22 Jan 2024

மூன்று நாட்களுக்குப் பின் இலவச சேவை கட்டணச் சேவை ஆகும்!

மூன்று நாட்களுக்குப் பின் இலவச சேவை கட்டணச் சேவை ஆகும்!

பங்குச் சந்தையில் பங்குகளை விற்கும் மற்றும் வாங்குவதற்கான குறிப்புகள் (ஸ்டாக் டிப்ஸ்) எப்படிக் கட்டணச் சேவையாக மாறுகிறது என்கிற கதை வேடிக்கையானது.

உங்களுக்கு குறுஞ்செய்தியாகவோ, புலனம் வழியாகவோ அல்லது இன்னபிற தொடர்பு ஊடகங்கள் மூலமாகவோ பங்குச் சந்தையில் லாபம் குவிப்பதற்கான பங்குகளை விற்றல் மற்றும் வாங்குதல் குறிப்புகளை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக செய்திகள் வரும்.

மூன்று நாள் இலவசச் சேவையைப் பரிசோதனை செய்துவிட்டுக் கட்டணச் சேவைக்கு மாறிக் கொள்ளலாம் என்று அந்தச் செய்தி தெரிவிக்கும்.

மூன்று நாட்கள் நீங்கள் சோதித்துப் பார்க்கும் போது உங்களுக்கு அந்தக் குறிப்புகள் லாபகரமாக அமையும். அதை நம்பி நீங்கள் கட்டணச் சேவையில் இணைந்தால் தொடர்ந்து நீங்கள் நட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அல்லது கட்ணத்தைச் செலுத்திய பிறகு உங்களுக்குச் செய்திகள் வராமல் போகலாம். ஏன் இப்படி நடக்கிறது? இதன் பின்னணிதான் என்ன?

அதற்கு முன் சிலவினாக்களை எழுப்பி விடை காண்பது முக்கியமாகிறது.

பங்குச் சந்தையில் எதை வாங்கி விற்றால் லாபம் கிடைக்கும் என்ற செய்தி தெரிந்த ஒருவர் அதைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதைப் பார்ப்பாரா? அல்லது உங்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க பார்ப்பாரா? அப்படி ஒரு நுட்பத்தை ஏன் அவர் உங்களுக்கு விற்க வேண்டும்? உண்மையில் அந்தச் செய்தி சரியாக நடக்குமானால் அவர் அதை வெளியில் சொல்லவே மாட்டார். அவரே பயன்படுத்தி அதிக லாபத்தைப் பார்ப்பார். பிறகேன் அவர் வெளியே சொல்கிறார்?

எந்தப் பங்கு எந்த நேரத்தில் இறங்கும், ஏறும் என்பது நூறு சதவீதம் சரியாக யாருக்கும் தெரியாது. பங்குகளை வாங்கி விற்று அல்லது விற்று வாங்கி லாபம் சம்பாதிக்க ஆசைப்படும் நபர்களைப் பயன்படுத்திச் செய்தி அனுப்புபவர் பணம் பண்ண நினைக்கிறார் என்பதுதான் இதன் பின்னணியில் இருக்கும் சூட்சமம். அவர் இதை ஒரு வியாபாரமாக மாற்றி பலரை ஏமாற்ற நினைக்கிறார். இந்தச் சங்கிலி எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிந்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள், இதில் என்ன நடக்கிறது என்பதை.

