8 Sept 2025

பருவத்தே பணம் செய்பவர்கள் கவனத்திற்கு…

பருவத்தே பணம் செய்பவர்கள் கவனத்திற்கு…

இருபத்தைந்து வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஓர் ஆணையோ, பெண்ணையோ பார்த்து தற்போதெல்லாம் சொல்லி விட முடியாது. வாழ்க்கையில் எதையாவது ஒன்றை சாதித்த பின்தான் கல்யாணம் என்று பிடிவாதமாக மறுத்து விடுகிறார்கள். அதென்ன சாதனை? அது நல்ல சம்பாத்தியத்தில் வேலைக்குப் போவதாகவோ, படித்து முடித்து முனைவராவதோ, முப்பது வயதுக்குள் ஒரு கோடியைச் சேர்ப்பதாகவோ, ஒரு வீடு, மகிழ்வுந்து வாங்குவதாகவோ என்று பல வகையாக இருக்கின்றன.

இந்தச் சாதனைகளை எல்லாம் முடித்து விட்டு முப்பது வயதுக்கு மேல் திருமணத்திற்கு வருகிறார்கள். இதிலென்ன அவசரம் என்று நாற்பதில் வருபவர்களும் இருக்கிறார்கள். அப்படி வந்தால் குழந்தைப் பிறப்பதில் பிரச்சனை. இதனால் கோயில் கோயிலாக அலைகிறார்கள் அல்லது மருத்துவமனை மருத்துவமனைகளாக அலைகிறார்கள். எப்படியோ ஒரு குழந்தை பிறந்தால் அப்போதாவது ஆசுவாசமாகிறார்களா என்றால், அந்தக் குழந்தையை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அது பிறந்த நாள் முதற்கொண்டு பிரபலமான பள்ளிகளின் சுற்றுச்சுவர் (காம்பௌண்ட்) அருகே தேவுடு காக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அப்படியே நாற்பதைக் கடப்பதற்குள் சர்க்கரையோ, ரத்தக்கொதிப்போ வந்து விடுகிறது. அதற்கான வைத்தியத்தோடு நல்ல சாப்பாட்டை நாற்பதுக்கு மேல் இழந்து விடுகிறார்கள்.

ஐம்பதைக் கடப்பதற்குள் டயலாசிஸை நோக்கி முன்னேறி விடுகிறார்கள். ஆறுபதிற்குள் கட்டி, அறுவை சிகிச்சை என்று பெயரில் நுழையாத பலவகை மருத்துவ சிசிக்கைக்குப் பாத்தியப்பட்டு விடுகிறார்கள்.

பிள்ளைகளைப் படிக்க வைத்து வெளிநகரங்களுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ அனுப்பி வைத்து விட்டு அனாதையாய் பரிதாபமாய் இறப்பதை பார்க்கும் போது இந்தச் சாதனைக்காகவா திருமணத்தைத் தள்ளிப் போட்டு, சம்பாத்தியத்திற்காக நாயாய்ப் பேயாய் அலைந்து, பின்பு மருத்துவம் எனும் நரகத்தில் ஆழ்ந்து, பேரன் பேத்திகளைக் கூட ஆசை தீர கொஞ்சாமல் போய்ச் சேர்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

இதன் அடிநாதம் என்னவென்று பார்த்தால் பொருளாதாரம்தான். படிப்பு என்று சொன்னாலும் படிப்பின் மூலம் பொருளாதாரம் என்பதுதான் அந்த அடிநாதத்தின் ஊடே ஊடுபாவாய் ஓடிக் கொண்டிருககும் ஆணிவேர். அது சரி! பொருள் மட்டும்தான் ஆதாரமா என்ன?!

இருபத்தொன்றைக் கடந்து விட்டாலே ஆணோ, பெண்ணோ திருமணத்தில் இணைந்து விடலாம். அப்படியென்ன அதை ஒத்தி வைத்து விட்டு பணத்தைச் சம்பாதித்து எல்லாரும் பில்கேட்ஸாகவோ, அம்பானியாகவோ, அதானியகாவோ ஆகி விடப் போகிறார்கள்?

