30 Aug 2023

கடன் தவிர்ப்புக்கான மாற்றுமுறைகள்

கடன் தவிர்ப்புக்கான மாற்றுமுறைகள்

இந்த உலகில் யார்தான் கடன் வாங்கவில்லை? நிறுவனங்கள் கடன் வாங்குகின்றன. வங்கிகள் கடன் தரத் தயாராக இருக்கின்றன. 

மாநில அரசுகள் கடன் வாங்குகின்றன. மத்திய வங்கிகள் அவற்றுக்கான கடன்களை வழங்குகின்றன. அத்துடன் மாநில அரசுகளுக்குக் கடன் பத்திரங்களை வெளியிடும் வசதிகளும் இருக்கின்றன.

நாடுகளே கடன் வாங்குகின்றன. கடன் பத்திரங்களை வெளியிடவும் செய்கின்றன. அத்துடன் நாடுகளுக்குக் கடன் வழங்க உலக வங்கி போன்ற அமைப்புகளும் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனிநபர்கள் கடன் வாங்காமல் இருக்க முடியுமா என்றால் முடியாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது அல்லவா!

வீடு கட்ட, பிள்ளைகளைப் படிக்க வைக்க, திருமணச் செலவுகளைச் சமாளிக்க, அவசர நிலைமைகளை எதிர்கொள்ள, தொழிலை விரிவாக்கம் செய்ய என்று பல விதங்களில் கடன் வாங்க வேண்டியிருக்கலாம். இவற்றில் அவசர நிலைமைகளில் தவிர்க்க முடியாமல் கடன் வாங்குவதைத் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் திட்டமிட்டுச் சேமித்து வருவதன் மூலமாகவும், சேமிப்புகளை அறிவுப்பூர்வமாக வருவாயைப் பெருக்கும் முதலீடுகளாக கட்டமைப்பதன் மூலமாகவும் நிலைமைகளைக் கடன் வாங்காமல் எதிர்கொள்ள முடியும்.

உதாரணமாகக் கடன் வாங்கி வீடு கட்டுவதை விட பத்தாண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேமித்து முதலீடு செய்து வருவதன் மூலம் பத்தாண்டுகள் கழித்துக் கடனின்றி வீட்டைக் கட்டிக் கொள்ள முடியும். ஆனால் நம்முடைய அணுகுமுறை என்பது கடன் வாங்கி வீட்டைக் கட்டி விட்டு பத்தாண்டுகளுக்கு மாதந்தோறும் கடனை அடைப்பதற்கு மாதாந்திர தவணைத் தொகை எனும் இ.எம்.ஐ. கட்டும் வழக்கு முறையாக உள்ளது. இதனால் வீட்டுக்கடனுக்கான வட்டியை நாம் உபரியாக அதிகபட்சமாகச் செலுத்த நேரிடுகிறது. அப்படிச் செலுத்தக்கூடிய வீட்டுக்கடனுக்கான வட்டியில் நாம் இன்னொரு வீட்டையே கட்டி விடலாம்.

பிள்ளைகள் பிறந்த உடன் அவர்களின் வருங்கால கல்விச் செலவைக் கணக்கிட்டு மாதந்தோறும் சேமித்து முதலீடு செய்து வருவதன் மூலமாக உயர்படிப்புக்கானக் கல்விச் செலவைக் கடன் வாங்காமல் அவர்களுக்கு அளிக்கவும் முடியும், அவர்களைக் கடன்காரர்களாக ஆக்காமல் இருக்கவும் முடியும். இதிலும் நம் அணுகுமுறை மாறாகத்தான் இருக்கிறது. படிப்பிற்காகப் பிள்ளைகளைக் கடன்காரர்களாக ஆக்கும் வகையில் நம்முடைய வாழ்க்கை முறை இருக்கிறது. இதனையும் திட்டமிட்டுப் புத்திசாலித்தனமாகச் செயல்படுவதன் மூலமாக மாற்றிக் கொள்ள முடியும்.

திருமணச் செலவுக்கும் மாதந்தோறும் சேமித்து வருவதன் மூலம் சேமிப்புத் தொகையை முதலீடு செய்து திருமணச் செலவையும் கடனின்று செய்துவிக்க முடியும். நடைமுறையானது திருமணம் நம்மைக் கடன்காரர்களாக மாற்றுவதாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். இதையும் திட்டமிட்ட சேமிப்பு முறைகளை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலமாக மாற்றிக் கொள்ள இயலும்.

அவரச நிலைமைகளைக் கூட அவசர காலநிதியைத் திட்டமிட்டுச் சேமித்து உருவாக்கி வைப்பதன் மூலமாகக் கடன் வாங்காமல் சமாளிக்க முடியும். இதற்காக அவசரகால நிதிச் சேமிப்பையும் மாதந்தோறும் செய்யலாம்.

