22 Sept 2024

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாருக்காவது புரிகிறதா?

அரசியலுக்கு வருவார் என்று நினைத்த ரஜினி வரவில்லை. வர மாட்டார் என நினைத்த கமல் வருகிறார்.

எவ்வளவோ மல்லுகட்டியும் அப்பா சந்திரசேகர் சொன்ன போது விஜய் அரசியலுக்கு வர மாட்டேன் என்று போக்குக் காட்டினார். தற்போது அரசியல் கட்சி துவங்கி, மாநாடு வரை வந்து விட்டார்.

எப்படியும் விஜயகாந்த் ஆட்சியைப் பிடிப்பார் என எதிர்பார்ப்பு நிலவியது. அவரோ இரண்டு கட்சிகளிடையே மாறி மாறி கூட்டணிப் பேசும் விநோத நிலைக்குப் போய் விட்டார்.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்த போது முரசொலி மாறன் சொன்ன கருத்தை அப்போது கேட்டவர்களுக்கு, அவர் பின்னாளில் தமிழ்நாட்டின் முதல்வராக வருவார் என யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு நீக்கிய போது இனி அவர் செல்லாக் காசாக ஆகி விடுவார் எனத்தான் கருணாநிதி நினைத்திருக்க வேண்டும். ஆனால் அவரோ அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவாகினார். சிவாஜிக்கோ நிலைத்து நிற்கும் வாய்ப்பை அரசியல் கொடுக்கவில்லை.

அண்ணாவுக்குப் பின் நெடுஞ்செழியன் முதல்வர் ஆவார் என்ற கணிப்பும் அப்படித்தான் ஆனது. அப்போதிருந்து சூழ்நிலையில் மன்மோகன் சிங் பிரதமர் ஆவார் என்று அவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அம்மாவுக்குப் பின் சின்னம்மாதான் ஆட்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய போது நிலைமை அப்படியே மாறியது.

வாஜ்பாயிக்குப் பின் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையைப் பிடித்த போது அத்வானி பிரதமராகியிருக்க வேண்டும். நரேந்திர மோடி பிரதமரானார்.

அடுத்து அஜித் அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என நாமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. அவர் ஆரம்பிக்கலாம். ஆரம்பிக்காமலும் போகலாம். அல்லது இரு சக்கர வாகன விரும்பிகளுக்கான ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கலாம்.

உள்ளூர், உள்நாட்டு அரசியலை விடுங்கள். இங்கிலாந்தின் பிரதமராக ஓர் இந்திய வம்சாவளி வருவார் என்று நாம் நினைத்திருப்போமா? ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமர் ஆகவில்லையா? இப்போது அமெரிக்காவில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு என்ன நடக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியலில் அவசரம் காட்ட முடியாது.

அரசியலைப் பொருத்த வரை முன் கணிப்புகள் பெருமளவு வேலை செய்வதில்லை. ஏனென்றால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் சரியான கணிப்பாக இருக்கிறது.

கணிப்புகளை மாற்றி வைக்கும் வரலாறு அரசியலுக்கு நிறையவே உண்டு. அரசியலில் ஒருவருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இன்று அன்றாடங் காய்ச்சியாக உங்கள் கண்ணில் படும் ஒருவர் நாளை பெரிய அரசியல்வாதியாக வரலாம். இன்று பெரிய அரசியல்வாதியாக உங்கள் கண்ணுக்குத் தெரியும் ஒருவர் நாளை அன்னக்காவடியாகவும் ஆகலாம்.

ஏன் இப்படி அரசியல் மனிதர்களைப் போட்டுப் பாடாய்ப் படுத்துகிறது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதுதான் அரசியல்! அரசியலில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்ற சொலவம் சாதாரணமானதா என்ன?

*****

No comments:

Post a Comment

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்! வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாருக்காவது புரிகிறதா? அரசியலுக்கு வருவார் என்று நி...