வரலாம் கொத்த வரலாம்

மனிதன் கோபம் கொள்ளலாம்

கோபித்துக் கொண்டு மறுகூட்டைக் கட்டாமலா போய் விடுகின்றன

மறுவீட்டைக் கட்டித்தான் ஆக வேண்டும்

இந்த முறை முன் அனுமதி வாங்கி விட வேண்டும்

அதற்கான மன உளைச்சல்களைக்

கால் அலைச்சல்களைத் தாங்கித்தான் ஆக வேண்டும்

இந்தக் குடைசல்கள் வேண்டாம் என்றால்

வாடகை வீட்டில் வாழ்ந்து முடித்துக் கொள்ள வேண்டும்

வாடகை வீடு கட்டுபவர்கள் ஒரே நேரத்தில்

ஒன்பது வீடுகளுக்கு முன் அனுமதி பெறத் தெரிந்தவர்கள்

*****

15 Oct 2024

வளர்க நும் கவிதைக் கடை

வளர்க நும் கவிதைக் கடை

இன்று ஒரு கவிதை இல்லாமல் போய் விட்டதே

என்ன கொடுமை ஐயா

ஒரு கவிதை ஒரே ஒரு கவிதை

கூடுதலாகச் சுட்டால் குறைந்தா போய் விடுவீர்

கவிதை வடை சுடும் கவிப்பித்தரே

ஒரே ஒரு கவிதை

கூடுதலாகப் போட்டுத் தந்தால் குறைந்தா போய்விடுவீர்

கவிதைத் தேநீர் போடும் கவிக்கிறுக்கரே

ஒரே ஒரு தட்டுக் கவிதை

கூடுதலாகக் கொண்டு வந்து வைத்தால்

குறைந்தா போய் விடுவீர் உணவு விடுதியின் கவிச்சேவகரே

என்ன நடக்கிறது என்பது தெரியாதா எனக்கு

நிறைய கவி உணவுகள் மீந்து வீணாகி விட்டதாகக்

குளிர்பதனப் பெட்டியில் வைத்து

மறுநாளுக்குத் தயார் செய்யும் கவி முதலாளியே

அதிலொரு புழுத்த கவி வறுக்கியை

எடுத்து வீசக் கூடாதோ

இப்போது ஒரு கவிதை வடை மட்டும்

எலிக்காகப் பொறியில் காத்திருப்பது

தெரியாது என்றா நினைக்கிறீர்கள்

வாழ்க உங்கள் கவிதைப் பணி

வளர்க நும் கவிதைக் கடை

*****

13 Oct 2024

மோசடிகளின் காலம்!

மோசடிகளின் காலம்!

இது கலி காலம் என்று சொல்வதை விட மோசடிகளின் காலம் என்று சொல்லலாம் போலிருக்கிறது. மோசடிகளில் சிக்காமல் மோட்சம் பெறுவது எப்படி? என்று புத்தகம் போட்டால் அநியாயத்துக்கு விற்றுத் தீரும். மோட்சம் பெறுவதிலும் மோசடிகள் உருவாகி விட்ட காலத்தில் மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கே ரொம்ப பெரிய சாமர்த்தியம் வேண்டும் போலிருக்கிறது.

பெரும்பாலான மோசடிகளைப் பொருத்த வரையில் அவை மக்களாகவே கொண்டு போய் தலையைக் கொடுத்துக் கொள்ளும் வகையினதாகவே இருக்கின்றன.

இது தீபாவளி நேரம். சந்தோசமாகக் கொண்டாட வேண்டிய நேரத்தில் நீங்கள் கவலையோடு அமர்ந்திருந்தால் நீங்கள் தீபாவளி சீட்டுப் போட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். வங்கி, அஞ்சலகம் போன்றவற்றில் தொடர் வைப்பு எனும் Recurrence Deposit (R.D) இருக்கையில் இது போன்ற சீட்டுகள் பக்கமே போக வேண்டியதில்லை. ஒருவேளை தீபாவளிச் சீட்டுப் போட்டு எதுவும் கை நழுவிப் போயிருந்தால் அது போன்ற முயற்சிகளை இந்தத் தீபாவளியோடு தலைமுழுகிவிட்டு, தொலையட்டும் அந்த நரகாசுரன் என்று இனி வரும் தீபாவளிகளிலாவது எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் செய்யுங்கள்.

