5 Jun 2017

ரெண்டு பாசக்காரப் பயலுக!


ரெண்டு பாசக்காரப் பயலுக!
            ஒருவர் தன் ஆசை நிறைவேறாத போது பிறரை வம்புக்கு இழுக்கிறார்.
இது பொன்மொழியா? பழமொழியா? என்றால் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி ஒரு சம்பவம் ஊரில் நடந்தது.
            எதிர் எதிர் வீட்டில் இரண்டு அண்ணன்கள். கிராமத்தில் வயதில் மூத்தவர்களை அப்படித்தான் குறிப்பிடுவோம். பெயர் சொல்லி அழைப்பதில்லை.
            ரொம்ப காலம் வரை ரெண்டு அண்ணன்களும் பாசக்கார பயலுகளாகத்தான் திரிந்து கொண்டிருந்தார்கள். நட்புன்னா ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு நட்பு.
            ஒண்ணாப்பில் தொடங்கி காலேஜ் வரை ரெண்டு பேரும் ஒன்றாகத்தான் படித்தார்கள். வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்த போது கூட ரெண்டு பேரும் ஒன்றாகத்தான் முயற்சி செய்தார்கள். போட்டித் தேர்வுகளைக் கூட ஒன்றாகத்தான் போய் எழுதினார்கள்.
            ஆனா கெரகம் பாருங்க! ரெண்டு அண்ணன்களில் ஒருவருக்கு வேலை கிடைத்து விட்டது. இன்னொரு அண்ணனுக்கு வேலை கிடைக்கவில்லை.
            இதனால் வேலை கிடைக்காத அண்ணன், வேலை கிடைத்த அண்ணனை தினமும் ராவானானல் ராவாக தண்ணியைப் போட்டுக் கொண்டு வண்டை வண்டையாகப் பேச ஆரம்பித்தது. வேலை கிடைக்காத விரக்தியில் அந்த அண்ணன் வேலை கிடைக்கப்பெற்ற அண்ணன் காசு கொடுத்துதான் வேலை வாங்கியது என்று பேசப் போக ரெண்டு குடும்பத்திற்கும் அடிதடி வரை போய் விட்டது.
            இதனால் வேலை கிடைக்கப்பெற்ற அண்ணன் டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஊர்ப்பக்கமே வராமல் போய் விட்டது. அப்புறம் கொஞ்ச நாளைக்குப் பிறகு, வேலை கிடைக்கப் பெறாத அண்ணனுக்கும் வேலை கிடைத்து விட்டது. இப்போது ரெண்டு அண்ணன்களும் வெளியில் எங்காவது பார்த்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டாலும் ஒருவர் மூஞ்சில் ஒருவர் முழித்துக் கொள்வது கிடையாது.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...