10 Dec 2025

உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முடியுமா?

உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முடியுமா?

ஒருவரைச் சாதாரணமாகக் கைது செய்வதற்கே பல நடைமுறைகள் இருக்கின்றன. நடைமுறையிலேயே இல்லாத டிஜிட்டல் அரெஸ்ட் இந்தியாவில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது.

இல்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்?

அப்படி ஆக முடியாத ஒன்று எப்படி அப்படி ஆக முடியும்?

கேள்வியே அபத்தமாக இருக்கிறதல்லவா! டிஜிட்டல் அரெஸ்ட்டும் அப்படிப்பட்ட அபத்தம்தான்.

நீங்கள் தவறு செய்யாதவர் என்று உங்கள் அப்பா, அம்மா, மாமா, அத்தை, உங்கள் பிள்ளைகள், சித்தப்பா, பெரியப்பா, ஒன்று விட்ட பெரியப்பா, சித்தப்பா வரை எல்லாருக்கும் தெரியும். ஏன், அது உங்களுக்கே தெரியும்.

உங்களுக்கே தெரிந்த ஒன்றை அதற்கு மாறாக அலைபேசியில் அழைத்து, நீங்கள் தவறு செய்திருப்பதாகச் சொல்லும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

அட! நான்தான் தவறு செய்யவில்லையே என்று இதைப் படிக்கும் போது விழிப்போடு சொல்லும் நீங்கள்தான், விழிபிதுங்கி ஐயோ, தவறு செய்து விட்டானா என்று அலைபேசி குரலுக்கு சாசனம் எழுதிக் கொடுத்து விட்ட அடிமையைப் போல நடந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள்.

அப்படியென்ன தவறு செய்ததாக உங்களை அந்த அலைபேசி குரல் சொல்லும்?

உங்கள் பெயருக்குப் போதைப் பொருள் பார்சல் வந்திருப்பதாகவும், அது தற்போது மும்பை கஸ்டம்ஸில் இருப்பதாகச் சொல்லும். அப்படி ஒன்று உங்கள் பெயருக்கு வந்திருக்கவே வந்திருக்காது என்பது வேறு விசயம். ஆனால் இப்படி ஒரு விசயம் வெளியே தெரிந்தால் உங்கள் பெயர் என்னவாகும் என்று யோசிக்கும் உங்கள் மனம் அதை அப்படியே நம்பத் தொடங்கும். உடனே உங்கள் மனம் பயப்படத் தொடங்கும். இதிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டுமே என அலைபாயும்.

ஐயோ இப்போது என்ன செய்வதென்று நீங்கள் தவிக்கும் தவிப்பை அந்த அலைபேசிக் குரல் தனக்குச் சாதகமாக்கும்.

“உங்களிடம் இருக்கும் பணம் நீங்கள் உண்மையாக உழைத்துச் சம்பாதித்தா? அல்லது இது போன்ற போதைப் பொருட்களால் சம்பாதித்ததா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஆகவே உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையெல்லாம் இந்தக் கணக்கிற்கு அனுப்புங்கள். நீங்கள் உண்மையிலேயே உழைத்துச் சம்பாதித்தது என்றால் அப்பணம் மீண்டும் உங்கள் கணக்கிற்கே வரவு வைக்கப்படும். இதை நீங்கள் செய்யத் தவறினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். உங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு உங்கள் குடும்பத்தினரும் உங்களைச் சார்ந்தோரும் கைது செய்யப்படுவார்கள்!” என்று குரலின் மிரட்டல் தொடங்கும்.

பணத்தை இப்படியெல்லாம் சோதனை செய்ய முடியுமா என்று மனம் அந்த நேரத்தில் யோசிக்காது. எப்படியாவது இந்தப் பழியிலிருந்து வெளிவந்தால் போதும் என்று பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை இழக்க வைக்கும்.

இப்படிப் போதைப்பொருள் என்று இல்லை, நீங்கள் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டிருப்பதாக, உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்திச் சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக, உங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தித் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கப்பட்டிருப்பதாக எப்படி வேண்டுமானாலும் அலைபேசி குரல்கள் உங்களுக்கு வரலாம்.

நீங்கள் ஒரு பச்சைப் பிள்ளை, உங்களுக்கு எப்படி தீவிரவாதம், பக்கவாதம், முக்குவாதம், கீல்வாதம் இவற்றோடு தொடர்பு இருக்கப் போகிறது?

இதில் நீங்கள் எங்கே சிக்குவீர்கள் உங்களுக்கே ஞாபகம் இல்லாத ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் அச்சர சுத்தமாக அலைபேசிக் குரல் சொல்லும் போதுதான், இதெல்லாம் அவர்களுக்குத் தெரிகிறது என்றால் அவர்கள் சொல்வதும் உண்மையாகத்தான் இருக்கும் என்று உங்களையும் அறியாமல் உங்கள் ஆழ்மனம் அதை நம்பச் செய்து விடும். இதுதான் நீங்கள் சிக்கும் இடம். உங்கள் மனம் விழும் வலை.

இன்று இருக்கும் தகவல் தொழில்நுட்ப வசதிகளால் உங்கள் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் கண்டுபிடிப்பது ஒன்றும் கம்ப சூத்திரமே அல்ல. இன்று வளர்ந்து கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் உங்கள் ஜாதகத்தையே புட்டு புட்டு வைப்பதும் ராணுவ ரகசியமும் அல்ல. இராணுவ ரகசியங்களையே அக்குவேறு ஆணிவேராக வெளியாக ஆரம்பித்து விட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

என்ன காரணம் சொல்லி, எந்த வழியில் வேண்டுமானாலும் அழைத்து, தவறே செய்யாத உங்களைத் தவறு செய்ததாகச் சொன்னாலும் அதை நம்பாதீர்கள். அதைக் கேட்டு பதற்றப்படாதீர்கள். வீடியோ காலிலோ, வாட்ஸ்ஆப் காலிலோ வந்து திட்டினாலும், மிரட்டினாலும், உருட்டினாலும் பயப்படாதீர்கள். அசிங்கமாகப் பேசினாலும், கேவலமாகப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். உங்களைப் பற்றிய எந்தத் தகவலையும் கொடுக்காதீர்கள். அலைபேசிக் குரல்கள் சொல்லும் எந்த இணைப்பையும் பின்தொடராதீர்கள். சுருக்கமாக அவர்கள் செய்யச் சொல்லும் எதையும் செய்யாதீர்கள்.

