28 Apr 2019

பிடுங்க விடுவதா? என்பது குறித்த உரை



செய்யு - 68
            ஹெட்மாஸ்டர் திருஞானம் பேசத் தொடங்கினார். அவரது பேச்சு எப்போதும் உணர்ச்சியைத் தூண்டி ஆவேசத்தை உண்டு பண்ணி விடும். அவரது பேச்சைக் கேட்பதன் அபாயம் அதுதான். அவர் பேச்சின் முடிவில் கத்தியை எடுத்துக் கொண்டு போய் யாரையாவது குத்தி விட்டு வா என்று அவர் சொன்னால் கேட்டவர் எவராயினும் கத்தியோடு கிளம்பி விடும் பேராபத்து எப்போதும் இருக்கும். இதைப் பிள்ளைகள் பாடங்களைப் படிக்க வைப்பதற்கான உத்தியாக நெடுநாள் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இப்போது அவருக்குப் பள்ளிக்கூடத்திற்காக ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியத்துக்காகப் பயன்படுத்த வேண்டியதாகி விட்டது.
            "இஞ்ஞ வந்திருக்கும் வாத்தியார்கள், பிள்ளைகள் எல்லாருக்கும் வணக்கம். நடந்து போன விரும்பதகாத சம்பவம் பத்தி ஒங்க எல்லாருக்கும் தெரியும். அந்தச் சம்பவத்துக்கும் பள்ளியோடத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லேன்னும் ஒங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் அதுக்கு எல்லா விதத்திலும் பொறுப்பேத்துக்க பள்ளியோடம் தயாராவே இருக்கு. என்னென்ன பரிகாரங்க பண்ணணுமோ அத்தனையும் செய்ய நாம்ம தயாராவும் இருக்கோம்.
            சில தீய சக்திகள் இத்த விரும்பல. நாம்ம காலங்காலமா காத்து வெச்ச நம்மோட நல்ல பேர்ர அழிக்குறதுல குறியா இருக்காங்க. கொஞ்ச கொஞ்சமா குருவி சேக்குற மாரி சேத்து வெச்ச நம்மோட பெருமைய்ய குழி தோண்டிப் பொதைக்கக் காத்திருக்காங்க.
            இந்தப் பள்ளியோடத்திலேர்ந்து பல்லாயிரக் கணக்கான புள்ளைக படிச்சுட்டுப் போயி டாக்டரா, எஞ்சினியரா, வாத்தியாரா, விஞ்ஞானியா, அரசாங்கத்துல உத்தியோகதஸ்தர்களா இப்படி பலவிதமாக இருக்காங்க. இன்னும் இந்தப் பள்ளியோடத்திலேர்ந்து டாக்டருங்க, எஞ்சினியருங்கன்னு விதவிதமா உருவாகப் போறாங்க. அப்படியெல்லாம் இந்தப் பள்ளியோடத்திலேர்ந்து உருவாகக் கூடாதுன்னு நம்ம பள்ளியோடத்தப் பிடிக்காதவங்க நாசகார வேலய்கள்ல எறங்கியிருக்காங்க. அதுக்கு நாம்ம எடம் கொடுக்கலாமா? நீங்க எல்லாரும் சொல்லுங்க! அதுக்கு நாம்ம எடம் கொடுக்கலாமா?" ஹெட்மாஸ்டர் பிள்ளைகளிடமிருந்து ஒரு பதிலை எதிர்பார்க்கும் உணர்ச்சி வேகத்தோடு கேட்டார்.
            பிள்ளைகள் சில நொடிகள் அமைதியாக இருந்தனர். சுற்றி நின்ற வாத்தியார்மார்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். "கூடாதுங்க சார்! அதுக்கு எடம் கொடுக்கவே கூடாதுங்க சார்!" என்று சொன்னதும், பிள்ளைகளும் கோரஸாக அதைப் பின்தொடர்ந்து சொல்லத் துவங்கினர். ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அத்தனைப் பிள்ளைகளின் குரலும் சேர்ந்து முன்னால் இருந்த கட்டிடத்தில் மோதி எதிரொலித்தது. ஹெட்மாஸ்டர் முகத்தில் மின்னலைப் போல ஒரு புன்னகைத் தோன்றி மறைந்தது. அடுத்த நொடியே அவரது முகம் தீவிரமானது.
