3 Aug 2024

எப்படி இருக்கிறது 2024 பட்ஜெட்?

எப்படி இருக்கிறது 2024 பட்ஜெட்?

நாட்டின் வரவு – செலவுத் திட்டத்தில் அதாவது பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களின் பெயரையும் சொல்ல வேண்டியதில்லை என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதற்காக ஆந்திராவும் பீகாரும் இப்படியா பட்ஜெட்டில் அதிகப்படியாக இடம் பெறுவது என்ற கேள்வி நாடு முழுவதும் ஒலித்து ஒலித்து எதிரொலிக்கவும் செய்கிறது. அதே நேரத்தில் ஏழாவது முறையாக இந்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்து விட்டு அவர் குறிப்பிட்ட வாசகம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழகத்தை ஆளும் கட்சி, வரி வாங்கத் தெரியும் போது, நிதி கொடுக்கத் தெரியாதா என்ற கேள்வியை வெளிப்படையாக எழுப்பி ஆர்ப்பாட்டங்களைச் செய்திருக்கிறது. மேலும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் உட்பட ஏழு மாநிலங்கள் புறக்கணித்திருக்கின்றன. இம்மாநிலங்கள் அனைத்தும் மத்தியில் ஆளும் கட்சியோடு கூட்டணியில் இல்லாதவை என்பது கவனிக்கத்தக்கது. இப்படி இதை குறுகிப் பார்க்கத் தேவையில்லை என்று நினைத்தால் மேலும் ஒரு கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அது என்னவென்றால்…

நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு 25 இடங்களைத் தற்போதைய மத்தியில் ஆளும் கட்சிக் கூட்டணிக்கு அளித்திருந்தால் தமிழ்நாட்டின் பெயரும் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் என்று ஒரு தமிழக அரசியல் தலைவரே வெளிப்படையாகக் கூறும் அளவுக்கு, அதுவும் மத்திய ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்த தலைவரே கூறும் போது நிதி அமைச்சரின் வாக்குமூலத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?

ஆதாயம் தருபவர்களுக்கே ஆதாயம் என்றால், இது கூட வாக்காளர்களைப் பணநாயகத்தை நோக்கித் திருப்பும் முயற்சிதானே? ஓட்டுக்கு நோட்டு என்பது நேரடி பணநாயகம் என்றால், இது போன்ற பட்ஜெட் புறக்கணிப்புகள் மறைமுக பணநாயகம் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?

இந்த 2024 பட்ஜெட் பற்றி பேச வேண்டிய மேலும் சில விசயங்களும் இருக்கின்றன.

மொத்த பட்ஜெட் 47.66 லட்சம் கோடியை எட்டுகிறது.

இதில் வேளாண்மைக்கான ஒதுக்கீடு 1.52 லட்சம் கோடி.

கல்விக்கான ஒதுக்கீடு 1.48 லட்சம் கோடி.

ராணுவத்துக்கு 4.55 லட்சம் கோடி.

இதிலிருந்து நீங்கள் பல உண்மைகளைப் பகுத்துணரலாம். அவற்றில் முக்கியமான சில பகுப்புகளை நீங்களே பாருங்களேன்.

வேளாண்மை, கல்வி ஆகிய இரண்டுக்குமான ஒதுக்கீட்டைச் சேர்த்தாலும் ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதை விட இன்னொரு பங்கு அதிகம்.

கடனுக்கான வட்டி செலுத்துவதற்கு மட்டும் பட்ஜெட்டில் 19 சதவீதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஐந்தில் ஒரு பங்கு. கணக்கிட்டுப் பார்த்தால் ராணுவத்துக்கு ஒதுக்குவதை விட அது இன்னொரு பங்குக்கும் கூடுதல்.

நம் நாட்டில் வேளாண்மை சார்ந்த தொழில்களில் இருப்போர் கணிசம். நாட்டின் பாதி மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பைத் தருவது அதுதானே. அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறைந்தபட்சம் பத்து சதவீதமாகவாவது இருக்க வேண்டாமா? மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.