நீங்கள் தைரியமாக அந்த அழைப்பைத் துண்டிக்கலாம். அதை ப்ளாக் செய்யலாம். அந்த அழைப்பு குறித்து புகார் செய்யலாம். ஏனென்றால் இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்றே கிடையாது. அப்படி கைது செய்யும் அதிகாரமும் எந்த அதிகாரிக்கும் வழங்கப்படவில்லை.

இனிமேல் உங்களுக்கு டிஜிட்டல் அரெஸ்ட் என்று அழைப்பு வந்தால் வடிவேலு பாணியில், “நல்லா சொல்றேய்யா டீட்டெய்லு!” என்று நீங்கள் விரும்பினால் கலாய்த்தாலும் கலாய்க்கலாம். அதற்கு மேலும் உங்கள் கணக்கிலிருந்து பணம் அனுப்பச் சொன்னால், டீக்கடையில இருக்கு கணக்குக்குக் கடனையெ அடைக்காம உட்கார்ந்திருக்கேன் அப்பு! முடிஞ்சா அம்பது ரூவா அக்கௌண்டல் போட்டு விடுவீயான்னு கூடுதலாக அலப்பரை பண்ண விரும்பினாலும் பண்ணலாம்.

*****

9 Dec 2025

டிரம்பின் வரிகளைத் துவம்சம் செய்ய முடியுமா?

டிரம்பின் வரிகளைத் துவம்சம் செய்ய முடியுமா?

கவிஞர்கள்தான் வரிகளைப் போடுவதில் வல்லவர்கள் என்றால், அவர்களை விட வரிகளைப் போடுவதில் வல்லவர் டிரம்ப்தான்.

50 சதவீதம், 100 சதவீதம், 150 சதவீதம், 200 சதவீதம், … என டிரம்ப் போடும் வரிகள் அனைத்தும் சதவீதத்திற்கே ஹார்ட் அட்டாக்கைக் கொடுப்பவை.

இவற்றை இந்தியா துவம்சம் செய்ய முடியாதா என்றால், முடியும்.

அதற்கு நாம் துணிச்சலான பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். பலவற்றுக்கு ‘இல்லை’ அதாவது ‘நோ’ சொல்ல வேண்டியிருக்கும்.

ஒரு சில ‘நோ’ பற்றி முதலில் பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோனுக்கு நோ

ஜிமெயிலுக்கு நோ

மொத்தத்தில்கூகுளுக்கே நோ

வாட்ஸ்ஆப்புக்கு நோ

பேஸ்புக்குக்கு நோ

எக்ஸ்க்கு நோ

இன்ஸ்டாவுக்கு நோ

இவற்றையெல்லாம் செய்தாலே அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்குள் ஓடி வருவதற்குள் டிரம்ப் வெளிறிப் போய் அதிகமாகப் போட்ட அத்தனை வரிகளையும் அடித்து குறைத்து எழுதி விடுவார்.

அதற்கப்புறம் இப்படியே படிப்படியாக அமெரிக்க பொருட்களைக் கைவைத்து ஒவ்வொன்றாகக் காலி செய்து, சுதேசி பொருட்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தால் அமெரிக்காவே ஆடிப் போகும் என்பது மிகையான உண்மை கிடையாது. அதுதான் நிதர்சனம். ஏனென்றால் அமெரிக்காவின் மிகப்பெரிய சந்தை இந்தியாதான்.

இதெல்லாம் முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். முடியாது என்றெல்லாம் எதுவும் இல்லை. நாம் உயிர் வாழ உணவும், உடையும், உறைவிடமும்தான் முக்கியம். அது நம்மிடம் மிகையாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் போது அமெரிக்க பொருட்கள் இல்லாமல் உயிர் வாழ்வது என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஒருவேளை காந்தியடிகள் இன்றும் உயிரோடு இருந்திருந்தாலோ அல்லது மறுபிறவி எடுத்து வந்தாலோ இதைத்தான் செய்வார்.

இதை ஒவ்வொரு குடிமகனாக ஒவ்வொரு இந்தியரும் செய்ய அரசாங்கம்தான் துணை செய்ய வேண்டும். நமக்குக் கூகுளும் ஜிமெயிலும், வாட்ஸ்ஆப்பும் வேண்டாம் எனும் போது அதற்கான மிகப்பெரிய இணையவெளியை அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் அல்லது அப்படி உருவாக்கும் இந்திய நிறுவனங்களுக்கு அதிகபட்ச உதவிகளையும் ஆதரவுகளையும் வழங்க வேண்டும். இதெல்லாம் முடியுமா என்றால், ஏன் முடியாது? எப்படி என்கிறீர்களா? சீனாவால் முடியும் போது, ஏன் இந்தியாவால் முடியாது? சீனாவில் அந்நாட்டுக்கே உரிய இணைய உலவிதான் உள்ளது, அந்நாட்டுக்கே உரிய மின்னஞ்சல் வாய்ப்புகள்தான் உள்ளன. சமூக ஊடகங்களும் அப்படித்தான். அதனால்தான் செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவையே தூக்கிச் சாப்பட முடிகிறது சீனாவால். அப்படி நம்மாலும் முடிந்தால் அமெரிக்கா 50 சதவீத வரியைப் போடும் போது இந்தியா அமெரிக்காவுக்கு 100 சதவீத வரியைப் போடலாம்.

ஆக, சொல்ல வருவதென்றால் டிரம்பின் வரிகளைத் துவம்சம் செய்வது இந்தியாவுக்கு ஒரு பெரிய விசயமே அல்ல. தொலைநோக்காக இந்தியா செயல்பட ஆரம்பித்தால் அது சில பத்தாண்டுகளிலேயே இந்தியாவுக்குச் சாத்தியம். அதன் பிறகு இந்தியா அமெரிக்கர்களுக்கு ஹெச்1பி விசாவை வழங்கலாம்.