கடன் வாங்காமல் இருப்பதற்கான தாத்பரியம் என்னவென்றால் வருங்காலச் செலவினங்களைப் பட்டியலிட்டுக் கொண்டு அவற்றுக்கேற்ப மாதந்தோறும் சேமித்து வருவதன் மூலமாகக் கடன் வாங்காமல் செலவினங்களை மேற்கொள்ள முடியும் என்பதுதான்.

இரு சக்கர வாகனங்கள் வாங்குதல், கார் வாங்குதல் போன்றவற்றையும் இதே முறையில் மாதந்தோறும் சேமித்துக் கொண்டு வந்து, வாங்குவதற்கான தொகை சேர்ந்து வந்த பிறகு வாங்குவதன் மூலமாகக் கடனின்றி வாங்க முடியும்.

ஓய்வுக்காலத் தேவைக்கும் மாதா மாதம் இதே முறையில் நீங்கள் சேமித்து முதலீட்டைச் செய்யலாம்.

தினசரி சேமிப்பை மாதாந்திர சேமிப்பாக்கி, மாதாந்திர சேமிப்பை வருடாந்திர சேமிப்பாக்கி, வருடாந்திர சேமிப்பைக் கொண்டு கடனின்றி வாங்குவதே கடன் வாங்குவதனின்று விலகிச் செய்து கொள்ளும் மாற்று முறையாகும்.

மாதந்திர சேமிப்பை வட்டி தரும் முதலீடுகளில் செய்யும் போது முடிவில் கிடைக்கும் தொகை செலுத்திய தொகை மற்றும் வட்டித் தொகையின் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கென் அஞ்சலக மற்றும் வங்கிகளின் தொடர் வைப்பை நாடலாம். சிலர் பரஸ்பர நிதி எனும் மியூட்சுவல் பண்டைப் பரிந்துரைக்கின்றனர். மாதந்தோறும் முறைபடுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் எனும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் இவ்விதம் செய்யலாம் என்கின்றனர். சிலர் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்வதையும் பரிந்துரைக்கக் கூடும். என்னைக் கேட்டால் பாதுகாப்பான அஞ்சலக மற்றும் வங்கிகளின் தொடர்வைப்பையே பரிந்துரைக்கிறேன். இம்முறையில் குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் நீங்கள் அத்தொகைக்கேற்ப தங்கமாகவோ, வீட்டு மனையாகவோ வாங்கிப் போட்டுக் கொள்ளலாம். வட்டித்தொகையை எடுத்து வேண்டுமானால் நீங்கள் பரஸ்பர நிதி எனும் மியூட்சுவல் பண்டிலோ அல்லது பங்குகள் வாங்குவதிலோ போடலாம்.

கடனுக்கான இம்மாற்றுமுறையின் அடிப்படைகள் என்று பார்த்தால் வருங்காலத் தேவைகளைப் பட்டியலிட்டுக் கொள்வதும், அதற்கேற்ப மாதா மாதம் எவ்வளவு சேமிப்பை எவ்வளவு செய்வதும் எனத் திட்டமிட்டுக் கொள்வதும்தான். அதற்கேற்ப மாதாந்திரச் சேமிப்பை நீங்கள் தொடர் வைப்பிலோ அல்லது பாதுகாப்பான முதலீடுகளிலோ நீங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவு போன்றவற்றிற்கு நீங்கள் செல்வமகள், பொன்மகன் போன்ற திட்டங்களில் மாதந்தோறும் சேமித்து முதலீடு செய்து வரலாம்.

ஓய்வு காலத் தேவைகளுக்கு பொது வருங்கால வைப்புநிதி எனும் பி.பி.எப். திட்டத்தில் மாதந்தோறும் சேமித்து முதலீடு செய்து வரலாம்.

இவை தவிரவும் நிதி ஆலோசர்களின் ஆலோசனையைப் பெற்று ஓய்வூதியத் திட்டங்கள், பரஸ்பர நிதி எனும் மியூட்சுவல் பண்ட் முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகளையும் நீங்கள் செய்யலாம். அல்லது நீங்களே அது போன்ற முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்று உங்கள் முதலீடுகளைத் தொடரலாம்.

மருத்துவச் செலவினம், எதிர்பாராத இழப்புகள் போன்றவற்றிற்கு நீங்கள் காப்பீடுகளையும் பரிசீலனைச் செய்து மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் அதற்கான தொகையைக் கட்டி வரலாம். இது குறித்தும் நீங்கள் நிதி ஆலோசர்களின் ஆலோசனைகளையோ அல்லது உங்களது நிபுணத்துவத்தையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடன் வாங்காமல் கடனைத் தவிர்த்து மாற்று முறையில் செல்வதற்கு உங்களது அறிவையும், திட்டமிடலையும், பொறுத்திருந்து விலை குறைவைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கும் முறையையும், வாங்கும் பொருளுக்கானத் தொகையைச் சேமிப்பின் மூலம் திரட்டுவதையும் எப்போதும் வழக்கமாகக் கொள்ளுங்கள். இம்முறைகளை உங்கள் பாரம்பரிய முறைகளைப் போல எப்போதும் பயன்படுத்துங்கள்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...