29 Mar 2018

முதல் அனுபவம் – சிறுகதை - விகடபாரதி


முதல் அனுபவம் – சிறுகதை - விகடபாரதி
            டவுன் பஸ்ஸில் கூட்டத்தோடு கூட்டமாக ஏறி விழி பிதுங்கி, சென்னைச் செல்லும் பேருந்தில் கூட்டமில்லாமல் ஏறிய போது ஆசுவாசமாக இருந்தது ஆனந்தனுக்கு.
            கசகசப்பு, வியர்வை நாற்றம் எதுவுமில்லை. சுகந்தமான வாசனை வீசியது. பக்கத்து பக்கத்து இருக்கைகளில் அழகழகானப் பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அள்ளித் தெளித்து வந்த அத்தர்களின் வாசனையாகவும் இருக்கலாம்.
            அரசுப் பேருந்துகளில் யார் வாசனை திரவியங்கள் தெளிக்கிறார்கள். பெரும்பாலும் சிறுநீர்க் கழிப்பிடத்திற்கு அருகேதான் பேருந்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். ஓட்டுநரும், நடத்துநரும் சரியாகப் பேருந்து கிளம்பும் நேரத்தில் ஏறிக் கொள்கிறார்கள். பேருந்து கிளம்பும் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ உட்கார்ந்திருப்பவர்கள் பாடு கொடுமையானது.
            ஆனந்தனுக்கு அந்த அழகானப் பெண்களோடு பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவர்கள் செல்பேசியில் எதையோ நோண்டிக் கொண்டு இருந்தார்கள். இவன் தன் கீபேடு செல்பேசியை எடுத்து ஒருமுறை பார்த்துக் கொண்டான். தன் செல்பேசியில் எப்போதாவது விளையாடும் பாம்பு கேம்ஸை விளையாடலமா என்று யோசித்தான். வேண்டாம் என்று தோன்றியது.
            தன் கனத்தப் பையை சீட்டில் வைத்து விட்டு சற்று நேரம் வெளியில் நிற்கலாம் என்று தோன்றவே இறங்க ஆரம்பித்தான்.
            "எக்ஸ்கியூஸ் மீ! கடைப்பக்கம் போறீங்களா?" அழகானப் பெண்கள் கூட்டத்திலிருந்து ஒருத்திப் பேசினாள்.
            "ம்" என்றான் ஆனந்தன்.
            "ஒன் லிட்டர் கோக் வாங்கிட்டு வர முடியுமா? ப்ளீஸ்!" என்றாள் அவள்.
            "ம்!" என்றான் ஆனந்தன் மறுபடியும். அவள் இவனிடம் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள்.
            ஆனந்தன் அந்த நோட்டை பத்திரப்படுத்திக் கொண்டு கீழே இறங்கினான். கடைப்பக்கம் வந்தவன் அந்த நோட்டை எடுத்து வெளிச்சத்தில் பார்த்தான். ப்ரியா என்று எழுதப்பட்டு இருந்தது.
            அந்த நோட்டை பையில் வைத்துக் கொண்டு, தன்னுடைய ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து ஒரு லிட்டர் கோக் வாங்கிக் கொண்டான். கொஞ்சம் யோசித்தவன், "அஞ்சு கப்" என்று மறுபடியும் அஞ்சு கப்புகளையும் சேர்த்து வாங்கிக் கொண்டான்.
            சில்லரையைச் சரிபார்த்துக் கொண்டவன், பேருந்தேறி கோக் பாட்டில் மற்றும் கப்புகளோடு சில்லரையையும் கொடுத்தான்.
            அந்தப் பெண்கள் "வாவ்! கப்போடேயே வந்திட்டீங்களா!" என்று வாயைப் பிளந்தனர். ஆனந்தனுக்குள் ஆனந்த மின்னல் வாய்ந்தது.
            முக்கால் மணி நேரம் கடந்த பிறகு ஒரு வழியாகப் பேருந்து புறப்படத் தொடங்கியது. அந்தப் பெண்கள் கோக்கைக் குடிக்கத் தொடங்கினர். இவனுக்கு ஒரு கப்பில் ஊற்றி நீட்டினர்.
            "குடிக்கிறதில்லீங்க! சளி பிடிச்சுக்கும்!" என்றான் ஆனந்தன்.
