27 Nov 2023

நகைச்சீட்டுகள் ஏன் வேண்டாம்?

நகைச்சீட்டுகள் ஏன் வேண்டாம்?

நகைக்கடைகள் போடச் சொல்லும் நகைச்சீட்டுகளைப் போட வேண்டாம். ஏன் வேண்டாம் என்றால் நகைக்கடைகளும் சீட்டுக் கம்பெனிகளைப் போல ஆகலாம். எப்போது வேண்டுமானாலும் சுருட்டிக் கொண்டு ஓடலாம்.

நீங்கள் நகைச்சீட்டு போடும் நகைக்கடை நம்பகமானது என்று நினைக்கலாம். நம்பகமான நகைக்கடையும் திவால் ஆகலாம். பாலு ஜூவல்லர்ஸ், கே.எப்.ஜே. ஜூவல்லர்ஸ் போன்ற நகைக்கடைகள் அப்படி ஆகியிருக்கின்றன.

நகைக்கடைகளைப் பொருத்தவரையில் நம்பகத்துக்கும் திவாலாகாது என்பதற்கும் எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாது. ஒருவேளை இந்த இரண்டுக்கும் உத்திரவாதம் இருந்தாலும் நீங்கள் நகைச்சீட்டுப் போடுவது என்பது புத்திசாலித்தனமாகாது.

நீங்கள் நகைச்சீட்டு போடுவது நகைக்கடைகளுக்கு வழங்கும் வட்டியில்லா கடன் போன்றது. உங்களுக்கு யார் வட்டியில்லா கடன் கொடுப்பார்கள்? நிலைமை அப்படி இருக்கும் போது நீங்கள் ஏன் நகைக்கடைகளுக்கு வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும்? ஊரான் நெய்யே, என் பெண்டாட்டி கையே என்பது போல ஊரான் சொத்தே எங்கள் வாடிக்கையாளர் சேவையே என்று நகைக்கடைகள் பைசா செலவில்லாமல் தங்களுக்கான பண சுழற்சியை (ரொட்டேஷன்) நகைச்சீட்டுகள் மூலமாகச் செய்து கொள்கின்றன.

நகைக்கடை என்பது அவர்கள் முதலீட்டில் அவர்கள் செய்ய வேண்டியது. உங்களையும் முதலீட்டில் பங்குக் கொள்ள செய்கிறார்கள் என்றால் உங்களை பங்குதாரர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். உங்களைப் பங்குதாரர்களாக ஆக்கினால் லாபத்தில் உங்களுக்கும் பங்குக் கொடுக்க வேண்டுமே! உங்களுக்கு லாபத்தில் பங்கும் கொடுக்கக் கூடாது, அதே நேரத்தில் உங்களிடம் முதலீட்டுக்கான பணத்தையும் திரட்ட வேண்டும் என்பதற்காக நகைக்கடைகள் கண்டுபிடித்த நாகரிக தூண்டில் முறையே நகைச்சீட்டுகள்.

நகைச்சீட்டு போடுவதால் செய்கூலி, சேதாரம் இல்லை, அல்லது குறைவான சதவீதத்தில் செய்கூலி சேதாரத்திற்கு நகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நீங்கள் ஆசை காட்டப்படலாம். இந்தச் செய்கூலி, சேதாரம் எல்லாம் பெரிய விசயமே அல்ல. இந்த இரண்டிலும்தான் நகைக்கடைகளின் லாபமே இருக்கிறது. அதைக் கொஞ்சம் சாமர்த்தியமாக நகைச் சீட்டுகள் மூலமாகச் செய்கிறார்கள்.

நீங்கள் நகைகளைத் தயார் செய்து மொத்தமாக கடைகளுக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களைக் கண்டுபிடித்து நகைகளை வாங்கினால் இந்தச் செய்கூலி, சேதாரத்தின் கதை என்னவென்று தெரிந்து விடும்.

உங்களிடம் விற்பனை செய்யும் நகைகளை நகைக்கடைகள் செய்கூலி, சேதாரம் இல்லாமல் கொடுத்தாலும் அவர்களுக்கு அதில் லாப விகிதம் இருக்கின்றது. செய்கூலி, சேதாரத்தோடு கொடுத்தால் கொள்ளை லாபம் இருக்கின்றது. செய்கூலி, சேதாரம் என்பதெல்லாம் அவர்களது லாபத்தைக் குறைத்துக் கொள்ளலாமல் இருப்பதற்காக அவர்கள் விடும் கப்சாக்கள். தங்கள் லாபத்திற்கு எப்படியாவது ஒரு நியாயத்தைச் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் செய்து கொள்ளும் போலி வாதங்கள்.

தங்கள் முதலீட்டை வட்டியில்லாத கடன் முறையில் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வியாபாரத்திற்கான பண சுழற்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளவும் நகைக்கடைகள் கண்டுபிடித்த உத்தியே நகைச்சீட்டு என்பது.

சும்மா நகைச்சீட்டு போடச் சொன்னால் நீங்கள் போடுவீர்களா? போட மாட்டீர்கள்தானே? அதற்காகத்தான் செய்கூலி, சேதாரக் குறைப்பு, ஒரு தவணையை அல்லது அரை தவணையை ஏற்றுக் கொள்வது என்று சொல்வதெல்லாம். இப்படி குறைத்தது மற்றும் தவணையை ஏற்றுக் கொண்டதற்கும் சேர்த்து நகை விலையில் ஒரு விளையாட்டை விளையாடி நீங்கள் அறிய முடியாதபடி மறைமுகமாகக் கறந்து விடுவார்கள்.