பொருளாதாரம்தான் முதன்மை என்றால் நாட்டில் பிச்சைக்காரர்களும், ஏழைகளும் குழந்தைகளே பெற்றுக் கொள்ள முடியாது. பொருளாதாரமும் முதன்மை என்றாலும் அந்தந்த வயதில் செய்ய வேண்டியதைச் செய்து விடுவது அதை விட முதன்மையானது. அப்படிச் செய்யத் தவறினால் எந்தப் பொருளாதாரத்தை முதன்மையாக நம்பி களத்தில் குதித்தீர்களோ, அதே பொருளாதாரத்தால் மரண அடி விழுவதையும் தடுக்க முடியாது.

இருபத்தைந்து வயதிற்குள் எந்தக் கோயிலுக்கோ, மருத்துவமனைக்கோ செல்லாமல் குழந்தைப் பெற்றுக் கொள்வது எப்படி, முப்பதைக் கடந்து லட்சங்களைக் கொட்டி இறைந்து ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வது எப்படி, ஒரு குழந்தையைப் பெற்று ஏதோ ஒரு பள்ளியில் படிக்க வைத்து, அவர்களுக்கும் காலா காலத்துக்கும் ஒரு திருமணத்தைச் செய்வித்து, பேரன் பேத்திகளை எடுத்து ஒரே வீட்டில் தாத்தா – பாட்டி, அப்பா – மகன், பேரன் – பேத்தி என்று மூன்று தலைமுறைகளும் ஒரே வீட்டில் ஒருவருக்கொருவர் அனுசரனையாகவும் அன்பாகவும் இருப்பது எப்படி, படிப்பே பிரதானம் என்று குழந்தைகளை மன அழுத்தத்தோடு படிக்க வைத்து, அவர்களை அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் அனுப்பி வைத்து விட்டு, அங்கு அவர்களும் நிம்மதியாக இல்லாமல், இங்கு அவர்களைப் பெற்று அனுப்பி வைத்தவர்களும் நிம்மதியாக இல்லாமல், கடைசிக் காலத்தில் யாரும் இல்லாமல் அனாதையாகப் போய் சேர்வது எப்படி?

பொருளாதாரம் என்பது வாழ்க்கையில் அடிப்படை வசதிகளைச் செய்து தருகிறது. அதை இன்னும் கூடுதலாகவும் செய்து தருகிறது. சில பல வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது. அதைத் தவிர அதனால் எதையும் செய்ய இயலாது. அப்படி அது செய்து தரும் வசதிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் ஒரு விலையையும் உங்களை வைத்தே அது செலுத்தவும் வைக்கும். சில நேரங்களில் அந்த விலையானது நீங்கள் யாருமற்ற மனிதர்களாக அனாதையாக ஆவதாகவும் இருக்கக் கூடும்.

இதை அறிந்தும் உணர்ந்தும் பொருளாதாரத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே நல்லது. அதைத் தாண்டி முக்கியத்துவம் கொடுக்கும் யாராக இருந்தாலும் அந்தப் பொருளாதாரத்தாலேயே அவர்கள் ஆதாரம் இல்லாமல் நிற்பதை யாராலும் தடுக்க முடியாது.

பருவத்தே பணம் செய்யும் முன், பருவத்தே உயிர் செய்யுங்கள். செய்த உயிரோடு உயிருக்கு உயிராக உறவாடுங்கள். பருவத்தே உயிர் செய்த பயிர் வாழ்க்கைக்கான ஆதாரமாக அன்பின் ஆதர்சமாக ஆகட்டும்!

*****

20 Aug 2025

இந்தக் காலத்திலும் வரிசைகளில் காத்திருந்து ஏன் வங்கிகளில் பணம் எடுக்கின்றனர் மக்கள்?

இந்தக் காலத்திலும் வரிசைகளில் காத்திருந்து

ஏன் வங்கிகளில் பணம் எடுக்கின்றனர் மக்கள்?

