27 Apr 2020

அப்பன் ஸ்தானத்துல அண்ணங்காரன்!

செய்யு - 431        

            சந்தானம் அத்தான் தம்பிகள அரவணைச்சிக் கொண்டு போறதெ பாக்க வேலங்குடி பெரியவருக்கு மனசு திருப்திப்பட்டுப் போச்சு. தனக்குப் பின்னாடி குடும்பத்தெ நல்ல வெதமா சந்தானம் அத்தான் கொண்டு போயிடுங்ற நம்பிக்கை பெரியவருக்கு உண்டாயிடுச்சு.
            "இனுமே குடும்பத்தெ பத்தி நமக்கு ன்னா கவலேம்பீ? அவ்வேம் பெரியவேம் இருக்காம். யக்காக்காரி குடும்பத்தெ பாத்துக்கிட்டதோட யில்லாம இன்னிக்கு தம்பியோ ஒவ்வொருத்தனையும் நெலைநிறுத்திப்புட்டாம்! மொதல்ல இப்பிடி ஊரச் சுத்திக்கிட்டுக் கெடக்குறானேன்னு ஒரு கவலெத்தாம் அவனெப் பத்தி. எப்பிடி கரையேறப் போறானோன்னு நெனைச்சி கவலெப்படாத நாளு கெடையாது. இப்போ என்னான்னா அவ்வேம் ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் தாங்கிப் பிடிச்சிக்கிட்டு நிக்குறாம். நாம்ம நெனைச்சே பாக்கல யம்பீ! எட்டுப் புள்ளீயோளப் பெத்து அதெ கரை சேக்குறதுன்னா ச்சும்மாவா? பொம்பளப் புள்ளையா? யார்ரோ ஒருத்தெம் தலையில கட்டி வெச்சிட்டோம்னு ஓய்ஞ்சிப் ‍போயி உக்கார்றதுக்கு? ஆம்பளப் பயலுவோ. அவனுவோ தலையெடுத்தாத்தாம் நமக்குப் பெருமெ. குடும்பத்துக்கு மருவாதி. வேலங்குடியான் வமிசம் நல்லா இருக்குன்னு நாலு பேத்து பேசுவாம் யம்பீ! இப்போ அந்த கவலெ யில்லாம பண்ணிப்புட்டாம் சந்தானம். மனசு குளுந்துப் போவுது யம்பீ! எம்மட கண்ணுக்கு மின்னாடியே அவ்வேம் எந் ஸ்தானத்துக்கு வந்துப்புட்டாம் யம்பீ!"ன்னு அதெ வெளிப்படையா சுப்பு வாத்தியாருகிட்டெ பாக்கறப்பல்லாம் மனசு நெறைய சொல்லிச் சந்தோஷப் பட்டாரு பெரியவரு.
            பெரியவரு அப்பிடிச் சொல்ற அளவுக்கு பல சம்பவங்கள்ல சந்தானம் அத்தான் ரொம்ப பக்குவப்பட்ட ஆளு போல வேற நடந்துகிடுச்சு. அதெப் பத்திச் சொல்லணும்ன்னா,
            வேலையில கெட்டிக்காரத்தனமா இருந்தாலும் மாரி அத்தானால ரொம்பக் காலத்துக்குத் தனியா நின்னு தொழில கொண்டு போவ முடியல. ஆனா அதுக்குப் பின்னாடி பொறந்த ராமு அத்தான் பெரமாதமா, சந்தானம் அத்தான வுட தாண்டித் தொழில கொண்டு போனுச்சு. மாரி அத்தானப் பொருத்த வரைக்கும் அத்து தான் உண்டு தன்னோட வேலையுண்டுன்னு இருக்குற ஆளு. அதால நாலு பேர்ர வெச்சி சரியா வேலைய வாங்க முடியல. அது மட்டும் வேலையச் சரியாப் பாத்துச்சு. அதோட வேலைக்கு இருந்தவங்க நெலுப்பிக்கிட்டு ஏமாத்திக்கிட்டு சரியா வேலையச் செய்யாம போனதுல ஒத்துக்கிட்ட வேலையச் சரியான நேரத்துல முடிக்க முடியாமப் போயி, ஒத்துக்கிட்ட காசிய வுட வேலை அதிகக் காசிக்கு இழுத்துட்டுப் போயி பெரச்சனையாயிடுச்சு மாரி அத்தானுக்கு.
