28 Aug 2023

அளவோடு இருப்பதன் ஒழுக்கம்

அளவோடு இருப்பதன் ஒழுக்கம்

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.”              (குறள், 943)

என்கிறார் வள்ளுவர்.

உண்ட உணவு செரித்த பின் உண்ண வேண்டும். அது மட்டுமல்லாமல் செரிக்கும் அளவுக்குத்தான் உணவை உண்ணவும் வேண்டும். இந்த இரண்டையும் கடைபிடித்தால் நெடுநாள் வாழலாம் அல்லது நீங்கள் எதிர்பார்ப்பது போல நூறாண்டுகள் வாழலாம் என்பது வள்ளுவர் வாக்கு. அவரைத் தெய்வப்புலவர் என்று சொல்வதால் இவ்வாக்கைத் தெய்வ வாக்கு என்றும் சொல்லாம்.

அளவோடு உண்பதற்கு நாக்கு விடாது. சுவையான பண்டங்களைப் பார்த்து விட்டால் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று வயிறு புடைக்க உண்ண வைத்து விடும். இதற்கும் வள்ளுவர் ஒரு வாக்கைச் சொல்லியிருக்கிறார்.

“யாகாவார் ஆயினும் நாகாக்க”                (குறள், 127)

என்கிறார். இவ்வாக்கு சொல்லடக்கத்திற்கு என்று நீங்கள் சொல்லலாம். உணவு அடக்கத்திற்கும் இதைக் கொள்ளலாம். சொல்லிலும் உணவிலும் சரி நாவைக் காக்காவிட்டால் சொல் இழுக்குப் படுதலும், உடல் இழுக்குப் படுதலும் நிகழும்.

அளவு அறிந்து அடக்கமாக இருப்பது அவ்வளவு முக்கியம். அளவே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அமுதத்தை விஷமாகவும், விஷத்தை மருந்தாகவும் தீர்மானிப்பது அளவே.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று அமுதத்திற்கும் அதற்கான ஓர் அளவு இருப்பதைப் நம் பழமொழி மரபு சொல்கிறது. விஷம்தான் என்றாலும் பாம்பின் விஷத்திலிருந்து மருந்துகள் உருவாக்கப்படுவதை மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஆக அளவை மீறி நலமாக வாழ்ந்து விட முடியாது.

உடல் எடைக்கென்று, ரத்த அழுத்தத்திற்கு என்று, சர்க்கரைக்கு என்று, கொழுப்புக்கு என்று எல்லாவற்றுக்கும் ஓர் அளவு இருக்கிறதுதானே. நோயென்று செல்லும் போது மருத்துவர்கள் இதைத்தானே பார்க்கிறார்கள். இந்த அளவு குறையவும் கூடாது, மிகவும் கூடாது. அப்படி ஆனால் அதை நோய் என்றுதானே குறிப்பிடுகிறார்கள். ஆம் அதுதான் நோய் என்பதை

“மிகினும் குறையினும் நோய் செய்யும்”            (குறள், 941)

என்கிறார் வள்ளுவர்.

அளவைக் கடந்து உண்பதை Sin of Gluttony என்கிறது மேற்கத்திய கலாச்சாரம். தமிழ்க் கலாச்சாரமும்

மீதூண் விரும்பேல்             (ஆத்திசூடி, 91)

என்றுதான் சொல்கிறது.

அல்வைஸ் கார்னாரோ என்பவது ‘நூறு வயது வரை வாழ்வது எப்படி?’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகம் எழுதியது மட்டுமல்ல அவர் நூறு வயது வரையும் வாழ்ந்தவர். நூறாண்டு வாழ்வதற்கு அவர் அளவாக உண்பைதைத் வலியுறுத்துகிறார். அனுபவஸ்தர் சொல்லும் உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.

அளவோடு உண்பது அல்லது உணவில் அடக்கமாக இருப்பது என்பது ஒரு நாளில் கிட்டி விடாது. அது ஓர் ஒழுக்கம் என்பதால் அந்த ஒழுக்க நிலையை அடையும் வரை வைராக்கியமாக முயன்று கொண்டே இருக்க வேண்டும். பலமுறை இந்த ஒழுக்க நிலைக்கு அருகில் போய் தடுமாறி விழவும் நேரிடும். அந்தத் தடுமாற்றங்களைப் பெரிது படுத்திக் கொள்ளாமல் அந்த ஒழுக்கத்தை நிலைநிறுத்த கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டியிருக்கும்.

தொடக்கத்தில் நீங்கள் அளவோடு உண்பதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். அந்த ஆர்வம் மட்டும் போதாது. ஆர்வம் என்போது வேண்டுமானாலும் வடிந்து போகலாம். ஒழுக்கம் அப்படிப்பட்டதல்ல. நிலைபெற்று விட்டால் மலையைப் போன்று உறுதியாக நிற்கக் கூடாது. ஆகவே அந்த ஆர்வத்தை ஒழுக்கமாக மாற்றும் வரை நீங்கள் ஓயக் கூடாது, விடவும் கூடாது. உங்களுக்குள் அது ஓர் ஒழுக்கமாக நிலைபெற்று விட்டால் பிறகு நீங்கள் நினைத்தாலும் அந்தக் குணத்தை அந்த ஒழுக்கத்தால் உண்டான இயல்பை மாற்றிக் கொள்ள முடியாது. ஒழுக்கத்தின் வலிமை அப்படிப்பட்டது. அதனால்தான் ஒழுக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.”               (குறள், 131)

என்கிறார் திருவள்ளுவர். உயிருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் திருவள்ளுவர் ஒழுக்கத்திற்குக் கொடுப்பதால், இன்னும் சொல்லப் போனால் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை வலியுறுத்துவதால் ஒழுக்கத்தை எவ்வளவு வைராக்கியத்தோடு பின்பற்ற வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...