            அதைக் கேட்டதும் ஒருத்தி புருவத்தை உயர்த்தினாள்.
            "அப்போ உங்களைப் பார்க்க வெச்சுட்டுதான் குடிக்கணும்!" என்று ஒருத்திச் சொல்ல, கோரஸாக அந்தப் பெண்கள் எல்லாரும் சிரித்தார்கள். ஆனந்தனுக்கும் சிரிக்க வேண்டும் என்பது போலத் தோன்றியது. ஆனால், சிரிக்கத் தோன்றாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான்.
            பேருந்து வேகமெடுக்கத் தொடங்கியது. பேருந்தின் ஷட்டரை ஒவ்வொருவராக இறக்கி விடத் தொடங்கினர். ஆனந்தனும் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் ஷட்டரை இறக்கி விடச் சொன்னான். அவர் இவனை ஒரு முறை முறைத்து விட்டு, வேண்டா வெறுப்பாக இறக்கி விட்டார்.
            "ஊதக் காத்தா அடிக்குதுங்க!" என்று அவன் சொன்னதை அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
            உம் என்று வருவதற்கு ஆனந்தனுக்கு என்னமோ மாதிரி இருந்தது. தயங்கித் தயங்கி அந்தப் பெண்களிடம், "எங்கே இருந்து வர்றீங்க?" என்றான். பக்கத்தில் இருந்த சன்னலோர ஆசாமி முகத்தைச் சுளித்துக் கொண்டு திரும்பிக் கொண்டார்.
            "தாகுடி" என்றனர் அந்தப் பெண்கள்.
            "அது எங்க இருக்கு?"
            "கொஞ்சம் தாரண்யம் பக்கத்துல!"
            "இப்ப எங்கப் போறீங்க?"
            "சென்னையில இண்டர்வியூ வந்திருக்கு! அதுவும் எங்க அஞ்சுப் பேருக்கும் ஒண்ணா! எப்படியும் வேலையில சேர்ந்திடுவோம்!"
            அந்த ஐந்து பெண்களும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பதில் சொல்லிக் கொண்டு இருந்தனர்.
            "உங்க கூட யாரும் வர்றலியா?"
            "ஏன், உங்க கூட யாரும் வர்றலியா?" என்று அந்தப் பெண்கள் பதிலுக்குக் கேட்ட போது, ஆனந்தனுக்கு கூச்சமாக இருந்தது.
            "இல்ல, பொதுவா பொம்பளைப் பிள்ளைங்கள துணையில்லாம அனுப்ப மாட்டாங்களேன்னு கேட்டேன்!" என்றான் ஆனந்தன்.
            "அதான் நீங்க துணையிருக்கீங்களே பாஸ்" என்றனர் அந்தப் பெண்கள்.
            ஆனந்தனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. சிரித்துக் கொண்டே தூக்கம் வந்தவனைப் போல் கொட்டாவி விட்டான்.
            "ரொம்ப போரடிக்கிறோமா?" என்றனர் அந்தப் பெண்களில் ஒருத்தி.
            ஆனந்தன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டான்.
            அதன் பின் அந்தப் பெண்கள் தங்களைப் பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனந்தனுக்கு தூக்கம் கண்ணைக் சுழற்றிக் கொண்டு வந்தது.
            அவன் மீண்டும் கண் விழித்த போது பேருந்து ஒரு மோட்டலில் நின்றது.
            "என்ன பாஸ்! இப்படி அழகானப் பொண்ணுங்களைப் பக்கத்துல வெச்சுகிட்டு இப்படி தூங்கி வழியுறீங்க?" என்றனர் அந்தப் பெண்கள்.
            "ஒரு வாரமா சரியா தூக்கம் இல்லீங்க!" என்றான் ஆனந்தன்.
            "ஓரு வாரமாவா?"
            "ஆமாங்க! ரா பகலா வேலை!"
            "பஸ் அரை மணி நேரம் நிற்கும். சாப்புடுறதுன்னா சாப்பிடுங்க!"
            "ஆமாங்க! பசி வயித்தைக் கிள்ளுது! நீங்க?" என்றான் ஆனந்தன்.
            "எங்களுக்கு கோக் போதும்! அதை வெச்சுகிட்டே சமாளிச்சிடுவோம்!" என்றனர் அந்தப் பெண்கள்.