சில மாற்றங்கள் நிகழ்ந்தால் உலகமே எளிதாகி விடும் என்று நினைக்கிறோம். அப்படி ஒன்றும் எதுவும் எளிதானது போலத் தெரியவில்லை. ஒருவேளை அவை எளிதாகி இருந்தாலும் எரிச்சலாகிக் கொண்டிருக்கின்றன.

உதாரணத்துக்குப் பணம் எடுப்பதையே எடுத்துக் கொண்டால், இன்னும் வங்கிகளில் வரிசைகளில் நின்று காத்திருந்து பணம் எடுக்கும் மக்களைப் பார்க்க முடிகிறது. இவ்வளவு தானியங்கிப் பணம் எடுக்கும் (ஏடிஎம்) பெருகிய காலத்திலா இப்படி என்றால், அங்கும் வரிசையாகப் பணம் எடுக்க நிற்கும் மக்களைக் காண முடிகிறது. கூகுள்பே, போன்பே, பேடிஎம், இப்போபே என ஏகப்பட்ட பே(ய்)கள் பெருகிய இந்தக் காலத்திலுமோ மக்கள் இப்படி தானியங்கி இயந்திரம் (ஏடிஎம்) முன் நிற்பார்கள்?

ஏன் இப்படி என்றால், நாம் பெறும் ஒவ்வொரு வசதிக்கும் ஒரு விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கிறது. எல்லாராலும் அந்த விலையைக் கொடுத்த முடியாது. கொடுக்க முடியாதவர்கள் வரிசைகளில் காத்திருந்து பெறுவதைத்தான் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

நீங்கள் கூகுள்பே, போன்பே, பேடிஎம், இப்போபே எனப் பே(ய்)களைப் பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களிடம் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) வேண்டும். பித்தான் போன்களை வைத்திருக்கும் மக்களால் இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது. ஓராயிரத்துக்குள் முடிந்து விடும் பித்தான்போன்களின் விலை. திறன்பேசிகளின் (ஸ்மார்ட்போன்) விலைக்கு உங்களிடம் ஐயாயிரமாவது இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐயாயிரம் முதலீடு இல்லாமல் உங்களால் அந்தப் பே(ய்)களை உங்களால் பயன்படுத்த முடியாது.

உங்களிடம் பற்றுஅட்டை (ஏடிஎம் கார்டு) இருந்தால் அதற்கு வருடா வருடம் நூறோ நூற்று ஐம்பதோ (சில வங்கிகளில் இருநூறுக்கு மேலும் உண்டு) ஆண்டுக் கட்டணமாக அழுதாக வேண்டும். அத்துடன் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் வரும் குறுஞ்செய்திக்கான கட்டணத்துக்கும் படியளந்தாக வேண்டும். ஐந்து முறை அல்லது பத்து முறை என வங்கிகள் வரையறுத்துள்ள முறைகளுக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கான தொகையோடு சரக்கு மற்றும் சேவை வரியையும் (ஜிஎஸ்டி) சேர்த்து அளக்க வேண்டும்.

இவ்வளவு செலவு கட்டுபடியாகாது என்று நினைக்கும் மக்கள் வங்கியில் வரிசையாகக் காத்திருந்து பணம் எடுத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள். அதில் அவர்களுக்கு எவ்வித கூடுதல் முதலீடோ, பண இழப்போ ஏற்படுவதில்லை. எவரேனும் தங்கள் பணத்தை மோசடி செய்து விடுவார்களோ என்ற பயம் இன்றி அவர்களின் வங்கிக் கணக்குகளைக் கையாள்வதற்கும் அது உதவியாக இருக்கிறது.

என்ன காத்திருக்க வேண்டியிருக்கிறது, அதில் நேரம் கழிகின்றது. மற்றபடி கணக்கில் எந்தப் பணமும் கழிவதில்லை. அது போதாதா?