அடுத்த செய்தி கைபேசி வைத்திருப்பவர்களுக்கானது. அதிலும் கைபேசியிலேயே சலகவிதமான பணப் பரிவர்த்தனைகளையும் செய்பவர்களுக்கானது.

அலைபேசி பண பரிவர்த்தனைகளில் நாம் பணம் அனுப்புவதற்குத்தான் ஆறிலக்க அல்லது நான்கிலக்க கடவு எண்ணைத் (PIN Number) தர வேண்டுமே தவிர, நாம் பணத்தைப் பெறுவதற்கு எதையும் தர வேண்டியதில்லை. பணத்தைப் பெறுவதற்கு கடவு எண்ணைத் தந்தால் உங்கள் பணம்தான் வெளியே போகுமே தவிர, உங்களுக்குப் பணம் வராது. மோசடியாளர்கள் இந்த இடத்தை நுட்பமாகப் பயன்படுத்துகிறார்கள். உங்கள் கணக்கிற்குப் பணம் வேண்டுமானால் உங்கள் ரகசிய கடவு எண்ணை இடுங்கள் என்கிறார்கள். நீங்கள் உங்கள் கடவு எண்ணைப் பதிவிட்டால் உங்கள் கணக்கிலிருந்து அவர்கள் கணக்கிற்குப் பணம் போய் விடும்.

அடுத்த செய்தி வீட்டுமனை வாங்குவதற்காக முண்டி அடித்துக் கொள்பவர்களுக்கானது.

வீட்டு மனைகள் வாங்குவதென்றால்நம்மவர்களுக்கு அடங்காத ஆசை இருக்கிறது. பல நேரங்களில் எந்த விதமான விசாரணையும் இன்றி வாங்கி விட்டு, பின்னர் ஒரு பெரிய விசாரணை வளையத்திற்குள் சிக்கிக் கொள்வார்கள். குறிப்பாகப் புறம்போக்கு நிலங்களையும் வீட்டு மனைகளாகப் போட்டு வாங்குபவர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். போகப் போகத்தான் அது புறம்போக்கு இடம் என்பதே வாங்கியவர்களுக்குத் தெரிய வரும். பிறகுதான் வில்லங்கம், சிக்கல், பிரச்சனை எல்லாம் ஆரம்பமாகும். இந்த இடம்தான் நீங்கள் விசாரணை வளையத்திற்குள் வரும் இடம். இந்த இடத்திற்குள் வராமல் வீட்டு மனை வாங்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது. மனைகளைப் பார்த்த உடன் அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஆசைப்படாமல் கொஞ்சம் அக்கம் பக்கம் விசாரித்து, பட்டா, சிட்டா, அடங்கல் எல்லாம் பார்த்து விட்டு கொஞ்சம் இதற்கென இருக்கும் வழக்கறிஞர்களிடம் சட்டப்பூர்வ அபிப்ராயத்தைக் கேட்டு விட்டுச்  செய்தால் பிரச்சனைகள் இருக்காது.

இப்போது இந்த மூன்று சம்பவங்களையும் எடுத்துக் கொள்ளுங்களேன். மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பணம்தான் அந்தத் தொடர்பு. பணத்தைப் பயன்படுத்திதான் எவ்வளவு மோசடிகள். ஆக உங்களைச் சீட்டுப் போட வைத்து ஏமாற்றலாம், அலைபேசி பணபரிவர்த்தனைகளில் ஆசையைத் தூண்டி ஏமாற்றலாம், வீட்டு மனை விற்பதில் ஏமாற்றலாம்.

இனி வரும் காலத்தில் ஏமாற்றுவதும், ஏமாறாமல் இருப்பதும் பெரிய கலையாக ஆகி விடும் போலிருக்கிறது. காலந்தோறும் கலைகளில் விற்பன்னர்கள் உருவாகிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

*****

12 Oct 2024

இலவசம் எனும் மாயமான்!

இலவசம் எனும் மாயமான்!