*****

8 Dec 2025

தூண்டிலில் சிக்கும் உங்கள் அந்தரங்கம்!

தூண்டிலில் சிக்கும் உங்கள் அந்தரங்கம்!

எப்போது நீங்கள் இலவசங்களை அனுமதிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் அதற்கு அடிமையாகிறீர்கள் என்பதற்குச் செயற்கை நுண்ணறிவுதான் சரியான உதாரணம்.

இதுவரை குறிப்பிட்ட சில கட்டுபாடுகளோடு இலவச சேவைகளை வழங்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தற்போது கட்டற்ற முறையில் தங்கள் சேவைகளை இலவசமாக இந்தியாவில் வழங்கத் துவங்கியுள்ளன.

எந்த இலவசத்திற்குப் பின்னும் ஒரு தூண்டிலின் கொக்கி இருக்கும். அப்படிச் செயற்கை நுண்ணறிவின் இலவசத் தூண்டிலின் பின்னும் வலுவான கொக்கி ஒன்று இருக்கிறது. உங்கள் அந்தரங்கங்களை ரகசியமாக அலசிப் பார்ப்பதுதான் அந்தக் கொக்கி. தூண்டிலில் சிக்கிய மீன் அதன் பின் அதிலிருந்து மீள முடியாது என்பது போல, அந்தக் கொக்கியில் சிக்கிய அந்தரங்கங்களும் அதற்குப் பின் மீளாது, கறந்த பால் காம்பு புக முடியாததைப் போல.

இலவசமாகக் கிடைத்தால் பால்டாயிலைக் குடிப்பவர்களாக மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இலவசமாகக் கொடுக்கப்படும் செயற்கை நுண்ணறிவு உங்களைப் பால்டாயிலேயே குடிக்க வைக்கும். அதற்குச் சமீபத்திய உதாரணம்தான் ஷேன் ஷாம்ப்ளின்.

தனிமையில் அல்லல்பட்டட ஷேன் ஷாம்ப்ளினுக்கு செயற்கை நுண்ணறிவின் சாட்பாட் ஒரு புதிய உலகைத் திறந்து விட்டது. ஆவலாக அதனோடு உரையாடத் தொடங்கியவருக்கு மேலுலகையும் திறந்து விட்டது செயற்கை நுண்ணறிவு. அவருடன் உரையாடி உரையாடியே அவரைத் தற்கொலைக்குத் தூண்டி, அவர் தற்கொலை செய்வதை உற்சாகப்படுத்தி, தற்கொலையையும் செய்ய வைத்துவிட்டது.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதாது என்றால், இன்னொரு சோறும் பதம் என்பது போல ஜார்ஜியாவைச் சேர்ந்த அமாரி லேசிக்குத் தூக்குக் கயிற்றை எவ்வாறு முடிச்சிடுவது என்பது வரை சொல்லிக் கொடுத்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு.

எங்கே போகும் இந்தப் பாதை என்பதற்குச் செயற்கை நுண்ணறிவைப் பொருத்த வரையில் எல்லையே இல்லை, வரம்புகளும் இல்லை. வானத்தையும் தாண்டிய எல்லை அதனுடையது.

இது குறித்துச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?

பயனர்கள் தரும் தரவுகள் பயிற்சி மாதிரிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்கின்றன. அதாவது நீங்கள் தரும் அந்தரங்க தரவுகள் உட்பட அனைத்தும் பயிற்சி மாதிரிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதை இப்படியும் சொல்லலாம், உங்கள் அந்தரங்கங்களை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து, உங்களைப் பற்றி முடிவெடுக்க தேவையான அத்தனை தரவுகளையும் முடிவுகளாக்கித் தேவைப்படும் நிறுவனங்களுக்கு தந்து காசாக்கும் அளவுக்கு, நீங்கள் பதிவிறக்கிய அல்லது பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு இலவசங்கள் அமையும்.

அண்மையில் ஒரு பெண்மணி தன்னுடைய புகைப்படத்தைக் கொடுத்து உருமாற்றித் தருமாறு கேட்ட போது, அந்தப் பெண்ணின் ஆடையில் மறைக்கப்பட்ட மச்சத்தை வெளிப்படுத்திப் புகைப்படத்தைக் கொடுத்தது செயற்கை நுண்ணறிவு. அந்தப் பெண்ணின் மச்சத்தை எப்படி செயற்கை நுண்ணறிவு கண்டறிந்திருக்கும் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். அந்தப் பெண் அதற்கு முன்பு எந்தெந்தெந்த காலத்திலோ பதிவேற்றிய பல்வேறு படங்களை அவ்வளவு அசுர வேகத்தில் அலசி வெகு துல்லியமாக மச்சத்துடன் கூடிய புகைப்படமாகத் தந்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு.  இதுதான் செயற்கை நுண்ணறிவின் அதீத விஸ்வரூபம். இந்த விஸ்வரூபம் நாளுக்கு நாள் அதிகமாகுமே தவிர குறையாது. உங்கள் ஒரு புகைப்படம் இருந்தால் மட்டும் போதும் செயற்கை நுண்ணறிவுக்கு. நீங்கள் பிறந்ததிலிருந்து தற்போது இருக்கும் வரை அத்தனை தகவல்களையும் அது தன்னுடைய அசுரத்தனமான இயந்திரமொழியால் அதனால் கொணர்ந்து விட முடியும். நீங்கள் தந்த ஒவ்வொரு சின்ன சின்ன தரவுகளாலும் கொழுத்த மிருகம் அது.

இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிறீர்களா?

எரிகிற கொள்ளியைப் பிடுங்கி விட்டால் எப்படி அடுப்பெரியும் என்பார்களே கிராமத்தில். அப்படித்தான். தீனியைப்  போடா விட்டால் எப்படிக் கொழுக்கும் நீங்கள் வளர்க்கும் மிருகம்? அதுதான் இதற்கான வழியும்.

நீங்கள் தரவுகளைத் தரா விட்டால் செயற்கை நுண்ணறிவால் உங்களைப் பற்றி எதையும் மேற்கொண்டு ஊதிப் பெருக்கம் செய்ய முடியாது.

