22 Sept 2022

படிப்பதில் உள்ள சலிப்பை ஒழித்துக் கட்டுதல் - முதல் அரைமணி நேரத்தை கடந்து விடுங்கள்

படிப்பதில் உள்ள சலிப்பை ஒழித்துக் கட்டுதல்

முதல் அரைமணி நேரத்தை கடந்து விடுங்கள்

முதல் அரை மணி நேரம் படிப்பதுதான் சிரமமானது. அதற்குப் பின் படிப்பது வெகு சுலபமானது. ஆகவே முதல் அரை மணி நேரம் எப்படியிருந்தாலும் தொடர்ந்து படித்துக் கொண்டிருங்கள்.

முதல் அரை மணி நேரம் உங்களுக்குச் சலிப்பாக இருக்கலாம். மிகுந்த எரிச்சல் தருவதாகவும் இருக்கலாம். ஏன் அது சித்திரவதையாகக் கூடத் தோன்றலாம்.

அந்த அரை மணி நேரம்தான் படிப்பதில் கஷ்டமானது. அரை மணி நேரத்தைக் கடந்து விட்டால் உங்களுக்கு படிப்பதில் அப்படி ஓர் ஆர்வம் எங்கிருந்து புறப்பட்டு வருகிறது என்ற உங்களுக்கே தெரியாது.

படிப்பதில் மட்டுமல்ல, அனைத்துச் சலிப்பான வேலைகளுக்கும் கடமைகளுக்கும் இது அப்படியே பொருந்தும்.

உங்களுக்குப் பிடிக்காத ஒரு வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கலாம். அந்த வேலையில் துளி கூட விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் அதை நீங்கள் தொடர்ந்து கொண்டிருக்கலாம். அது ஒரு பெரிய பிரச்சனையில்லை.

நீங்கள் அரை மணி நேரத்தை மட்டும் அந்த வேலையில் எப்படியாவது கடந்து விடுங்கள். பிறகு அந்த வேலையில் ஆர்வம் தானாக உண்டாகி விடும்.

ஏன் இந்த முதல் அரை மணி நேரம் இப்படி சிரமம் தருவதாக இருக்கிறது? மனதிற்கு ஒருமுகமான தன்மை கிடைக்க அந்த அரை மணி நேரம் தேவையாக இருக்கிறது. உங்கள் மனம் ஒருமுகப்பட்டு விட்டால் நீங்கள் வெறுக்கின்ற வேலையையும் விருப்பமாகச் செய்ய முடியும்.

சலிப்பும் இப்படிப்பட்டதுதான். முதல் அரை மணி நேரத்தில் எந்த வேலையில் வேண்டுமானாலும் ஈடுபட்டு உங்களால் இந்தச் சலிப்பைப் போக்கிக் கொள்ள முடியும்.

இந்த முதல் அரை மணி நேரம் தாக்குப்பிடிப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. நீங்கள் அந்த நேரத்தைச் சமாளித்தாக வேண்டும். அதற்கு யாரும் உதவவோ, துணை செய்வதோ முடியாது.

ஆகவேத்தான் சொல்கிறேன், எந்த வேலையாக இருந்தாலென்ன? முதல் அரை மணி நேரத்தை அதில் எப்படியாவது கடந்து விடுங்கள். அடுத்த ஒவ்வொரு மணி நேரமும் நீங்கள் நினைப்பது போலச் செயலாற்ற உங்களால் முடியும்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...