26 Apr 2020

அண்ணனுடையான் எதற்கும் அஞ்சான்!

செய்யு - 430        

            படிச்சுத்தாம் ஒரு மனுஷன் கோடீஸ்வரனாவனும்னு அவசியமில்லே. படிக்காமலயும் ஒரு மனுஷன் கோடீஸ்வரன் ஆவலாங்றதுக்கு சந்தானம் அத்தான் ஒரு நல்ல உதாரணம். படிக்காமலேயே கோடீஸ்வரனாயி படிச்சவங்க பல பேர்ர தங்கிட்டெ வேலை பாக்க வைக்குற அளவுக்கு சந்தானம் அத்தான் 'ஸ்மார்ட் இன் ஸ்மார்ட்' இன்டீரியர் டெகரேட்டர்ஸ் ஆபீஸ காலப்போக்குல பெரிசா ஒரு நிறுவனத்தப் போல வளத்தக் கொண்டு போனுச்சு. இதெ பத்திச் சொல்றப்போ ரொம்ப வேடிக்கையா சந்தானம் அத்தான்,
            "படிக்கலன்னா கோடீஸ்வரான ஆவலாம். படிச்சா கோடீஸ்வர்ரேங்கிட்டெ வேலையத்தாம் பாக்கலாம்! படிக்காம கூட மின்னேறிப் புடலாம். படிச்சி மின்னேற முடியாது. நம்மகிட்டெ வேல பாக்குற படிச்சப் பயலுகளப் பாக்குறப்போ நமக்கு அப்பிடித்தாம் தோணுது மாமா! என்னத்ததாம் படிச்சானுவோன்னு தெரியல. சின்ன விசயம் கூட தெரிய மாட்டேங்குது. ஒண்ணொண்ணுத்தையும் சொல்லித் தர்ற வேண்டியிருக்கு. அதுலயும் பாத்தீன்னா மாமா, படிக்காதப் பயலுக்கு ஒரு தடவெ சொல்லிக் கொடுத்தா போதும் கப்புன்னு விசயத்தெ பிடிச்சிப்பாம். இந்தப் படிச்ச பயலுவோ இருக்கானுவோளே மாமா, அவனுகளுக்கு ஆயிரம் தடவெ சொல்லிக் கொடு ஒண்ணு கூட மண்டையில ஏறாது மாமா. மண்டெ முழுக்க களிமண்ணா என்னான்னு தெரியல! ஒரு வேள அப்பிடி களிமண்ணா இருந்தாத்தாம் படிக் முடியுமான்னு தெரியல மாமா!"ன்னு ரொம்ப நக்கலா சுப்பு வாத்தியார்கிட்டெ பேசிட்டு இருக்குறப்ப சொல்லும். ஆனா அந்த கோடீஸ்வர எடத்துக்கு வர்றதுக்கு சந்தானம் அத்தான் ரொம்ப பெரிசா பாடுபட்டுச்சு. அந்த நெலைய அது அடைய அடைய தன்னோட தம்பிகளையும் ஒவ்வொருத்தரா கை தூக்கி வுட்டுச்சு சந்தானம் அத்தான். அதாச்சி தாம் மட்டும் வளராம தன்னோட தம்பிகளையும் சென்னைப் பட்டணத்துக்கு அழைச்சி வளர வுட்டுச்சு. அப்பிடி அத்து கடந்து வந்தப் பாதையப் பாத்தோம்ன்னா, அதெ பத்தி சந்தானம் அத்தானெ சில விசயங்கள அடிக்கடிச் சொல்லும்.
            கோவில்பெருமாள்ல சந்தானம் அத்தான் இருந்த காலத்துல நாது மாமாகிட்டெ கத்துக்கிட்ட நுட்பம்தாம் இப்போ ஒதவுறதா அத்து அடிக்கடி சொல்லும். நாது மாமா வேலையில எறங்காதே தவுர, எறங்கிட்டா அதெப் போல வேல பாக்குறதுக்கு ஆளு கெடையாது. அதே போல நாது மாமாகிட்டே இருந்து எப்பிடி வேலை செய்யணும்னு கத்துக்கிட்ட அதே நேரத்துல வெலையில எப்படி இருக்கக் கூடாதுங்றதையும் கவனிச்சிப் புரிஞ்சிக்கிட்டதுதாம் இப்பவும் தனக்கு ஒதவுறதா சொல்லும் சந்தானம் அத்தான்.
