9 Feb 2025

Deep Seek – எங்கே, என்ன, எப்படி ஆபத்து?

Deep Seek – எங்கே, என்ன, எப்படி ஆபத்து?

செயற்கை நுண்ணறிவில் ‘சாட் ஜிபிடி’ ஒரு பெரும் பாய்ச்சல். அதைத் தாண்டிய மற்றொரு பாய்ச்சல் ‘டீப் சீக்’.

‘சாட் ஜிபிடி’ வந்த போது ஏற்படாத பதற்றம் இப்போது ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

முதல் காரணம் :

‘சாட் ஜிபிடி’ அமெரிக்க தயாரிப்பு.

‘டீப் சீக்’ சீன தயாரிப்பு.

இரண்டாவது காரணம் :

வழக்கமாகத் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முந்திக் கொள்ளும்.

இந்த முறை சீனா முந்திக் கொண்டது.

மூன்றாவது காரணம் :

இது போன்ற மென்பொருட்கள் பொதுப்பயன்பாடாக (ஓப்பன் சோர்ஸ்) வெளிவராது.

‘டீப் சீக்’ அப்படி வந்திருக்கிறது.

நான்காவது காரணம் :

ஏற்கனவே தகவல் தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளை அபரிமிதமாகப் பிடுங்கியுள்ளது. இதில் செயற்றை நுண்ணறிவும் சேர்ந்து கொண்டால் என்ன செய்வது?

ஐந்தாவது காரணம் :

பொதுவாக மென்பொருட்கள் மற்றும் செயலிகள் பயனர்களின் தரவுகளைத் திரட்டுகின்றன. அவை எப்படி பயன்படுத்தப்படும் என்ற அச்சம் வழக்கமாகவே ஏற்படுகிறது. ‘டீப் சீக்’ஐப் பொருத்தவரை இந்த அச்சம் பேரச்சமாகவே உருவெடுத்திருக்கிறது.

‘டீப் சீக்’கின் அபாயத்தைப் புரிந்து கொள்வது உங்களுக்குக் கடினமாக இருந்தால், நீங்கள் இதற்கு முன் வெளியான சீன செயலியான டிக் டாக்கையே ஒப்பிட்டு அனுமானிக்கலாம்.

பயனர்களின் தகவல்கள் குறித்த தரவுகள் தனியுரிமைகளின் அடிப்படையில் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. சீன நிறுவனங்கள் அதை எப்போதுமே கடைபிடித்ததில்லை என்பது இதில் தற்போது ஏற்பட்டிருக்கும் சலசலப்பு.

தன்னைத் தாண்டி சீனா எழுச்சி பெறுவதை அமெரிக்கா விரும்புவதில்லை. சீனா என்றில்லை, உலகில் எந்த நாடும் அமெரிக்காவைத் தாண்டி எழுச்சி பெறுவதை அமெரிக்கா விரும்பாது.

‘முன்னனி’ என்கிற இந்த ஓட்டப் பந்தயத்தில் ‘சாட் ஜிபிடி’யைப் பின்னுக்குத் தள்ளி விட்டு சீனாவின் ‘டீப் சீக்’ முந்தியதை அமெரிக்கா கிஞ்சித்தும் கூட விரும்பவில்லை. அமெரிக்கா விரும்பவில்லை என்றால், அது அமெரிக்கா முதலீட்டாளர்கள் என்ற ஆகுபெயருக்கானது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், இந்தப் பிரச்சனையை உங்களால் அணுகிப் பகுத்துப் பார்க்க முடியாது.

‘சாட் ஜிபிடி’ அமெரிக்கப் பங்குச் சந்தையில் இல்லை. இருப்பினும் அதில் முதலீடு செய்த மைக்ரோசாப்ட்டின் பங்குகள் ‘டீப் சீக்’கின் வரவால் அடி வாங்கின. இது திரைப்படங்களில் இடம் பெறும், “இங்கே அடித்தால், அங்கே வலிக்கும்” பஞ்ச் வசன கதைதான்.

அதுமட்டுமல்லாது, செயற்றை நுண்ணறிவுக்கான சிப்புகளைத் தயாரிக்கும் என்விடியா நிறுவனப் பங்குகளும் அடி வாங்கின.

சீனா அமெரிக்காவை முந்திச் சென்று விடுமோ என்ற அச்சம் உலக முதலீட்டாளர்கள் அனைவருக்குமே வந்து விட்டது. அப்படி முந்திச் செல்வதில் முதலீட்டாளர்களுக்கு என்ன அச்சம் என்றால், சீனாதான் அதன் பிறகு உலகின் நாட்டாமை. அப்படி நடந்து, சீனா உலகின் நாட்டாமையானால் அது முதலாளித்துவத்தை அனுமதிக்குமா என்பதே முதலீட்டாளர்களின் அச்சம்.

அதைத் தாண்டி பெருநிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் என்னவென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பத்து ரூபாய்க்குப் பெரு நிறுவனங்கள் விற்ற பொருளை இன்று பத்து பைசாவுக்கு விற்பதற்கு ஒரு நிறுவனம் வந்து விட்டது என்றால், பத்து ரூபாய்க்கு பொருள் விற்ற நிறுவனத்துக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது, இப்போது ‘டீப் சீக்’கின் வரவால் பல நிறுவனங்களுக்கு.

அத்துடன் சீன நிறுவனத்தின் ஓங்குதலால் பயனர்களின் தனியுரிமைக்கான தரவுகள் பாதுகாப்பாக இருக்குமோ என்ற கேள்வியும் பெரும்பான்மையாக எழுகிறது.

இந்நிலையில் பயனர்கள் தங்கள் தரவுகளைத் தராத வகையில் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. வேறு வழிகள் புலப்படுவதாகத் தெரிந்தால் விரைவில் எழுதுகிறேன். அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...