24 Aug 2023

இந்தக் காலத்தில் டீயும் காப்பியும் உண்டு

இந்தக் காலத்தில் டீயும் காப்பியும் உண்டு

ஆய்வாளர் ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதிய நூல் ஒன்றின் பெயர் ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக்கட்டுரைகள்’ என்பதாகும். அதனால் இந்தப் பத்திக்கு இப்படி ஒரு தலைப்பை நான் வைத்திருக்கிறேன்.

இந்தப் பத்தி சுடச்சுட வழங்கப்படும் தேநீர் (டீ) மற்றும் காப்பியைப் பற்றியது.

இன்று உலகெங்கும் குடிக்கப்படும் தேநீரை உலகில் முதன் முதலில் குடித்தவர்கள் சீனர்கள்.

சீன அரசர்தான் டீயைக் கண்டுபிடித்திருக்கிறார். எதேச்சையாக தேயிலை விழுந்த சூடான நீரைப் பருகிய அவருக்கு அந்தப் பானம் உற்சாகம் தந்திருக்கிறது. இந்த இலையில் இப்படி ஒரு அதிசயமா என வியந்து போன அவர் தேயிலையைக் கொதிக்க வைத்து அருந்தியிருக்கிறார். அரண்மனையில் இருந்தோரையும் பருக வைத்திருக்கிறார். படிப்படியாக சீன மக்கள் பருகத் தொடங்கி உலகம் முழுவதும் பருகத் தொடங்கி விட்டனர்.

டீயைக் கண்டுபிடிப்பதில் சீனர்கள் முந்திக் கொண்டாலும் உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா முந்திக் கொண்டது. உலகளவில் அதிக தேயிலை உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். அடுத்த இடத்தில் நம் பக்கத்து தீவான இலங்கை இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டியும் மூணாறும் டீ உற்பத்திக்குப் பிரபலம்.

ஜென் நிலையில் தேநீர் அருந்துவதே தியானம். உறங்காமல் தியானிப்பதற்காகப் போதிதர்மர் வெட்டி எறிந்த கண் இமைகளே தேயிலைச் செடிகளாக முளைத்ததாக ஒரு ஜென் கதையும் உண்டு. அதனாலேயே ஜென்னில் தேநீர் பருகுதலுக்கு அலாதியான முக்கியத்துவம் உண்டு.

உலகெங்கிலும் இருப்பதை விட இந்தியாவில் தேநீர் கடைகள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜென் நிலையில் சொல்வதென்றால் தேநீர் கடைகள் என்ற தியான நிலையங்கள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். தண்ணீர் அருந்தாமல் கூட இருந்து விடலாம், தேநீர் அருந்தாமல் இருந்துவிட முடியாது என்கிற அளவுக்கு இந்தியாவின் தேசிய பானம் தேநீர்தான்.

விருந்தோம்பலுக்குப் பிரசித்திப் பெற்ற தமிழர் பண்பாட்டில் இப்போது முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது தேநீர்தான். ‘ஒரு வாய் டீ குடித்து விட்டுப் போகலாம்’ என்று அமர வைத்து தேநீர் கொடுத்தால்தான் தமிழர்களுக்குத் திருப்தி இப்போது. எதேச்சையாக நண்பர்களோ, உறவினர்களோ சந்தித்தாலோ ஒரு தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் பருகி விடை பெற்றால்தான் அவர்களுக்கும் திருப்தி.

ஆரம்ப காலத்தில் இந்தத் தேநீரை மக்கள் மத்தியில் பிரபலபடுத்த இலவசமாகக் கொடுத்ததாக வரலாறு உண்டு. இலவசமாகக் கொடுத்த நிலை மாறி உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் ஊதியத்தால் வாங்கிக் குடிக்கும் நிலைமைக்குத் தேநீர் பொருளாதார பலம் கொண்ட பானமாக மாறியது.

காலப்போக்கில் உழைக்கும் மக்களின் உற்சாகப் பானமாய் தேநீர் மாறியதைக் ‘கல்யாணப் பரிசு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கீழ்காணும் பாடலைக் கொண்டு அறியலாம். நகைச்சுவை நடிகர் தங்கவேலு நடமாடும் தேநீர்கடையை வாகனத்தில் அமைத்துக் கொண்டு பாடுவது போல இந்தப் பாடலுக்கான காட்சி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். இன்றும் கூட நடமாடும் தேநீர் கடைகளை மிதிவண்டிகளிலும் இரு சக்கர வாகனங்களிலும் பார்ப்பதற்கு அன்றே இத்திரைப்படப் பாடல் காட்சி கால்கோள் ஊன்றி விட்டது எனலாம். இனி அந்தப் பாடலைப் பாருங்களேன்.