பங்குகளை விற்கும் மற்றும் வாங்கும் குறிப்புகளை அனுப்புவதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒருவர் முதலில் 200 பேருக்குச் செய்திகளை அனுப்புகிறார். அவர் எப்படி அனுப்புகிறார் என்றால் ஒரு குறிப்பிட்ட பங்கை இன்ன விலையில் வாங்கி இன்ன விலைக்கு விற்று லாபம் செய்யுமாறு 100 பேருக்கும், அதே பங்கை இன்ன விலையில் விற்று இன்ன விலைக்கு வாங்கி லாபம் செய்யுமாறு மற்ற 100 பேருக்கும் செய்தி அனுப்புகிறார். அதாவது ஒரு நூறு பேருக்கு வாங்கி விற்று லாபம் பார்க்கச் சொல்கிறார். மற்ற நூறு பேருக்கு விற்று வாங்கி லாபம் பார்க்கச் சொல்கிறார். இந்த இரண்டில் ஒன்றுதான் பங்குச் சந்தையில் நிகழச் சாத்தியம் என்பதால் அவர் அனுப்பிய இருவிதமான செய்திகளில் ஏதோ ஒன்று நடக்க வாய்ப்பிருக்கிறது.அதன் படி 200 பேரில் 100 பேர் லாபம் பார்த்திருப்பர், மற்ற 100 பேர் நட்டம் பார்த்திருப்பர்.  அவர் செய்தி அனுப்பியபடி லாபம் பார்த்த 100 பேரை மட்டும் அவர் அடுத்த நாள் செய்தி அனுப்ப தேர்ந்து கொள்கிறார். அவர் சொன்னபடி லாபம் பார்க்க முடியாத நட்டம் பார்த்த 100 பேரை அவர் அத்தோடு விட்டு விடுகிறார். இது முதல் நாள் நடப்பது.

இரண்டவாது நாள் அவர் என்ன செய்கிறார் முதல் நாள் செய்த வேலையை அப்படியே 100 ஐ இரண்டாகப் பிரித்து குறிப்பிட்ட பங்கை இன்ன விலையில் வாங்கி இன்ன விலைக்கு விற்று லாபம் பார்க்குமாறு 50 பேருக்கும், அதே பங்கை இன்ன விலையில் விற்று இன்ன விலைக்கு வாங்கி லாபம் பார்க்குமாறு மற்ற 50 பேருக்கும் செய்தி அனுப்புகிறார். இந்த இரண்டில் ஒரு வகையில்தான் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கச் சாத்தியம் என்பதால் அவர் அனுப்பிய இருவிதமான செய்திகளில் ஏதோ ஒன்றில் லாபம் பார்க்க வாய்ப்பிருக்கிறது. அதன்படி 50 பேர் லாபம் பார்த்திருப்பர். 50 பேர் நட்டம் பார்த்திருப்பர். அவர் செய்தி அனுப்பியபடி லாபம் பார்த்த 50 பேரை மட்டும் அவர் அடுத்த நாள் செய்தி அனுப்ப தேர்ந்து கொள்கிறார். அவர் சொன்னபடி லாபம் பார்க்க முடியாத நட்டம் பார்த்த  50 பேரை அவர் அத்தோடு விட்டு விடுகிறார். இது இரண்டாம் நாள் நடப்பது.

மூன்றாவது நாள் அவர் என்ன செய்கிறார் என்றால் முதல் நாள் மற்றும் இரண்டாவது நாள் செய்த அதே வேலையை 50 ஐ இரண்டாகப் பிரித்து குறிப்பிட்ட பங்கை இன்ன விலையில் வாங்கி இன்ன விலைக்கு விற்று லாபம் பார்க்குகுமாறு 25 பேருக்கும், அதே பங்கை இன்ன விலையில் விற்று இன்ன விலைக்கு வாங்கி லாபம் பார்க்குமாறு மற்ற 25 பேருக்கும் செய்தி அனுப்புகிறார். இந்த இரு வகையில் ஒரு வகையில்தான் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கச் சாத்தியம் என்பதால் அவர் அனுப்பிய இருவிதமான செய்திகளில் ஏதோ ஒன்றில் லாபம் பார்க்க வாய்ப்பிருக்கிறது. அதன்படி 25 பேர் லாபம் பார்த்திருப்பர். 25 பேர் நட்டம் பார்த்திருப்பர். அவர் செய்தி அனுப்பியபடி லாபம் பார்த்த 25 பேரை மட்டும் அவர் இப்போது கட்டணச் சேவையோடு பங்குகளை வாங்கும் விற்கும் குறிப்புகள் அனுப்புவதற்கான நபர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.