            என்ன பண்ணுறதுன்னு தெரியாம மாரி அத்தான் முழி பிதுங்கிப் போயி சந்தானம் அத்தாங்கிட்டதாம் வந்துச்சு. பெறவு சந்தானம் அத்தாம்தாம் போயி அத்து ஒத்துக்கிட்டு வாங்கி வெச்சிருந்த வேலைகள வாங்கி வெச்சி, காசு பணம் கூடுதலா ஆனாலும் பரவாயில்ல, பெரச்சனை யில்லாம போவட்டும்ன்னு செஞ்சிக் கொடுத்து சரி பண்ணி வுட்டுச்சு. அதுலேந்து மாரி அத்தான் சந்தானம் அத்தானோட வேலையாள்ள ஒருத்தர்ர வேலை பாத்துக்கிட்டு இருந்துச்சு. சரிதாம் பெரச்சனை இத்தோட முடிஞ்சிப் போயிட்டுன்னுதான நெனைக்குறீங்க. அதாங் இல்லே.
            இடையில மாரி அத்தான் என்ன நெனைச்சுச்சோ தெரியல. "யண்ணே! நீயி தர்ற கூலி பத்தல!"ன்னு பெரச்சனைப் பண்ணுச்சு. தனியா பாத்துக் கொடுத்த தொழில பண்ண முடியாம, காசுக்குத் தண்டத்தைப் பண்ணி, இப்பிடியும் பெரச்சனையும் பண்ணா யார்ர இருந்தாலும் கோவம்தானே வரும். ஆனா சந்தானம் அத்தான் கோவப்படல. சரிதாங் தம்பிக்கார்ரந்தாம்ன கேக்குறானேன்னு அதுக்கு மட்டும் யாருக்கும் தெரியாம கூலியக் கூட கொடுத்துப் பாத்துச்சு சந்தானம் அத்தான். அதெ வாங்கிக்கிட்டு ஒரு மாசம் வரைக்கும் ஒழுங்கா பெரச்சனை பண்ணாம இருந்த மாரி அத்தான், அடுத்த மாசமே ஒண்ணும் சொல்லாம கொள்ளாம தம்பிக்காரனான ராமு அத்தானோட போயி சேந்துக்கிடுச்சு.
            சொல்லிக்காம கொள்ளாம போனதுல சந்தானம் அத்தானுக்கு வருத்தம்னாலும் அத்து ஒண்ணும் சொல்லல. அதெ பெரிசும் பண்ணிக்கிடல. யாருகிட்டெ போயி வேலைக்குச் சேந்திருக்காம்? தம்பிக்கார்ரேங்கிட்டத்தானேன்னு பெருந்தன்மையா வுட்டுப்புடுச்சு. இப்பிடியா குடும்பத்துக்காக சில விசயங்கள்ல கண்டுக்கிடாம வுடுறதுலயும் குடும்பத்தெ ஒண்ணா அரவணைச்சிட்டுப் போறதுலயும் சந்தானம் அத்தான் பெரியவரு மாதிரியே நடந்துகிடுச்சு.
            இன்னொரு விசயத்தையும் சந்தானம் அத்தானப் பத்திச் சொல்லணும்னா,
            எப்படியோ ஏதோ ஒரு வகையில, எல்லா தம்பிகளையும் சென்னைப் பட்டணத்துல கரை சேத்து வுட்ட சந்தானம் அத்தானுக்கு கடைசி தம்பியான குமரு அத்தான மட்டும் கரை சேத்து வுட முடியல. இயல்புலயே குமாரு அத்தான் ஒடம்பு ரொம்ப நோஞ்சான் ஒடம்பா இருந்துச்சு. எந்த வேலையையும் அதால ரொம்ப நேரதுக்கு மெனக்கெட்டு செய்ய முடியாது. ஒடனே மூச்சு எரைக்க ஆரம்பிச்சிடும். வேலங்குடி பெரியவருக்குக் கடைக்குட்டி புள்ளையான குமரு அத்தான நெனைச்சித்தாம் கவலெ. குமாரு அத்தாம் மேலத்தாம் பெரியவருக்கு பாசமும் அதிகம். அவரு நல்ல வெதமா ஊட்டி வளத்தப் புள்ளைன்னா அத்து குமாரு அத்தாம் மட்டும்தாம். அதுலயும் ஒரு வேடிக்கை என்னான்னா, அவரு ஊட்டி வளக்காத ஒவ்வொரு புள்ளையும் நல்ல வெதமாத்தாம் தெட காத்திரமா வளந்துச்சுங்க. அவரு ஊட்டி வளத்த குமாரு அத்தாம்தாம் தெட காத்திரமா யில்லாம போயிடுச்சு. அதால ரொம்ப காலத்துக்கு வேலங்குடி பெரியவரு குமாரு அத்தான கைக்குள்ளயே வெச்சிருந்தாரு, கங்காரு குட்டிய தன்னோட வயித்துக்குள்ளயே வெச்சிருக்கிறாப்புல.

