31 Jul 2019

உலகப் போரை நிறுத்தியவர்கள்!



செய்யு - 162
            நாம்ம ஒண்ணு நெனைச்சா தெய்வம் ஒண்ணு நெனைக்குதா? தெய்வம் ஒண்ணு நெனைச்சா நாம்ம ஒண்ணு நெனைக்கிறோமான்னு தெரியல. ஒவ்வொருத்தரு மனசுலயும் ஒவ்வொரு நெனைப்பு ஓடுது. அதாலதாம் பாருங்க ஒருத்தருக்கு ஒருத்தரு இங்க மனசு ஒத்துக்கிறதில்ல. மனசு ஒத்துக்காததால ரெண்டு பேரும் கெட்டவங்க இல்ல. அவரு மனசுல வேற நெனைப்பு ஓடுது, இவரு மனசுல வேற நெனைப்பு ஓடுது அவ்வளவுதான். இது வெளியாளு ரெண்டு பேருக்கும்ன்னா எந்தப் பிரச்சனையும் இல்ல. இவரு பாட்டுக்கு இவரு பக்கம் ஒதுங்கிப்பாரு. அவரு பாட்டுக்கு அவரு பக்கம் ஒதுங்கிப்பாரு. பெறவு மனசு மாறுனா சேர்ந்துப்பாங்க. இல்லேன்னா ஒதுங்கியே இருந்துப்பாங்க.
            அதே ரெண்டு பேரு உறவு முறையிலயோ, கிராமத்துக்குள்ளயோ வாராங்கன்னு வையுங்களேன் முட்டிப்பாங்க! மோதிப்பாங்க! ஊருலயும் உறவுலயும் வெலக்கி விட ஆளு இருக்கும். ஒரு மாதிரியா ரெண்டு பேரையும் அசமடக்கி வெச்சிப்புடுவாங்க.
            அதே ரெண்டு பேரு ஒரு குடும்பத்துக்குள்ள இருந்தாங்கன்னா வெச்சுக்குங்களேன்! நிலைமை கொஞ்சம் கஷ்டந்தான் இல்லீங்களா! எப்பப் பார்த்தாலும் குடும்பத்துக்குள்ள புகைஞ்சிகிட்டே இருக்கும். இது குடும்பத்துக்குள்ள இருக்குற மத்தவங்களுக்கு ரொம்பப் பெரிய ரோதனையாப் போயிடும்.
            அதே ரெண்டு பேரு கணவனும் மனைவியுமா அமைஞ்சிட்டாங்கன்னா வையுங்க ... அதுலயும் ஒருத்தரோட நெனைப்பும் போக்கும் சரியில்லன்னா வெச்சிக்குங்க ... என்னாகும்னு நீங்கதான் சொல்லணும்!
            அப்படிதான் ஆகிப் போச்சி தேசிகாவோட நிலைமை. தேசிகா ஒரு பக்கம்னா அதெ கட்டிக்கிட்ட மாப்பிள்ளை இன்னொரு பக்கம். ரெண்டுக்கும் முட்டிக்குது, மொறைச்சிக்கிது, உரசிக்கிது, பத்திக்கிது.
