18 Jul 2025

சாமர்த்தியப் பொழுதுகள்

சாமர்த்தியப் பொழுதுகள்

மரம் நடு மரம் நடு என்கிறாயே

ஏ காட்டை அழித்த கபோதி

நீ நட்டு வைத்தா

இவ்வளவு மரம் வளர்ந்திருக்கிறது

நீ போட்டு வைத்த காங்கிரீட்டால்

ஒரு மரம் கூட

முளை விடாமல் போயிருக்கிறது

*

புதிய வாடிக்கையாளர் வந்து விட்டார் என்றா

கறியும் கூட்டும் பொறியலும்

கூடுதலாக வைக்கிறாய் கடைக்காரா

நாளை அவர் பழைய வாடிக்கையாளர் ஆகும் போது

இன்று கூடுதலாக வைத்ததை

கணக்குப் பண்ணிக் குறைத்துக் கொள்வாய்

*

மிக சாமர்த்தியமாக

நடந்து கொள்ளும் மனிதர்கள்

ஒவ்வொருவரும்

அய்யோவென ஏமாந்து போகிறார்கள்

மிக மோசமாக ஏமாந்து போகத்தான்

மிக சாமர்த்தியமாக நடந்து கொண்டார்களோ

*

பத்து கவிதைகள் எழுத வேண்டும் என்கிற பேராசை

பலமில்லை

உறங்கி விட்டேன்

கனவில்

வண்ண வண்ண கவிதைகள்

எழுதுவதற்கு யாருமில்லை

*****

No comments:

Post a Comment