இலவசம் என்றால் வாய்ப் பிளப்பவர்கள் ஆயிற்றே நாம்.

ஓசியில் கொடுத்தால் பினாயிலையும் குடிப்பவர்கள் என்று கவுண்டமணி சும்மாவா சொன்னார்?

மருத்துவப் பரிசோதனைகளுக்காகச் செலவு செய்து அலுத்து வெறுத்துப் போனவர்களுக்கு, இலவச மருத்துவப் பரிசோதனை என்றால் எப்படி இருக்கும்? கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருக்குமா? தேடிப் போன புதையல் நாடி வந்தது போல இருக்குமா?

எதற்காக இலவச மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்?

ஏதேனும் நோயிருந்தால் கண்டறிந்து விடலாம் என்று சொல்வீர்கள்.

நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால்தான் அப்படி நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். அதை விடுத்து நோயில்லாத ஒருவர் தனக்கு நோய் இருக்குமோ என்றெல்லாம் இது போன்ற இலவசப் பரிசோதனைகள் பக்கம் போகக் கூடாது.

தவிரவும் உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை தேவையா இல்லையா என்பதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும். அவர் உங்களுக்கு எந்த விதமான சோதனை செய்ய வேண்டும் என்பதை உங்களைப் பரிசோதித்து எழுதித் தர வேண்டும்.

தெருவில் வருவோர், போவோர் எல்லாம் இது போன்ற இலவச மருத்துவப் பரிசோதனைகள் என்று சொல்லி உங்களைப் பரிசோதிக்கக் கூடாது.

காசா? பணமா? செய்து கொண்டால் ஆயிற்று என்றால், இலவச மருத்துவப் பரிசோதனைகளைச் செய்பவர்கள் கேனைகளா என்ன?

அவர்கள் பாட்டுக்கு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து விட்டு, அதன் முடிவுகளைத் தந்து அங்கே முகாமிட்டு இருக்கும் மருத்துவர்களைப் போய் பார்க்கச் சொல்கிறார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து விட்டு சர்க்கரை அதிகமாக இருக்கிறதே, ரத்த அழுத்ததுக்கான அறிகுறி தெரிகிறதே, கொழுப்பு கூடுதலாவது போலத் தெரிகிறதே என்று அவர்கள் பாட்டுக்கு மருந்து மாத்திரைகளை எழுதித் தள்ளி விட்டு அதை வாங்கி முன்கூட்டியே நோய்களைத் தடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

அந்த மருந்துகளை வாங்கி விட்டு ரசீதைப் பார்த்தால் இரண்டாயிரம், மூவாயிரம் ஆகிறது. இதற்கு நீங்கள் காசு கொடுத்தே உங்களைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை இதை விட குறைவானத் தொகையில் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இலவச மருத்துவ பரிசோதனைகள் என்பன இலவசங்களே அல்ல. உங்களுக்கான பரிசோதனை முடிவுகள் என்று சொல்லி, உங்களை மருத்துவரை நாட வைத்து, உங்களுக்கான பரிசோதனைக் கட்டணத்தை உங்களுக்குத் தேவையில்லாத மருந்துகளை வாங்க வைத்து அதில் ஈடுகட்டிக் கொள்கிறார்கள்.

இனி இலவச மருத்துவப் பரிசோதனைகள் பக்கம் தலைவைத்து படுப்பீர்கள்?

எப்போதும் இலவசமாக ஒன்றைக் கொடுக்கும் போது, எதற்காக உங்களுக்கு அதை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்பிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இலவசமாக ஒன்றைக் கொடுப்பதால் கொடுப்பவருக்கு என்ன லாபம் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்த இரண்டையும் செய்தால் நீங்கள் இலவசம் என்ற பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டீர்கள்.

ஆம்!

இலவசம் என்பது மாயமான்.

அதைத் தேடிப் போன ராமனின் கதையை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

அதுவும் இலவச மருத்துவப் பரிசோதனைகளில் நோய்கள் என்ற மாயமானைத் தேடிப் போய் உங்கள் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்.

*****

11 Oct 2024

இரண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லுங்கள்!

இரண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லுங்கள்!

