இல்லையென்று இருந்த போது...
பழகி விட்ட வாகன சப்தத்தில்
உன் மெளனம் எடுபடவில்லை.
பல சில கோப தாபங்களில்
உன் புன்னகை புரிந்து
கொள்ளப்படவில்லை.
அரக்கப் பரக்க இருந்த
பரபரப்புகளில்
உன் முகத்தில் தேங்கியிருந்த
சோகம்
கடைசி வரை கண்டு கொள்ளப்படவில்லை.
இன்று,
முதலாமாண்டு நினைவஞ்சலி
கொடுக்க
உன் புகைப்படம் பார்த்த
போது
அனைத்தும் ஒரு புயலைப்
போல வந்து தாக்க
நானோ ஒரு கட்டுமரம்
இழந்த
நடுக்கடல் மீனவன் போல்
தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
*****
No comments:
Post a Comment