            கல்யாணம் பண்ண கொஞ்ச நாளு வரைக்கும் அதுக மாதிரி ஒரு ஜோடிய நீங்க ஒலகத்திலேயே பார்க்க முடியாது. உசரம், நெறம், ஒடம்பு கனம்னு ரெண்டுக்கும் நல்ல பொருத்தம். அவ்ளோ அம்சமா ஜோடி அமையாது. ஜோடில்ல ஒண்ணு நெட்டையா, இன்னொன்னு குட்டையா, ஒண்ணு சிவப்பா, இன்னொன்னு கருப்பா, ஒண்ணு அழகா, இன்னொன்னு சுமாரா, ஒண்ணு குண்டா, இன்னொன்னு ஒல்லியா இப்படி அமைஞ்ச சோடிங்கதான் இங்க அதிகம். அதாலயே அந்த ஜோடிய பார்க்க பார்க்க அதிசயமா இருக்கு. ரெண்டும் சேர்ந்துகிட்டு சினிமாவுக்குப் போறதும், உறவு முறைங்க வீடுகளுக்கு விருந்துக்குப் போறதும், ஊர சுத்தி டூருக்குப் போறதும்னு பார்த்தவங்க கண்ணெல்லாம் பூத்துதான் போச்சுது. எல்லாம் கொஞ்ச நாளுதான். இப்போ பாருங்க யாரு கண்ணு பட்டுச்சுதோ, எவங் கண்ணு பட்டுச்சுதோன்னு கணக்கா அடிச்சிக்குதுங்க. அடி அடின்னா அப்படி அடி. ஆம்பள கணக்கா தேசிகாவும் மல்லுக்கு நிக்குது. பொம்பளைங்க சண்டைய ஆரம்பிச்சா விடாத கணக்கா தொணதொணன்னு பேசிட்டு இருப்பாங்களே! அந்த மாதிரி மாப்பிள்ளையும் பேசிகிட்டு நிக்குது. இதுங்க ரெண்டுக்கும் பஞ்சாயத்துப் பண்றதே பெரியவங்களுக்குப் பெரிய வேலையா போவுது.
            பஞ்சாயத்துப் பண்ண பெரியவங்க போறப்பதான் நிறைய விசயம் விளங்குது. மொத ரெண்டு முறை பஞ்சாயத்துப் பண்ணப்போ வரைக்கும் மாப்பிள்ளையோட வீடு திருவாரூர்ல நாகப்பட்டிணம் ரோட்டுல இருக்குற அந்த பெரிய வீடுதான். நாலைஞ்சு மாசம் கழிச்சி பஞ்சாயத்துப் பண்ணப் போறப்ப வீடு அந்த ரோட்டிலேர்ந்து அப்படியே வடக்கே போயி மேற்கே திரும்புனா ஒரு பக்கமாக சாய்ப்பா இருக்குற ரயிலு ஓடு போட்ட வீடா இருக்கு. ரெண்டாயிரம் சதுர அடியில அந்த வீடு எங்கே? எரநூறு சதுர அடியில இந்த வீடு எங்கேங்ற மாதிரி இருக்கு. என்னடா இது! ஒரு நாலைஞ்சு மாசத்துல இப்படியே வீடு இடம் விட்டு இடம் ஓடி இளைச்சா போகும்னு பார்த்தா, அதுதாங் மாப்பிள்ளையோட உண்மையான வீடாம். அந்த வீடும் சொந்த வீடு இல்லையாம். வாடகை வீடாம். அப்போ நாகப்பட்டிணம் ரோட்டுல இருந்த வீடு டூப்ளிகேட் வீடா? இல்ல மாயமந்திரம் செஞ்சு வெச்சா வீடான்னா கேட்டா... அது மாப்பிள்ளையோட பிரெண்டு வீடாம்.
            ரொம்ப நாளா நம்ம மாப்பிள்ளைப் பையனுக்கு பொண்ணு தேடியிருக்காங்க! சொந்த வீடும் சுய தொழிலும் இல்லாதவனுக்கு எவன் பொண்ணு கொடுப்பான். அதாம் மாப்பிள்ள திருச்சியில நகைக்கடையில வேலையில இருக்காரே! அவர எப்டி சுயதொழில் இல்லாதவரன்னு சொல்லலாம்னு ஒங்களுக்குத் தோணலாம். அது எப்டிங்றத கொஞ்சம் பின்னால சொல்றேன். இப்ப விசயத்து வந்திடலாம். ஒண்ணும் இல்லாதவன்னு ஒருத்தனும் பொண்ணு கொடுக்கலன்னதும் வெறுத்துப் போயிருக்கானுவோ மாப்பிள்ளை வீட்டு சனங்க. அப்பதாம் யோசனைப் பண்ணியிருக்கானுங்க அவனுங்க. இப்படி இருந்தா எவனும் பொண்ணு கொடுக்க மாட்டானுங்கன்னு, மாப்பிள்ளைப் பையனோட பள்ளியோடத்திலேர்ந்து படிச்ச பால்ய சிநேகிதனோட கையில காலுல விழுந்து அந்த வீட்டை மூணு நாளு மாசத்துக்குக் கொடுப்பா! கல்யாணத்த நடத்தி முடிச்சிட்டு கொடுத்துடறோம்னு மன்றாடியிருக்கானுங்க.
