14 Feb 2025

பிப்ரவரி 5 – ஏன் மறக்க முடியாத நாளாகிறது?

பிப்ரவரி 5 – ஏன் மறக்க முடியாத நாளாகிறது?

பிப்ரவரி 5 இன் சிறப்பு என்னவென்று தெரியுமா?

ரொனால்டோ பிறந்த நாள் அன்றுதான்.

உலகின் முதல் செயற்கை பிளாஸ்டிக் அன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மகா கும்பமேளாவைப் பார்வையிட்டுப் புனித நீராடிய நாள் அன்றுதான்.

மற்றபடி இந்த பிப்ரவரி 5, 2025 இன் சிறப்பு என்னவென்றால் என்ன சொல்வீர்கள்?

அது ஒரு தலைகுனிவான நாள் இந்தியாவுக்கு!

இந்தியர்கள் எவ்வளவு கண்ணியமானவர்கள். அவர்கள் கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டார்கள்.

இந்தியர்கள் எவ்வளவு நாகரிகம் மிகுந்தவர்கள். அவர்கள் அநாகரிகமாக அழைத்து வரப்பட்டார்கள்.

இந்தியர்கள் எவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர்கள். அவர்கள் குற்றவாளிகள் போலக் கொண்டு வரப்பட்டார்கள்.

இந்தியா என்ன சாதாரண நாடா?

உலக மக்கள் தொகையில் முதலிடம்.

பரப்பளவில் ஏழாம் இடம்.

இராணுவத்தில் நான்காம் இடம்.

கொலம்பியா போன்ற சிறிய நாடுகள் தங்களது குடிமக்கள் கண்ணியக்குறைவான முறையோடு அமெரிக்க ராணுவ விமானங்களில் திருப்பி அனுப்பப்பட்ட போது அமெரிக்க ராணுவ விமானத்தைத் திருப்பி அனுப்ப முற்பட்டன. தங்கள் எதிர்ப்பைக் காத்திரமாகப் பதிவு செய்தன.

மெக்சிகோ தனது குடிமக்களைக் கண்ணியக் குறைவோடு அமெரிக்கா அனுப்பியதை ஏற்க மறுத்தது.

பிரேசில் அவமாரியாதை செய்து விட்டதாகக் கொந்தளித்தது.

இந்தியா?

205 இந்தியர்களை அமெரிக்கா கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பியதை ஏற்றுக் கொள்கிறது.

சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைத் தனி விமானம் மூலமாகத்தான் அனுப்ப வேண்டும் என்று உலகளாவிய விதிகள் இருக்கும் போது, போர் விமானத்தில் அடிமைகள் போல அமெரிக்கா அனுப்பியதை எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அனுமதிக்கிறது.

இன்னும் ஏழரை லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியிருப்பதாக அமெரிக்கா சொல்கிறது. அவர்களில் 18 ஆயிரம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் விளம்புகிறது. அவர்களில் 2650 பேரைக் கைது செய்திருப்பதாகவும் கூறுகிறது.

அவர்களையும் இப்படித்தான் அமெரிக்கா அனுப்பப் போகிறது. அதையும் வழக்கம் போல இந்தியா எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறது. அதாவது, சி17 ராணுவ விமானத்தில் கை – கால்களை விலங்கிட்டு, குற்றவாளிகள் போல, கண்ணியக்குறைவோடு பஞ்சாப்பின் அமிர்தசரசில் இறக்கியது போல.

இதைத்தான் பாரதியார்,

“நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சி அஞ்சி சாவார் - இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே”

“கரும்புத் தோட்டத்திலே – அவர்

கால்களும் கைல்களும் சோர்ந்து விழும்படி”

“துன்பத்தை நீக்க வழியில்லையோ – ஒரு

மருந்து இதற்கிலையோ?”

என்றெல்லாம் பாடினாரோ?!

*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...