ரப்பரை எடுத்து அழித்து விடு!
தமிழகத்தில் இருந்த ஏரிகளைக்
கணக்கிட
இராஜேந்திர சோழன் ஆட்சிக்
காலத்துக்கு
செல்ல நேரிடலாம்.
எண்ணிக்கைக் குறைவு ஏற்பட்டால்
ஏற்படும் கொந்தளிப்புக்கு
யார் பாதுகாப்புத் தருவது?
ஏரிகளை அழித்தவர்களைத்
தண்டித்தால்
ஆட்சி நடத்துவது எவ்வாறு?
மலைகளின் எண்ணிக்கை கணக்கிட
ஜடாவர்ம சுந்தர பாண்டியன்
காலத்துக்கு
செல்ல நேரிடலாம்.
இல்லாத மலைகளுக்கு என்ன
காரணம் சொல்லி
எழும் போராட்டத்தைத்
தடுப்பது?
மலையைக் காணடித்தவர்களைத்
தண்டித்தால்
அதிகாரம் செய்வது எவ்வாறு?
ஏரியை, மலையை, ஆற்றை
அழித்தவர்களை
அழியாது காப்பதென்றால்
வரலாற்றையும் அழித்து
விடுவது நல்லது.
தொலைந்துப் போகட்டும்
சோழர்களும், பாண்டியர்களும்
ஆட்சியைத் தக்க வைக்க
நால்வர் அழிவதில் என்னவாகி விடப் போகிறது
வரலாற்று பாடம் படிக்க
வேண்டிய வேலை மிச்சம் நமக்கு.
*****
No comments:
Post a Comment