            "இத்தோ இந்த வேப்ப மரம் பாருங்க! ஒரு சின்ன வெதை. அதிலேர்ந்து உண்டான சின்ன கண்ணு. அப்போ இத்த கொண்டாந்து வச்சது. கொஞ்ச கொஞ்சமாக வளந்தது. சின்ன கண்ணு சிறு மரமாச்சு. சிறு மரம் இப்போ பெரு மரமாச்சு. எவ்ளோ நிழல் கொடுக்குது சின்ன வெதயிலேந்து கெளம்புன மரம். எவ்ளோ காத்தக் கொடுக்குது சின்ன கண்ணுலேந்து உண்டான இந்த மரம். இந்த மரத்த நாம புடுங்கலாமா?"
            "புடுங்கக் கூடாது! புடுங்கவே கூடாது!" என்றார்கள் வாத்தியார்களும், பிள்ளைகளும் ஒரே குரலில்.
            "செர்தான். நாமளும் புடுங்கக் கூடாது. மத்தவங்களயும் புடுங்க வுடக் கூடாது. புடுங்க வுடக் கூடாதுல்ல!"
            "கூடாது! ம்ஹூம் கூடவே கூடாதுங்க சார்!"
            "இந்தக் கட்டடம். ஒவ்வொரு செங்கல்லா வெச்சு கட்டுனக் கட்டடம். எவ்ளோ புள்ளைங்க படிச்சிட்டுப் போன, புள்ளைங்க படிச்சிட்டு இருக்குற, வருங்காலத்துல இன்னும் எத்தனையோ புள்ளைங்க படிக்கப் போற கட்டடம். இத்தோட ஒவ்வொரு செங்கல்லயும் உருவு எறியறன்னு செல பேரு வந்தா வுட்டுடலாமா? எவ்ளோ புள்ளைங்க படிச்ச சத்தத்த, வாத்தியாருமாருக பாடம் நடத்துன சத்தத்த இந்தச் செங்கல்லுங்க ஒவ்வொண்ணும் கேட்டுருக்கும். இத்த நாமளும் உருவு எறிஞ்சிடக் கூடாது. யாரும் உருவி எறியறன்னு வந்தாலும் உருவி எறிஞ்சிட வுட்டுடக் கூடாது. அல்லாருக்கும் இந்த பள்ளியோடம்தான் எல்லாமும். இத்து இருந்தாத்தான் இன்னும் தலமொற தலமொறயா படிக்குறவங்க இங்கேர்ந்து வருவாங்க. இத்து இல்லாமப் போச்சுன்னா வேற ஊர்லேந்தெல்லாம் இஞ்ஞ படிக்க யாரு வரப் போறாங்க? இஞ்ஞ இருக்குறவங்க வேற ஊருக்குப் போயிட்டு வார மாரி ஆயிடும். நாம்மகிட்ட இருக்குற ஒண்ண நாம்ம வுட்டுக் கொடுத்துடலாமா?"
            "கூடாதுங்க சாரு!"
            "கூடாதுல்ல. நம்ம பள்ளியோடத்த வுட்டுக் கொடுத்துடறதுங்றது நம்மள வுட்டுக் கொடுத்துடறது மாரி. நம்மகிட்ட பாதுகாப்பா கொடுத்த பொக்கிஷத்த நாமள அலட்சியமா வீசி எறிஞ்சிட மாரி. எத்தன பேரு வந்தாலும் இந்தப் பள்ளியோடம் புடுங்க முடியாத வேப்பமரம் மாரி. எத்தன பேரு வந்தாலும் இந்தப் பள்ளியோடத்திலேந்து ஒத்த செங்கல்ல உருவி எடுக்க முடியாது. இத்து கோட்ட. இந்தக் கோட்டயிலேந்து ஒருத்தனும் ஒரு புடி மண்ண கூட அள்ளிட்டுப் போவ வுட்டுடக் கூடாது! ஒங்களுக்கு இப்போ வெசயம் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேம். நம்ம பள்ளியோடத்திலேந்து ஒருத்தனும் எத்தயும் புடுங்கிட்டுப் போயிட முடியாதுங்றது காட்டியாகணும். நம்ம பள்ளியோடத்துக்காக, ஒங்க பள்ளியோடத்துக்காக வர்ற ஞாயித்துக் கெழம நம்ம பள்ளியோடத்து முன்னாடி ஒரு பெருந்திரள் கூட்டத்தக் கூட்டுறோம். அமைதி ஊர்வலத்த ஒண்ணு நடத்துறோம். ந்நல்லா தெரிஞ்சுக்கணும். அந்தக் கூடத்துக்கு ஊர்வலத்துக்கு பிள்ளைங்க நீங்க யாரும் வரக் கூடாது. ஒங்க தாயி தகப்பங்க மட்டுந்தாம் வரணும். அதுக்கும் மேல கிராமத்துல உள்ளவங்கள நம்ம அய்யா கூட்டிப்பாங்க. ஒங்க தாயி தகப்பங்க வர்ற ஞாயித்துக் கெழம கலந்துக்கலாமா? சொல்லுங்க!"