            சென்னைப் பட்டணத்துலேந்து சந்தானம் அத்தான் எவ்வளவோ சொல்லி குமாரு அத்தான அனுப்பி வுடச் சொல்லியும் பெரியவரு அவ்வளவு சீக்கிரத்துல அனுப்பி வுடல. பள்ளியோடம் சரியாப் போவாம படிப்பும் குமாரு அத்தானுக்கு சரியா வரல. இருவது வயசுக்கு மேல ஆன பிற்பாடுதாம் எதாச்சிம் ஒரு வழியப் பண்ணி வுடணும்னு வேற வழியில்லாம குமாரு அத்தான நேர்ல கொண்டு போயி சந்தானம் அத்தாங்கிட்டெ விட்டுப்புட்டு வந்தாரு பெரியவரு.
            விட்டுப்புட்டு வாரப்பவே பெரியவரு சொன்னாரு கண்ணு கலங்கி, "மித்த தம்பியோ மாதிரி நெனைச்சி வேல ரொம்ப வாங்கிப்புடாதடா! ஒடம்பு முடியாதப் பயெ. ஒடம்புத்தாம் முடியலன்னாலும் கோவம் ரொம்ப வேற வருது. குடும்பத்துல இப்பிடித்தாம் ஒன்னய மாதிரி ஒருத்தம் உச்சத்துக்குப் போவாம். இவ்வேம் மாதிரி ஒருத்தம் முடியாமக் கெடப்பாம். அப்போ உச்சத்துக்குப் போனவெம், முடியாம கெடக்குறவனெ கைத்தாங்கலா வெச்சிக் காபந்து பண்ணணும். அதாங் குடும்பம். நீயி இப்போ உச்சத்துல இருக்குறே. இவனெ நீந்தாம் தாங்கலா வெச்சிப் பாத்துக்கிடணும்."ன்னு சொல்லி வுட்டுப்புட்டுத்தாம் வந்தாரு பெரியவரு.
            பெரியவரு சொன்னதுக்கு ஏத்தாப்புலத்தாம் சந்தானம் அத்தான் குமாரு அத்தான வெச்சிருந்துச்சு. வேல பாக்குற எடத்துக்கு டீ பட்சணம் வாங்கிக் கொடுக்குறது, நேரத்துக்கு சரியா வேலைக்கு வர்றாங்களா, இல்லையான்னு பாத்துட்டு வாரது, பணம் கொடுக்கணும்னா கொடுத்துட்டு வாரது, சாமாஞ் செட்டுக வேணும்ன்னா கொண்டு போயிப் போடுறது இந்த மாதிரியான வேலைதாம் அதுக்கு. சந்தானம் அத்தானுக்கு வேலைன்னா சென்னைப் பட்டணம் முழுமைக்கும் எங்க வேணாலும் இருக்கும். சென்னைப் பட்டணத்துல இப்போ திருவேற்காடு வளர்ற பகுதின்னா அங்க வேலை அதிகமா இருக்கும். முகப்பேறு வளர்ற பகுதின்னா அங்கத்தாம் வேலை அதிகமா இருக்கும். ஆனா வூடும் ஆபீஸூம் அரும்பாக்கத்துல இருக்கும். ஒவ்வொரு நாளும் அரும்பாக்கத்துலேந்து வேலை நடக்குற எடத்துக்குப் போயாவணும்.