அவர் தேர்ந்து கொண்ட 25 பேரில் நீங்கள் ஒருவராக இருந்தால் நான்காவது நாள் செய்தி அனுப்ப அவர் உங்களிடம் கட்டணத்தைக் கேட்பார். உங்களுக்குத்தான் மூன்று நாளும் அவர் சொன்னபடி பங்குச் சந்தைக் குறிப்புகள் லாபம் தந்து விட்டதே. நீங்கள் இனி அவர் சொன்னபடிதான் பங்குச் சந்தை நடக்கும் என்று நம்பத் தொடங்கி விடுவீர்கள். அவர் கேட்கும் கட்டணத்தை அனுப்ப தயாராக இருப்பீர்கள். அவர் உதாரணத்துக்கு ஒரு மாத பங்குச் சந்தைக் குறிப்புகளுக்கு பத்தாயிரமோ, ஐம்பதாயிரமோ, ஒரு லட்சமோ கேட்கலாம்.

அவர் கேட்டபடி நீங்கள் உட்பட 25 பேரும் பத்தாயிரம் அனுப்பினால் இரண்டரை லட்சம் சம்பாதித்து விடுவார், ஐம்பதாயிரம் அனுப்பினால் பனிரெண்டரை லட்சம் சம்பாதித்து விடுவார், லட்ச ரூபாய் அனுப்பியிருந்தால் இருபத்தைந்து லட்சம் அனுப்பி விடுவார். நான்கே நாட்களில் அவர் இப்படி ஒரு மகத்தான தொகையைப் பெற்று விடுவார். இப்படித்தான் ஆசை வலை விரித்து பங்குச் சந்தைக் குறிப்புகளை விற்பதாக விற்பவர்கள் பணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது நீங்கள் உட்பட 25 பேரிடம் அவர் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு என்ன செய்வார்? அவர் செய்தி அனுப்பலாம் அல்லது அனுப்பாமல் போகலாம். ஒருவேளை அவர் செய்தி அனுப்பினாலும் அது இனி எப்படி வேலை செய்யும் என்பது உங்களுக்கே தெரியும்.

அவ்வளவுதான் அத்தோடு அவர் ஓய்ந்து விட மாட்டார். நாட்டில் இப்படி ஆசை வலையில் சிக்கிக் கொள்ளும் மக்களுக்கா பஞ்சம்? இப்போது அடுத்த 200 பேரைத் தொடர்பு கொண்டு தன் சங்கிலித் தொடர் வலைக்குள் உங்களைத் தேர்ந்தெடுத்ததைப் போலத் தேர்ந்தெடுத்து பணம் பறிக்கும் விளையாட்டைத் தொடங்குவார். அவர் எதிர்பார்த்தபடி மூன்று நாட்களில் 25 பேர் சிக்கியதும் இதே பண விளையாட்டை ஆட்களை மாற்றி மாற்றி விளையாடிக் கொண்டே இருப்பார்.

பங்குச் சந்தைப் பற்றிய எந்தக் குறிப்பையாவது தெரிந்து கொண்டு எப்படியாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை பிடித்த மனிதர்கள் இருக்கும் வரை இது போன்று சம்பாதிப்பவர்கள் சம்பாதித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்படித்தான் பங்குச் சந்தைக் குறிப்புகளை அனுப்புகிறேன் என்ற பெயரில் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். நீங்கள்தான் இதைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வோடு இருந்து கொள்ள வேண்டும். எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உணர்வோடு இருந்தால் நீங்கள் ஏமாறுவது நிச்சயம். நீங்கள் ஏமாறுவதை நீங்கள்தான் தடுத்துக் கொள்ள வேண்டும்.

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...