            பாடம்ங்றது எந்த மனுஷர்கிட்டேருந்து கத்துக்கிடலாம். அவரு எப்பிடிப்பட்ட மனுஷரா இருந்தாலும் அவர்கிட்டேயிருந்து எப்பிடி இருக்கணும், எப்பிடி இருக்கக் கூடாதுங்ற ரெண்டு பாடமும் இருக்கு. அந்த ரெண்டு பாடத்தையும் ஒரு மனுஷன் கத்துக்கிடணும். ஒரு மோசமான மனுஷங்கிட்டேயிருந்து எப்பிடி இருக்கக் கூடாதுங்ற பாடத்தையும், ஒரு நல்ல மனுஷங்கிட்டேயிருந்து எப்பிடி இருக்கணுங்ற பாடத்தையும் கத்துக்கணும். நல்லதும் கெட்டதும் கலந்து இருக்குற மனுஷங்கிட்டேயிருந்து நல்லவெதமா எப்பிடி இருக்கணுங்றதையும், கெட்டவெதமா எப்பிடி இருக்கக் கூடாதுங்றதையும் ஒரே நேரத்துல கத்துக்கிடணும். மனுஷன் இந்த விசயத்துல பெரும்பாலும் தலைகீழா கத்துப்பாம். எப்படி நல்ல வெதமா இருக்கக் கூடாதுங்றதையும், எப்பிடி கெட்ட வெதமா இருக்கணுங்றதையும் உள்வாங்கிக்கிட்டா பெறவு அதெப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லே. பெரும்பாலான மனுஷங்க அப்பிடித்தாம் கத்துக்கிடுறாங்க. ஒசந்து வாழ்ற மனுஷனோட சின்ன சின்ன அல்பதனங்களையும் எடுத்துக்கிறதையும், எடுத்துக் வேண்டிய ஒசந்த விசயங்களையும் ஒதுக்கித் தள்ளிடுறதையும் ரொம்ப சரியா பண்ணிப்புடுறாங்க செல பேரு. அப்பிடிப் பண்ணிப்புட்டு நடக்குறதெல்லாம் தப்புத் தப்பா நடக்குறதா பொலம்ப ஆரம்பிச்சிடுறாங்க. இதெல்லாம் சந்தானம் அத்தான் சொல்லுற விசயங்க.
            ஆபீஸூ போடுறதுக்கு மின்னாடியே சந்தானம் அத்தானுக்கு வேலையாளுங்க பற்றாக்குறை அதிகம்தாம். ஓவர் டைம், லீவு நாள்ல வேலைன்னு இருக்குற ஆளுங்கள வெச்சி சமாளிச்சிக்கிட்டு இருந்தது. ஒவ்வொரு தம்பிகளா சென்னைப் பட்டணத்துக்கு சந்தானம் அத்தான் அழைச்சிக்க வேண்டியதுக்கு அதுவும் ஒரு காரணமா இருந்துச்சு.
            சந்தானம் அத்தானுக்கு நாலு தம்பிக. மாரி, ராமு, சுப்புணி, குமாருன்னு. மொதல்ல தொணையாவும் கை தூக்கி வுடணுமேன்னு மாரியத்தாம் அழைச்சிக்கிட்டுது. மாரி அத்தான் இயல்புலயே நல்ல வேலைக்காரரு. பொறுமை, நெதானம் எல்லாம் அதிகம். பள்ளியோடம் சரியா போவலைன்னாலும் வேலங்குடியில இருந்த ஆசாரிகப் பின்னாடிப் போயி நல்லா வேலையக் கத்து வெச்சிருந்துச்சு. அதால மாரி அத்தானோட வருகை சந்தானம் அத்தானுக்கு ரொம்ப ஒதவியா இருந்துச்சு. மாரி அத்தானோட தொணையில வேலைகள கொஞ்சம் அதிகம் எடுத்துப் பண்ணிக்கிடுச்சு. கொஞ்ச நாளு போன பிற்பாடு மாரி அத்தானுக்குன்னு வேலைக்கு சில எடங்களப் பிடிச்சி வுட்டு தனியாவும் பாத்துக்க ஏற்பாட்ட பண்ணி வுட்டுச்சு.
