6 Aug 2025

ஆச்சரிய உலகில் உறைதல்

ஆச்சரிய உலகில் உறைதல்

மின்விளக்கைப் போட்டால்

சூழ்ந்து கொள்ளும்

தேனீக்களை எதிர்கொண்டே

காலைப் பொழுதில் எழுகிறேன்

வெளிச்சம் உள்ள வரை நிழல் இருக்கும்

இருளின் குழந்தையாய்

இருள் வந்தால் இறந்து விடும்

வெளிச்சத்தை வீழ்த்திய வீரனாய்

ரோடு ரோலர்களை ஆச்சரியமாகப் பார்ப்போர்

இன்று யார் இருக்கிறார்கள்

ஜேசிபிக்களை அதிசயித்துப் பார்ப்போர்

இன்று யார் இருக்கிறார்கள்

எல்லாம் ஒரு காலத்தில்

ஆச்சரியமும் அதிசயமும் தந்த ஊரிலிருந்து

பிறந்து வந்த நான்

மண்சாலைகளை ஆச்சரியமாகப் பார்த்து

அதன் மீது நடை பயில்கிறேன்

நீரோடும் நதிகளை ஆச்சரியமாகப் பார்த்து

அதில் நீந்துகிறேன்

ஆச்சரியங்களின் அர்த்தங்கள் மாறிப் போயிருக்கும்

உலகில்

காலை விடிவதையும்

பொழுது மறைவதையும்

ஒரு பூ மலர்வதையும்

ஒரு குழந்தை அழுவதையும் சிரிப்பதையும்

ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு

அப்படியே உறைந்து போய் விடுகிறேன்

*****

No comments:

Post a Comment