7 Jun 2025

ஒரு மொழியே போதும்!

ஒரு மொழியே போதும்!

ஒரு மொழிக் கொள்கையா? இருமொழிக் கொள்கையா? மும்மொழிக் கொள்கையா?

எது சரியானது?

இருமொழிக் கொள்கை என்றால் சுயசரிதையை இரு மொழிகளில் எழுதினால் போதும். மும்மொழி என்றால் மூன்று மொழிகளில், மூன்று புத்தகங்கள், மூன்று பதிப்பகங்கள்… நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

மூன்று மொழி பத்திரிகைகளுக்கும் நூல் விமர்சனத்துக்குப் புத்தகங்கள் அனுப்ப வேண்டும். இரண்டு பத்து இருபது என முடிகின்ற விசயம் மூன்று பத்து முப்பது என்றாகும்.

மூன்று மொழி பத்திரிகைகளையும் பின்தொடர வேண்டும். எதிர்வினைகள் வந்தால் மூன்று மொழிகளிலும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். கெட்ட வார்த்தைகளில் திட்டினால் மூன்று மொழிகளுக்கும் சென்று பொறுத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற நிலைகளை நினைத்துப் பார்க்கும் போதுதான் ஒருமொழிக் கொள்கையின் அருமை புரிபடுகிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் என்று சொல்லி, நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாற்றி, நாம் இருவர் நமக்கு ஏன் ஒருவர் என்று முன்னேற்றி, இன்று நாம் ஒருவர் நமக்கு மூன்று என்று அதிகம் செய்வது வருங்காலத்தில் நாம் ஒருவர் நமக்கு நூறு, இருநூறு என்று அதிகம் செய்ய கூட வாய்ப்பாகப் போய் விடும்.

எங்கள் தெரு பாட்டி ஒருத்தி இருக்கிறாள். பல் போன பொக்கைவாய். இன்னும் கைநாட்டுதான். குக்கிராமத்தில் கிளம்பி, விழுப்புரம், சென்னை, திருப்பதி வரை போய் விட்டு வந்து விடுகிறாள்.

பல மொழி படித்தென்ன? கைரேகை வைத்தால்தான் எனக்கும் காரியம் ஆகிறது, பாட்டிக்கும் காரியம் ஆகிறது.

எந்த மொழியும் தெரியாமல் எப்படி என்றால், உன்னைப் போல நான்கு மொழிகள் தெரிந்து கூடுவாஞ்சேரியில் இருப்பதற்கு எதற்கடா மொழிகள் என்கிறார்?

யாமறிந்த மொழிகளில் இனிமையான தமிழ் மொழி,

பக்கத்தில் பெரியாறு தண்ணீர் தராத சேட்டன்கள் சேச்சிகள் பேசும் மலையாள மொழி,

மேலே காவிரி தண்ணீர் தராத கர்நாடகத்தின் கன்னட மொழி,

இப்படி எத்தனை மொழிகள் இருந்தாலென்ன? அதை அறிந்தாலென்ன? கூகுளிடம் கொடுத்தால் எல்லா மொழிகளையும் சொல்லி விடுகிறது. இதற்கு எதற்கு இரு மொழி? ஒரு மொழியே போதுமானது. மூன்று மொழிகள் என்பதெல்லாம் ரொம்பவே அதிகம்.

இருமொழியா? மும்மொழியா? இது ஒரு பிரச்சனையா? அது கூகுளின் பிரச்சனை என்று எளிதாக முடித்து விடுகிறாள் பாட்டி.

இது போன்று பேசி மூக்கறுபடும் நிலைகளை நினைத்துப் பார்க்கும் போது, பாட்டியிடம் பேசுவதற்கு மௌனம் மிகச் சிறந்த மொழி.

அந்த மொழியை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்.

கற்றுக் கொள்வதற்கு எளிமையான மொழியாக இருந்தாலும் கடைபிடிப்பதற்கு மிகவும் கடினமான மொழி மௌனம்.

*****

No comments:

Post a Comment