*****

18 Aug 2025

ஒரே கேள்வி ஒவ்வொருவருக்கும் வேறு பதில்

ஒரே கேள்வி ஒவ்வொருவருக்கும் வேறு பதில்

எப்படி வாழ்வது

யாருக்கு என்ன பதில் சொல்ல முடியும்

ஒரு பிச்சைக்காரருக்குச் சொல்லும் பதில்

பணக்காரருக்குப் பொருந்தாது

பணக்காரருக்குச் சொல்லும் பதில்

ஏழைக்குப் பொருந்தாது

புத்திசாலிக்குச் சொல்லும் பதில்

முட்டாளுக்குப் பொருந்தாது

முட்டாளுக்குச் சொல்லும் பதில்

அரைவேக்காடுகளுக்குப் பொருந்தாது

அரைவேக்காடுகளுக்குச் சொல்லும் பதில்

ஞானிகளுக்குப் பொருந்தாது

ஞானிகளுக்குச் சொல்லும் பதில்

குடும்பஸ்தர்களுக்குப் பொருந்தாது

குடும்பஸ்தர்களுக்குச் சொல்லும் பதில்

சூதாடிகளுக்குப் பொருந்தாது

சூதாடிகளுக்குச் சொல்லும் பதில்

சிக்கனவாதிகளுக்குப் பொருந்தாது

சிக்கனவாதிகளுக்குச் சொல்லும் பதில்

கருமிகளுக்குப் பொருந்தாது

கருமிகளுக்குச் சொல்லும் பதில்

வள்ளல்களுக்குப் பொருந்தாது

வள்ளல்களுக்குச் சொல்லும் பதில்

உலோபிகளுக்குப் பொருந்தாது

உலோபிகளுக்குச் சொல்லும் பதில்

தாராள மனமுடையவருக்குப் பொருந்தாது

தாராள மனமுடையவருக்குச் சொல்லும் பதில்

குறுகிய மனமுடையோருக்குப் பொருந்தாது

குறுகிய மனமுடையோருக்குச் சொல்லும் பதில்

குழந்தைகளுக்குப் பொருந்தாது

குழந்தைகளுக்குச் சொல்லும் பதில்

அதே குழந்தை பெரியவராகி விட்டால் பொருந்தாது

எப்படி வாழ்வது என்று

யாருக்குச் சொல்லும் பதில் யாருக்குத்தான் பொருந்தும்

அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து

எப்படி வாழ்வது என்பது

அவரவர் முடிவு செய்து கொள்வதே பொருத்தம்

ஒற்றைப் பதில் சொன்னால்

அதில் உண்டாகும் அத்தனை திருத்தம்

*****

17 Aug 2025

உலகின் சிறு தூசு ஆகிய நீங்கள்!

உலகின் சிறு தூசு ஆகிய நீங்கள்!

