30 Apr 2019

சீரியல் பார்ப்பது எப்படி?



எம் இனிய தமிழ்ப் பெருங்குடி மக்களே!

நான் உங்கள் விகடபாரதி பேசுகிறேன்!

            நாட்டில் எது எதற்கோ புத்தகங்கள் இருக்கின்றன. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? துணிவைப் பெருக்கிக் கொள்வது எப்படி? காசு சம்பாதிப்பது எப்படி? என்று ஆரம்பித்து தக்காளி நறுக்குவது எப்படி? என்பது வரை எவ்வளவு புத்தகங்கள்!
            இவ்வளவு நுணுக்கமான விசயங்களுக்கு எல்லாம் புத்தகம் இருக்கும் போது தமிழர்களின் கலாச்சாரமாக மாறி விட்ட சீரியலைப் பற்றி 'சீரியல் பார்ப்பது எப்படி?' என்ற தலைப்பில் புத்தகம் இல்லாதது தமிழர்களின் தவக்குறைதான். பல துறைகள் குறித்த நூல்கள் உருவாக வேண்டும் தமிழ்ப் பெருங்கனவு இந்த ஒரு குறையால் அடிபட்டுப் போய் விடுகிறது.
            பெண்கள் பொறுமையானவர்கள் என்கிறார்களே! இந்தப் பொறுமையை அவர்கள் எப்படி கற்றுக் கொண்டார்கள்? இந்த அவசர யுகத்திலும் அந்தப் பொறுமையை அவர்கள் எப்படி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? எல்லாம் சீரியல் பார்த்துதான்.
            இத்தகைய சீரியல் பார்ப்பது குறித்து ஒரு புத்தகம் எழுதாவிட்டாலும் தமிழில் ஒரு பத்தி கூட எழுதப்படாதது தமிழுக்கு ஒரு பெருங்குறைதான். அந்தப் பெருங்குறையைத் தவிர்க்கவே இப்பத்தி எழுதப்படுகிறது.
            சீரியல் பார்ப்பது எப்படி?
            1. தினந்தோறும் யோகா செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் எப்படி குறித்த நேரத்தில் தங்களுக்கானப் பயிற்சியை ஆரம்பித்து விடுகிறார்களோ அது போல தினந்தேறும் சீரியல் ஆரம்பிக்கும் குறித்த நேரத்தில் தொலைக்காட்சி முன் ஆஜராகி சீரியல் பார்க்க ஆரம்பித்து விட வேண்டும்.
            குறிப்பாக அந்த நேரத்தில் ஆஜராகாமல் பிறகு யூடியுப்பில் பார்த்துக் கொள்ளலாம் அல்லது நெட்டில் டிவி வெப்ஸைட்டில் போய் பார்த்துக் கொள்ளலாம் அல்லது செட்டாப் பாக்ஸில் பதிவு செய்து பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியம் கூடவே கூடாது.
            2. ஒரு நாள்தானே நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற சோம்பேறித்தனம் சீரியல் பார்ப்பவர்களுக்கு ஆகவே ஆகாது. சோம்பல் மிக கெடுதி பாப்பா என்ற பாரதியாரே சொல்லியிருக்கிறார். அதை அடிக்கடி மனதில் நிறுத்த வேண்டும்.
            3. ‍ஏதோ மறதியில் சீரியல் பார்க்காமல் விட்டு விட்டு பக்கத்து வீட்டு பிரேமாவிடம் கேட்டுக் கொள்ளலாம், எதிர்வீட்டு எலிசாவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை உதவவே உதவாது. கர்ம சிரத்தை ரொம்ப முக்கியம்.
            4. சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் போது விளம்பரம் போடும் நேரங்களில் கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு சேனல் சேனலாக மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. சில நேரங்களில் நம் கணிப்பைக் கடந்து விளம்பரங்கள் சீக்கிரமே முடிந்து சீரியல் ஆரம்பித்திருந்தால் இழப்பு பார்க்கின்ற நமக்குதான் என்ற அக்கறை எப்போதும் இருக்க வேண்டும்.
            5. முக்கியமாக விளம்பர நேரங்களை அதுவரை சீரியலில் பார்த்தவைகள் குறித்து ஆழமாகச் சிந்திக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிற்றுண்டி உண்பது, சிறுநீர்க் கழிப்பது போன்ற சிறு சிறு வேலைகள் இருப்பின் அதை அந்த நேரத்தில் வேக வேகமாக முடித்துக் கொள்வதும் உசிதமே.