“டீ டீ டீ – வாங்க

டீ டீ டீ

பாட்டாளித் தோழருக்கும்

பல தொழிலாளருக்கும்

கூட்டடாளியாயிருக்கும் டீ

கொஞ்சம் சூட்டோடு போட்டா

சோம்பேறி நண்பனுக்கும்

சுறுசுறுப்பு கொடுக்கும் டீ – இது

விறுவிறுப்பு கொடுக்கும் டீ

காரிலே ஏறிட்டு ரோடுலே போறவங்க

காய்கறி பழம் விற்க சுத்துறவங்க

உருகும் தாரிலே நடக்கற

தள்ளுவண்டிக் காரருங்க

சகலரும் விரும்பும் டீ – பலருக்கு

சாப்பாடு கூட இந்த டீ

ஊருக்கும் பேருக்கும்

உடல் மெலிந்தோருக்கும்

உள்ளபடி உழைக்கிற நல்லவங்களும்

காருக்கும் கூறுக்கும் வம்பு தகராறுக்கும்

மல்லுக்கும் காரணமாய் உள்ளவங்களும் குடிக்க

கூழுக்கும் இல்லாத குடிசைகளும் – பெருங்

கோட்டையும் விரும்பும் டீ – பழைய

குணத்தை மறக்க வைக்கும் டீ”

என்று பட்டுக்கோட்டையார் 1956 இல் வெளியான ‘கல்யாணப் பரிசு‘ படத்தில் எழுதிய பாடலிலிருந்து அன்றிலிருந்து இன்றும் கூட பலருக்கு டீயே சாப்பாடாக இருக்கும் உண்மையும் புலப்படுகிறது.

அப்போது இலசமாக வழங்கப்பட்டு பிறகு விலை வைக்கப்பட்டு சந்து பொந்தெங்கும் நீக்கமற நிறைந்து விட்ட தேநீரின் விலையைக் கொண்டு இப்போது விலைவாசி ஏற்றத்தையும் பணவீக்க விகிதத்தையும் மதிப்பிட்டு விடலாம்.

நானறிந்து 1.25 ரூபாயிலிருந்து தேநீர் குடித்திருக்கிறேன். இப்போது இந்த 2023வது ஆண்டில் கிராமத்துக் கடைகளில் எட்டு ரூபாய். நகரத்துக் கடைகளில் பத்து ரூபாய். இருபது ஆண்டுகளுக்குள் கிட்டதட்ட எட்டு மடங்குக்கு மேல் ஏறியிருக்கிறது.

அடுத்து காப்பியைக் குறித்து பார்த்தோமானால் உலகில் முதன் முதலில் எத்தியோப்பியாவைச் சார்ந்தவர்கள்தான் காபியைக் குடித்திருக்கிறார்கள்.

எத்தியோப்பிய சூபி துறவி ஒருவர் காபி செடிகளையும் கொட்டைகளையும் தின்ற ஆடுகள் இரவு பகல் பாராமல் உற்சாகமாக அலைவதைப் பார்த்திருக்கிறார். இந்தக் காப்பிக் கொட்டையில் அப்படி ஒரு விஷேஷமா என்று காப்பியைக் கண்டுபிடித்திருக்கிறார்.

டீ, காப்பி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் டீயை விட காப்பிக்குச் சுறுசுறுப்பு தரும் வேகம் அதிகம். அதனால்தான் டீயை விட காப்பி விலை அதிகம் என்னவோ! ஆனால் உண்மையான காரணம் அதிலுள்ள அதிக கப்பைன் என்ற வேதிப்பொருள்தான். இது டீயில் கம்மி மற்றும் மெதுவாகத்தான வேலை செய்யும். காப்பியில் அதிகம் மற்றும் படு வேகமாக வேலை செய்யும்.

காப்பி உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும் இந்தோனேசியா இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்தியாவில் உற்பத்தியாகும் காப்பிக்குத்தான் தனிச்சுவை இருக்கிறது. அதனால் உலகெங்கிலும் இந்திய காப்பிக்கு தனி கிராக்கி இருக்கிறது. கும்பகோணம் டிகிரி காப்பியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குடித்தால் ஒரு கிறுகிறுப்பும் சுறுசுறுப்பும் வருவது நிச்சயம். அந்த விதத்தில் உலகளவில் தமிழ்நாட்டுக்குக் காப்பிக்குத் தனித்த இடம் இருக்கிறது என்று தமிழர்களாகிய நாம் பெருமைபட்டுக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் காப்பி கடைகளைப் பிரதியெடுத்து இன்று உலகெங்கும் காப்பி ஷாப்புகள் பெருகி விட்டன.  

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...