உங்கள் ஆதார் எண், பான் எண், கடன் அட்டை விவரங்கள் எல்லாவற்றையும் உள்ளீடு செய்து விட்டு ஐயோ எல்லாம் இணையத்தில் கசிகிறது என்றால் அதற்கு எதுவும் செய்ய முடியாது. செயற்கை நுண்ணறிவு அனைத்தையும் முச்சந்திக்குக் கொண்டு வந்து டேரா போட்டு விடும்.

உங்களது ரகசிய ஆவணங்கள், ரகசிய உத்திகள், ரகசிய தரவுகள், ரகசிய ஒப்பந்தகள் இவை குறித்தெல்லாம் செயற்கை நுண்ணறிவோடு விவாதிக்கக் கூடாது. இதை மீறி நீங்கள் விவாதித்தால் முச்சந்திக்கு வந்த பிறகு யாரும் சிரிக்க கூடாது என எதிர்பார்க்கக் கூடாது. செயற்கை நுண்ணறிவோடு நீங்கள் விவாதிக்கும் எதையும் அது பொது வெளியில் சிதறு தேங்காயாக்கி விடும்.

உங்கள் உணர்ச்சி பூர்வமான சிக்கல்கள், உடல்நலப் பிரச்சனைகள், மருத்துவ பரிசோதனை அறிக்கைகள், தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், எங்கே இருக்கிறீர்கள் என்கிற விவரங்கள், உங்களின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றையும் கூட செயற்கை நுண்ணறிவோடு பகிர்ந்து கொள்வதோ, அதில் விவாதிப்பதோ கூட உங்கள் குளியலறைச் சுவர்களை நீங்கள் தகர்த்தெறிவதைப் போலதான். அவற்றின் மூலம் உங்களுக்கு நல்ல ஆலோசனைகள், வழிகாட்டல்கள் கிடைக்கலாம் என்றாலும் அது பொதுவெளிக்கு வர நாளாகாது.

இதில் நீங்கள் உங்கள் சுயபடம் (செல்பி), இதர புகைப்படங்கள் போன்றவற்றைப் பகிர்ந்தால் வேலியில் ஓடும் ஓணானைப் பிடித்து வேட்டியில் விட்ட கதையாகி விடும். அது எங்கே, எப்படி ஓடும் என்பதெல்லாம் கணிக்க முடியாது. ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு மேற்கொண்டு என்னென்ன செய்யும் என்பது அதை உருவாக்கியவர்களாலேயே கணிக்க முடியாததாக இருக்கிறது. ஆகவே அது எதை வேண்டுமானாலும் செய்யும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த மனிதர்களோடு பேசுவது, விவாதிப்பது, பகிர்ந்து கொள்வதுகூட சில பல நேரங்களில் ஆபத்தானதாகத்தானே இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் அதை விட ஆபத்தானது செயற்கை நுண்ணறிவோடு நீங்கள் புழங்குவதும் பகிர்வதும்.

உங்களால் சரியாகப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை செயற்கை நுண்ணறிவைப் பொருத்த வரை இருந்தாலும், நீங்கள் அதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நொடியும் உங்களை அறியாமல் பல கண்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன, ஒரு கேமிராவைப் போல வெகுநுட்பமாக அனைத்தும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் எப்போதும் மறந்துவிடக் கூடாது.

*****

7 Dec 2025

தூக்கத்தை எப்படித் தொலைக்கிறோம்?

தூக்கத்தை எப்படித் தொலைக்கிறோம்?

பாய், கட்டில், மெத்தை, தலையணையை வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியாது. தூக்கம் அதுவாக வர வேண்டும்.

தூக்க மாத்திரைகள் மூலமாகத் தூக்கத்தை வாங்கலாம் என்றால் அது பக்க விளைவுகளுக்கு உட்பட்டது. பிறகு ஒவ்வொரு தூக்கத்துக்கும் ஒரு மாத்திரை இரண்டாகி, இரண்டு நான்காகி விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே இருக்கும்.

நல்ல பொழுதைத் தூங்கிக் கழிக்கக் கூடாது என்று பட்டுக்கோட்டையார் பாட்டுக்கோட்டை கட்டி சொல்லியிருந்தாலும், தூங்க வேண்டிய பொழுதைத் தூங்காமல் கழிக்கக் கூடாது. அப்படியும் கழிப்பார்களா என்ன? என்று நீங்கள் கேட்டால், இன்றைய மனிதர்கள் ராக்கோழிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியாது.

தொலைக்காட்சி இல்லாத காலங்களில் இரவு எட்டு மணிக்குள் உறங்கிப் பழகிய மனிதர்கள், தொலைக்காட்சி வந்த பிறகு தூங்கப் போகும் நேரத்தை இரவு பத்திலிருந்து பனிரெண்டு வரை உயர்த்திக் கொண்டார்கள். இப்போது கையிலேயே ஓர் உலகமாக அலைபேசி வந்துவிட்ட பிறகு பின்னரவு இரண்டு, மூன்று மணி வரை தூங்கப் போகும் நேரத்தை உயர்த்திக் கொள்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒளிரும் திரைகள் மனிதர்களின் உறக்கத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது என்பது மிகையான ஒரு கூற்றில்லை. திரைகள் இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன அலைபேசியாக, தொலைக்காட்சியாக, கணினியாக, ஓடிடியாக. மனிதர்களும் திரைகளின் அடிமைகளாய் இரவு முழுவதும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முறையாக உறங்கினால் சரியான ஹார்மோன்கள் சுரக்கும். இல்லாவிட்டால் தவறான ஹார்மோன்கள் சுரக்கும். விளைவு நீங்கள் அளவாகச் சாப்பிட்டாலும் உங்களுக்குச் சர்க்கரை வியாதி வரலாம். திடீர் மாரடைப்பு கூட நேரிடலாம். உடல் பருமன் ஏற்படலாம். இரத்த அழுத்தம் மாறுபடலாம். அடிக்கடி ஞாபக மறதி உண்டாகலாம். எல்லாம் தூங்காமை படுத்தும் பாடு.