            கூட படிச்ச பால்ய சிநேகிதனாச்சே! மனசு உருகிப் போயி கொடுத்துட்டான். அந்த வீட்டை மாப்பிள்ளையோட வீடுன்னு சொல்லி கல்யாணத்த முடிச்சிப்புட்டானுங்க அவனுங்க. அந்த வீட்டையும்தான் இந்த முருகு மாமாவும், லாலு மாமாவும் போயிப் பார்த்தா... மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க சந்தேகப்படறதா நெனைச்சிப்பாங்கன்னு நெனைச்சிகிட்டு போயி பார்க்காம விட்டுட்டாங்க இல்லீயா! போயிப் பார்த்து கொஞ்சம் அக்கம் பக்கத்துல சாதி சனத்துகிட்ட நல்லா விசாரிச்சிருந்தா உண்மையைக் கண்டுபிடிச்சிருக்கலாம். இந்த ரெண்டு மாமாக்களுக்குமே அவங்க நெனைக்கிறதுதாம் சரி, மத்தவங்க நெனைக்கிறதெல்லாம் தப்புங்ற மாதிரி எப்போதும் ஒரு மனக்கிறுக்கு இருக்கே. அப்புறம் எப்பிடி விசாரிக்கப் போறாங்க? இந்த ரெண்டு பேருமே ஆளு பார்த்து பேசுற ஆளுங்க. கொஞ்சம் பொருளாதாரத்துல இறக்கமா இருந்தா அந்த ஆளுங்களோட மூஞ்சியை உடைக்கிற மாதிரிப் பேசுவாங்க. அவங்கள விட பொருளாதாரத்துல ஏத்தமா இருக்குற ஆளுங்ககிட்ட அப்படியே பம்மிப் போவாங்க.
            மாப்பிள்ளை வீட்டோட அத்தனை ஜகஞ்ஜால வேலைகளைத் தெரிஞ்சிருந்து எவனாவது சொன்னாலும், "எங்களுக்குத் தெரியாத விசயமா? நாங்க அறியாத சங்கதியா? எங்க வூட்டுப் பொண்ணுக்கு ந்நல்ல எடத்துல கல்யாணம் ஆகப் போவுதுங்ற பொறாமையில சொல்றீயா?"ன்னு கேட்கக் கூடிய ஆளுங்கதான் ரெண்டு பேரும். அதிசயமா அஞ்சு காலு முயல்ல ஒண்ணு பிடிச்சாங்கன்னா வெச்சிக்குங்க ஒலகத்துல இருக்குற எல்லா முயலுமே அஞ்சு காலு முயல்னு சொல்ற ஆளுங்க வேற. அதுவும் அவுங்க வீட்டுக்கு காருல வந்து எறங்குனா போதும். அவங்கல்லாம் அவங்கள பொருத்தமட்டில்ல நல்லவங்க மற்றும் யோக்கியனுங்க. பஸ்லேயோ, நடந்தோ, சைக்கிள்ளயோ போயி எறங்குறவங்க அவங்கள பொருத்தமட்டில் கெட்டவங்க, மட்டமானவங்க, ‍அயோக்கியனுங்க, லாயக்கு இல்லாதவங்கதான். அப்படித்தான் அவங்களோட நெனைப்பு இருந்திச்சி.
            மாப்பிள்ளைத் திருச்சியில வேற வேலைப் பார்க்கிறார்ல. திருவாரூர்லேந்து திருச்சிப் போயி வேலைப் பார்க்கிறார்னா சும்மாவா? அவரோட திறமைக்கு திருவாரூ பத்தாதுங்ற போல அப்படின்னுல்ல அவங்க நெனைச்சிகிட்டு இருந்துட்டாங்க. அதுலயும் ஒரு விசயம் இருந்திச்சிப் பாருங்க! முன்னாடி பேசுனோமோ மாப்பிள்ளையோட சுயதொழிலு பத்தி ...