இப்படி ஒரு நிலையையும் யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் பணம் கட்டிய மாதத்தில் ஒரு கிராம் தங்க நகை 5000 ஆக இருக்கிறதாக வைத்துக் கொள்வோம். பத்து மாதங்கள் அல்லது பதினோரு மாதங்கள் கழித்து நீங்கள் நகையை வாங்கும் போது அது 5500 ஆகியிருக்கும். இப்போது உங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கணக்கிட்டுப் பாருங்கள். நகைக்கடைக்காரர்கள் அப்போது நீங்கள் செலுத்திய தொகைக்கு ஒரு கிராம் 5000 என்ற விலையில் வாங்கி வைத்திருந்தால் நீங்கள் வாங்கும் போது 500 ரூபாய் லாபத்தோடும் மற்றும் அந்த நகைக்கே உரிய லாபத்தோடும் இரட்டை லாபம் சம்பாதிக்க நீங்கள் வாய்ப்பு கொடுக்கிறீர்கள்.

நீங்கள் ஒவ்வொரு மாதமும் கட்டும் பணத்தால் நகை விலை ஒரு குறைந்தபட்ச சராசரி விலையில் இருக்கும். அந்த நகைக்கான விலையை நீங்கள் எடுக்கும் மாதத்தில் என்ன விலையோ அந்த விலையில்தான் வழங்குவார்கள். அது நீங்கள் மாதாம் கட்டிய சராசரியான குறைந்தபட்ச விலையை விட அதிகமாக இருக்கும். இந்த அதிகமாகும் லாபமும் கடைக்காரர்களுக்கே. கூடுதலாக அந்த நகைக்கே என்று இருக்கிற மார்ஜின் பிராபிட் என்று சொல்கிறார்களே அந்த லாபமும் அவர்களுக்கே. அதில் உங்களுக்குச் செய்கூலியைக் குறைத்திருக்கிறேன் அல்லது சேதாரத்தைக் குறைத்திருக்கிறேன் என்று ஒரு பெரிய மீனைப் பிடித்து விட்டு ஒரு சிறிய மீனை உங்களுக்குத் தூக்கிப் போடுவார்கள். இந்தச் சேதாரம் மற்றும் செய்கூலி கதை நமக்குத் தெரியாததா என்ன?

இதிலிருந்து தப்பிக்க வழியில்லையா?

ஏன் இல்லை?

மூன்று வழிகள் இருக்கின்றன. இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பின்பற்றலாம். அல்லது கலவையாகவும் பின்பற்றலாம். அல்லது உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வழி 1 :

மாதா மாதம் நகைக்கடையில் பணத்தைக் கட்டுவதற்குப் பதிலாக அஞ்சலகம் அல்லது வங்கியில் தொடர்வைப்பில் (ஆர்.டி.) பணத்தைக் கட்டுங்கள். முதிர்வில் அந்தப் பணத்தை எடுத்து நகை எடுங்கள். இந்த முறையில் பணத்திற்கும் பாதுகாப்பு இருக்கிறது. முடிவில் தொடர்வைப்புக்கான வட்டித்தொகையும் நீங்கள் கட்டிய தொகையும் கூடுதலாக நல்ல தொகை உத்திரவாதமாக உங்களுக்குக் கிடைக்கும்.

வழி 2 :

இந்த முதல் வழியில் பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் வட்டி வருமானத்தில் இழப்பு இருக்கிறது என்ற கருதினால் ஒரு டீமேட் கணக்கைத் துவங்கி இ.டி.எப்பில் மாதா மாதம் தங்கத்தை வாங்குங்கள். உதாரணமாக கோல்ட் பீஸ் இ.டி.எப்பை வாங்கலாம். இப்படி மாதா மாதம் வாங்குவதால் சரசாரியான குறைந்தபட்ச விலை கிடைத்து விடும். தங்க நகை வாங்க வேண்டும் எனும் போது டீமேட்டில் உள்ள இ.டி.எப்களை விற்று காசாக்கி எடுத்துக் கொண்டு போய் நகைக்கடையில் நகையாக வாங்கிக் கொள்ளுங்கள்.

வழி 3 :

இந்த டீமேட், காகிதத் தங்கம் எல்லாம் ஒத்து வராது என்றால் அதே நகைக்கடைகளில் தங்க நாணயங்களாக வாங்குங்கள். மில்லி கிராம் அளவிலும் தங்க நாணயங்கள் விற்கப்படுகின்றன. இந்த தங்க நாணயங்களுக்குச் சேதாரம் செய்கூலி இருக்காது அல்லது அதிகமாக இருக்காது. இவற்றிற்கு ஈடாக நகைகளை மாற்றும் போது கிராமுக்கு 50 அல்லது 100 என்று குறைத்துக் கொள்வார்கள். இதிலும் ஒவ்வொரு மாதமும் வாங்குவதில் இதில் சராசரியான குறைந்தபட்ச விலையும் கிடைக்கும்.

எனக்குத் தெரிந்த வகையில் இந்த மூன்று வழிகள்தான் நகைக்கடையின் நகைச்சீட்டுகளில் நீங்களாகச் சிக்கிச் சோரம் போகாமல் தடுத்துக் கொள்வதற்கான வழிகள்.

வேறு வழிகள் இருப்பின் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...