6 Feb 2025

இணைய வழியில் கோமியம் வாங்க இணைந்தவர்கள்!

இணைய வழியில் கோமியம் வாங்க இணைந்தவர்கள்!

சரஸ்வதி சபதம் என்ற திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா?

ஏ.பி. நாகராஜன் இயக்கியது.

இத்திரைப்படத்துக்குப் புதுமைப்பித்தனின் வாக்கும் வாக்கும் அடிப்படை என்பார்கள்.

இத்திரைப்படத்தில் ஒரு பாடல்.

“கோமாதா எங்கள் குலமாதா”

கண்ணதாசன் இயற்றியது.

கே.வி. மகாதேவனின் இசையில் சுசீலா பாடியது. கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

பாடலைக் கேட்க கேட்க உங்களுக்குக் கோமாதா மேல் இனம் புரியாத ஓர் ஈர்ப்பு வந்துவிடும்.

அப்படிப்பட்ட கோமாதாக்களின் கோமியமும் சாணமும் உயர்தரமான எரு வகைகள்.

இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்வியம் தயாரிப்பில் முக்கியமாகப் பயன்படுபவை.

சாணத்தை உலர வைத்து எரித்துப் பெறப்படும் விபூதியானது வழிபாட்டுப் பொருள்.

இருப்பினும் கோமியத்தைக் குடித்தால் எல்லாம் சரியாகி விடும், காய்ச்சல் கூட குணமாகி விடும், புற்றுநோய் வரை சரியாகும் என்று சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது?

இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) இயக்குநர் ஒருவரே கோமியத்தால் காய்ச்சல் குணமாகும் என்று சொல்வதை எப்படி புரிந்து கொள்வது?

கோமியத்தைக் கொடுக்கும் கோமாதாக்களுக்கே கோமாரி நோய் வருகிறதே!

இப்போதெல்லாம் கோமாதாக்கள் புல்லையும் வைக்கோலையுமா தின்கின்றன?

மாடு வளர்ப்பே அருகி விட்டது. வளர்ப்பவர்களும் மாடுகளைத் தெருதெருவாக அலைய விடுகிறார்கள். தெருதெருவாக அலையும் கோமாதாக்கள் தின்பதெல்லாம் காகிதக் கோப்பைகளையும் (பேப்பர் கப்புகள்), நெகிழிப் (பாலிதீன்) பைகளையும், மீந்து போன மற்றும் வீணாகிப் போன உணவுகளையும்தான்.

கால்நடை மருத்துவரைக் கேட்டால் மாடுகளுக்கு வரும் நோய்கள் குறித்து ஒரு பெரிய பட்டியலையே தருவார்.

நிலைமை எப்படி இருக்கிறது என்றால், கோமியத்தால் நோய்களைக் குணப்படுத்தும் கோமியத்தைத் தரும் கோமாதாக்களைக் குணப்படுத்த கால்நடை மருத்துவர்கள் தேவையாக இருக்கிறார்கள்.

கோமியத்தைக் குடித்தால் டாஸ்மாக் விற்பனை கூட குறைந்து விடும் என்று சமூக ஊடகங்களில் பரவுகின்ற கருத்துகளையும் காண முடிகிறது. இது போன்ற கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு இணையவழியில் (ஆன்லைனில்) கோமியம் விற்பனையும் படு ஜோராக நடக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், எவ்வளவு யோசித்தாலும் கோமியம் என்பது கழிவு நீர்தான். கழிவு என்பது இயற்கைக்கும் தாவரங்களுக்கும் எருவாக இருக்கலாம். நுண்ணுயிர்களுக்கு ஆதாரமாக இருக்கலாம். மனிதர்களுக்கு அது மருந்தாக இருக்குமானால், நாட்டில் ஏன் இவ்வளவு மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ ஆய்வகங்கள்?

“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள், 355)

மெய்ப்பொருள் காண்பதே அறிவே.

அது கோமியம் எனும் பொருளாக இருந்தாலும்!

*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...