31 Dec 2022

திருவாரூர் புத்தகக் காட்சிகள்

திருவாரூர் புத்தகக் காட்சிகள்

சென்னை போன்று புத்தகக்காட்சிகள் எல்லா ஊருக்கும் வாய்ப்பது கிடையாது. திருவாரூருக்கு வாய்ப்பதெல்லாம் மார்கழி மாதத்துப் புத்தகக் காட்சிகள்தாம். அந்த மாதத்தில் பெரும்பாலும் திருமண மண்டபங்கள் காலியாக இருக்கும் என்பதால் அந்த மாதத்தைத் தேர்ந்தெடுத்துப் புத்தகக் காட்சி போடுபவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் சேத்தியாதோப்பைச் சேர்ந்தவர்கள் போடுகிறார்கள்.

திருவாரூர் கமலாலயத்தின் தென்கரையில் இருக்கும் ராசம்மாள் திருமண மண்டபத்தில்தான் இந்தப் புத்தகக் காட்சிகள் நடக்கும். சில வருடங்கள் பழைய தொடர்வண்டி நிலையத்துக்கு அருகில் இருக்கும் மெரினா மகாலிலும் நடக்கும். இந்த 2022 ஆம் ஆண்டு மார்கழியில் மெரினா மகாலில் நடந்தது.

கிண்டில், பிடிஎப் என்று வாசித்தாலும் புத்தகத்தை வைத்து வாசிப்பதில் கிடைக்கும் சுகம் அலாதி. புத்தகத்தின் அணுக்கம் தரும் அனுபவம் அதிலே படித்துப் பழகியதில் உண்டானதாகவும் இருக்கலாம் என்றாலும் வருங்காலப் பிள்ளைகள் திரைகளில் படித்துப் படித்து அதையும் சுகானுபவமாக உணரலாம்.

கிண்டிலிலும் பிடிஎப்பிலும் வராத எழுத்துகள் இன்னும் இருக்கின்றன. அவற்றை வாசிக்க வேண்டுமானால் புத்தகங்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது.

புத்தகக் காட்சிகளில் சில அபூர்வமான தருணங்களும் வாய்த்து விடுவதுண்டு. அது எப்படியோ நிகழ்ந்து விடுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் ஏ.ஜெ. ஐயாவைப் (பேராசிரியர் முனைவர் அ. ஜான்பீட்டர்) பார்க்க நேர்ந்தது. மொத்தமே நாங்கள் இருவர்தான் அந்தப் புத்தகக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். புத்தகக் காட்சியில் ஆட்கள் இல்லையே தவிர வெளியே கடைத்தெரு முழுவதும் ஆட்களாக நிறைந்திருந்தனர். சந்தைக்கான பண்டங்களிலிருந்து புத்தகங்கள் விலகி விட்டனவோ என்னவோ! வெளியே போக்குவரத்து நெருக்கடி படு பயங்கரமாக இருந்தது. புத்தகக் காட்சியைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்கள் அதிகமாக இருந்தனர்.

புத்தகக் காட்சிகள் பெரும்பாலும் இப்படித்தான் மனிதர்கள் இல்லாத வனாந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. வனாந்திரமாக இருந்தாலும் வந்த வெட்டிக் கொண்டு போக ஆட்கள் நிறைந்திருப்பார்கள். புத்தகக் காட்சிகளாகப் போய் விட்டதால் வந்து கட்டிக் கொண்டு போக ஆட்கள் இல்லை. இருந்தாலும் புத்தகக் காட்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் ஆர்வமாகச் செய்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற புத்தகக் காட்சிகளால் எத்தனை புத்தகங்கள் விற்கும், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு எப்படிப்பட்ட பதில்கள் இருக்கும் என்று தெரியவில்லை.

ஏ.ஜெ. ஐயா என்னைப் பார்த்ததும் அண்மையில் படித்த புத்தகத்தைப் பற்றிக் கேட்டார்கள். நல்ல வேளையாக நான் விமலாதித்த மாமல்லனின் ‘விளக்கும் வெளிச்சமும்’ என்ற தொகுப்பைப் படித்திருந்தேன். இதற்கு நான் அண்ணன் சித்தார்த்தனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் என்னைச் சந்தித்த போது அந்தத் தொகுப்பைக் கொடுத்திருந்தார். அந்தச் சந்திப்பு குறித்து தனியே எழுத வேண்டும். இப்படி எழுத வேண்டும் என்று நினைத்திருந்து நிறைய எழுதாமல் விட்டிருக்கிறேன். ஆனால் அந்தச் சந்திப்பை மறவாமல் எழுதி விட வேண்டும்.

இந்தத் தொகுப்பு பற்றி வலைப்பூவில் எழுதி விட்டீர்களா? என்று ஏ.ஜெ. ஐயா கேட்டார்கள். சமீப காலமாக வாசிக்கும் புத்தகத்தைப் பற்றி எழுதும் பழக்கம் அற்றுப் போயிருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. இதைத் தள்ளிப் போட்டால் எழுதாமல் போய் விடுவேன் அன்றே உட்கார்ந்து எழுதிப் பதிவிட்டேன். மீண்டும் புத்தக வாசிப்பு பற்றி எழுத வேண்டும் என்ற உணர்வை ஊட்டியதற்காக நான் ஏ.ஜெ. ஐயாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

இந்தப் புத்தகக் காட்சியில் எனக்குப் பிடித்த சில தலைப்புகளில் நல்ல புத்தகங்கள் கிடைத்தன. கவிமணி தேசிய விநாயகத்தின் ‘மலரும் மாலையும்’ படிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. நாமக்கல் கவிஞரின் பாடல்களையும் தொகுப்பாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த இரண்டு ஆசையும் நிறைவேறும் வகையில் இரண்டு புத்தகங்களும் இந்தப் புத்தகக் காட்சியில் கிடைத்தன. மருதகாசி மற்றும் உடுமலை நாராயணகவியின் திரைப்பாடல்கள் தொகுப்பும் கிடைத்தன. அவற்றை வாங்கிக் கொண்டேன்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...