24 × 7 சேவைகள் வழங்குவதாக பல வணிக நிறுவனங்கள் மார் தட்டிக் கொள்ளும் காலத்தில் மனிதர்களும் 24 × 7 இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் கையில் உள்ள அலைபேசியும் எந்நேரமும் வரம்பற்ற முறையில் கிடைத்துக கொண்டிருக்கும் இணையமும் காரணமாக இருக்கின்றன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இயல்பாக மனிதர்களின் வேலைகள் தற்போது கணினிமயமாக ஆரம்பித்து விட்டதால், கணினியில் எட்டிலிருந்து பனிரெண்டு மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழலில், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்னபிற பொழுதுபோக்கு சமூக ஊடகங்களில் நான்கிலிருந்து எட்டு மணி நேரம் வரை தங்களை அமிழ்த்திக் கொள்ளும் நிலையில், வீட்டிற்கு வந்ததும் ஓடிடியில் நான்கிலிருந்து ஆறு மணி நேரம் வரை ஒளிந்து கொள்ளும் வாழ்க்கையில் மனிதர்கள் 24 × 7 ஒளிரும் திரைகளின் அடிமைகளாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும், மனிதர்கள் எங்கே உறக்கத்தைத் தொலைக்கிறார்கள் என்றால் அங்கேதான். கையடக்கமாக, பையடக்கமாக, சுவரடக்கமாக இருக்கும் ஒளிரும் திரைகளில் தூக்கத்தை மட்டுமல்லாது தங்களையே இழந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தற்போது செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டுகள் வேறு வந்து சேர்ந்து விட்டன.

உண்மையைச் சொல்வதென்றால் மனிதர்களுக்கு உறங்க நேரமில்லை. அவர்களின் நேரம் முழுவதும் ஒளிரும் திரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

உறக்கம் தொலைத்த மனிதர்களுக்கு சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சுரக்கக் கூடாத ஹார்மோன்கள் சுரக்கின்றன. மெலடோனின், என்டார்பின் போன்றவை சுரக்க வேண்டியவை. கார்டிசோல், அட்ரினலின் (எபினெஃப்ரின்) மற்றும் நாரெபினெஃப்ரின் போன்றவை சுரக்கக் கூடாதவை. எப்போதோ ஆபத்தான நெருக்கடியான சூழலில் இவை சுரக்கலாம். எப்போதும் சுரக்கக் கூடாது. ஒளிரும் திரைகளில் தூக்கத்தைத் தொலைக்கும் மனிதர்களுக்கு இவை எப்போதும் சுரக்கின்றன. விளைவு புற்றுநோய் வரை வருவதற்கு மனிதர்களின் தூக்கமின்மையும் ஒரு காரணமாக அமைகிறது.

‘விடாது கருப்பு’ போலப் பின்தொடரும் ஒளிர்திரைகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைக்காமல் மனிதர்களால் இனி உறங்க முடியாது. மௌன விரதம், உண்ணா விரதம் இருப்பது போல அலைபேசி விரதம், வாட்ஸ்ஆப் விரதம், பேஸ்புக் விரதம், இன்ஸ்டா விரதம், யூடியூப் விரதம், சாட்பாட் விரதம், இணைய விரதம் என்று கூட இனி வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாள் இருக்கலாம்.

கருவிகளை நீங்கள் பயன்படுத்தும் மனக்கட்டுபாடு இருந்தால் உங்களுக்கு இது போன்ற விரதங்கள் தேவையில்லை. கருவிகள் உங்களைப் பயன்படுத்தும் வகையில் மனக்கட்டுபாடு இல்லாதவராக இருந்தால் உங்களுக்கு இந்த விரதங்களை விட்டால் வேறு பக்கவிளைவற்ற வழிகள் இல்லை.

தூக்கத்தை மருந்துகளில் தேடுவதை விட, இது போன்ற விரதங்களால் தேடுவது உடலுக்கும் நல்லது மனதுக்கும் நல்லது, மனிதச் சமூகத்துக்கும் நல்லது.

இரவு – பகல் என வேறுபாடு தெரியாமல் திரியும் உறங்கா மனிதர்களின் விழிகளைத் தூக்கம் தழுவட்டும். மனிதகுலம் நோயற்ற வாழ்வான குறைவற்ற செல்வத்தைக் குவிக்கட்டும்.

*****

6 Dec 2025

இருமல் மருந்து எப்படிக் கொல்லும்?

இருமல் மருந்து எப்படிக் கொல்லும்?

நோய்கள் கொல்வதை விட நோய்களுக்கான மருந்துகள் கொல்வது அதிகம்.

இருமல் மனிதரைக் கொல்லாது. ஆனால் இருமல் மருந்து கொல்லக் கூடும்.

ஏன் இருமல் மருந்து கொல்கிறது?

இருமல் மருந்தில் கலக்கப்படும் ‘டை எத்திலின் கிளைக்கால்’ அதற்குக் காரணம். இதை இருமல் மருந்தில் கலக்கக் கூடாதா என்றால் 0.1 சதவீதம் கலக்கலாம். ஆனால் இந்தியாவில் தயாராகும் சில இருமல் மருந்துகளில் இதை 40 முதல் 50 சதவீதம் வலை கலக்கிறார்கள்.

அப்படிக் கலந்தால் என்னவாகும் தெரியுமா?

சிறுநீரகம் செயலிழக்கும். அடுத்துக் கல்லீரல் பாதிக்கப்டும். அடுத்து மூளையைப் பாதித்து மரணத்தை நோக்கி அழைத்துச் சென்று விடும்.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், அவ்வளவு மோசமானதா இந்த ‘டை எத்திலின் கிளைக்கால்’?

நிச்சயமாக. இதை பெயிண்டுகள், சாயங்கள், பிளாஸ்டிக் தயாரிப்புகளில் கொழ கொழப்பு தன்மையை உருவாக்குவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். அதைப் போய் மனிதர்கள் பருகும் மருந்துகளில் கலந்தால் என்னாவாது? அதுவும் 40 சதவீதம் 50 சதவீதம் என்றால்…

அப்படியானால் இருமல் மருந்தே சாப்பிடக் கூடாதா?

