28 Jun 2022

அந்தப் பிணங்கள் அப்படியே நாறிக் கொண்டு கிடக்கட்டும்


அந்தப் பிணங்கள் அப்படியே நாறிக் கொண்டு கிடக்கட்டும்

            சில சுயநலத்தின் மையப்புள்ளி இருக்கிறதே, அது மிகப் பெரிய உதவிகளையும் சாதாரணமாக்கி விடுகிறது. அத்துடன் கோணிக் குறுகவும் வைத்து விடுகிறது.

            சாலையில் குறுக்காகக் கடந்த ஒருவரை அதிவேகமாக வந்த வாகனம் மோதவிருந்த நிலையில் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பின் அவர் சொன்னார், “அட அந்தாண்ட போ. மேலே மேலே வந்து ஏறிகிட்டு” என்று.

            காப்பாற்றியவர் பரதேசிக் கொலத்தில் இருந்ததால் அவருக்கு வந்த கோபம் அது. நல்ல விதமாக டிப்டாப்பாக ஆடையுடுத்திச் செல்லும் ஒருவர் வந்து காப்பாற்றியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பார் போல. எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆற்றாமையில் அவர் சொன்ன வார்த்தை கங்குகள்.

            அத்துடன் பரதேசிக் கோல மனிதரின் அழுக்கு தன் மீது ஒட்டு விடுமோ என்ற சுயநலத்தின் மையப்புள்ளி உயிரைக் காப்பாற்றிய அவ்வளவு பெரிய உதவியையும் எவ்வளவு சாதாரணமாக்கி விட்டது.

            பரதேசிக் கோலத்தில் இருந்த மனிதர் ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார். “ரொம்ப ஆச்சாரமா இருப்பார் போல. தெரியாத்தனமா போய் தொட்டு இந்தாண்ட இழுத்துட்டேன். தப்பு பண்ணிட்டேன்னுங்க”. ஆமாம் கட்டையில் போய் தொலை என விட்டிருக்க வேண்டும்.

            சில மனிதர்கள் அப்படித்தான் போல. அவர்கள் பிணமாகிப் போகும் வேளையில் கொஞ்சம் உயிர் கொடுத்துப் பார்த்தால் சுடலையில் எரிப்பவரைப் பார்த்தும், “அடச் சீ! அந்தாண்ட போ!” என்றுதான் சொல்வார்கள் போல.

            அவர்களை அந்தப் பிணங்களை அப்படியே விட்டு விட வேண்டியதுதான், நாறிக் கொண்டு கிடக்கட்டும் என்று. அந்த துர்நாற்றத்தையும் நாம்தான் சுவாசிக்க வேண்டும் என்கிறீர்களா? அவர்கள் உயிரோடு இருந்த போது இருந்த துர்நாற்றத்தை விட இந்த துர்நாற்றம் அவ்வளவு மோசமாகவா இருந்து விடப் போகிறது.

            நாம் சிறு சிறு உதவிகளால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேருதவிகள் உயிரினும் ஓம்பப்பட வேண்டியது மற்றும் போற்றப்பட வேண்டியது. அத்தனையையும் மறைப்பது சுயநலம்.

            அந்தச் சுயநலம்தான் சாதி.

            நம் அழுக்குகள் அத்தனையையும் நம் சுயநலம்தானே, சாதிதானே.

            நம் சுயநலத்தை அடை காத்துக் கொண்டிருக்கும் சாதிப்பித்தை உதறித் தள்ளினால் மிகப் பெரிய உலகம் கண்ணுக்குத் தெரியும்.

            அதை உதறித் தள்ளாத வரை நம் சிறிய உலகமே நம் கண்களில் காலம் முழுவதும் உறுத்திக் கொண்டிருக்கும்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...