            6. விளம்பர சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் சினிமாவுக்கு ஒரு இன்டர்வெல் என்றால் சீரியலுக்கு மூன்று நான்கு இன்டர்வெல்கள் என்பதாக அதைப் புரிந்து கொண்டு மனசாந்தி அடைந்து கொள்ள வேண்டும்.
            7. சீரியல் பார்ப்பதை விட பார்த்ததைப் பகிர்ந்து கொள்வதுதான் சீரியலை ஆழமாக மனதில் நிலைநிறுத்தும். ஆகவே கல்யாணம், வரவேற்பு, சாவு, கருமாதி, வளைகாப்பு, பதினாறு என்று போகும் விஷேசங்களில் எல்லாம் கண்ணில் படும் ஒவ்வொருவரிடம் சீரியல் குறித்து விவாதம் நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். இதை மேலும் அதிகப்படுத்தும் முயற்சியாக விவாதம் சூடுபிடித்து அதன் விளைவாக கட்டிப் புரண்டு சண்டை பிடித்துக் கொண்டு புரண்டாலும் நல்லதுதான்.
            8. சீரியலைப் பார்க்கும் போது அந்த சீரியலின் பாத்திரமாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? என்பது குறித்து அடிக்கடிச் சிந்தித்து வைத்துக் கொள்ள வேண்டும். விவாத நேரங்களில் இது குறித்து நீங்கள் பொட்டில் அடித்தாற் போல கேட்பவரின் முகத்தில் முரட்டுக் குத்து குத்திக் கூட பேசலாம். கேட்பவர்கள் உங்கள் தன்னம்பிக்கையைக் கண்டு வியந்து போகும் இந்த வாய்ப்பை நீங்கள் நழுவ விட்டு விடக் கூடாது.
            9. தொடர்ந்து சீரியல் பார்க்க வேண்டிய கட்டாயம் ஒரு நாளின் பத்து மணி நேரத்துக்கும் மேல் இருக்கும் என்பதால் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதற்கான யோகாசனங்களை காலை நேரத்திலேயே செய்து விட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்க்க வேண்டியிருப்பதால் அது தொடர்பான கண் பயிற்சிகளையும் ‍அதே காலை நேரத்தில் செய்து தயார் நிலையில் இருப்பதும் முக்கியம்.
            10. சீரியல் பார்க்கும் நேரத்தில் விருந்தினர்கள் வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இதற்காக வாசலில் உங்கள் பெயர் பொறித்த பெயர்ப் பலகையை அமைத்து அதில் இன் அன்ட் அவுட் செட்டிங் செய்து வைத்துக் கொண்டு அவுட் என்ற ஆப்சனை செட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
            11. அதையும் மீறி வரும் உறவினர்களிடம் சீரியலில் வரும் சோகக் கதைகளையும் காட்சிகளையும் சாத்துகுடியைப் பிழிவது போல பிழிந்தெடுத்து அழுது புலம்பினீர்கள் என்றால் அடுத்த முறை அந்த குறிப்பிட்ட நேரத்தில் வரக் கூடாது என்ற அச்சம் அவர்கள் மனதில் பிக்ஸ் ஆகி விடும். அது போன்ற நேரங்களில் வருபவர்களுக்கு டீ, காபி, ஸ்நாக்ஸ் வகையில் கொடுப்பது கர்ம சிரத்தையாக சீரியல் பார்க்கும் நமது பண்பாட்டை நாமே அழித்துக் கொள்வது போலாகி விடும் என்பதால் பச்சைத் தண்ணீர் கொடுப்பது கூட நல்லதல்ல.
            12. சீரியலின் டிவிஸ்டுகளை டைரக்டருக்கே பாடம் எடுப்பது போல, முடிந்தால் அதையும் தாண்டி மரண டிவிஸ்ட்டாக அதை எப்படி வைத்திருக்கலாம் என்பது போல ஒரு ஹோதாவில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். சீரியல் பார்த்து உருப்படாமல் போய் விட்டதாக சொல்பவர்களுக்கு பதிலடி அப்படிதான் நாம் கொடுக்க முடியும்.