            சந்தானம் அத்தான் அப்போ புதுசா ராஜ்தூத் பைக்க வாங்கி வெச்சிக்கிட்டு பட்பட்ன்னு போயிட்டு இருந்துச்சு. குமாரு அத்தானுக்கு எங்கப் போனாலும் சைக்கிள்தாம். அதுக்கு பைக்கோ, வண்டியோ வுட தெரியாது. அதெ கத்துக்கன்னு சொல்லியும் கத்துக்கிட முடியாதுன்னு பிடிவாதமா நின்னுடுச்சு. வண்டி வுடுறதுல அதுக்கு அம்மாம் பயம். எங்காச்சிம் வுழுந்து கையி காலு ஒடைஞ்சு போனா என்னா பண்றதுன்னு ரொம்பவே மெரண்டுச்சு. ஏற்கனவே ஒடம்பும் நோஞ்சலு, இதுல வுழுந்து எழுந்திரிச்சா நம்ம நெலமெ என்னாவுறதுன்னு சைக்கிள்தாம் அத்து எங்க போறதுன்னாலும் போட்டு மிதிச்சிக்கிட்டுப் போவும். பஸ்ல போயிட்டு வரலாம்ன்னா வேலை நடக்குற சைட்டு வரைக்குமா பஸ்ஸூ போவும்? புதுசா வூட்ட வாங்கிக் கட்டுறவேம் எங்க எடம் கெடைக்குதோ அங்கத்தானே வாங்கிக் கட்டுவாம். அவ்வேம் வூடு கட்டுற எடம்தாம் வேலைக்கான சைட்டு. பஸ்ஸூ நிக்குற எடத்துலேந்து வேலை நடக்குற எடம் எப்பவும் ரண்டு கிலோ மீட்டரு, மூணு கிலோ மீட்டருன்னு தூரம் இருக்கும்.
            அத்தோட பஸ்ல போனாலும் சைட்டுக்கு எறங்கிப் போயி நடந்து உயிர வுட்டுக்கிட்டுக் கெடக்கணும். அதெ வுட பஸ்ல போயி பஸ்ல வந்தா ஒரு நாளைக்கு ரெண்டு மூணு சைட்டக் கூட பாக்க முடியாது. ஒண்ணு வேலை நடக்குற எடத்துக்கு டூவீலர்ரு வண்டியில போவணும், யில்லே சைக்கிள்லத்தாம் போவணும். வண்டியில போற மாதிரியா சைக்கிளில வேகமா போவ முடியும்? ‍அத்தோட சைக்கிள உசுரக் கொடுத்துதாம் மிதிச்சாவணும். குமாரு அத்தானால ஒரு கட்டத்துக்கு மேல முடியல. இருந்தாலும் குமாரு அத்தான் வைராக்கியமா இங்கயே கெடந்து ஒரு வேலையப் பிடிச்சிக்கிடணும்னு பல்லக் கடிச்சிட்டுத்தாம் கெடந்துப் பாத்துச்சு. சரித்தாம் ஆபீஸ்ல போடலாம்னாலும் அதுக்கு எழுதறதும், கொடுக்கல் வாங்கல நோட்டுல எழுதி கணக்கு வெச்சிக்கிறதும் வாரல. சமயத்துல யாராச்சிம் இங்கிலீஷ்ல யாராச்சிம் பேசிட்டு வந்தா ரொம்பவே அரண்டு போனுச்சு குமாரு அத்தான்.
            ஒரு கட்டத்துக்கு மேல சைக்கிள ரண்டு கிலோ மீட்டருக்குக் கூட மிதிக்க முடியாம குமாரு அத்தானுக்கு ஆஸ்த்மா மாதிரியான பெரச்சனை அதிகமாயிடுச்சு. வைத்தியம்லாம் பண்ணிப் பாத்து சரிபடல. மூச்சு எரைப்பு ஒரு கட்டத்துல தாங்க முடியாத நெலமைக்குப் போனப்போ, கிராமத்துல கொஞ்ச காலத்துக்கு இருந்து பாத்தா நெலமெ சரிபடலாம்ன்னு டாக்கடருங்க சொன்னதெ கேட்டுகிட்டு, சந்தானம் அத்தானே குமாரு அத்தான வேலங்குடி கிராமத்துல கொண்டாந்து விட்டுச்சு. அத்து என்னவோ, என்ன மாயமொ தெரியல, வேலங்குடி கிராமம் வந்த பிற்பாடு குமாரு அத்தானுக்கு இருந்தப் பிரச்சனை, இருந்த எடம் தெரியாம போயிடுச்சு. அதுக்குப் பட்டணம் ஒத்து வரலேங்றதெ சந்தானம் அத்தான் புரிஞ்சிக்கிடுச்சு. பெரியவருக்குத்தாம் மனசுல கவலையா இருந்துச்சு, கடைக்குட்டிப் பயலுக்கு ஒரு வழியக் காட்டி வுடணுமேன்னு.
