தண்டல்காரன் பராக்! பராக்!!
கொஞ்சம் பார்த்துக்
கொடுங்க சாமி
என்று சொன்னவளின் கண்களில்
தண்டல்காரனுக்குக் கட்டியது
போக
தன் குழந்தைக்கு
பால் வாங்க காசு கொஞ்சம்
எஞ்சியிருக்குமா என்ற
ஏக்கம்தான்.
ஆயிரம் ரூபாய் பணத்துக்கு
நூறைப் பிடித்துக் கொண்டு
தொள்ளாயிரம் கொடுக்கும்
தண்டல்காரனுக்கு
முனியம்மா
கால் கிலோ காய்கறிக்கு
அரைக் கிலோவாக நிறுக்கிறாள்.
ரேசன் கார்டைக் கொடுத்தப்
பிறகு
ஐநூறு கொடுத்தான் தண்டல்காரன்
தினம் காசு வாங்காமல்
ரெண்டு முழம் பூ
கொடுத்துக் கொண்டுதான்
இருக்கிறாள்
அன்னம்மா பாட்டி.
சோத்துல உப்பைப் போட்டுத்தானே
திங்குறே
என்கிறான் தண்டல்காரனும்
அதை வாங்கவும் காசில்லாத
பேபி எனப் பெயர் கொண்ட
அறுபத்து மூன்று வயது
மூதாட்டியிடம்.
*****
No comments:
Post a Comment