1 Aug 2024

நகரத்தில் இரண்டு அனுபவங்கள்!

நகரத்தில் இரண்டு அனுபவங்கள்!

நகரத்தில் இரண்டு அனுபவங்கள் என்பதை நரகத்தில் இரண்டு அனுபவங்கள் என்று எழுதினால் பரபரப்பைத் தரும். ஆனால் நகரம் வேறு. நரகம் வேறு. நரகத்தில் நீங்கள் சமாளித்துக் கொள்ளலாம். நகரத்தில் முடியாது. அதனால் நகரத்தில் இரண்டு அனுபவங்கள் என்ற தலைப்புதான் பொருத்தமாக இருக்கும்.

அனுபவம் 1 :

மவுலிவாக்கத்திற்குச் சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் அங்கிருந்தார். குடுமிப்பிடி சென்னையை விட்டு விட்டு ஏன் இப்படி மவுலிவாக்கத்தில் ஒதுங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் பல வித காரணங்களைச் சொன்னார். அக்காரணங்களில் எனக்கு முக்கியமாகப் பட்ட நான்கை மட்டும் இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்.

1. மவுலிவாக்கம் தஞ்சை மக்கள் அதிகம் வாழும் பகுதி. அடடா தஞ்சை மக்களோடு வாழ்வது ஒரு பெருமிதம் போல.

2. நல்ல தண்ணீர் கிடைக்கிறது. அப்படியானால் சென்னையில் கிடைப்பதெல்லாம் நல்ல தண்ணீர் இல்லை போல.

3. மவுலிவாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிறது. இது நகரம் மாதிரியும் இருக்காது, கிராமம் மாதிரியும் இருக்காது. இரண்டுக்கும் இடைபட்ட நிலையில் இருக்கும். நம் மக்கள் இரண்டும் கெட்டான் பகுதியில்தான் வசிக்க விரும்புகிறார்கள் போல.

4. என்னவோ இங்குதான் எனக்கு வீடு கிடைத்தது. அப்படியே தங்கி விட்டேன். தங்க தங்க இந்தப் பகுதி பிடித்துப் போய் விட்டது. இனி சென்னைக்கு எந்தப் பகுதிக்குப் போனாலும் பிடிக்காது. முதல் பிடித்தம் முற்றும் பிடித்தம் போல.

அனுபவம் : 2

குந்தாணி மகள் சாமுண்டேஸ்வரி திருமணத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த என்னை எழுந்து பின் வரிசைக்குப் போக சொல்லி விட்டார்கள். இதற்காகவா திருவாரூர் மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி தொடர்வண்டியில் முன்பதிவு செய்து இரண்டு நாட்களுக்கு முன்பாகச் சென்றேன்?

யாரோ முக்கிய விருந்தினர் வருகிறாராம். ஆங்கிலத்தில் வி.ஐ.பி. என்பார்களே. அவர் வருகிறாராம். இவரை வி.வி.ஐ.பி. என்றும் சொல்லலாமாம். அவர் இப்போதுதான் வருகிறார். நான் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விட்டேன், இரண்டு நாட்களுக்கு முன்பே திருமணத்திற்கு வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டதால்.

இப்போது வருபவருக்கு மரியாதை. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த எனக்கு எழுந்து பின்னால் போய்யா என்ற கடுகடு வார்த்தை. நானும் வி.ஐ.பி.ஐப்  போல அந்த நேரத்துக்கு வந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் இப்படியா கல்யாணத்திற்கு அந்த நேரத்திற்கு வருவது என்ற உபசரிப்பாவது கிடைத்திருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வந்ததால் இப்போது இரண்டு வரிசைக்குப் பின்னால் போய் ஏன்டா இந்தத் திருமணத்திற்கு வந்தோம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பாக்கு, வெற்றிலை, பத்திரிகை வைத்துச் சொல்வதையெல்லாம் இனி நம்பக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

அழைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். சொல்வதைக் கேட்டுப் போனால் அவஸ்தைகளையும் அவமரியாதைகளையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும். அதிலும் இந்த நகரத்து ஆசாமிகளுக்குக் கிராமத்து ஆசாமிகள் பற்றி என்ன கவலை?

நம் கிராமத்துத் திருமணங்கள் வேறு, நகரத்துத் திருமணங்கள் வேறு. இதைப் புரிந்து கொள்ளாவிட்டால், “பட்டிக்காடா பட்டணமா? ரெண்டும் கெட்டான் லட்சணமா?” என்று பாடிக் கொண்டே பேருந்து பிடித்துக் கிராமத்துக்கு வந்து சேர வேண்டியதுதான். எப்படி வசதி என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

*****

No comments:

Post a Comment

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்! வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாருக்காவது புரிகிறதா? அரசியலுக்கு வருவார் என்று நி...