29 Jul 2019

நாமெல்லாம் திரைப்பட பிரதிகள்!



            நாமெல்லாம் நாமாக இருக்கிறோமா? திரைப்படத்தின் பிரதிகளாக மாறிக் கொண்டிருக்கிறோமா?
            நாமெல்லாம் திரைப்படத்தின் பிரதிகள் என்றால் அதில் என்ன பிழை இருக்கிறது?
            திரைப்பட வசனங்களைத் தொடர்படுத்தாமல் வாழ்க்கையின் ஒரு உரையாடலை நம்மால் அமைத்துக் கொள்ள முடிகிறதா?
            காமெடி டயலாக்குகளிலும், பஞ்ச் டயலாக்குகளிலும் கரைத்துக் கொண்டு உரையாடிக் கொண்டு இருக்கிறது நம்முடைய வாழ்க்கை.
            இந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கும் திரைப்படங்களே உதவியாக இருக்கின்றன நமக்கு. இதற்குச் சான்று காட்டவும் அதே திரைப்பட வசனத்தைத்தான் துணைக்கு வரவழைத்து, 'நல்லா வெச்சு செஞ்சிட்டாங்க!' என்று சொல்ல வேண்டியதாக இருக்கிறது நிலைமை.
            காலங்கள் எவ்வளவோ கடந்த போதும், மாற்றங்கள் எவ்வளவோ நிகழ்ந்த போதும் திரைநாயகர்கள் எல்லாம் உடல் வலிமையைக் காட்டிச் சண்டையிட்டுச் சாதிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சண்டைச் சமூகத்தின் தொடர்ச்சியாக நீள்கிறார்கள். அந்தச் சண்டை நமக்குப் பிடித்திருக்கிறது. மனித மனதில் இருக்கும் வெறியடங்காத அந்த வன்முறைக்கு தீனி போட வேண்டும் என்பது நம் கதைநாயகர்களுக்குத் தெரியும்.
            அதற்காக அவர்கள் பொறுக்கிகள், ரெளடிகள், சோம்பேறிகள், பொறுப்பற்றவர்கள் என்று எப்படி மாறியும் நடிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அப்படி நடிப்பதை ரசித்து மக்கள் தாங்களும் பொறுக்கிகள், ரெளடிகள், சோம்பேறிகள், பொறுப்பற்றவர்கள் என்று எப்படி மாறவும் தயாராக இருக்கிறார்கள்.
            அதற்கேற்ப கதைநாயகிகளும் ரெளடிகளை, பொறுக்கிகளை, சோம்பேறிகளை, பொறுப்பற்றவர்களை, வேலையற்றவர்களைக் காதலிக்கத் தொடங்குகின்றனர். முன்பு நாயகியர்கள் சமூகச் சிந்தனை உள்ளோர்கள், பொதுநலச் சேவகர்கள், வேலையில் இருப்போர், டாக்டராக இருப்போர், பேங்க் ஊழியராக இருப்போர், பாரின் மாப்பிள்ளையாக இருப்போர் என்று காதலித்தது மாறி இப்போது இது ஒரு புது டிரெண்டாக உருப்பெற்று வருகிறது. இது கதாநாயர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருவதைப் போல அதைப் பார்ப்பவர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.
            நடைமுறையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ரெளடியாகவோ, பொறுக்கியாகவோ, சோம்பேறியாகவோ, பொறுப்பற்றவனவாகவோ, வேலையற்றவனாகவோ இருக்கும் ஆசை மனதின் ஓர் ஓரத்தில் இருக்கிறது. அந்த ஆசைக்கு நன்றாகவே தீனி போட்டு விடுகிறது திரைப்படங்கள்.
            திரைப்படங்கள் சமுதாயத்தில் நடக்காததைக் காட்டுவதில்லை. நடப்பதைத்தான் காட்டுகின்றன. ஏனென்றால் சமுதாயம் எப்படி நடக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்கும் திரைப்படத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...