            திருவாரூர்ல வேலைப் பார்த்த அத்தெனை நகைக் கடையிலயும் கை வெச்சிருக்காரு நம்ம மாப்பிள்ள. கை வைக்கிறதுன்னா நீங்க நெனைக்கிற மாதிரி கையை வெச்சிட்டு எடுக்குறது இல்ல. சாமர்த்தியமாக நகையை ஆட்டையைப் போடுறது அல்லது நகையை எடையைக் கொறைச்சிப் போட்டு அதுக்கு ஏத்த மாதிரி நகையை வாங்க வந்தவங்கிட்ட புற வாசல்லப் போயி நின்னு கமிஷன் காசு வாங்கிக்கிறது, எத்தனை நாளு இந்த வேலையைப் பண்ண முடியும் சொல்லுங்க! நகைக்கடைக்கார மொதலாளி எப்படியும் ஒரு நாளு இதைக் கண்டுபிடிச்சிடுவாரு. சாயுங்காலம் அவங்க வித்தது வாங்குனது எல்லாத்தியும் ஒரு கணக்கு வெச்சிகிட்டுதாம் போவாங்க. மாசக் கணக்குப் பார்க்கிறப்ப எவ்ளோ வித்திருக்கிறோம், நகை செய்ய எவ்ளோ வாங்கியிருக்கோம்னு கணக்குப் போட்டுப் பார்த்தா எப்படியும் கணக்குல இடிக்கும். அதுவும் நகைக்கடைக்காரங்க ஒரு பத்து பைசாவுக்கு சுண்ணாம்பு வாங்கினாலும் அதையும் கணக்குல எழுதி வெச்சிக்குவாங்க. மாப்பிள்ள மாட்டிகிட்டாரு. இப்படிதாம் திருவாரூர்லயே பத்துப் பதினைஞ்சி கடைங்க மாறி மாறி வேலை பார்த்திருக்காரு. அதுக்கு மேல இது தாங்குமா? திருவாரூரைச் சுத்திப் புகைய ஆரம்பிச்சி திருவாரூக்கே தெரிஞ்சிப் போயி நகைக்கடைக்கார மொதலாளிங்க எல்லாம் கூட்டம் போட்டு நம்ம மாப்பிள்ளையே திருவாரூர்ல யாரும் வேலைக்கே வெச்சிக்கக் கூடாதுன்னு தீர்மானமே போட்டுட்டாங்க.
            நம்ம மாப்பிள்ள விடாமுயற்சி உள்ளவரு. திருவாரூ போனா என்னான்ன தஞ்சாவூரு போனாரு. தஞ்சாவூர்ல ஒரு வருஷம் வரைக்கும் நல்லாத்தான் வேலை பார்த்திருக்காரு. ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்வாங்க இல்ல. அந்த பட்டியில நீங்க ஆட்டையப் போட்ட கையும் சும்மா இருக்காதுன்னு சேத்துக்கணும். அங்கயும் கையை வைக்க ஆரம்பிச்சிருக்காரு. திருவாரூ மாதிரி அதைக் கண்டுபிடிக்க அவங்களுக்கு ஒரு மாசம்லாம் தேவைப்படல. ரெண்டு மூணு நாளுல்லயே கண்டுபிடிச்சிட்டாங்க. கண்டுபிடிச்சா அது என்ன திருவாரூரா? சொந்த ஊருன்னு நெனைச்சிகிட்டுப் போனா போவுதுன்னு வுடறதுக்கு? அங்கேயே வெச்சி கும்மு கும்முன்னு கும்மி போலீஸ் கேஸா ஆக்கி விட்டுட்டாங்க. நம்ம மாப்பிள்ள அந்த வகையில ஜெயில்லயும் போயி இருந்துட்டுலாம் வந்திருக்கு.