            மாரி அத்தான தனியா விட்ட பிற்பாடு அடுத்தத் தம்பியான ராமு அத்தான சென்னைப் பட்டணத்துக்குக் கூப்புட்டுச்சு. மாரி அத்தானப் போல ராமு அத்தான் அந்த அளவுக்கு வேலைக்காரர்ன்னு சொல்ல முடியாது. ஆனா ஆவ வேண்டிய வேலைய எந்தெந்த ஆளுகள வெச்சி எப்பிடி பாக்கணுங்ற வித்தெ அதோட மூளைக்கு அத்துப்படியாயிருந்துச்சு. சந்தானம் அத்தான் பேச்சுல ஆரம்பிச்சா நாளு கணக்குல, வார கணக்குல, மாசக் கணக்குல, ஏம் வருஷ கணக்குல கூட பேசிட்டு இருக்கும். ராமு அத்தாங்கிட்டெ அப்பிடில்லாம் பேச முடியாது. நறுக்குன்னு எதெ பேசணுமோ அதெ மட்டுந்தாம் பேசும். சொன்னது சொன்னபடி இருக்கணுங்றதுல சந்தானம் அத்தான வுட ரொம்ப கவனமா இருக்கும். ஒரு வாரத்துல முடிச்சுத் தர்றதா சொல்ற வேலையே அஞ்சு நாளைக்குள்ளயே முடிச்சி வெச்சிருக்கும். கணக்குப போடுறதல ரொம்ப கன கச்சிதமான ஆளு ராமு அத்தான்.

            சந்தானம் அத்தான் போயி ஆபீஸ் போட்டதுக்குப் பிற்பாடு ஆறெழு வருஷமாவது இருக்கும் ராமதாஸ் அத்தான் சென்னைப் பட்டணத்துல காலடி வெச்சு. இன்னிய நெலையில சந்தானம் அத்தானுக்கும், ராமு அத்தானுக்கும் சொத்துல போட்டி வெச்சா ராமு அத்தாம்தாம் முன்னாடி இருக்கும். காரணம் சதுரிச்சி வுட்டாப்புல சந்தானம் அத்தானுக்குப் பேசத் தெரியாது. அத்து ராமு அத்தானுக்கு நல்லா பேச வரும். யாருகிட்டெ எந்த அளவுக்குப் பேச்சு வெச்சிக்கிடணுமோ, அந்த அளவுக்குத்தாம் வெச்சிக்கும். கூட கொறைச்சலு அதுகிட்டெ பேச்ச எதிர்பார்க்க முடியாது. ராமு அத்தான் தொழில கத்துக்கிட்ட பெறவு அதுக்கும் தனியா வேலையப் பிரிச்சிக் கொடுத்து வுட்டுச்சு சந்தானம் அத்தான்.
            ராமு அத்தானுக்குப் பெறவு மூணாவது தம்பியான சுப்புணி அத்தான அழைச்சிக்கிட்டுது சந்தானம் அத்தான். எல்லாரும் இப்பிடியே படிக்காம இருக்குறதுல ஒரு மனக்கொறை சந்தானம் அத்தானுக்கு. அதால அதுக்கு ஒரு முடிவக் கட்டணும்னு யோசனை வந்து சுப்புணி அத்தான பாதி நேரத்துக்கு வேலைன்னும், மீதி நேரத்துக்கு டுட்டோரியல் காலேஜ்ல படிப்புன்னும் சேத்து வுட்டுப் பாத்துச்சு சந்தானம் அத்தான். சுப்புணி அத்தான் எப்பிடியே பத்தாவது, பன்னெண்டாவது தேறுனதும் அமைஞ்சிக்கரையில ஒரு காலேஜ்ல சேத்து வுட்டுச்சு, தம்பிகள்ல ஒருத்தனாவது டிகிரி படிப்பு படிச்சிருக்கணும்னு. அத்தோட இந்தப் பொழைப்பு அவ்வேம் ஒருத்தனுக்காவது யில்லாம எதாச்சிம் கவர்மெண்டு வேலையில சேத்து வுட்டுப்புடணும்னு.