போர்கள் இல்லாமல்

நோய்கள் இல்லாமல்

பட்டினிகள் இல்லாமல்

பேரழிவுகள் இல்லாமல்

துரோகங்கள் இல்லாமல்

கண்ணீர் இல்லாமல்

சீர்கேடுகள் இல்லாமல்

மாசுபாடுகள் இல்லாமல்

எப்போது உலகம் நன்றாக இருந்திருக்கிறது

என்றாலும் மலர்கள் பூக்காமல் இல்லை

கனிகள் கனியாமல் இல்லை

விதைகள் முளைவிடாமல் இல்லை

குழந்தைகள் சிரிக்காமல் இல்லை

அழுகைக்கும் மத்தியிலும் மக்கள் ஆனந்திக்காமல் இல்லை

இந்த உலகம் எல்லாமாகவும் இருக்கிறது

நல்லது மட்டுமே நடக்கும் என்று சொல்ல முடியாது

கெட்டது நடக்காமலும் இருந்து விடாது

நல்லதையும் கெட்டதையும்

ஆக்கத்தையும் அழிவையும்

மாறி மாறியோ

கூடுதலாகவோ குறைவாகவோ

எதிர்கொள்வதைத் தவிர

உலகத்து உயிர்களுக்கு வெறென்ன வழியிருக்கிறது

மனிதர்களைக் கொடூரமாகக் கொல்லும் ஒருவர்

நாய்க்குட்டியைப் பிரியமாக வளர்க்கக் கூடும்

நாய்கள் பிடிக்காத மனிதர் ஒருவருக்கு

மரங்கள் மேல் பிரியங்கள் இருக்கக் கூடும்

எல்லாரும் எல்லா நேரத்திலும்

தெய்வமாக இருக்க முடியாது

எல்லாரும் எல்லா நேரத்திலும்

சாத்தானாக இருக்க முடியாது

உலகம் அழிந்தால் அழிந்து தொலையவும்

இருந்தால் வாழ்ந்து தொலையவும் அன்றி

வேறென்ன வழியிருக்கிறது

அழிகின்ற பொழுதில் சிரித்துக் கொண்டே

அழியக் கூடாது என்று தடுக்க முடியாது

சந்தோசப் பொழுதுகளில்

அழிவு வரக் கூடாது என்ற எதிர்பார்க்க முடியாது

எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம்

எப்போது எது நிகழ்ந்தாலும் சந்தோசமாகவும் இருக்கலாம்

ஒரு போதும் வராத அழிவுக்காகக் கவலையோடும் இருக்கலாம்

எல்லாம் அவரவர் மனப்போக்கு

எல்லாம் அவரவர் யோசனை நோக்கு

போக்கும் நோக்கும் பிடிபட்டு விட்டால்

உலகத்தின் சிறு தூசு நீங்கள்

கண்களில் பட்டு கலங்கச் செய்யவும் முடியும்

யார் கண்ணிலும் விழாமல் உறுத்தாமல் இருக்கவும் முடியும்

*****

14 Aug 2025

தெய்வமாக இருத்தல்

தெய்வமாக இருத்தல்

உங்கள் பயம்

உங்கள் மிருகத்தைத் தட்டி எழுப்பும்

உங்கள் தைரியம்

எந்த மிருகத்தையும் அடக்கி ஆளும்

உங்களுக்குள் இருக்கும் மிருகத்தை உட்பட

நீங்கள் மிருகத்தைத் தட்டி எழுப்பப் போகிறீர்களா

அடக்கி ஆளப் போகிறீர்களா

அச்சப்படுவது எளிது

தைரியமாக இருப்பது கடினம்

அச்சம் ஒட்டிக் கொள்ளும்

தைரியம் தைரியமாக இருப்பதும் அல்ல

அச்சப்படாமல் இருப்பது மட்டுமே

அச்சத்தை விரட்டினால் தைரியம் அங்கே இருக்கும்

தைரியத்தின் தோற்றம் கோழைத்தனம்

பேயாவதோ பிசாசாவதோ மிருகமாவதோ பெரிய காரியமில்லை

எதுவும் ஆகாமல் இருப்பின்

தெய்வமாக இருப்பீர்கள்

ஆகாமல் இருப்பது முக்கியம்

ஆகுதல் தெய்வத்திற்கு எதிரானது

நீங்கள் தெய்வமாகவே இருப்பதால்

எதுவும் ஆகாமல்

நீங்கள் நீங்களாக இருப்பின்

அச்சப்பட மாட்டீர்கள்

பேயாக மாட்டீர்கள்

பிசாசாக மாட்டீர்கள்

மிருகமாக மாட்டீர்கள்

தெய்வமாகவே இருப்பீர்கள்

*****

9 Aug 2025

உன் கூடுதல் நேரத்தைக் குப்பையில் போடு!

உன் கூடுதல் நேரத்தைக் குப்பையில் போடு!