            "கலந்துக்கலாம் சார்!"
            "ஒவ்வொரு புள்ளைக்கும் கட்டாயம் அவங்களோட தாயி, தகப்பங்க ரண்டு பேரும் கலந்துக்கணும். இது ஒனக்காக மட்டுமில்ல. வரக் காலத்துல ஒம்மோட தம்பி, தங்கச்சி, ஏம் ஒம்மோட புள்ள குட்டிங்க, பேரம் பேத்திங்க எல்லாரும் படிக்கணும். இந்தப் பள்ளியோடத்துல படிக்கணும். அதுக்கு இந்தப் பள்ளியோடம் இந்த இடத்துல இந்த நரிவலத்துல இப்ப எப்படி இருக்கோ அப்படி இருந்தாகணும். சில கெட்டச் சக்திங்க நெனக்கிற மாரி இத்து அழிஞ்சிடப் படாது. அழிக்க வுட்டுடவும் கூடாது.
            இந்த வேப்பமரத்த ஆயிரம் கையி சேந்தாலும் பிடுங்கிட முடியாது.
            இந்தக் கட்டடத்த ஒரு லட்சம் கையி சேந்தாலும் அசைச்சிட முடியாது.
            இந்தப் பள்ளியோடத்த கோடி பேரு கூடினாலும் ஒரு மசுரும் புடுங்கிட முடியாது.
            அத்த நீங்கதான் காட்டணும். வூட்டுல ஒவ்வொரு புள்ளையும் சொல்லணும். நம்ம அய்யாவும் ஆள வுட்டு சொல்லச் சொல்லியிருக்காங்க!
            இத்து நம்ம வேப்பமரம். இத்து நம்ம கட்டடம். இத்து நம்ம பள்ளியோடம். நீங்களே சொல்லுங்க! இத்து யாரோட பள்ளியோடம்?"
            "நம்மோட பள்ளியோடம்!"
            "இத்த யாரு பாத்துக்கணும்?"
            "நாம்மத்தாம் பாத்துக்கணும்!"
            "இத்துல யாரயும் கையி வெக்க வுட்டுடலாமா?"
            "வுடக் கூடாது!"
            கேட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்த வாத்தியார்மார்களும், உட்கார்ந்திருந்த ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கும் காட்டுத் தீயைப் போல எரியும் ஆவேசம் உண்டானது.
            நிலைமையின் தீவிரம் அப்போது அப்படி இருந்தது. முகிலனின் அப்பா நடத்திய கண்டனப் பேரணியும், கண்டன ஆர்ப்பாட்டமும் பத்திரிகைச் செய்திகளாகி புலனாய்வுப் பத்திரிகைகளில் விவாதப் பொருளாகி விட்டது. ஹெட்மாஸ்டரின் ஆவேசப் பேச்சின் பின்னாலிருந்து பின்னணி அதுதான்.
            அந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கூடத்தின் முன் பெருங்கூட்டம் கூடியது. ஊரில் இருந்த ஒவ்வொருவருக்கும் நரிவலம் பள்ளிக்கூடம் மூடப்பட்டு விடுமோ என்ற பயம் ஹெட்மாஸ்டரின் பேச்சு மூலம் உருவாகியிருக்க வேண்டும். கண்டியப்பநாதரின் மருமகன் மணிவாசகநாதரும் ஆட்களை விட்டு அப்படி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும். முகிலனின் மரணத்துக்காக அனுதாபப்பட்டவர்களின் மனநிலையில் கணிசமான மாற்றம் உண்டாகியிருக்க வேண்டும்.
            முகிலனின் அப்பாவின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற பேரணி, ஆர்பாட்டத்தைப் போல இதுவும் 'பள்ளியைக் காக்க திரண்ட ஊர் மக்கள்' என்ற தலைப்பில் பத்திரிகை செய்தியானது. புலனாய்வுப் பத்திரிகைகள் இதற்காகச் செய்தி சேகரிக்க வந்திருந்தாலும் அவைகள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அந்தப் பத்திரிகைகள் இதை ஒரு சாதாரண செய்தியாகக் கூட பிரசுரிக்கவில்லை.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...