வேளாண்மையின் நிலையே கல்வியின் நிலைக்கும் என்பதால் நாட்டின் முக்கியமான இரு கண்களான வேளாண்மையும் கல்வியும் பார்வை மங்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எழுத்தான் செய்கிறது.

வருமான வரியை எடுத்துக் கொண்டால் பழைய முறையிலான வருமான வரியை பழைமைக்குள் தள்ளி விட்டார்கள். வெகு விரைவில் அது வரலாற்றில் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. புதிய வருமான வரி முறையை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள் ஊதியதாரர்கள்.

அண்மைக்காலமாக அரசின் வரி விதிப்பைப் பார்த்து வரி தீவிரவாதம் அதாவது டாக்ஸ் டெரரிசம் என்கிறார்கள். பலருக்கும் இதில் உடன்பாடு இருக்கிறது. மாச சம்பளக்காரராக நீங்கள் வருமான வரி செலுத்துபவர் என்றால் உங்களின் ஒரு மாத ஊதியம் வருமான வரியாகச் செல்கிறது.

இது அத்தோடு நின்றாலும் பரவாயில்லை. மாத சம்பளக்காரரான நீங்கள் பெட்ரோல் அல்லது டீசல் போட்டு இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் செல்பவராக இருந்தால் பெட்ரோல் அல்லது டீசலுக்கு நீங்கள் செலவிடும் பாதித் தொகை வரியாகத்தான் போகிறது.

சரியென்று இது இத்தோடு நின்றாலும் கூட பரவாயில்லை. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் குறைந்தபட்சம் 8 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 28 சதவீதம் வரை சரக்கு மற்றும் சேவை அதாவது ஜி.எஸ்.டி. வரி.

 அத்தோடுதான் நிற்குமா வரிகள்? குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி என்று நீங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை என்பதை ஒரு நாள் நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தலை சுற்றக் கூடும் என்பதால் அதை நீங்கள் செய்யாமல் இருப்பதே நல்லது. வாழ்க்கையே இது பொய்யடா! வரி செலுத்துவது மெய்யடா! என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான் போலிருக்கிறது.

ஒரு நாட்டின் குடிமகன் ஒருவேளை வரி இல்லாமல் இருந்திருந்தால் தமது பொருளாதாரம் சரியாக இருந்திருக்குமோ என்று நினைக்கக் கூடாது இல்லையா?

எப்படி வரி வசூலிக்க வேண்டும் என்பதற்கு சங்கப்பாடல் ஒன்றிருக்கிறது. பிசிராந்தையார் எழுதியது. இதன் பொருளை நீங்களே அறிந்து கொண்டால்தான் சுவாரசியமாக இருக்கும். அதனால் பாடல் மட்டுமே இங்கு. பொருளை அறிய வேண்டியது உங்கள் பங்கு.

“காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,

மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போல,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.”                                   (புறநானூறு, 184)

இது எல்லாவற்றிற்கும் மேலாக நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகரும் ஒரு பொருளாதார நிபுணர்தான். அவர் எழுதிய ‘தி குருக்டு டிம்பர் ஆப் நியூ இந்தியா – எஸ்ஸேஸ் ஆன் எ ரிபப்ளிக் இன் கிரைசிஸ்’ என்ற புத்தகத்தைப் படித்தாலும் அவரும் இதைத்தான் சொல்கிறார். பொதுமக்களின் எண்ணம்தான் அப்படி இருக்கிறது என்றால் பொருளாதார நிபுணரின் கருத்தும் அப்படித்தான் இருக்கிறது என்றால் இந்த பட்ஜெட் எப்படி இருக்கிறது?

*****

No comments:

Post a Comment

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்! வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாருக்காவது புரிகிறதா? அரசியலுக்கு வருவார் என்று நி...