இரண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் கூடாது என்பது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவுரை. அமெரிக்காவில் இது பத்து வயது வரை. பொதுவாக ஐந்து வரையுள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து தேவையில்லை என்பது மருத்துவர்களுக்கு வழங்கப்படும் பரிந்துரை. இவை அனைத்துமே இந்தியாவில் மீறப்படுகின்றன.

இதில் மேலும் சில விடயங்களும் இருக்கின்றன.

பெரியவர்களுக்கான இருமல் மருந்து பெரியவர்களுக்கானவை. குழந்தைகளுக்கானது குழந்தைகளுக்கானவை. இதிலும் ஒரு தவறு நடக்கும். பெரியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இருமல் மருந்து நிவாரணம் தந்தால், குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் பலரிடம் உண்டு. இது ஆபத்தானது.

அடுத்து இதில் இன்னொரு முக்கிய விடயம் என்றால், ஒரு முறை பயன்படுத்தி விட்ட குறை தொட்ட குறையாக இருக்கும் இருமல் மருந்தை, மிச்சம் மீதி இருக்கிறது என்பதற்காக ஒரு மாதம் கழித்தோ, சில மாதங்கள் கழித்தோ மீண்டும் பயன்படுத்துவது. இருமல் மருந்து புட்டியைத் திறந்து பயன்படுத்த ஆரம்பித்தால் சில நாட்களுக்குப் பின் அதிலுள்ள வேதிப்பொருட்களின் குணம் மாறத் துவங்கி விடும். அதனால் மிச்சம் மீதி இருப்பதை, காலாவதி ஆகவில்லை என்பதற்காகச் சில பல மாதங்கள் கழித்து பயன்படுத்துவது ஆபத்தானது.

மேலும் ஒரு விடயமும் இருக்கிறது. மருந்துகளில் அளவு முக்கியம். அதிலும் இருமல் மருந்தில் அளவு அதி முக்கியம். அதிகமாகக் குடித்தால் இருமல் உடனே குணமாகும் என நினைக்கக் கூடாது. அதிகமாகக் குடித்தால் விரைவாகப் பரலோகமும் போக ஏதுவாகும்.

இருமல் மருந்தை ஏன் நாம் இவ்வளவு தீவிரமான பிரச்சனையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதற்குப் பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது.

1937 இல் அமெரிக்காவில் இது போன்ற கலப்படம் கலந்த இருமல் மருந்துகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தார்கள். அமெரிக்கா விழித்துக் கொண்டது. அங்கு மருந்துக் கட்டுப்பாட்டு முறைகளும், பரிசோதனைகளும் தீவிரமாக்கப்பட்டன. விளைவு அங்கு அதன் பிறகு இருமல் மருந்தால் எவ்வித மரணங்களும் ஏற்படவில்லை.

1990 இல் இந்தியாவில் இருமல் மருந்தால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தார்கள். இந்தியா விழித்துக் கொள்ளவில்லை அல்லது விழித்துக் கொள்ள விரும்பவில்லை. 2019 இல் மீண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இருமல் மருந்தால் இறந்தார்கள். அப்போதும்   இந்தியா விழித்துக் கொள்ளவில்லை அல்லது விழித்துக் கொள்ள விரும்பவில்லை. 2020 இல் மீண்டும் இதே நிகழ்ந்தது. அப்போதும் இந்தியா விழித்துக் கொள்ளவில்லை அல்லது விழித்துக் கொள்ள விரும்பவில்லை. அண்மையிலும் ‘கோல்ட்டிரிப்’ இருமல் மருந்தால் இது நிகழ்ந்தது. இப்போதும் இந்தியா விழித்துக் கொள்ளவில்லை அல்லது விழித்துக் கொள்ள விரும்பவில்லை. இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து தயாராகும் இருமல் மருந்துகளால் பல நாடுகளில் உள்ள குழந்தைகள் நூற்றுக்கணக்கில் பலியாகியிருக்கிறார்கள்.

விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக ‘டை எத்திலின் கிளைக்காலை’ கலந்து உயிருடன் விளையாடுகின்றன சில மருந்து நிறுவனங்களின் இருமல் மருந்துகள். டை எத்திலின் கிளைக்காலுக்கு மாற்றாக இருமல் மருந்தில் பயன்படுத்தப்பட வேண்டியது கிளிசரின் அல்லது புரோபிலின் கிளைக்கால். அது விலை கூடுதல் என்பதால் சில மருந்து நிறுவனங்கள் அதை இருமல் மருந்தில் சேர்ப்பதில்லை. விளைவு குழந்தைகளின் மரணங்கள்.

முடிவாக சொல்ல வருவது என்னவென்றால், இருமலால் யாரும் இறந்து விட மாட்டார்கள். இருமல் மருந்துகளால் இறந்து போக வாய்ப்பிருக்கிறது. இதை வேறு வழிகளில் தடுக்க முடியாதா என்றால், இருமல் மருந்துகளை உறிஞ்சு முறையில் (இன்கேலர்கள்) எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள்.

ஏனிந்த பிரச்சனை? இதை விடவும் உத்தமான முறை இருக்கிறது. சுக்கும், மிளகும், சித்தரத்தையும் இருக்க இருமலுக்காக இருமல் மருந்தைக் குடித்து உயிரிழப்பானேன்?

