28 Dec 2022

விமலாதித்த மாமல்லனின் ‘விளக்கும் வெளிச்சமும்’ – ஒரு பார்வை

விமலாதித்த மாமல்லனின் ‘விளக்கும் வெளிச்சமும்’ – ஒரு பார்வை

விமலாதித்த மாமல்லனின் சமீபத்திய தொகுப்பு ‘விளக்கும் வெளிச்சமும்’. 2000 லிருந்து 2022 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்ட எழுத்துகளின் தொகுப்பாக ‘விளக்கும் வெளிச்சமும்’ வெளியாகியிருக்கிறது. சிறுகதைத் தொகுப்பா, குறுநாவல் தொகுப்பா என்று சொல்ல முடியாத அளவுக்கு நெடுங்கதைகளும் கலந்த கலப்பாக அமைந்திருக்கிறது இத்தொகுப்பு.

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் படிக்கும் போது நாவலுக்கான ஓர் அனுபவம் கிட்டும் என்பதைப் பின்னட்டையில் பனி மலை படர்ந்த ஒரு சூழலின் பின்னணியில் நின்று விமலாதித்த மாமல்லன் கூறுகிறார்.

சிறுகதைகளோ, நெடுங்கதைகளோ, குறுநாவலோ அனைத்திலும் விடுபடலின் ஒரு தவிப்பு ஒளிந்திருக்கிறது. அத்தவிப்பு பெரும்பாலும் பால்யத்தின் அனுபவங்களில் கட்டுபடுத்தப்பட்ட அழுத்தங்களின் பின்னணியிலிருந்து நிகழ்காலத்தை நோக்கிக் கதை சொல்லும் பாணியில் நீள்கின்றன. 

ஆறு தலைப்புகளில் தனது அனுபவ பரீட்சார்த்தங்களைச் சமகாலத்தின் எள்ளல் கலந்து சில கூர்மையான கேள்விகளுடன் கூடிய அவதானிப்புகளோடு விமலாதித்த மாமல்லன் வாசிப்போருக்கு முன் வைக்கிறார்.

‘அமன்’ என்ற சிறுகதையில் சைக்கிள் ஒரு குறியீடாகிக் காலத்தின் முன்னும் பின்னும் பயணிக்கிறது. அதே சைக்கிள் விளக்கைத் தொலைத்து விட்டு ஐந்தாவது தலைப்பாக ‘விளக்கு’ என நெடுங்கதையாக தொடர்கிறது. இந்தச் சிறுகதையையும் அந்த நெடுங்கதையையும் இணைத்தால் அது ஒரு குறுநாவலாகி விடும். ஒரு பாதுகாப்பான மனநிலையில் வளைய வரும் அபார்ட்மென்ட் கலாச்சாரத்தின் இறுக்கமானது புசித்தல் விலக்கப்பட்ட வளர்ப்பின் வார்ப்பில் வளரும் குழந்தைகளை ஆப்பிளைப் புசிக்க வைப்பதில் தளர்வதாக இவ்விரு சிறுகதை – நெடுங்கதைகளுக்கு இடையே ஒரு தொடர்பு இருக்கிறது.

‘மறைவு’ என்ற தலைப்பிலான கதை தற்கொலைக்கான அறிவுரைக் கதை போன்ற தோற்றம் தரக் கூடியது. இத்தொகுப்பை ஒரு நாவலுக்கான அனுபவமாகவும் கொள்ளலாம் என்ற கூற்றில் பார்த்தால் ஒரு நாவலின் பன்முகத் தளத்தில் அதுவும் ஒரு தளம் எனக் கொள்ளலாம். அவமானத்தையும் நிர்வாணத்தையும் பொருட்படுத்தாது ஓடும் ஒரு சிறுவன் அலுவலகச் சூழல், வணிகச் சூழல் என்று இயங்கம் இருவேறு மனிதர்களுக்கு ஊக்கத் துலக்கமாகவும் தன்னம்பிக்கை பாடமாகவும் இருக்கிறான். இச்சிறுகதையின் அறிவுரைத் தளத்தில் மறைவாக நின்று இயங்கும் பாத்திரமும் அந்தச் சிறுவனே. அநேமாக அந்தச் சிறுவன் விமலாதித்த மாமல்லனாகவும் இருக்கலாம் என்றால் அவரே அவரைப் பற்றிக் கூறிக் கொண்டிருப்பதை மறைவாகக் கேட்டுக் கொண்டிருப்பதான பாவனையை இச்சிறுகதையில் உணர முடிகிறது.  ‘மறைவு’ என்ற பொருளில் இப்படி இருவேறு பொருள் தரக்கூடிய சிறுகதை இது. இக்கதையும் தந்தை – மகன் எனும் இழையின் மையப்புள்ளியில் இணையக் கூடிய கதை. 

இத்தொகுப்பின் கதைகள் தந்தை – மகன் உறவுச் சிக்கலை அக்காலத்தையும் இக்காலத்தையும் தொட்டுப் பேசுகின்றன. இருவேறு காலத்தில் இறுக்கமாக இருந்த தந்தையர்களிடம் வளர்ந்த மகன்கள் இருவேறு மனநிலைகளோடு இருப்பதை விமலாதித்த மாமல்லன் நுட்பமாகப் பதிவு செய்கிறார். தந்தையின் ஏச்சையும் புறக்கணிப்புகளையும் அடிகளையும் துச்சமாகக் கருதும் போன தலைமுறையின் பிள்ளை ஒரு பக்கம் என்றால் செய்த தவறு வெளியே தெரிந்தால் என்னாகும் என்ற குற்றவுணர்வில் உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்தத் தலைமுறையின் பிள்ளை மறுபக்கம். இவ்விரு பக்கங்களையும் தன் தலைமுறையோடு இன்றைய தலைமுறையை இணைத்துப் பதிவு செய்த எழுத்துகளை ‘அமன்’, ‘மறைவு’ ஆகிய சிறுகதைகளிலும் ‘வெளிச்சம்’ எனும் குறுநாவலிலும் காண முடிகிறது. ‘வெளிச்சம்’ குறுநாவல் எமர்ஜென்சி காலத்திய தமிழாசிரியர்களையும் கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர்களையும் காட்சிப்படுத்துவது வரலாற்றில் பின்னோக்கிச் சென்று களப்பயணம் காணும் அனுபவத்தைத் தரக் கூடியதாக அமைகிறது.