            சுப்புணி அத்தான் மூணு வருஷம் காலேஜ்ல படிச்சி இருவத்து நாலு அரியர்ஸ் வெச்சிருந்துச்சு.   ஒரு நாளு அங்கங்க நடந்துக்கிட்டு இருக்குற வேலைய மேம்பார்வைப் பாக்க போனப்ப பார்க் ஒண்ணுல உக்காந்துக்கிட்டு சுப்புணி அத்தான் சுண்டல் திங்குறதைப் பாத்துடுச்சு சந்தானம் அத்தான். காலேஜ் நடக்குற நேரத்துல இவனுக்கு இங்க என்ன வேலைங்ற யோசனையிலயே போன அது, அன்னிக்கு ராத்திரியே சுப்புணி அத்தான வர வெச்சு, இங்கிலீஷ் இந்து பேப்பர தம்பிக்கு மின்னாடி எடுத்துப் போட்டு அதெ படிக்கச் சொன்னுது. சுப்புணி தடுமாறி தடுமாறி படிச்சதெப் பாத்து, படிச்சது போதும், படிச்சது என்னான்னு வெளக்கத்த சொல்லுன்னு கேட்டதும் சுப்புணி அத்தான் மலங்க மலங்க விழிச்சிருக்கு.
            சந்தானம் அத்தானுக்கு வந்துச்சே கோவம். "ஏம்டா! நாம்ம பள்ளியோடம் பக்கம் போவாத ஆளு. அப்பிடியே பழக்க வழக்கத்துல நாலு பெரிய ஆளுக தொடர்புலயே இங்கிலீஷ்ல இந்து பேப்பர படிக்கிறேம். படவா நீயி மூணு வருஷம் காலேஜூக்குப் போயி, இந்து பேப்பர்ர படிக்கத் தெரியலன்ன என்னத்தாம்டா படிச்சே?ஒன்னய பிடிச்சி ஒழுங்கா வேலையில போட்டுருந்தாலும் இந்நேரத்துக்கு ஒரு ஆபீஸப் போட்டுக் கொடுத்து ஆளாக்கியிருக்கலாம். இப்பிடிக் காலத்தெ வீணடிச்சி உக்காந்துப்புட்டீயேடா? காலேஜ்ல போய என்னத்ததாம்டா படிச்சே?"ன்னு கேட்டுச்சு சந்தானம் அத்தான்.
            "யில்லண்ணே! படிச்சிட்டுத்தாம் இருக்கேம். தெனமும் பேப்பர் படிக்காததால வர்ற மாட்டேங்குது"ன்னு சமாளிச்சிது சுப்புணி அத்தான். சந்தானம் அத்தானுக்கு வந்துச்சே கோவம். அந்தக் கோவத்துல பளார்ன்னு தம்பின்னு கூட பாக்காம கன்னத்துல ஒண்ணு வெச்சி, "காலேஜூ நேரத்துல பார்க்குல ன்னடா ஒனக்கு வேல?"ன்னு கேள்வியக் கேட்டுச்சு பாருங்க. சுப்புணி அத்தானுக்கு ஒதறல் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு.
            "யண்ணே! ஒனக்கென்ன தெரியும்? புரபஸர்ஸ்லாம் தஸ் புஸ்ன்னு இங்கிலீஷ் பேசுறாங்க யண்ணே! நமக்கும் ஒண்ணும் புரியல. இதுல பொம்பளப் புள்ளைங்க வேற கிண்டலு. பள்ளியோடத்துல படிச்சிட்டு வாரவனே அஞ்ஞ தடுமாறுறாம். நாம்ம டுட்டோரியல் காலேஜ்ல படிச்சிப் பார்டர்ல படிச்சி எப்பிடிண்ணே சமாளிப்பேம்? அதால..."ன்னுச்சு சுப்புணி அத்தான்.
            "அதால, ன்னடா பண்ணே?" அப்பிடினிச்சு சந்தானம் அத்தான்.