அது ஒன்றும் இல்லை

அதை அப்படியே விட்டு விடுங்கள்

அதைச் சரிபடுத்தவோ நெறிபடுத்தவோ வேண்டியதில்லை

அதில் தவறானது ஏதோன்றுமில்லை நெறியற்றதும் இல்லை

அப்படி இருப்பின் அதுவே சரியாகும் அதுவே நெறியாகும்

அவசரமாக எதை மாற்றியும் எதுவும் ஆகப் போவதில்லை

எல்லாம் சிறிது சிறிதாக மாறித்தான் போகும்

மனிதர்கள் எத்தனையோ கோடி ஆண்டுகள் வரை வாழ்வார்கள்

நீ வாழப் போவது அறுபதோ எண்பதோ நூறோ

அதற்கும் குறைவான அற்பாயுசோ

எந்தக் கணத்திலும் மனிதர்கள் மாண்டு போகலாம்

மனிதர்கள் எண்ணுவதோ மனித ஆயுள் என்பது நீளமானது

எவ்வளவு கருவிகள்

எவ்வளவு உபகாரங்கள்

எவ்வளவு வசதிகள்

எவ்வளவு சொகுசுகள்

எவ்வளவு வாய்ப்புகள்

மனிதர்களுக்கு இந்த நீளமான ஆயுளில்

ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணிநேரம் போதவில்லை என்கிறார்கள்

அவர்களுக்குக் கூடுதல் நேரம் இல்லை என்று சொல்கிறார்கள்

இருந்தால் என்ன செய்வார்கள்

இன்னும் கொஞ்சம் நேரம் சாட் செய்வார்கள்

இன்னும் கொஞ்சம் பேஸ்புக்கில் மேய்வார்கள்

இன்னும் கொஞ்சம் வாட்ஸ்ஆப்பில் கடலை போடுவார்கள்

இன்னும் கொஞ்சம் இன்ஸ்டாவில் அல்லது யூடியூப்பில் ஆழ்ந்து போவார்கள்

இன்னும் கொஞ்சம் செல்போனில் கேம் ஆடுவார்கள்

வேறென்ன செய்யப் போகிறார்கள் கூடுதலாகக் கிடைக்கும் நேரத்தைக் கொண்டு

இருக்கின்ற நேரத்தில் வாழப் பாருங்கள்

பிறகு கூடுதல் நேரத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று

இவர்களிடம் யார் சொல்லப் போகிறார்கள்

அப்படிச் சொல்வதற்கு யாருக்கு இங்கு நேரம் இருக்கிறது

அந்த நேரத்தில் விளம்பரம் ஓடும் ஓர் அலைவரிசையை மாற்றி

வேறு ஒரு அலைவரிசைக்கான அவசரத்தில் இருப்போர் என்னதான் செய்வார்கள்

*****

6 Aug 2025

ஆச்சரிய உலகில் உறைதல்

ஆச்சரிய உலகில் உறைதல்

மின்விளக்கைப் போட்டால்

சூழ்ந்து கொள்ளும்

தேனீக்களை எதிர்கொண்டே

காலைப் பொழுதில் எழுகிறேன்

வெளிச்சம் உள்ள வரை நிழல் இருக்கும்

இருளின் குழந்தையாய்

இருள் வந்தால் இறந்து விடும்

வெளிச்சத்தை வீழ்த்திய வீரனாய்

ரோடு ரோலர்களை ஆச்சரியமாகப் பார்ப்போர்

இன்று யார் இருக்கிறார்கள்

ஜேசிபிக்களை அதிசயித்துப் பார்ப்போர்

இன்று யார் இருக்கிறார்கள்

எல்லாம் ஒரு காலத்தில்

ஆச்சரியமும் அதிசயமும் தந்த ஊரிலிருந்து

பிறந்து வந்த நான்

மண்சாலைகளை ஆச்சரியமாகப் பார்த்து

அதன் மீது நடை பயில்கிறேன்

நீரோடும் நதிகளை ஆச்சரியமாகப் பார்த்து

அதில் நீந்துகிறேன்

ஆச்சரியங்களின் அர்த்தங்கள் மாறிப் போயிருக்கும்

உலகில்

காலை விடிவதையும்

பொழுது மறைவதையும்

ஒரு பூ மலர்வதையும்

ஒரு குழந்தை அழுவதையும் சிரிப்பதையும்

ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு

அப்படியே உறைந்து போய் விடுகிறேன்

*****