சிறுபான்மையோர் குறித்து ஊதிப் பெருக்கப்படும் அச்ச உணர்வு குறித்து பேசுகிறது ‘பயம்’ எனும் நெடுங்கதை. ஒருவர் சொல்லி இன்னொருவர் கேட்டு அதன் மூலம் எப்படியெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றிய வெறுப்புணர்வும் பய உணர்வும் வார்த்தெடுக்கப்படுகின்றன என்பதை ‘பய’த்தில் விமலாதித்த மாமல்லன் நன்றாகக் காட்டிச் செல்கிறார். குறிப்பாக எல்லாரும்தான் தவறு செய்கிறார்கள் என்றாலும் பய உணர்வைக் காட்டி விலக்கப்படும் சமூகத்தினர் சிறு தவறு செய்தாலும் அது எவ்வளவு பெரிய பய உணர்வை ஊட்டும் வகையில் பெருக்கி வளர்க்கப்படுகிறது என்பதை ‘பயம்’ வெகு நுட்பமாகச் சொல்கிறது. இப்படி வளர்க்கப்படும் பயமானது மனிதாபிமானத்தையும் அன்புணர்வையும் பொருட்படுத்தாது போய் விடுவதைச் சொல்வதாகக் கதை முடிகிறது.

இத்தொகுப்பில் இருக்கும் ‘காவி’ குறுநாவல் வித்தியாசமானதும் மனதோடு ஒரு முறை பொருத்திப் பார்க்கக் கூடியதுமான தன்மைகள் நிரம்பியது. அனைத்தையும் துறந்து காவியை அணிந்து தப்பித்துக் கொள்ளும் மனநிலை எல்லாருக்கும் ஒரு நாள் வந்து விடுகிறது. அந்த ஒரு நாளை விரித்துப் பார்த்தால் அது ‘காவி’ என்ற குறுநாவலாகத்தான் விரியும். ஜீன்ஸ் பேண்டையும் ஜிப்பாவையும் துறந்தவனுக்கு டேன்டெக்ஸ் ஜட்டியைத் துறக்க முடியாத நிலை அல்லது அந்த நேரத்தில் துறக்க வேண்டும் என்று ஞாபகத்தில் வந்துத் தொலைக்காத நிலை மீண்டும் காவியை விட்டுத் துரத்தி விடுவதாக அக்குறுநாவல் முடிகிறது.

‘விளக்கும் வெளிச்சமும்’ ஒரு வித்தியாசமான வாசிப்பனுவத்தைத் தருகிறது. அதற்கொப்பவே சிறுகதையும் நெடுங்கதையும் குறுநாவலும் கொண்ட தொகுப்பாக விமலாதித்த மாமல்லன் இத்தொகுப்பைக் கொணர்ந்திருக்கிறார். கனக்கச்சிதமான வாக்கியங்கள் மற்றும் எளிமையான உணர்த்தல்கள் மூலமாக இத்தொகுப்பு ஓர் ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. சமகாலத் தொகுப்புகளில் கவனிக்கப்பட வேண்டியதும் வாசிக்கப்பட வேண்டியதுமான தொகுப்பு.

உரையாடல்களுக்கான இரட்டை மேற்கோள் குறிகளின்றியே உரையாடல்களைக் கடத்துகிறார். அத்துடன் குழப்பமின்றி வாசிக்கும் வகையில் ஒரே மாதிரியான நடையையே அனைத்திலும் கையாண்டிருக்கும் விமலாதித்த மாமல்லன் ஒவ்வொரு சிறுகதையிலும் நெடுங்கதையிலும் குறுநாவலிலும் கையாளும் பேசுபொருள்கள் பால்யத்தின் எச்சங்களும் பிற்கால அலுவலக அனுபவத்தின் மிச்சங்களும் என்ற புள்ளியில் இணையக் கூடியவை. அந்த வகையில் ஒரு நாவலைச் சிறுகதைகளாகவும் நெடுங்கதைகளாகவும் குறுநாவல்களாகவும் கலைத்துப் போட்டாற்போல் அமைந்திருக்கிறது இத்தொகுப்பு.

இத்தொகுப்பை நீங்கள் வாசிக்க விரும்பினால் பதிப்பகத்திடமிருந்து அல்ல, எழுத்தாளரிடமிருந்தே வாங்கி வாசிக்கலாம். அதற்கான முன்னேற்பாடுகளோடு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் விமலாதித்த மாமல்லன். அதற்கான விவரங்கள் :

C Narasimhan

SBI SB A/c No: 37268627909

IFSC: SBIN0014625

GPay: madrasdada@oksbi

BHIM UPI: 9551651212@upi

PayTM: 9551651212@paytm

PhonePe: 9551651212

மேலதிக தொடர்புக்கும் விவரங்களுக்கும் மேலே உள்ள அலைபேசி எண்ணோடு

https://www.facebook.com/narasimhanc1960

என்ற முகநூல் இணைப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...