            13. சீரியலில் வரும் புடவைகள், நகை செட்டுகள், இன்டீரியர் டிசைன்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் கடைகளுக்குப் போகும் போது பேந்த பேந்த விழித்து அசடு வழியக் கூடாது. எடுத்துக்காட்டாக ஒரு புடவைக் கடைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் தைரியமாக அந்தச் சீரியலின் பெயரோடு புடவைப் பெயரைச் சொல்லி அதை எடுத்துப் போடுங்கள் என்று கம்பீரமாக சொல்ல வேண்டும்.
            14. குடும்பத்தில் நியூஸ் சேனல் பார்ப்பவர்கள், கிட்ஸ் சேனல் பார்ப்பவர்கள், காமெடி சேனல் பார்ப்பவர்கள், சாங்ஸ் சேனல் பார்ப்பவர்கள் என்று வெரைட்டியாக இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் மதமாற்றம் செய்வது போல மனமாற்றம் செய்து அனைவரையும் சீரியல் பார்ப்பவர்களாக மாற்ற வேண்டும். அப்போதுதான் நினைத்த நேரத்தில் யாருடைய தொந்தரவும் இன்றி சீரியல் பார்ப்பது சாத்தியமாவதோடு குடும்ப ஒற்றுமையும் நிலைநிறுத்தப்படும்.
            15. காலத்திற்கேற்ற அப்டேட் முக்கியம் என்பதால்... சீரியலைப் பற்றி அக்கம் பக்கம், பங்ஷனில் பேசுவதோடு நின்ற விடாமல் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என்று ரவுண்ட் கட்டி அடிக்க வேண்டும்.
            16. குழந்தைகளின் பெயர் சூட்டு விழா என்றால் சீரியல் பாத்திரங்களின் பெயர்களைப் பிரசன்ஸ் ஆப் மைண்டில் வருவது போல அடித்து விட்டு பட்டையைக் கிளப்பி பெயர் சூட்டுதலுக்கு உங்களாலான பங்களிப்பை அவசியம் செய்ய வேண்டும். அப்பெயர்க்காரணத்தையும் சரியாகக் கோர்த்துச் சொல்வதும் முக்கியம். சீரியல் ஞானஸ்தானம் அடையும் இடம் இதுதான்.
            17. விடிய விடிய தெருக்கூத்து, நாடகம், சினிமா என்ற பார்த்த நம் தலைமுறையின் மரபோட்டமே நமக்கு இப்போது சீரியல் பார்க்கும் பழக்கமாக வளர்ந்திருக்கிறது. அது நம் ஜீனிலேயே கலந்திருக்கிறது. ஆகவே இது குறித்த குற்றஉணர்ச்சிக்கு ஆளாகி சீரியல் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளவோ நிறுத்தி விடவோ கூடாது.
            18. ஏதோ ஒரு புத்தாண்டு சபதத்தாலே, பிறந்த நாள் சபதத்தாலே சீரியல் பார்ப்பதை நிறுத்தி அதன் காரணமாக  வருங்காலத் தலைமுறைக்கு ஒரு செம்மாந்த மரபின் தொடர்ச்சி இல்லாமல் போக நாம் காரணமாகி விடக் கூடாது. ஆகவே சீரியல் பார்ப்பது கூடாது என்ற நினைப்போ அது குறித்து சபதம் எடுக்கும் எண்ணமோ கிஞ்சித்தும் வந்து விடக் கூடாது.
            19. நாம் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாளுக்கொரு சேனல் ஆரம்பித்து நாளுக்கொரு சீரியலை தயாரிக்கிறார்கள். அதுவும் போதாதென்று உலக மொழிகளில் உள்ள சீரியல்களை எல்லாம் டிரான்ஸ்லேட் செய்து அதாவது டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டு விடக் கூடாது.
            20. இந்தச் சீரியல் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் அக்கம் பக்கத்துச் சண்டைகள், குழாயடிச் சண்டைகள், மாமியார் மருமகள் சண்டைகள் இன்னபிற குடும்ப, சமூக மற்றும் உறவுச் சண்டைகள் எல்லாம் குறைந்திருக்கிறது. ஆகவே சீரியல் பார்க்காமல் விட்டு அதனால் உலக சமாதானம் குறைய நாம் காரணமாகி விடக் கூடாது.
            இந்த 20 குறிப்புகளும் உங்களுக்குச் சீரியல் பார்க்க உதவி, நீங்கள் சீரியஸ் சீரியல் பார்ப்பவர்களாக மாறினால் நீங்களும் தமிழரே!
            வாழ்க வாழிய எம் செந்தமிழர்! எம் பைந்தமிழருக்கு வணக்கம்!
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...