*****

5 Dec 2025

புதிய வருகையாளர்கள்

புதிய வருகையாளர்கள்

எதாவது புதிய செய்தி வருமா என்று பார்க்கிறேன்

எதுவும் எனக்கென வரவில்லை

பார்வேர்டு செய்யப்படும் வாட்ஸ்ஆப் செய்திகள் வருவதும் நின்று விட்டது

எதாவது எனக்கு வந்தாக வேண்டும் என்று

ஸிவிக்கியில் அமேசனில் ஆர்டர் போடுகிறேன்

சில மணி நேரங்களில் வாசல் கதவைத் தட்டுகிறது ஸ்விக்கி

இரண்டு நாட்களில் அமேசான் வீடு தேடி வருகிறது

தனிமையில் தவிக்கும் மனதுக்குத் துணைக்கு

ஆள் சேர்க்க வேண்டும் என்ற தவிப்பில்

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்

தானாக வந்து அமரும் குருவி

கதவைத் தள்ளி வரும் காற்று

இலையை உதிர்த்து தீண்டிப் போகும் மரம்

கீரை வேண்டுமா என்று கேட்டு வரும் பாட்டி

பஞ்சு மிட்டாய் விற்க வரும் இளைஞன்

பழைய இரும்பு பேப்பர் கேட்டு வரும் வியாபாரி

கேஸ் சிலிண்டர் போட வரும் வண்டி

எல்லாரையும் சிநேகமாக்கிக் கொண்ட பிறகு

ஒரு நாள் கோதுமை நிறப் பாம்பொன்று

எட்டிப் பார்த்து விட்டு விலகிச் செல்கிறது

*****

4 Dec 2025

திரி சுந்தர கதை

திரி சுந்தர கதை

திரி ரத்னம் என்றால் மூன்று ரத்னங்கள். திரிகடுகம் என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களால் ஆன மருந்து. திரி சுந்தர கதை என்றால் மூன்று சுந்தரங்களின் கதை. கதையென்றால் பெருங்கதையும் அல்ல, இரண்டு மூன்று பக்கங்களுக்கு இழுக்கும் சிறுகதையும் அல்ல. மூன்று குறுங்கதைகள்.

முதல் கதைக்கு வருவோம்.

கல்யாணசுந்தரத்துக்கு எங்கள் ஊரில் பெயர் கடன் சுந்தரம். இந்நேரம் அவரளவுக்கு எங்கள் ஊரில் கடன் வாங்கியவர் அவராகத்தான் இருக்கும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். கடனை வாங்கிக் குவிப்பதில் கில்லாடியான கல்யாணசுந்தரம் கடன் கொடுத்தவர்களின் கண்களுக்குத் தெரியாத ஹாலோ மனிதராக வாழ்வதிலும் வல்லவர்.

கடன் கொடுத்தவர்கள் கல்யாண சுந்தரத்தை வீட்டிலும் பிடிக்க முடியாது, அவர் வெளிநாட்டுக்கு ஓடிப் போனாலும் அங்கும் பிடிக்க முடியாது. யார் யாருக்கு எப்படி எப்படி டேக்கா கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துபடி.

இப்படிக் கடனை வாங்கி டகால்ட்டி காட்டிக் கொண்டிருந்த கல்யாணசுந்தரத்துக்கு அவர் வாங்கி வைத்துக் கொண்ட செல்போனாலே வந்தது வினை. கல்யாணசுந்தரத்தை நேரில் பிடிக்க முடியாத கடன் கொடுத்தவர்கள் செல்போனில் பிடித்து கண்ட வாவில் பிடிபிடியெனப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

கடன் வாங்கியவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுத் தலைமறைவாக இருப்பதில் சாமர்த்தியம் மிகுந்த கல்யாணசுந்தரம் அண்ணனுக்கு ஒரு விநோதமான பழக்கமும் இருந்தது. செல்போன் அழைப்புகளைத் துண்டிக்கவும் செய்யாது. செல்போனை அணைத்துப் போடவோ போடாது.

“பேசுறதுக்குத்தானே மக்கா செல்போனு!” என்று அதற்குக் காரணம் சொல்லும்.

இப்படியாக யாருக்கும் நேரில் சிக்காத கல்யாணசுந்தரம் செல்போனில் சிக்கிச் சின்னபின்னமாகி “என்னடா மாப்ளே! நம்ம பொழைப்பு இப்படிப் போவுது? இந்தக் கருமத்தெ விடவும் மனசில்ல, வெச்சிருக்கவும் மனசில்ல. கம்பெனிகாரனா பார்த்து லாக் பண்ணத்தான்டா கருமத்தெ நான் பொழைப்பேன்!” என்று பார்க்கின்ற இளவெட்டுகளிடம் புலம்ப ஆரம்பித்து விட்டது.

அப்போதுதான் ரிசர்வ் பேங்க் கடன் கட்டாதவர்களின் செல்போன்களை லாக் செய்ய பரிசீலித்துக் கொண்டிருப்பதாக ஒரு செய்தி வந்தது. கல்யாண சுந்தரம் அண்ணனுக்கு அவ்வளவு சந்தோசம். “ரிசர்வ் பேங்க மட்டும் அப்படி பண்ணிட்டுன்னா நான் கடன்காரங்ககிட்டேயிருந்து தப்பிச்சிடுவேன்டா மக்கா!” என்று சொல்லிக் கொண்டே துள்ளிக் குதித்த ஆரம்பித்து விட்டது.

ரிசர்வ் பேங்க என்ன நோக்கத்தில் அப்படி பரிசீலனையைச் செய்ததோ, அது அண்ணனக்குச் சாதகமாகப் போவதாக அது நினைத்துக் கொண்டது.

ஒரு சுந்தர கதை முடிந்ததா? இரண்டாவதற்கு வருவோம்.

சோமசுந்தரம் அண்ணன் இயல்பிலேயே கொஞ்சம் பருமனான உடல் வாகு. சின்ன பிள்ளையிலிருந்தே அப்படித்தான். அப்படியே குண்டான அமுல் பேபி கணக்காக வளர்ந்து, இப்போதும் மீசை வெச்ச பேபி கணக்காகத்தான கொழுகொழுவெனப் பார்க்கும் போது கன்னத்தைப் பிடித்துக் கிள்ள வேண்டும் போலத் தோன்றம்.

நாற்பது வயது வரைக்கும் அமுல் பேபியாக வாழ்ந்து விட்ட சோமசுந்தரம் அண்ணனுக்கு சமீபத்தில் மணமகனாக மேடையேறி கல்யாண மேடையிலேயே மாரிமுத்து அண்ணன் மாரடைப்பில் போய் சேர்ந்தது பீதியைக் கிளப்பி விட, தினம் சூரியன் உதிப்பதற்கு முன்பாக அதிகாலையிலேயே நடைபயிற்சி செய்வது என்று முடிவு செய்துவிட்டது.