            பெரியவரு கவலைப்படுறதப் பாத்து சந்தானம் அத்தான் சொன்னிச்சு, "யப்பா! இப்பிடி எல்லாரும் சென்னைப் பட்டணத்துல கெடந்தால ஊருல ஒஞ்ஞ பேர்ர சொல்றாப்புல ஒருத்தரு இருக்கணுமா வேணாமா? குமாரு கெடக்கட்டும் இஞ்ஞ வேலங்குடியில. ஒருத்தெம் இஞ்ஞ இருந்தாத்தாம் சென்னைப் பட்டணத்துலேந்து நாங்களும் இஞ்ஞ வந்துப் போவ கொள்ள ஒரு தோதுபடும். இஞ்ஞ கெடக்குற நெல புலங்களையும் பாத்துக்கிட ஆளு வேணுமில்லே! அவ்வேம் ஒடம்புக்கு கிராமந்தாம் சரிபட்டு வரும். இன்னும் கொஞ்சம் நெலத்த தம்பி பேர்ல வாங்கிப் போடுறேம். அதெ பாத்துக்கிட்டு மிராசா அவ்வேம் இஞ்ஞயே கெடக்கட்டும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான். சொன்னபடியே ஒரு வேலி நெலத்த கொஞ்சம் கொஞ்சமா தம்பிக்காரனுக்கு வாங்கிக் கொடுத்துச்சு சந்தானம் அத்தான்.
            ஏற்கனவே பெரியவரு ஒன்றரை வேலி நெலம் வரையும் கொஞ்சம் கொஞ்சமா வாங்கிப் போட்டிருந்தாரு. ரெண்டும் சேந்ததுல ரெண்டரை வேலி நெலம் அதாச்சி அம்பது மா நெலத்துக்கு மிராசா அதுவும் வேலங்குடி கிராமத்துக்குப் பெரிய மிராசா குமாரு அத்தாம்தாம் இப்போ இருக்குது. இப்பிடியா கடைக்குட்டித் தம்பிக்கும் ஒரு கதையெ கட்டி வுட்டுச்சு சந்தானம் அத்தான். பிற்பாடு கலியாணத்தையும் பண்ணி வெச்சி பெரிய மாடி வூட்டையும் தன்னோட கைக்காசுல வேலங்குடியில குமாரு அத்தானுக்காக சந்தானம் அத்தான்தாம் கட்டிக் கொடுத்துச்சு.
            மித்த மித்த ஆளுகளான ராமு அத்தானோ, மாரி அத்தானோ, சுப்புணி அத்தானோ அவங்கவங்க பங்குக்குச் செஞ்சதோட, கடைக்குட்டித் தம்பிக்கார்ரேம் இப்பிடி இருக்கானேன்னு, யாருக்கும் அப்பங்காரரான பெரியவரோட சொத்துலேந்து ஒரு துரும்பு கூட வாணாம்ன்னு முடிவெ பண்ணி, எல்லாம் தம்பிக்காரனான குமாரு அத்தானுக்கே இருக்கட்டும்ன்னு விட்டுக் கொடுத்தாங்க.
            இப்பிடி தம்பிக்காரனுகளுக்கு மட்டும் சந்தானம் உதவிகளப் பண்ணல. ஊருல கெடந்த சேக்காளிப் பயலுகளையும் வேலங்கடி வர்றப்ப, போறப்ப சென்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போயி தனக்கு தொணையா வெச்சிக்கிட்டு கை தூக்கி வுட்டுச்சு.
            இதெ தாண்டியும் சந்தானம் அத்தான் குடும்பத்துக்காக பண்ண இன்னொரு சம்பவத்தெ சொல்லணும்னா,
*****


No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...