            "அதால காலேஜூ போற மாதிரியே போயி எங்காயிச்சும் பார்க்குல உக்காந்து சுண்டல வாங்கித் தின்னுட்டு வந்துப்புடுவேம்ண்ணே!"ன்னுச்சு சுப்புணி அத்தான்.          "ஒடம்பு பொத பொதன்னு போனப்பவே கவனிச்சிக்கணும். ஒருத்தனாச்சிம் படிச்சி பேரு எடுப்பான்னு பாத்தா எல்லாம் நம்ம கேஸாத்தாம் இருக்கும் போலருக்கு. அத்துச் செரி. நாம்ம படிச்சாத்தான்னே நீயி ஏம் படிக்கலேன்னு கேக்க முடியும். நம்மள பள்ளியோடம் அனுப்பிச்ச நாள்ல கொளங் குட்டையில கெடந்து கும்பலா அல்லிக் கெழங்க பொறுக்கித் தின்னுகிட்டுக் கெடந்த ஆளுதானே நாம்மே. நம்ம வழியிலயயே நீயும் இருக்குறே. ஒடம்புல ஓடுற ரத்தத்தெ எவ்வேம் மாத்துறது? சென்னைப் பட்டணத்துல கொளமா? குட்டையா? கூவம் ஆறுதாம். அதுல நாத்தத்தத்தாம் பாக்கலாம். அல்லிக் கெழங்க எங்கப் பாக்குறதுன்னு நீயி பார்க்குல உக்காந்து சுண்டல வாங்கித் தின்னுட்டு கெடந்துருக்கே. சரிடப்பா! நாளையிலேந்து வேலைக்கு வந்துப்புடு சைட்டுக்கு!" அப்பிடினிச்சு சந்தானாம் அத்தான்.
            வேற வழியில்லாம சுப்புணி அத்தான் வேலைக்குப் போவ வேண்டியதா ஆயிடுச்சு. நாலு நாளு வேலைக்குப் போன பிற்பாடு கொஞ்சம் ஒடம்பு வலி கண்டு பிற்பாடு, செருமப்பட்டவாது படிச்சி டிகிரிய வாங்கிப்புடுறேம்ண்ணேன்னு சொல்லிப் பாத்துச்சு சுப்புணி அத்தான். "இந்து பேப்பர படிக்கத் தெரியாம நீயி டிகிரிய வாங்கி நாக்கையா வழிச்சிக்கிடறது? ஒழுங்கப் போவச் சொன்னப்பவே ஒழுங்கா போயி படிச்சிருக்கணும். இப்போ காலத்துக்குக் காலமும் போயி, காசுக்குக் காசும் போயி என்னத்தெ சொல்றது? நாலு நாளுதானே வேலைக்குப் போயிருக்கிறே. இன்னும் நாலு நாளைக்குப் போ. எல்லாஞ் சரியாயிடும். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். தெனமும் வேலைக்குப் போறதுக்கு மின்னாடி முட்டுச்சந்துக் கடையில இந்து பேப்பர வாங்கிக்க. படிச்சிப் பாரு. என்னிக்கு நல்லா படிச்சி வெளக்கத்தச் சொல்றீயோ அன்னிக்குப் பாக்கலாம், ஒன்னய தொடந்தாப்புல படிக்க வைக்கலாமான்னு இல்லியான்னு?"ன்னு சொல்லிச்சு சந்தானம் அத்தான்.
            சுப்புணி அத்தான் நாலு நாளைக்கு இந்து பேப்பர வாங்கிட்டுப் போயிப் பாத்துச்சு. இந்துப் பேப்பர்ர படிச்சி புரிஞ்சிக்கிறதெ வுட வேலை சுலுவா போயிட்டா என்னவோ தெரியல, அஞ்சாவது நாள்லேர்ந்து முட்டுச்சந்து கடையில இந்து பேப்பர வாங்குறதெ வுட்டுப்புடுச்சு சுப்புணி அத்தான்.
            பொதுவா தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. அதெ அப்படியே மாத்திப் போட்டுச்சு சந்தானம் அத்தான், அண்ணனுடையான் எதுக்கும் அஞ்சான்னு.
*****


No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...