2 Aug 2024

ஆலகால விஷம் தோய்ந்து விட்ட உணவுக் கலாச்சாரம்!

எப்படி இருக்கிறது நமது உணவுக் கலாச்சாரம்?

நம் உணவுக் கலாச்சாரம் எப்படி இருக்கிறது என்ற வினாவை எழுப்பிக் கொள்வதற்கு முன்பாக நமது உணவுக் கலாச்சாரம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

பசித்தால் புசிப்பதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

உணவே மருந்தாக இருந்ததுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

வரு முன் காப்பதை அதாவது நோய்கள் வரு முன் காப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்ததுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

வந்தாரை உபசரித்து விருந்தோம்புவதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

முந்தை நாள் சமைத்தது அமிர்தமாக இருந்தாலும் அதை உண்ணாமல் அன்றன்று சமைத்து உண்டதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

உணவை வீட்டில் சமைத்து உண்டதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

வெளியிடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு சென்றதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

இயற்கையாக விளைந்ததை இயற்கையோடு இயற்கையாகக் கலந்து உண்டதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

நோயென்று வந்தால் பட்டினி கிடந்து அதைப் போக்கிக் கொண்டதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

இப்போது எப்படி இருக்கிறது நமது உணவுக் கலாச்சாரம் என்பதை நீங்களே சொல்லி விடுவீர்கள்.

அவசர அவசரமாக அலைபேசியையும் தொலைக்காட்சியையும் பார்த்தபடி உண்ணுவதுதான நமது உணவுக் கலாச்சாரமாக இருக்கிறது.

பசித்தாலும் சரி, பசிக்காவிட்டாலும் சரி, உணவை உள்ளே தள்ளுவதுதான் நமது உணவுக் கலாச்சாரமாக இருக்கிறது.

மருந்தே உணவாக இருப்பதுதான் நமது உணவுக் கலாச்சாரமாக இருக்கிறது.

வந்த பின் நோய்களுக்கு மருத்துவம் செய்வதும், அதற்கேற்ப நாவைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்டதையும் தின்று மேலும் மேலும் நோய்களை அதிகரித்துக் கொள்வதே நமது உணவுக் கலாச்சாரமாக இருக்கிறது.

வந்தாரை உபசரிக்கும் பழக்கமெல்லாம் மாறி, காசு கொடுத்து தண்ணீரை வாங்குவதால் தண்ணீர் பருகுகிறீர்களா என்பதைக் கேட்பதைக் கூட தவிர்க்கும் கலாச்சாரமாக இருக்கிறது நமது பட்டும் படாத, தொட்டும் தொடாத நாகரிக கலாச்சாரம்.

வெளியிடங்களுக்குச் சென்றால் துரித உணவை வாங்கித் தின்பது நவீன உணவுக் கலாச்சாரமாக உருவாகி இருக்கிறது.

ரசாயனத்தில் விளைந்ததை ரசாயனத்தோடு கலந்து உண்ணுவது காலத்திற்கேற்ற தவிர்க்க முடியாத உணவுக் கலாச்சாரமாக மாறி இருக்கிறது.

நீராகாரத்தையும், நீர்மோரையும், பழச்சாறுகளையும் பருகிய உணவுக் கலாச்சாரம் கார்பனேட் பானங்களைப் பருகும் வேதியியல் கலாச்சாரமாக மாறி இருக்கிறது.

ஒரு நாள் சமைத்ததை பல நாட்களுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துத் தின்னும் உணவுக் கலாச்சாரம் குக்கிராமங்கள் வரை பரவலாகி இருக்கிறது.

நமது உண்ணும் உணவும்தான் எவ்வளவு மாறி விட்டது.

நாம் பருகும் பால் மாட்டிலிருந்துதான் வருகிறதா?

எண்ணெய் தாவரங்களிலிருந்துதான் எடுக்கப்படுகிறதா?

இயற்கை எரு போட்ட விளைபொருட்களைத்தான் உண்கிறோமா?

பருகும் நீர்தான் இயற்கையாக இருக்கிறதா? புட்டியில் அடைபட்ட நீரில் எத்தனை எத்தனை ரசாயனங்களோ? எவ்வளவு பூச்சிக்கொல்லிகளோ? யார் அறிவார்கள்?

சுருங்கச் சொன்னால், ஆரோக்கியமற்ற உணவைத்தான் உண்கிறோம். ஆரோக்கியமற்ற வாழ்வைத்தான் வாழ்கிறோம்.

ஆனால் புத்தர் சொல்கிறார்,

“ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. அது பலவீனமும் துயரமும் கொண்டது. அது மரணத்தின் கண்ணாடி.”

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பாகப் புத்தர் சொன்னது? அது இன்றும் மிகச் சரியாகப் பொருந்துகிறதுதான் வேதனை.

ஆரோக்கியத்தை நோக்கி நாம் நகர வேண்டும். வேறு என்ன வழியிருக்கிறது சொல்லுங்கள். அந்த ஆரோக்கியத்தை நாம் உண்ணும் உணவிலிருந்து, பருகும் நீரிலிருந்து தொடங்க வேண்டும். அது முடியுமா? நாம் வெகுதூரம் ஆரோக்கியமற்ற திசையில் பயணித்து விட்டோம். இருப்பினும் முன் வைத்த காலை பின் வைத்து திரும்புவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது? ஆரோக்கியமானதே நமது உணவுக் கலாச்சாரமாக இருக்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்! வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாருக்காவது புரிகிறதா? அரசியலுக்கு வருவார் என்று நி...