            நாமதான் முன்னாடியே சொன்னோமே நம்ம மாப்பிள்ள விடாமுயற்சி உள்ளவர்னு! திருவாரூ போயி தஞ்சாரூ போனா என்னான்னு அப்டியே திருச்சிக்கு விட்ருக்காப்ல ரூட்ட. இப்போ திருச்சியிலதாம் மாப்பிள்ளைக்கு வேல அப்டின்னு சொற்கேள்வி அவ்வளவுதாம். அங்க இன்னும் வேலய ஆரம்பிக்கல போருக்கு மாப்பிள்ள. அங்கயும் எங்கயாவது மாப்பிள்ள வேலைப் பார்க்குறாரா? பொழுது போவாம போயிட்டு வாராரான்னு சர்வ நிச்சயமாக தெரியல. ஆனா உண்மை சங்கதி முழுக்கா தெரியல. ஆனா மாப்பிள்ளைக்கு ஒரு கொணம் என்னான்னா நெனைச்சா வாரத்துக்கு ரெண்டு மூணு நாளைக்கி வேலைக்குப் போகும். நெனைக்கலன்னா அந்த வாரம் முழுசுக்குமே வேலைக்கிப் போகாது. போதைத் தண்ணிய போட்டுட்டுப் படுத்திடும். தண்ணிய போட்டு படுக்கிறப்பவும் நல்ல மூடு இருந்தா பேசாம படுத்திடும். மூடு கொஞ்சம் மோசமா இருந்தா வாயில வர்ற அத்தனைக் கெட்ட வார்த்தைகளையும் பேசிட்டு தேசிகாவைப் போட்டு பொரட்டுப் போரட்டிட்டுதான் படுக்கும். இப்படியே எத்தனை நாளைக்கி வேலைக்குப் போகாம குடும்பத்த ஓட்ட முடியும் சொல்லுங்க!
            தேசிகாவுக்குப் போட்ட நகையை எல்லாம் பத்திரமா பேங்க் லாக்கர்ல வெச்சிகிறேன்னு சொல்லி வாங்கிட்டுப் போயி ஒவ்வொண்ணா வித்துத் தள்ளியிருக்கு மாப்பிள்ள. வேலை பார்த்தக் கடையிலயே யாரு நகையை இருந்தா எனக்கென்ன அப்டின்னு கை வைச்ச ஆளுல்ல நம்ம மாப்பிள்ள. சொந்தப் பொண்டாட்டி நகைன்னதும் சும்மா ஜிவ்வுன்னு ஏறியிருக்கு. நகையை வித்து வித்து ஒயின் ஷாப்புல பட்டாசு கொளுத்தாத கொறைதான்.
            உறவு முறையில ஒரு விஷேம்னு வந்துட்டா இந்தப் பொண்ணுங்களுக்கு இருக்குற நகையை எல்லாம் அள்ளிப் போட்டுட்டுப் போனாத்தானே ஒரு திருப்தி இருக்கும். அப்படி ஒரு விஷேசம் வந்தப்போ லாக்கர்லேந்து நகையை எடுத்துட்டு வாங்கன்னு தேசிகா சொல்லியிருக்கும் போலருக்கு. மாப்பிள்ள புள்ளயும் ரொம்ப சாமர்த்தியமா, "ஒங்க வூட்டுல கல்யாணத்துக்கு என்னா பண்ணாங்க! கல்யாணம் செலவுல்லாம் நாங்கதான்ன பண்ணோம். அதுல கொஞ்சம் கடனா ஆயிப் போச்சி. அந்தக் கடனெ அடைக்கிறதுக்கு நகையை அடவு வெச்சிருக்கேம்!" அப்பிடின்னு சொல்லிருக்கு.
            அது சரி! கல்யாணத்துக்கு அப்பிடியா அவங்க செலவு பண்ணாங்க? முப்பத்து எட்டுப் பவுனயும் அடகு வெச்சி கல்யாணக் கடன சமாளிக்கிறதுன்ன ஒடனே ஒரு சந்தேகம் வந்திருக்கு தேசிகாவுக்கு. அப்டியே மூட்டையை முடிச்சக் கட்டிட்டு எட்டாம் நம்பரு பஸ்ல ஏறி வடவாதி வந்து இறங்கிட்டு தேசிகா.
            ஆசை ஆசையா வருங்காலத்துல நகைக்கடை மொதலாளிய ஆகப் போற மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்த பொண்ணு இப்படி வந்து நின்னா எப்படி இருக்கும் முருகு மாமாவுக்கு சொல்லுங்க! அது லாலு மாமாவ அழைச்சிட்டுப் போயி மாப்பிள்ளகிட்டப் பேசுது. "எங்களுக்கு நெலம புரியுது மாப்ள. நீங்க அடகு வெச்சதுல ஞாயம் இருக்கு. எஞ்ஞ அடகு வெச்சீங்க சொல்லுங்க! அந்த நகையெ அப்படியே மீட்டுக் கொடுத்துடறேம்!" அப்டிங்குது.