நாங்கள் படிக்கின்ற காலத்தில் இலவசப் புத்தகங்கள் கிடையாது. புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்க வேண்டும். முழுக்காசையும் கொடுத்து வாங்குவதற்கு யோசனைபட்டுக் கொண்டு பழைய புத்தகங்களைப் பாதி விலைக்கும் கால்வாசி விலைக்கும் முன்கூட்டியே மூத்த மாணவர்களிடம் பேசி வைத்துக் கொண்டு வாங்குவதுண்டு. இப்போதைய பாஷையில் சொன்னால் அவை செகண்ட் ஹேண்ட் புத்தகங்கள்.

இப்போது அந்தப் பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது. அரசாங்கப் பள்ளிக் கூடங்களில் புது புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுகிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களில் பழைய புத்தங்களை வாங்கிக் கொடுக்கிறேன் என்றால் சீட்டைக் கிழித்து விடுவார்கள். சேர்க்கையைச் செய்யும் போதே சகலவற்றிற்கும் சேர்த்து ரசீதைத் தீட்டி எடுத்து விடுகிறார்கள். இப்போதிருக்கும் பிள்ளைகளிடம் செகண்ட் ஹேண்ட் என்று புத்தகங்களை வாங்கிக் கொடுத்தால் பார்வையாலேயே எரித்து விடுவார்கள். அண்ணன் படித்த நோட்ஸைக் கூட தம்பி படிப்பதற்கு யோசிக்கிறான். புதிதாகத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்.

மகிழுந்து (கார்), இரு சக்கர வாகனம் போன்றவற்றில் இந்த செகண்ட் ஹேண்ட் என்பது இன்னும் மவுசு குறையாமல்தான் இருக்கின்றன. மகிழுந்து விடயத்தில் ஒன்றரை லட்சத்துக்கு வாங்கி ஒரு சில வருடங்கள் ஓட்டி விட்டு இரண்டு லட்சத்திற்கு விற்றவர்களும் இருக்கிறார்கள். ஒன்றரை லட்சத்துக்கு வாங்கி ஒரு லட்சத்துக்கு விற்றவர்களும் இருக்கிறார்கள்.

இரு சக்கர வாகனங்கள் விடயத்தில் வாங்கிய விலையை விட குறைவாக விற்றவர்களைத்தான் பார்த்திருக்கிறேன்.

பொதுவாக இந்த செகண்ட் ஹேண்ட் விசயத்தில் தலை வைத்துப் படுக்காமல் இருப்பது நல்லது என்பது பெரியோர்களின் பொதுவான அபிப்ராயம். வாங்கி விட்டு பிறகு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடல் கணக்காய் வண்டி அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை என்று பாட்டுப் பாடும்படி ஆகிவிடும்.

ஒன்றரை லட்சத்துக்கு மகிழுந்தை வாங்கி அதற்கு இரண்டு லட்சம் செலவு செய்து அதை ஐம்பதாயிரத்துக்கு விற்ற நண்பர்களின் கதையெல்லாம் எனக்குத் தெரியும். வாங்குவதைப் புதிதாக வாங்கி விட்டால் நீங்கள் வைத்துக் கொள்வதைப் பொருத்து பத்து வருடங்களுக்குக் கூட அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். அப்படி இல்லையென்றாலும் ஐந்து வருடங்களுக்காவது எந்தப் பிரச்சனையும் தராமல் அது உண்டு, நீங்கள் உண்டு என்று அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும்.

ஏன் இந்த செகண்ட் ஹேண்டை நாடுகிறோம்? எல்லாம் இல்லாத குறைதான். ஆனால் அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் கதற கதற பணப்பையை வழித்துக் கொண்டு விடும். இரண்டாம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வேண்டாம் என்று சொல்லி விடுங்கள். விதியோடு விளையாடுவானேன்?

*****

மன கோபுரங்கள்

மன கோபுரங்கள் அசலான கேள்வியை எதிர்கொள்ளும் போது உடைந்து போவீர்கள் உங்கள் அழுகை உங்கள் பலவீனத்தைக் காட்டலாம் அநேகமாக உறைந்து போதலும் ...