14 Dec 2023

பொருள் கொள்ளும் முறை!

பொருள் கொள்ளும் முறை!

பொருள் கொள்ளும் முறை என்றால் அர்த்தம் கொள்ளும் முறை என்றுதான் நீங்கள் நினைத்திருப்பீர்கள். இது பொருளை வாங்கும் முறை குறித்த ஒரு பத்தி. அதாவது ஒரு பொருளை எப்படி வாங்குவது? எப்படி வாங்குவது என்றால்…

பணம் சேர்த்துப் பொருள் வாங்குங்கள்!

இன்றைய நுகர்வு கலாச்சாரத்தின் பெரிய பிரச்சனை என்னவென்றால் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் ஒரு பொருளை வாங்க முடியும். உங்களுக்குக் கடன் தருவதற்கு ஏகப்பட்ட நிதி அமைப்புகள் உண்டாகி விட்டன.

உங்களைக் கடன்காரர் ஆக்கி விட்டுக் கடனுக்காக உங்களைச் சம்பாதிப்பவர்களாக இன்றைய பொருளாதார அமைப்பு முறை மாற்றி வருகிறது. நீங்கள் ஏன் கடனுக்காகச் சம்பாதிக்க வேண்டும்? கடனுக்காக உழைக்க வேண்டும்?

இனிமேல் பொருளை வாங்கி விட்டு அந்தப் பொருளுக்காகப் பணத்தைக் கட்டாதீர்கள். பணத்தைச் சேர்த்து விட்டு அதற்குப் பின் பொருளை வாங்குங்கள். இதில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. அப்படியென்ன நன்மைகள் என்கிறீர்களா?

இதனால் நீங்கள் மாதா மாதம் தவணைத்தொகை கட்டிச் சிரமப்பட வேண்டியதில்லை. தவணைத்தொகையோடு வட்டிக் கட்டி மாள வேண்டியதில்லை.

பொருளை வாங்கி விட்டு பணத்தைக் கட்டலாம் என்றால் நீங்கள் முதலில் பொருளைத்தான் பார்ப்பீர்கள். பொருளின் விலையைப் பார்க்க மாட்டீர்கள். இதுவே பணத்தைச் சேர்த்து விட்டுப் பொருளை வாங்க வேண்டும் எனும் போது பொருளின் விலையைப் பார்ப்பீர்கள். இவ்வளவு விலை கொடுத்து ஒரு பொருளை வாங்க வேண்டுமா என்றும் யோசிப்பீர்கள்.

இருபதாயிரம் பணம் கையில் இல்லாத போது இருபதாயிரத்துக்கு ஓர் அலைபேசியை நீங்கள் வாங்கி விடுவீர்கள். இதுவே இருபதாயிரத்தைச் சேர்த்த பிறகு ஓர் அலைபேசியை வாங்குவதாக இருந்தால் இவ்வளவு தொகை கொடுத்து ஓர் அலைபேசியை வாங்க வேண்டுமா என்று ஒரு கணம் நினைப்பீர்கள்.

அந்த நினைப்பு உங்களை எப்படி மாற்றும் தெரியுமா?

பத்தாயிரத்துக்கு ஓர் அலைபேசியை வாங்கி, விட்டு மீதி பத்தாயிரத்தைப் பயனுள்ள வகையில் வேறு செலவோ அல்லது முதலீடாக மாற்றிச் செய்ய வைக்கும்.

பணத்தைச் சிறுக சிறுகச் சேமிப்பது ஒரு நல்ல பழக்கம். சிறுக சிறுகச் சேமித்த பணத்தை அப்படியே செலவு பண்ண தோன்றாது. பணத்தைச் சேர்க்க ஆகும் காலத்தில் உங்கள் மனம் வாங்கப் போகும் பொருள் குறித்து மீண்டும் மீண்டும் யோசிக்கும். யோசித்து பல்வேறு பயனுள்ள யோசனைகளைக் கண்டறியும். அந்த யோசனைகள் உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதாகவும் வாங்கும் பொருளைப் பயனுள்ள பொருளாக வாங்கவும் உதவும்.

பணத்தைப் பல காலம் சேமித்து வாங்கும் போது ஆடம்பர பொருட்களை வாங்கத் தோன்றாது. அத்திவாசியமான பொருள்களையே வாங்கத் தோன்றும். அது மட்டுமல்லாது மலிவான விலையில் கிடைக்கும் தரமான பொருட்களை வாங்குவதற்கான மனநிலையையும் அது உருவாக்கும். தரமான பொருட்கள் என்றால் விலை அதிகமான பொருட்கள்தான் என்ற மனநிலையையும் அது மாற்றும். காலத்திற்கும் பயன்படுத்தும் தரமான பொருளுக்காகக் கொஞ்சம் பணம் கூடுதலாகக் கொடுப்பதையும் அது அனுமதிக்கும். எங்கே பணத்தைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும், எங்கே பணத்தைக் கறாராகக் கொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தையும் நீங்கள் சிறுக சிறுக பணம் சேர்த்துப் பொருட்களை வாங்கும் போதே பெற முடியும்.

பணத்தைச் சேமித்து விட்டுப் பொருளை வாங்கும்  போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் இலக்கை நிர்ணயித்து விட்டு ஓடத் தொடங்குகிறீர்கள். பணமில்லாமல் பொருளை வாங்கும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் உங்கள் இலக்கு என்னவென்றே தெரியாமல் நீங்கள் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த இரண்டில் எது நல்லது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டிய தருணம் நெருங்கி விட்டது. இத்தருணத்தைத் தவற விடாதீர்கள்.

உங்கள் முடிவு இப்போது எப்படி இருக்கிறது என்பதைக் கூறுங்கள். நாம் மேற்கொண்டு உரையாடுவோம்!

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...