            அடகு வெச்ச நகையை மீட்கலாம். வித்த நகையை எங்க மீட்குறது? அப்பதாம் மாப்பிள்ளைக்கு ரோஷம் வருது பாருங்க.
            "இந்தாருய்யா! நாம்ம அடகு வெச்ச நகையை மீட்க நமக்குத் தெரியும். நம்மள ன்னா பொட்டப் பயலுன்னு நெனைச்சீங்களா? ன்னம்மொ பெரிசா பேச வந்திட்டீங்க! ஊரு ஒலகத்துல நீயிதாம் அதிசயமா பொம்பள புள்ளைய பெத்து வெச்சிருக்கீயா? பொட்டப் புள்ள கோச்சிகிட்டு வருதுன்னா ஏத்தோ சமாதானம் பண்ணி அனுப்பி வைப்பியா? அதெ விட்டுபுட்டு நீயி ன்னம்மோ பொட்ட புள்ள மாதிரி ஒரு தொணைய அழைச்சுகிட்டு வந்து நிக்கிறே? ஒன்ன வெச்சி நாம்ம என்ன பாயில கட்டிப் பொரள முடியுமா? யில்ல ஒனக்குப் புடவெ கட்டிக் குடும்பம் நடத்த முடியுமா? போங்கய்யா மொதல்ல பொண்ண கூப்புட்டு கொண்டாந்து விட்டுட்டுப் போங்கய்யா! இன்னிக்கு உள்ளார ஒம்ம பொண்ணு வூடு வரலேன்னா ஜென்மத்துக்கும் இந்த வூட்டுல காலடி எடுத்து வெக்க முடியாது!" என்கிறது மாப்பிள்ள.
            இந்த ரெண்டு மாமாக்களுக்கும் கொஞ்சமாவது ரோஷம் வந்துச்சா பாருங்க! இதே மத்தவங்க யாரும் பேசியிருந்தா அவ்வளவுதாம். அந்த ரெண்டும் சேர்ந்துகிட்டு மாப்பிள்ளகிட்ட, "தப்பு நடந்துப் போச்சி மாப்பிள்ள! அது தெரியாத்தனமா வந்துப் போச்சிட்டுது. ஒங்களப் பத்தித் தெரியாதா? குடும்பத்துல அப்டி இப்டிலாம் கொஞ்சம் காசு பணம் நெருக்கடில்லாம் வரும். அதெ நீங்க சமாளிச்சுப்பீங்க. இருந்தாலும் பாருங்க இப்போ கையில அறுபதாயிரம் பணம் கொண்டாந்திருக்கோம். இத்த வெச்சிக்குங்க. கையில இருக்குற பணங் காச வெச்சி அடகு வெச்ச நகையை மீட்டுக்குங்க!" என்று சொல்லிப் பார்க்கிறது லாலு மாமா.
            "செரி செரி! அத்தே அப்டி அஞ்ஞயே வெச்சிட்டுப் போங்க! ஒடனே பொண்ண அழச்சிட்டு வந்து விடணும்னு அவசியமில்ல. அதுக்கும் அப்பா அம்மாவப் பாக்கணும்னு ஆசெ இருக்கும் இல்ல. நீங்க ஒரு பத்தி பாஞ்சி நாளு ஆச தீர வெச்சிருந்து அழச்சிட்டு வந்து வுட்டுட்டுப் போங்க!" அப்டின்னு அப்படியே டிராக் மாறுன ரயில போல பேசுது மாப்ள.
            இதைக் கேட்டதும்தான் ரெண்டு மாமனுங்களுக்கும் போன உசுரு திரும்ப வந்திருக்கும் போல.
            பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் நடந்திருந்த உலகப் போரைத் தடுத்து நிறுத்திப்புட்ட மாதிரி அப்டியே சும்மா ஜம்முன்னு வாராங்க முருகு மாமாவும், லாலு மாமாவும்.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...