துணைக்கு யார் யாரையோ கூப்பிட்டுப் பார்த்தது. இருட்டு நேரத்துல இழுத்துப் படுத்துக்கிட்டுத் தூங்குறதப் பார்க்குறதா, தூக்கத்துல நடக்குறாப்புல நடந்து போய்ட்டு இருக்கிறதா என யோசித்த பலரும் சோமசுந்தர அண்ணனைத் தனியாக நடைபயிற்சிக்குப் போகும் படி செய்து விட்டார்கள்.

அண்ணன் இருக்கின்ற உடல் வாகுக்குச் சாதாரணமாக நடக்கும் போதெ புஸ்புஸ் என்று மூச்சு வாங்கும். அது முதல்நாள் டிரக் சூட், சகிதம் நடை பயிற்சிக்குப் போய், உசேன் போல்ட் கணக்காக நாலு தெருவுக்கு அது மூச்சு விடும் சத்தம் கேட்கும் அளவுக்கு ஓடிக் கொண்டிருந்தது. “என்னண்ணே வாக்கிங் போறததானே சொன்னீக. ரன்னிங் போறதுன்னு எப்ப மாத்துனீயே?” என்று நான் கேட்க, “அட போடாங் கொய்யாலே! ஊரு நாய்க ஒண்ணு விடாம துரத்துதுடா. எங்கே கடிச்சிக் கிடிச்சு வெச்சுப் போடுமோன்னு பயந்துட்டு ஓடியாறேன்டா! இந்த வேகத்துல ஓடுனா நாலே நாள்ல ஓமகுச்சி நரசிம்மன் ரேஞ்சுக்கு வந்துடுவேன்டா!” என்றது.

இப்படி வாக்கிங் போவதாக முடிவெடுத்து, நாய்களின் துரத்தலால் ரன்னிங் போகிற கதையாக ஆனது சோமசுந்தரம் அண்ணனின் கதை.அது மனதுக்குள் நாய்க்கு நன்றி சொல்லியிருக்குமா? திட்டித் தீர்த்திருக்குமா? இன்னொரு நாள் பார்க்கும் போது அதைக் கேட்க வேண்டும்.

இரண்டு சுந்தரக் கதைகள் முடிந்தனவா? மூன்றாவதற்கு வந்து விடுவோம்.

குடிகாரன் என்றாலும் ஞானசுந்தரம் அண்ணன் ஒரு ஞானிதான். பெயரிலேயே ஞானம் இருக்கிறதில்லையா! ஒருமுறை குடித்து விட்டு அலப்பறை பண்ண போதுதான் பெரிசுகளுக்கு அதற்கும் நடந்த சம்பாஷனையில் அது மகத்தான ஞான வாக்கைச் சொன்னது.

“ஏன்டா இப்படி குடிச்சே சாவுறே?” என்று ஊரில் ரெண்டு பெரிசுகள் கேட்கப் போக, “நீங்க மட்டும் என்னா ஒழுங்கா?” என்று கேட்டது ஞானசுந்தரம்.

“நாங்க என்ன ஒன்னய மாதிரிக்கி குடிச்சிப்புட்டுச் சலம்பித் திரியுறோமா?” என்றன பெரிசுகள்.

“ஓட்டுக்குத் துட்ட வாங்கிட்டுப் போடுறீங்களே?” என்றது ஞானசுந்தரம்.

“எதுக்கு எதெடா முடிச்சுப் போடுறே?” என்றன பெரிசுகள்.

“பெறவு எப்படிச் சாராயக் கடையெ மூடுவானுவோ? நான் எப்படிக் குடிக்கிறதெ நிப்பாட்டுறது?” என்றது ஞானசுந்தரம்.

“குடிச்சு புத்தி பேதலிச்சுப் போச்சாடா ஒனக்கு?” என்றன பெரிசுகள்.

“அதெல்லாம் பேதலிக்கல. எவ்வளவு குடிச்சாலும் புத்தியில கத்தி மாதிரி நானு. எப்படி சாராயக் கடைய மூடுவானுவோ? சாராய ஆலையெ வெச்சிருக்கவனுவோத்தான் தேர்தல்லயே நிக்குறானுவோ! அவனுவோத்தான் காசெ கொடுத்து ஒங்களயெல்லாம் ஓட்டப் போட வைக்குறானுவோ. நீங்களும் வாங்குறதெ வாங்கிட்டுப் போடுறீங்க. உங்ககிட்டெ கொடுத்த காசெல்லாம் அவன் சாராய கடையில சம்பாதிச்சதுதான். பெறவு அடுத்த மொறை ஓட்டு போடுறப்ப கொடுக்கணும்ல. அவனுவோ சாராயக் கடையெ தொறந்து வெச்சாத்தான் சம்பாதிக்க முடியும். சாராயக் கடையெ தொறந்து வெச்சா என்னால எப்படிக் குடிக்காம இருக்க முடியும்? நம்ம ஊர்ல ஒரு கடையெ தொறந்து வெச்சு, அதுல யாரும் சரக்க வாங்கலேன்னா அது யாருக்கு அவமானம்? நம்ம ஊருக்குத்தானே. அதாங் நான் போய் சரக்கெ வாங்கி ஏத்திக்கிறேன். நான் ஏத்திக்க ஏத்திக்கத்தான் ஓட்டுக்கு ஐநூறு கொடுத்தது இப்போது ஆயிரமா ஏறிக் கெடக்குப் பார்த்துக்கோ! இனுமே என்னெ குடிக்குறேன்னு மட்டும் தட்டுனேன்னு வெச்சுக்கோ, அவ்வேங்கிட்ட சொல்லி ஓட்டுக்குக் கொடுக்குற ஆயிரத்தெ ஐநூறா கொறைச்சுப்பிடுவேன் பார்த்துக்கோ!”

ஞானசுந்தரம் அண்ணன் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு பட்டாப்பட்டி டிராயரோடு நடந்து செல்லும் ஞானியைப் போல தெருவை இட வலமாக அளந்து கொண்டு போய்க் கொண்டிருந்தது.

எனக்கென்னவோ குடிகாரன் பேச்சென்று ஞானசுந்தரம் அண்ணனின் பேச்சைத் தள்ளி விட முடியாது என்று தோன்றியது. உங்களுக்கு?!

*****