            ஆனந்தன் வேக வேகமாக பேருந்தை விட்டு இறங்கினான். மோட்டலில் ஒரு சிலரே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கையை அலம்பி விட்டு உட்கார்ந்தான்.
            சர்வரிடம் நான்கு இட்டிலிகள் கேட்டான். நான்கு இட்டிலிகளைச் சாப்பிட்டு முடித்தப் பிறகு, "வேற என்ன வேணும்?" என்ற கேட்ட சர்வரிடம், "போதும்" என்றபடி தலையசைத்தான்.
            சர்வர் பில்லைக் கொண்டு வந்து நீட்டிய போது அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. நான்கு இட்டிலிக்கு 72 ரூபாய் பில் போட்டிருந்தார்கள். ஊரில் பத்து ரூபாய்க்கு ஐந்து இட்லிகள் சாப்பிட்டவனுக்கு நான்கு இட்டிலிகள் 72 ரூபாய் என்பது அநியாயமாகப்பட்டது.
            கையைக் கூட அலம்பாமல் அவன் சர்வரிடம் சத்தம் போட்டான். "எழுத்து ரெண்டு ரூபாயெல்லாம் கொடுக்க முடியாது" என்றான்.
            அதற்குள் பேருந்தில் அவன் சீட்டருகே அமர்ந்திருந்த பெண்கள் இறங்கி வர ஆனந்தன் தன் சத்தத்தைத் தணித்துக் கொண்டான்.
            "எனி பிராப்ளம்?" என்றனர் அந்தப் பெண்கள்.
            "ஒண்ணுமில்லீங்க! நாலு இட்டிலி 72 ரூபாய்ங்களாம்!" என்றான் ஆனந்தன்.
            அந்தப் பெண்கள் கொல்லென்று சிரித்தனர்.
            ஒரு நொடி யோசித்தவன், ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து சர்வரிடம் நீட்டினான்.
            சர்வர் அந்த நோட்டை வாங்கிக் கொண்டு சென்று, சென்ற நொடியில் திரும்பி வந்தான். "72 ரூபாய்க்லாம் ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கொடுக்க முடியாது!" என்றான்.
            "எங்கிட்ட வேற பணம் இல்லே!" என்றான் ஆனந்தன்.
            "அப்படின்னா இன்னும் நூறு ரூபாய்க்கு எதாவது வாங்கிக்க சில்லரை தர்றோம்!" என்றான் சர்வர்.
            "இன்னும் நூறு ரூபாய்க்கா? என்னத்த வாங்குறது?" யோசித்த ஆனந்தன் "ஒரு லிட்டர் கோக் பாட்டில் என்ன விலை?" என்றான்.
            "நூறு ரூபாய்" என்றான் சர்வர்.
            "ஐம்பத்து அஞ்சு ரூவா கோக் பாட்டில் நூறு ரூவாயா?" என்றபடியே சர்வர் எடுத்துக் கொடுத்த கோக் பாட்டிலை அந்தப் பெண்களிடம் நீட்டினான். அவர்கள் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்கள்.
            "தேங்க்ஸ்!" என்றனர் கோரஸாக.
            கையை அலம்பிக் கொண்டு வந்த ஆனந்தன் சர்வர் கொடுத்த மீதியை வாங்கி எண்ணிப் பார்த்துக் கொண்டான். அந்தச் சர்வரின் கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்தான். அவன் இளித்துக் கொணடே அதை வாங்கிக் கொண்டு சென்றான்.
            "பஸ்ஸை எடுத்தாலும் எடுத்துடுவாங்க! வாங்கப் போகலாம்!" என்றான் ஆனந்தன். அந்த ஐந்துப் பெண்களும் வேகமாக ஓடிச் சென்று பேருந்துக்குள் ஏறிக் கொண்டனர்.
            ஆனந்தன் நிதானமாக நடந்து சென்று பேருந்தில் படிக்கட்டில் ஏறினான். அவனுக்குள் முதல் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்றி விட்ட திருப்தி மனதுக்குள் இருந்தது.
            "நெக்ஸ்ட் ஸ்டாப்பிங்லேயும் ஒரு கோக் பாட்டில்!" என்றனர் அந்தப் பெண்கள்.
            "கண்டிப்பா!" என்று சொல்லியபடியே தன் பையில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒரு முறை எடுத்துப் பார்த்துக் கொண்டான் ஆனந்தன்.
*****
விகடபாரதி

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...